என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Transgender"

    • வரதட்சணை தடைச் சட்டம், 1961 இன் பிரிவு 498A ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
    • ரூ.10 லட்சம், 25 பைசா தங்கம், 500 கிராம் வெள்ளி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்களை வழங்கியதாகக் கூறினார்

    திருமணம் செய்து கொண்ட திருநங்கைப் பெண்ணுக்கு குடும்ப வன்முறை புகார் அளிக்க உரிமை உண்டு என்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 498A இன் கீழ், ஒரு பெண் தனது கணவர் அல்லது கணவரின் உறவினர்களால் வன்முறைக்கு ஆளானால் புகார் அளிக்க உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    திருநங்கைகளுக்கு அத்தகைய பாதுகாப்பு பொருந்தாது என்ற வாதத்தை நீதிபதி வெங்கட ஜோதிர்மயி பிரதாபா நிராகரித்தார்.

    2019 ஆம் ஆண்டில், போகலா சபானா என்ற திருநங்கை பெண், தனது கணவர் விஸ்வநாதன் கிருஷ்ண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடர்ந்தார். வரதட்சணை தடைச் சட்டம், 1961 இன் பிரிவு 498A ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

    புகாரின் படி, போகலாவின் திருமணம் ஜனவரி 2019 இல் ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் நடைபெற்றது. தனது கணவர் விஸ்வநாதன் கிருஷ்ண மூர்த்தி தனது திருநங்கை அடையாளம் குறித்து முழுமையாக அறிந்திருந்தார் என்று போகலா சுட்டிக்காட்டினார்.

    தனது குடும்பத்தினர் தனக்கு வரதட்சணையாக ரூ.10 லட்சம், 25 பைசா தங்கம், 500 கிராம் வெள்ளி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்களை வழங்கியதாகக் கூறினார். திருமணம் முடிந்த உடனேயே தனது கணவர் தன்னை விட்டுச் சென்றதாகவும், பின்னர் தன்னை மிரட்டி ஆபாச செய்திகளை அனுப்பியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில் ஒரு திருநங்கைப் பெண் குழந்தை பிறக்க முடியாது என்பதால் அவளை 'பெண்' என்று கருத முடியாது என்றும், எனவே பிரிவு 498A இன் கீழ் பாதுகாப்பை அந்தப் பெண்ணுக்கு வழங்க முடியாது என்றும் கணவர் விஸ்வநாதன் வாதிட்டார்.

    இருப்பினும், இனப்பெருக்கத் திறனை அடிப்படையாகக் கொண்டு பெண்களை மதிப்பிடும் முறை குறுகிய பார்வை கொண்டது என்றும், பாலின அடையாளத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர்களுக்கும் கண்ணியம், அடையாளம் மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்தும் அரசியலமைப்பின் உணர்வையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

    எனவே திருநங்கைப் பெண்ணின் உரிமையை நிலைநாட்டிய அதே வேளையில், குறிப்பிட்ட ஆதாரங்கள் இல்லாததைக் காரணம் காட்டி, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை நீதிமன்றம் ரத்து செய்தது.

    ஒரு நபரின் பாலின அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என்றும், ஐபிசி 498A மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் உள்ள பாதுகாப்புகள் திருநங்கைப் பெண்களுக்கும் பொருந்தும் என்றும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    • உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்.
    • தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்.

    லயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை Dr.N.ஜென்சி, அக்கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்," வாழ்த்துகள் Dr. ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!" என்றார்.

    முதல்வரின் வாழ்த்து குறித்து பேசிய டாக்டர் ஜென்சி," 'டாக்டர் ஜென்சி' என என்னை குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில் எனக்கு பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும்" என்றார்.

    • மிஸ் திருநங்கை 2025 அழகுப்போட்டி நடைபெற்றது.
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் திருநங்கைகளுக்கான பல்வேறு நடனப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அழகிப்போட்டிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் நேற்று மாலை தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் கூவாகம் திருவிழா நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகரசபை முன்னாள் தலைவர் ஜனகராஜ், சினிமா நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

    இதைத்தொடர்ந்து மிஸ் திருநங்கை-2025 அழகிப்போட்டிக்கான முதல் சுற்று நடந்தது. இதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்ற திருநங்கைகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    இறுதிச் சுற்றில் தூத்துக்குடியை சேர்ந்த சக்தி மிஸ் திருநங்கையாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஜோதா 2-ம் இடத்தையும், விபாஷா 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.15 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. சிறந்த திருநங்கைகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கும் சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது.
    • இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் இந்த தடையை விதித்துள்ளன.

    லண்டன்:

    சமீபத்தில் இங்கிலாந்து உச்சநீதிமன்றம் ஒரு பெண்ணின் சட்ட வரையறை உயிரியல் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டது என கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் திருநங்கைகள் இனி பெண்கள் கால்பந்தில் பங்கேற்க முடியாது என இங்கிலாந்து கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

    இதனால் இங்கிலாந்தில் பதிவு செய்துள்ள 20-க்கும் மேற்பட்ட திருநங்கை வீராங்கனைகள் பாதிக்கப்படுவார்கள் என கால்பந்து சங்கம் தெரிவித்துள்ளது.

    திருநங்கைகள் தங்கள் டெஸ்டோஸ்டெரோன் அளவு 12 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் பெண்கள் அணியில் விளையாட அனுமதி இருந்தது. தற்போதைய சட்ட மாற்றத்தால் இந்தக் கொள்கை திரும்பப் பெற காரணமாகியுள்ளது.

    இதேபோல், ஸ்காட்லாந்து கால்பந்து சங்கமும் சமீபத்தில் அதே விதியை அறிவித்துள்ளது.

    • பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
    • பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும்

    இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு, சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கை களை பெண்களாக கருத முடியாது என்றுதீர்ப்பு அளித்துள்ளது.

    அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது. திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து,
    • நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஏப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்!

    புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!

    கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல்படையில் திருநர்கள் என அதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது நம் திராவிட மாடல் அரசு.

    திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்!

    • திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
    • திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.

    கழக அரசு என்றும் திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி திருநங்கை
    • நீதிமன்றம் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே மோடி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது45). திருநங்கையான இவரது தம்பி முத்துக்குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை தாக்கியது தொடர்பாக புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து செல்வி , சாத்தான்குளம் நீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிபதி, போலீசாருக்கு பரிந்துரைத்தார். ஆனாலும் போலீசார் விசாரிக்காததால் செல்வி, நீதிமன்றம் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார். போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் சாத்தான்குளம் கோர்ட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் செல்வி திடீரென குதித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • ராஜபாளையம் அருகே டிரைவரை தாக்கி ரூ.1½ லட்சம் வழிப்பறி வழிப்பறி நடந்துள்ளது.
    • இந்த சம்பவம் தொடர்பாக திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கம்மாபட்டி திருமலாபுரம் தெரு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 43), லாரி டிரைவர்.

    இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு சுரண்டை, பாவூர்சத்திரம் பகுதியில் சப்ளை செய்துள்ளார். அதில் கிடைத்த பணம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துடன் ராஜபாளையம் நோக்கி திரும்பி வந்துள்ளார்.

    அப்போது இயற்கை உபாதைக்காக சாலை யோரம் லாரியை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அந்த பகுதியில் நின்றிருந்த திருநங்கைகள் அவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக ராம்குமார், முகவூர் பாம்பலம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளவஞ்சி (21) உள்ளிட்ட 3 திருநங்கைகள் மீது ராஜ பாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.
    • வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் அரண்மனை வளாகம் அருகேயுள்ள காமராஜா் காய்கனி சந்தையில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 4.1 ஏக்கா் பரப்பளவில் ரூ. 20.26 கோடியில் புதிதாகக் கடைகள் கட்டப்பட்டன. இதில், 201 சிறிய கடைகள், 87 பெரிய கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    புதுப்பிக்கப்பட்ட இச்சந்தையைத் கடந்த மாதம் 22-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

    ஆனால், பொது ஏலத்தில் கடைகள் எடுத்த வியாபாரிகளுக்கு சாவி வழங்கப்படாமல் இருந்தது.

    இதனிடையே, இச்சந்தையில் ஏற்கெனவே கடை நடத்தியவா்கள், தங்களுக்கும் கடை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக பழைய வியாபாரிகளிடம் மேயரும், மாநகராட்சி ஆணையரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதைத்தொடா்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் பொது ஏலத்தில் கடைகள் எடுத்த புதிய மற்றும் பழைய வியாபாரிகளுக்கு சாவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வியாபாரிகளிடம் மேயா் சண். ராமநாதன் சாவியை ஒப்படைத்தாா்.

    அப்போது, மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா் உடனிருந்தாா்.பின்னா், மேயர் சண்.ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் பொது ஏலத்தில் கடைகள் வியாபாரிகளுக்கும், இரு கடைகள் எடுத்த திருங்கைகளுக்கும் சாவி வழங்கப்பட்டது.

    சந்தையில் திருநங்கைகளுக்கு கடைகள் வழங்குவது இதுவே முதல் முறை.இச்சந்தையின் கடைகள் வாடகை மூலம் மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 கோடி வருவாய் கிடைக்கும் என்றாா்.

    • நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம்.
    • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் வருகிற 15,16,17 ஆகிய 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

    இதையொட்டி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகிறோம். கடந்த முறை எங்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் எங்களது காளைகள் போட்டியில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த ஆண்டு வலைதளம் மூலமாக நாங்கள் பதிவு செய்தோம். அதிலும் பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.

    அந்த குளறுபடிகளை நீக்கி உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகளும் பங்கு பெறுவதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எங்களது காளைகள் பங்கு பெற வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    விரைவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் திருநங்கைகள் தாங்கள் வளர்த்து வரும் காளைகளும் போட்டியில் பங்கு பெற செய்ய வேண்டும் என்று மனு கொடுத்திருப்பது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மேலூர் ஒன்றிய செயலாளர் கருப்பணன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத்தில் மேலூர் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறேன்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக நான் முதலிடம் பெற்றேன். ஆனால் அரசு விதிமுறைகளை மீறி ஆள் மாறாட்டம் செய்த வேறு ஒரு நபருக்கு முதலாவது பரிசு அறிவிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். அதனை விசாரித்த நீதிபதி, அலங்காநல்லூர் விழாக்குழு முடிவு எடுத்து எனக்கு பரிசை வழங்கலாம் என தீர்ப்பளித்துள்ளார். ஆனால் இதுவரை பரிசை வழங்கவில்லை.

    எனவே மேற்படி உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டு வரும் அலங்காநல்லூர் விழாக்கமிட்டியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு சேரவேண்டிய முதல் பரிசை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.
    • தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    திருநங்கையர்கள் வாழ்வில் முன்னேற தமிழக அரசு திருநங்கையர்கள் நலவாரியம் ஒன்றை அமைத்து அதன் மூலம் அவர்களுக்கு பல்வேறு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.

    இத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த ஸ்ருதி என்கிற திருநங்கைக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

    இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு கிராம உதவியாளர் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

    அரசுப்பணி என்றால் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு அலாதியான விருப்பம் இருக்கும் சூழலில், பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் திருநங்கையர் சமுதாயத்தில் இருந்து ஒருவர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கை கிராம உதவியாளர் பணிக்கு தேர்வானதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திருநங்கை ஸ்ருதி கூறியதாவது:-

    தலையாரிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் வந்துள்ளேன். இது எங்கள் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.

    நான் மேன்மேலும் வளர்ந்து கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு செல்வேன். திருநங்கைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன். எங்கள் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்து கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×