search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ambulance"

    • ஆம்புலன்ஸ் மீது மந்திரியின் பாதுகாப்பு வாகனம் மோதியது.
    • இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது கொட்டாரக்கரை புலமண் சந்திப்பில் சிக்னல் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனால் போலீசார் போக்குவரத்தை சீர்செய்து கொண்டிருந்தனர். சிக்னலில் இருந்த போலீசார் ஆம்புலன்ஸ் வேனைக் கடந்து செல்லுமாறு சைகை செய்தனர்.

    இதனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சாலையை கடக்க முயற்சித்தார். அப்போது அங்கு வந்த கேரள கல்வி மந்திரி சிவன்குட்டியின் பாதுகாப்பு வாகனம் சாலையை கடந்த ஆம்புலன்ஸ் வேன் மீது வேகமாக மோதியது.

    நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உருண்டதில் ஆம்புலன்சில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அப்பகுதியினர் மற்றும் போலீசார் காயமடைந்தோரை மீட்டு கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தேவிக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வந்தது.
    • பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை கணுவாயை சேர்ந்த கண்ணன் மனைவி தேவி (வயது28). நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. எனவே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்து பார்த்தனர்.

    இதில் தேவிக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வந்தது.

    இதையடுத்து ஆம்புலன்சு மருத்துவ நிபுணர் தமிழழகன், பைலட் சக்தி குமார் ஆகியோர், உறவினர்களின் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். இதில் தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு தாயும், சேயும் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    கோவை மாவட்டம் கணுவாயில் இளம்பெண்ணுக்கு இக்கட்டான நேரத்தில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்சு வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.

    இக்கூட்டத்தில் தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்னத் தொண்டி கிராமத்தில் பேரூராட்சிக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட இடத்தில் நில அளவை செய்து வேலி அமைப்பது கடற்கரை எதிரே நல்ல தண்ணீர் ஊற்று உள்ள முடிச்சலான் தோப்பில் உள்ள கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அங்கு அமைந்துள்ள 4 கிணற்றைச் சுற்றிலும் கம்பி வேலி சுற்றி இரும்பு கதவு அமைக்க வேண்டும்.

    பேரூராட்சிக்கு சொந்தமான 5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள பம்ப் ரூமிற்கு மின் இணைப்பு மற்றும் மராமத்து பணி செய்ய வேண்டும்.

    தொண்டியில் இரவு நேரங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுவதாலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவசர கால மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவனை கொண்டு செல்வதற்கும், இங்கு முறையான அவசர ஊர்தி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய அவசர ஊர்தியான 108 வாகனம் அரசு வழங்க சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வது, டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் புகை போக்கி எந்திரம் வாங்குதல், உயர் மின் அழுத்தம் காரணமாக பழுதடைந்த மின் விளக்குகளுக்குப் பதிலாக புதிதாக 164 மின் விளக்குகள் பொருத்துவது போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.
    • மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

    இம்பால்:

    மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

    இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

    இது தொடர்பாக மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மைத்தேயி மற்றும் பழங்குடிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 310 பேர் காயம் அடைந்தனர்.

    அங்கு மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு சென்றார். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே குகி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார். அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவ படையின் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் தாய், மகன் உள்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.

    குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுவன், அவரது தாயார் மற்றும் இன்னொரு உறவினர் ஆகிய 3 பேர் ஆம்புலன்சில் சென்று கொண்டு இருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தான் அந்த ஆம்புலன்ஸ் சென்றது. மேற்கு இம்பால் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.

    மிகப்பெரிய கும்பல் ஆம்புலன்சை வழி மறித்து அவர்களை யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்சோடு தீ வைத்தது. இதில் 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

    மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடப்பதால் மேலும் 1000 வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 1000 வீரர்கள் விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    மணிப்பூரில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத்திய ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார்.
    • அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர்.

    காரைக்கால்:

    காரைக்கால் சேத்திலால் நகரைச்சேர்ந்தவர் கமல்நாதன்(வயது20). இவர் காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று, வழக்கம் போல் நண்பர் சுடரொளியுடன்(20) மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலை ஓ.ன்.ஜி.சி குடியிருப்பு அருகே சென்றபோது, காரைக்காலிலிருந்து வந்த சரக்கு லாரி, மோட்டார் சைக்கிள் பக்க வாட்டில் மோதியது. இதில், லாரியின் பின் சக்ரத்தில் கமல்நாதன் சரிந்துவிழுந்து, தலை நசுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதே போல், நண்பர் சுடரொளி இடுப்பு, கால்களில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அரை மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கமல்நாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ்ந்தார். பின்னர் வந்த ஆம்புலன்சில் உயிருக்கு போராடிய மாணவர் சுlரொளியை ஏற்றி காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக மாணவர்கள், அங்கு வந்த ஆட்டோவில் கமல்நாதன் உடலை ஏற்ற முயற்சித்தபோது, அங்கிருந்த போலீசார் இறந்த உடலை ஆட்டோவில் ஏற்ற மறுப்பு தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வராததற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், இறந்த மாணவர் உடலை சக மாணவர்கள் தங்கள் தோள்களில் சுமந்தவாறு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி நோக்கி நடந்து சென்றனர். சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த ஆம்புலன்சில் இறந்த மாணவன் உடலை ஏற்றி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து, ஆம்புலன்ஸ் வர கால தாமதமானதை கண்டித்து சக மாணவர்கள், உறவினர்கள், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை கலெக்டர் ஜான்சன், ஆம்புலன்ஸ் காலதாமதமாக வந்தது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    • அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கியமான பகுதியாக விளங்கி வருகின்றது.

    இங்கிருந்து சென்னை, வேலூர், திண்டிவனம், செங்கல்பட்டு, திருப்பதி மார்க்கமாக தினமும் 400-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்வதால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக விளங்குகின்றது.

    இவ்வளவு மக்கள் வந்து செல்கின்ற இந்த இடத்தில் போதிய போலீசார் பாதுகாப்புக்கு இல்லாததாலும், பொருத்தப்பட்டுள்ள கண் காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யாததாலும் அதிக சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது.

    பஸ் நிலையத்தின் உள்ளே சுற்றி திரியும் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பஸ் நிலையத்துக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளிடமும், பொது மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் பாராபட்சம் இல்லாமல் பணம் பறிக்கும் சம்பவம் தினந்தோறும் அரங்கேறி வருகின்றது.

    அது மட்டுமல்லாமல் திருநங்கைகளுக்குள் அவ்வப்போது போட்டி பொறாமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ஆபாசமாக பேசிக் கொள்வதும் வாடிக்கையாக உள்ளது.

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற 27 வயதுடைய திருநங்கை காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்அம்பி பகுதியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அஞ்சலி கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு மக்கள் அதிக நடமாட்டம் உள்ளபஸ் நிலையத்தின் உள்ளே முககவசம் அணிந்த மர்ம வாலிபர் ஒருவர் திடீரென அஞ்சலி மீது பாய்ந்து அரிவாளால் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அஞ்சலியின் கதறலை கண்டு பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அஞ்சலியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அஞ்சலி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலியை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றார்கள்.

    • ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
    • மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள கரடையூர் அடுத்த நடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 36). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் குடிபோதையில் நடுவூரிலிருந்து கொளகூர் செல்லும் மலைப்பாதையில் வளைவில் உள்ள ஒரு திட்டில் அமர்ந்திருந்தார்.

    அப்போது திடீரென மணி பின்னால் இருந்த 20 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கயிறு மூலம் 20 அடி பள்ளத்தில் கீழே இறங்கி மணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மணியை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் மணியை ஏற்காடு அரசு மருத்துவமனையில் பத்திரமாக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மிகுந்த சிரமத்துக்கு இடையில் பள்ளத்தில் இருந்து மணியை மீட்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் சுரேஷ், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரை பொது மக்கள் மற்றும் மணியின் உறவினர்கள் பாராட்டினார்கள். இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்குமார் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை மரணம்.
    • மேற்கு வங்க சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 'ஸ்வஸ்த்ய சதி' மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து கேள்வி.

    மேற்கு வங்காளத்தில், ஆஷிம் தேப் சர்மா என்பவர் தனது மகனின் சடலத்தை ஆன்புலன்சில் எடுத்து செல்ல பணம் இல்லாததால் பையில் வைத்து 200 கி.மீ., தூரம் பேருந்தில் பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்காள மாநிலம், டார்ஜிலிங் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஷிம் தேப் சர்மாவின் 5 மாத ஆண் குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    குழந்தையின் சடலத்தை கலியகஞ்சில் உள்ள தனது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல பணம் இல்லாததால், ஆஷிம் தனது குழந்தையின் சடலத்தை பையில் வைத்து பேருந்தில் 200 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளார்.

    இதுகுறித்து தந்தை ஆஷிம் கூறுகையில், " சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு எனது ஐந்து மாத மகன் நேற்றிரவு இறந்தார். சிகிச்சையின்போது ரூ. 16,000 செலவழித்தேன். எனது குழந்தையை கலியாகஞ்சிற்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்வதற்கு ரூ.8000 கேட்டார்கள். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை.

    அதனால், பையில் வைத்து பேருந்தில் எடுத்து சென்றேன். சக பயணிகளுக்குத் தெரிந்தால் இறக்கிவிடப்படுவோம் என்று பயந்து, யாருக்கும் தெரியாமல் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்திற்கு பயணித்தேன்.

    ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், 102 திட்டத்தின் கீழ் உள்ள வசதி நோயாளிகளுக்கு மட்டுமே இலவசம் என்றும் சடலங்களைக் கொண்டு செல்வதற்கு அல்ல என்றும் கூறிவிட்டனர்" என்று உருக்கமாக கூறினார்.

    இந்த சம்பவத்தை கண்டித்து மேற்கு வங்க சட்டசபை எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி," திரிணாமுல் காங்கிரஸ் அரசின் 'ஸ்வஸ்த்ய சதி' மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பினார்.

    அதே நேரத்தில், ஒரு குழந்தையின் துரதிர்ஷ்டவசமான மரணத்தை வைத்து இழிந்த அரசியலில் விளையாட பாஜக முயற்சிப்பதாக டிஎம்சி மாநிலங்களவை எம்.பி சாந்தனு சென் குற்றம்சாட்டினார்.

    • தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது.

    விழுப்புரம்:

    வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தொண்டூர் ஊராட்சி பூதேரியில் கன்னிமார் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது அருகில் இருந்த புதரில் இருந்து கிளம்பிய தேனீக்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதனால் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அக்கம் பக்கத்தில் சிதறி ஓடினார்கள். ஆனாலும் 26 பேரை தேனீக்கள் கொட்டியது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மேல்ஒலக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் .அங்கு முதலுதவி பெற்ற அவர்கள் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினார்கள்.

    • சோபனாவை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • செல்லும் வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே அர்த்தநாரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தேங்காய் களத்தில் தேங்காய் உடைக்கும் வேலை செய்து வருபவர் தில்லையேஸ்வரன். இவரது மனைவி சோபனா (வயது 24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி வந்துள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ஆம்புலன்சில் சோபனாவை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாயும் குழந்தையும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது.

     திருப்பூர் :

    திருப்பூர், அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., தியேட்டர் பஸ் நிறுத்தம் அடுத்துள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி கனகா ( வயது 32). கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து கணவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டார்.

    குமார்நகரில் இருந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ், கனகாவை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது.

    இதனையடுத்து டெக்னீசியன், டிரைவர் குறளரசன் பிரசவம் பார்த்தனர். வழியிலேயே ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் ஊழியர்களின் செயலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள விசூர்கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி கலைச்செல்வி (வயது25) இவருக்கு இன்று காலை திடீர் பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர் அங்கு விரைந்து சென்று காடாம்புலியூர் 108 ஆம்புலன்ஸில் அவர்களை அழைத்து வரும் போது பிரசவ வலி அதிகமானதால் காடாம்புலியூரில் ஆம்புலன்சிலேயே காலை 10.21 மணிக்கு அழகான ஆண் குழைந்தை பிறந்தது. 

    அப்போது ஆம்புலன்ஸ்ல் அவசர கால மருத்துவ நுட்புநர் ஜெரோம் ராஜா மற்றும் சந்திரசேகரன், ஓட்டுனர் செல்வகுமார் மேலும் உடனே தாயும், சேயும் நலமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
    ×