search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடசென்னை தொகுதி"

    • மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க வருகிறார் என்பதை அறிந்த பொதுமக்கள் அவரை பார்ப்பதற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
    • சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு திரட்டினார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

    தமிழ்நாடு-புதுச்சேரியில் இதுவரை 16 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் 36 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் திறந்த ஜீப்பில் வீதிவீதியாக பிரசாரம் செய்தார்.

    வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம். காலனிக்கு இன்று காலையில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க வருகிறார் என்பதை அறிந்த பொதுமக்கள் அவரை பார்ப்பதற்காக வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர்.

    உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி நடந்து சென்று வீடு வீடாக தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய கையடக்க நோட்டீசுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    அதனை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    ஜி.கே.எம். காலனி தெருக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டு கேட்டு வருவதை அறிந்த பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் சாலையின் இருபுறமும் அவரை பார்ப்பதற்காக திரண்டு நின்றிருந்தனர். வழிநெடுக ஆண்களும், பெண்களும் உதயசூரியன் சின்னத்தையும், தி.மு.க. கொடியையும் காண்பித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வரவேற்றபடி நின்றிருந்தனர்.

    வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு திறந்த ஜீப்பில் ஏறி வீதி வீதியாக சென்றார்.

    சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு திரட்டினார்.

    வழி நெடுக பொதுமக்கள் முகமலர்ச்சியோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். திறந்த ஜீப்பில் 'ரோடுஷோ' போல் மெதுவாக சென்றபடி பொதுமக்களை பார்த்து அவர் கையசைத்தார். பதிலுக்கு பொதுமக்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    தொடர்ந்து ஜீப்பில் சென்றபடி மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பூங்கா அருகில் இளைஞர்கள் விளையாடுவதை பார்த்ததும் ஜீப்பில் இருந்து இறங்கி மைதானத்திற்கு சென்று அவர்களை சந்தித்தார்.

    அவர்கள் வைத்திருந்த பந்தை வாங்கி அதில் கையெழுத்திட்டு கொடுத்தார். அதோடு கால்பந்தை தனது காலால் தட்டி விளையாட்டை தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு மீண்டும் ஜீப்பில் ஏறி வீதிவீதியாக சென்று மக்களை பார்த்து ஆதரவு திரட்டினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக இஸ்லாமிய மக்களும் திரண்டு வந்திருந்தனர். அவர்களை பார்த்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு கை கூப்பி வணங்கினார். பதிலுக்கு பொதுமக்களும் முக மலர்ச்சியோடு கையசைத்து வரவேற்பு தெரிவித்தனர்.

    ஜி.கே.எம். காலனியில் 32 தெருக்களுக்கும் சென்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பிறகு ஐ.சி.எப். பகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார்.

    அங்கு போட்டியிடும் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறனுடன் திறந்த ஜீப்பில் நின்றபடி பொதுமக்களை பார்த்து ஆதரவு திரட்டினார். சாலையின் இருபுறமும் ஏராளமானோர் திரண்டு நின்று முதலமைச்சரை பார்த்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கையசைத்தனர். ரோட்டின் இருபுறமும் வழி நெடுக தி.மு.க. கொடி, வாழை தோரணம் என அப்பகுதியே விழாக்கோலமாக காட்சி அளித்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசார ஏற்பாடுகளை இன்று மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சிறப்பாக செய்திருந்தார்.

    • வேட்பு மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ராயபுரம் மண்டல அலுவலகம் முன்பு திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
    • தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய ராயபுரம் மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் ஒரே நேரத்தில் வந்ததால் யார் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நீண்ட நேரம் காத்திருப்பதாக பாஜக தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த வாக்குவாதத்தில் இறுதியில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்த பின் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து, தேர்தல் அலுவலகத்தில் நடந்த வாக்குவாதம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- எங்களுக்கு 12- 12.30 மணி வரை நேரம் ஒதுக்கினார்கள். 12.15 மணிக்கு தான் நாங்கள் வந்தோம். எங்களது வரிசை எண் 2, அதிமுகவின் வரிசை எண் 7. ஆனால் வேட்பாளர் முன்கூட்டியே வந்துவிட்டார் என்று கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவாக, திமுக வேட்பாளர் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றார்.

    இதனிடையே, வேட்பு மனுத்தாக்கலின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ராயபுரம் மண்டல அலுவலகம் முன்பு திமுக, அதிமுக, பாஜக தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தனர். அங்கேயும் தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, வாக்குவாதம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:- முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்று கூறினார்கள். நாங்கள் தான் முதலில் வந்தோம். 11.49 மணிக்கு நாங்கள் வந்துவிட்டோம், கேமராவிலும் அது பதிவாகி உள்ளது. நாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தயாரான போது, திடீரென தி.மு.க.வினர் வந்தனர். மரபை பின்பற்றாமல், எங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தி.மு.க.வினர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதலில் வந்தவர்கள் என்று பார்த்தால், எங்களை தான் அனுமதித்திருக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய பிறகும், திமுகவினர் செல்லாமல் வாக்குவாதம் செய்தனர். பிரச்சனையை காவல்துறை சரியாக கையாளவில்லை. திமுக வேட்பாளரின் டோக்கன் எண் 8, எங்களின் டோக்கன் எண் 7 என்றார்.

    • தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர்.
    • முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் மாளிகையில் உத்தரபிரதேச மாநில உதயநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வளர்ச்சியடைந்த பாரதம் திட்டத்தில் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தியுள்ளார். இது முழுமையாக அரசு நிகழ்ச்சி. இதில் அரசு அதிகாரிகள் பங்கேற்காமல் யார் பங்கேற்பது?

    தமிழகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் கலந்து கொள்ளும்போது நாம் என்ன சொல்கிறோம்? வளர்ச்சியடைந்த பாரத் திட்டம் அரசின் திட்டம் மட்டுமல்ல, யாருக்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லையோ அவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்யும் நிகழ்ச்சி.

    அது விளம்பர நிகழ்ச்சி அல்ல. மக்களுக்கு திட்டங்கள் கிடைக்கக்கூடாது என நினைக்கிறார்களா? தமிழகத்தில் நான் முதலமைச்சர் நிகழ்ச்சி திட்டமே, விக்சித் பாரத் திட்டம்தான்.

    மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். அதில் அதிகாரிகளை பயன்படுத்த கூடாதா?

    தி.மு.க.வினர் தவறான முன்னெடுப்பை எடுக்கின்றனர். நான் என்ன கட்சி நடவடிக்கையில் ஈடுபடுகிறேன்.? மக்களுக்கான நலனில்தான் ஈடுபடுகிறேன். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்த திட்டங்கள் குறித்து பட்டியல் கொடுத்துள்ளார். மத்திய அரசின் திட்டம் குறித்து நான் பட்டியல் கொடுத்துள்ளேன். புதுச்சேரியில் எந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை என எதிர்க்கட்சியினர் பட்டியல் தரட்டும்.

    கட்டி முடிக்கப்படாத ராமர் கோவிலை திறந்தார்கள் என அயோத்தி கோவில் பற்றி பல விமர்சனங்கள் வருகிறது.

    தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோது, புதிய சட்டசபை கட்டிடத்தை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அப்போது அதற்கு மேற்கூரையே போடவில்லை. தற்காலிக செட் அமைத்து திறந்தனர்.

    முழுமையடையாத சட்டசபையை திறந்தவர்கள், இன்று மக்கள் சேர்ந்து உணர்வுபூர்வமாக திறந்த கோவிலை பற்றி கூறுகின்றனர். ராமர் கோவில் திறப்பையும் அரசியலாக்கி கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் தயவு செய்து குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம். கவர்னர் விருந்தாக பார்க்க வேண்டும், அரசியல் விருந்தாக பார்க்க வேண்டாம்.

    ராமர் கோவில் 500 ஆண்டுகள் எதிர்பார்த்த நிகழ்வு. மத்திய அரசு நேரடியாக ஒளிபரப்பியதை எல்லோரும் பார்த்து பரவசம் அடைய வேண்டும் என்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது. அரசியல்வாதிகளைத்தான் பிரித்தீர்கள். ராமன், முருகன், பிள்ளையாரை பிரித்து விடாதீர்கள்.

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி, நான் உட்பட எல்லா சாமியும் ஒன்றாக இருக்கிறோம். விடுமுறையை வைத்து பக்தியை எடை போடாதீர்கள். எல்லோரும் சேர்ந்து பக்தியோடு கொண்டாடுவோம்.

    வட சென்னை எம்.பி. தொகுதியில் போட்டியிடப் போவது குறித்து நான் முடிவு செய்யவில்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நானே உங்களை அழைத்து தகவல் தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×