search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AB de Villiers"

    • விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
    • விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.


    புதுடெல்லி:

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.

    ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

    இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.

    4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

     

    ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.

    அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.

    விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.

    காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.

    • இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது.
    • என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேகின்றன.

    உலக கோப்பையையொட்டி எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்று முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் உலக கோப்பை போட்டியின் அரை இறுதிக்கு நுழையும் 4 அணிகள் எவை என்று கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நிச்சயமாக இந்திய அணி மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு வித்தியாசமான உலக கோப்பையாக இருக்கும்.

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 பெரிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 4-வது அணியாக தென்ஆப் பிரிக்கா இணைய வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானும் முன்னேற்றலாம்.

    ஆனால் நான் தென்ஆபிரிக்கா நுழையும் என நம்புகிறேன். திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.

    ஆசிய கண்டத்தை சாராத 3 அணிகளை நான் தேர்வு செய்துள்ளேன். இது கொஞ்சம் கடினமானதுதான். ஆனாலும் எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

    இந்தியா ஆடுகளங்கள் நன்றாக இருக்கும். மோசமான ஆடுகளத்தை உலக கோப்பை தொடரில் பார்க்க முடியாது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் மோத வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்தவரை தென்ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது.
    • சூர்யாவுக்கு 32-33 வயதாகிவிட்டது. நான் இன்னமும் 22 வயதான சிறுவன்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் வீரர் தான் முகமது ஹாரிஸ். சர்வதேச கிரிக்கெட்டின் தனது முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்ற போதிலும், தனது அதிரடியான ஆட்டம் காரணமாக தனித்து விளங்குகிறார்.

    தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஏ.சி.சி. எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் அணியில் முகமுது ஹாரிஸ் விளையாடி வருகிறார். இந்த தொடரில் பாகிஸ்தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. வித்தியாசமான ஷாட்களை விளையாடி வரும் அவரை இந்திய அணியின் 360 டிகிரி என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவுடன் உடன் ஒப்பிட்டு கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் சூர்யகுமார் யாதவ், டிவில்லியர்ஸ் பெயருடன் ஒப்பிட விரும்பவில்லை என இளம் பாகிஸ்தான் வீரர் முகமது ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இப்போதே எங்கள் இருவரையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது. சூர்யாவுக்கு 32-33 வயதாகிவிட்டது. நான் இன்னமும் 22 வயதான சிறுவன். அந்த இடத்தை அடைவதற்கு நான், இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்.

    மேலும் சூர்யா தனக்கென ஒரு இடத்திலும், ஏ.பி. டி வில்லியர்ஸ் தனது சொந்த அளவிலும், நான் எனது சொந்த அளவில் இருக்கிறேன். நான் எனக்கென 360 டிகிரி கிரிக்கெட்டர் என்ற பெயரை எடுக்க விரும்புகிறேன். அவர்களின் பெயரை பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

    • கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஏபிடி வில்லியர்ஸ் அறிமுகமானார்.
    • சில சமயங்களில் அடி வாங்கினாலும் ரஷித்கான் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கப்படுகிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 19000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் குவித்துள்ளார்.

    இந்நிலையில் தனது கேரியரில் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    2006-ல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னே பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக நுணுக்கங்களை தாண்டி தம்முடைய பெயராலேயே அவர் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன்.அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது.

    ஆனால் அதற்கு நிகராக பும்ரா போன்ற புதிய பவுலர்கள் மிகப் பெரிய சவாலை கொடுத்தனர். ஏனெனில் அதிக போட்டியை கொடுத்த அவர் எப்போதும் பின் வாங்காமல் உங்களது முகத்துக்கு நேராக சவாலை கொடுப்பார்.

    அதே போல் ரஷித் கான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான ஒருவர். சில சமயங்களில் அடி வாங்கினாலும் அவரும் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    அவர் ஓவரில் நான் ஒருமுறை 3 சிக்சர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர்களைப் போன்ற பவுலர்கள் நான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

    என்று அவர் கூறினார்.

    • ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.
    • இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன்.

    லண்டன்:

    இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. கோப்பையை எந்த அணி வெல்லும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் மற்றும் முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளனர்.

    ஏபிடி வில்லியர்ஸ் கூறியதாவது:-


    ஓவலில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை கொள்வார்கள். பேட்டிங் செய்ய இது ஒரு நல்ல விக்கெட், ஆனால் டெஸ்ட் போட்டியின் கடைசி கட்டங்களில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    நாசர் ஹூசைன் கூறியதாவது:-


    இந்திய அணி எந்தவிதமான கள சூழலிலும் வெல்லும் என நான் நினைக்கிறேன். அதற்கு ஆஸ்திரேலியாவில் அவர்களது செயல்பாடு உதாரணம். சூரியன் பிரகாசிக்கும் வகையில் வானிலை ஒத்துழைத்தால் அவர்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 3-வது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாக்கூர் என்ற ஃபார்முலாவின் அடிப்படையில் அணியை தேர்வு செய்யலாம்.

    கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அந்த மைதானத்தின் சூழலை தவறாக கணித்து விட்டனர் என கருதுகிறேன். அதே நேரத்தில் ஓவலில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த முறை இங்கிலாந்தை இங்கு வீழ்த்தி உள்ளது. ஷமிக்கும், கம்மின்சுக்கும் இடையே நிச்சயம் பலமான போட்டி நிலவுகிறது. அது ட்யூக் பந்தில் அவர்களது லெந்த் மற்றும் லைனில் எப்படி இருக்கப் போகிறது என்பதுதான்.

    என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

    • வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை.
    • நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஐதராபாத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. ஐதராபாத் அணி நிர்ணயித்த 187 ரன் இலக்கை பெங்களூரு 19.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து எடுத்தது.

    விராட் கோலி சதம் அடித்தார். அவர் 63 பந்தில் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 12 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும். இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.


    ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியதாவது:-

    முக்கியமான ஆட்டத்தில் நான் சதம் அடித்து இருப்பது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. நாங்கள் நல்ல தொடக்கத்தை அளிக்க விரும்பினோம். ஆனால் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுப்போம் என்று எதிர் பார்க்கவில்லை.

    டுபிளசிஸ் வேறு ஒரு அளவில் சிறப்பாக விளையாடி வருகிறார். நான் சில போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. வலைப்பயிற்சியில் பந்துகளை அடிப்பதுபோல் போட்டியில் அடிக்கவில்லை.

    இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தேன். இன்றைய ஆட்டத்தில் அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எப்போதும் ரன் கணக்குக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

    சில சமயங்களில் பெரிய இன்னிங்சை விளையாடியதற்கும் பெருமைப்பட்டு கொள்ளமாட்டேன். நெருக்கடியான சூழலில் விளையாடி வெற்றி பெறுவது எனக்கு பெருமை.

    நான் வித்தியாசமான ஷாட்டுகளை ஆட விரும்பவில்லை. ஒரு ஆண்டில் 12 மாதங்களிலும் விளையாடுகிறோம். இதில் வித்தியாசமான ஷாட்டுகளை ஆடி எனது விக்கெட்டை இழக்க விரும்பவில்லை. எப்போதுமே எனது கிரிக்கெட் யுக்திகளுக்கு உண்மையாக இருந்து அணிக்காக விளையாடுவதில் பெருமை கொள்கிறேன்.

    டுபிளசிசும் நானும் விளையாடுவதை பார்க்கும் போது டிவில்லியர்சும் நானும் விளையாடுவது போல் எனக்கு தெரிகிறது.

    இங்கு (ஐதராபாத்) ரசிகர்கள் எங்களுக்கு அதிக ஆதரவு அளித்தனர். சொந்த மண்ணில் விளையாடியது போல் இருந்தது. நான் விளையாடும் போது மக்கள் சந்தோஷப்படுவதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.
    • பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ். அதிரடி பேட்ஸ்மேனான அவர், தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உங்களின் சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு டிவில்லியர்ஸ் கூறியதாவது:-


    எனது ஒட்டுமொத்த காலத்திற்கான சிறந்த 20 ஓவர் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான்தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கிறார். இரண்டு துறையிலும் போட்டியை வெற்றி பெற வைக்க கூடியவர்.

    பீல்டிங்கில் அவர் நெருப்பு மாதிரி செயல்படுகிறார். அவர் வெற்றி பெற வேண்டுமென்று எப்போதும் நினைப்பார். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். அவர்தான் 20 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கான், பல்வேறு 20 ஓவர் லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் உள்ளிட்ட போட்டித் தொடரில் விளையாடி வருகிறார்.

    டிவில்லியர்ஸ், ஐ.பி.எல். போட்டியில் விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள்.
    • ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    புதுடெல்லி:

    தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேஸ்ட்மேன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்தியாவும், நியூசிலாந்தும் தேர்வு பெறும். இதில் இந்தியா அணி வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன்.

    சூர்யகுமார் யாதவ், விராட் கோலி ஆகியோர் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணியில் உள்ள ஒட்டு மொத்த வீரர்களும் திறமை சாலிகள். ரோகித் சர்மா இதுவரை தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் விளையாட ஆரம்பித்தால் அனல் பறக்கும். ரோகித் சர்மா ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணியும், நாளை நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா-இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    • என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது.
    • ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்.

    சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓராண்டுக்கு முன்பு அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    ஐபிஎல் 2023 தொடருக்கு மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு இணையப்போவதாகத் தெரிவித்திருக்கிறார் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபிடி வில்லியர்ஸ். ஆனால், அவர் வீரராக இணையப்போவது இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

    சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் டி வில்லியர்ஸ் இனி விளையாடவே போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மீண்டும் சின்னசாமி ஸ்டேடியத்துக்குத் திரும்பும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்குத் தன்னுடைய ஆதரவைத் தரப்போவதாகக் கூறியிருக்கிறார்.

    சமூகதள உரையாடல் ஒன்றின் போது அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு நான் சின்னசாமி ஸ்டேடியத்துக்கு செல்லப் போகிறேன். ஆனால் கிரிக்கெட் விளையாடுவதற்காக அல்ல. ஐபிஎல் கோப்பை வெல்லாததற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன்.

    கடந்த பத்து ஆண்டுகளாக அவர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும். என்னால் இதற்கு மேல் கிரிக்கெட் விளையாட முடியாது. ஏனெனில் என்னுடைய வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறேன். தான் அடுத்து தொடங்கப்போகும் யூடியூப் சேனல் பற்றி அறிவித்த டி வில்லியர்ஸ், தன்னுடைய எதிர்கால திட்டங்கள் உள்பட பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

    இந்த உரையாடலின்போது இப்போதைக்குத் தான் பயிற்சியாளர் ஆகும் எண்ணம் இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். தன்னுடைய மகத்தான கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த டி வில்லியர்ஸ் தற்போதைக்கு தன் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதே தன்னுடைய பிரதானம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    நான் கற்றுக்கொண்ட அனைத்து விஷயங்களுமே பகிர்ந்துகொள்ள நான் நிச்சயம் விரும்புகிறேன். ஆனால் அதற்கான நேரம் வரும். ஆனால் இப்போதைக்கு நான் எந்த அணியோடும் இணையத் தயாராக இல்லை. பயிற்சியாளரானால் மீண்டும் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் மீண்டும் பயணம் மேற்கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் பல பயணங்கள் மேற்கொண்டுவிட்ட நான் இப்போதைக்கு சில காலம் என் குடும்பத்தோடு என் நேரத்தை செலவளிக்க நினைக்கிறேன் என கூறி உள்ளார்.

    ஐபிஎல் வரலாற்றில் முன்னணி வீரர்களில் ஒருவரான ஏபிடி வில்லியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் 39.7 சராசரி மற்றும் 151 ஸ்டிரைக் ரேட்டுடன் 5,162 ரன்களை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்காவுக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி மூன்று வடிவங்களிலும் 18 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.

    • ரோகித் சர்மா இதுவரை 230 ஒருநாள் போட்டிகளில் 44 அரை சதங்கள் மற்றும் 29 சதங்களுடன் 9283 ரன்கள் குவித்துள்ளார்.
    • ஒருநாள் போட்டியில் 29 சதங்கள் விளாசிய ரோகித் சர்மா அதில் ஏழு சதங்களை இங்கிலாந்தில் அடித்துள்ளார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய சாதனை படைக்கவுள்ளார்.

    ரோகித் சர்மா இதுவரை 230 ஒருநாள் போட்டிகளில் 44 அரை சதங்கள் மற்றும் 29 சதங்களுடன் 9283 ரன்கள் குவித்துள்ளார்.

    குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த ஏபிடிவில்லியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), சச்சின் (இந்தியா) சயித் அன்வர் (பாகிஸ்தான்) ஆகியோருடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.

    ஒருநாள் போட்டியில் 29 சதங்கள் விளாசிய ரோகித் சர்மா அதில் ஏழு சதங்களை இங்கிலாந்தில் அடித்துள்ளார். 2019-ம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் போது ரோகித் ஒரு அரை சதம் உள்பட 5 சதம் அடித்தார். 2017 சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ரோகித் தனது முதல் சதத்தை (123*) அடித்தார். 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது நாட்டிங்ஹாமில் ரோகித் 137 ரன்கள் எடுத்தார்.

    சச்சின் டெண்டுல்கர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏழு சதங்கள் அடித்தார். 42 போட்டிகளில் 1778 ரன்களுடன் ஜிம்பாப்வேக்கு எதிராக 2, இலங்கைக்கு எதிராக 2 மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா ஒன்று.

    டி வில்லியர்ஸ் இந்தியாவில் 20 ஒருநாள் போட்டிகளில் 1125 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஏழு சதங்கள் அடித்தார்.

    பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சயீத் அன்வரும் டெண்டுல்கரைப் போலவே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 7 சதங்கள் அடித்துள்ளார். அவர் 51 ஆட்டங்களில் 11 அரைசதங்கள் மற்றும் 7 சதங்களுடன் 2179 ரன்கள் குவித்தார்.

    ரோகித் சர்மா இன்னும் ஒரு சதம் விளாசினால் இந்த மூன்று பேரின் சாதனையை முறியடிப்பார்.

    நான் சந்தித்ததிலேயே இந்த காலகட்டத்தில் மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரரும் டிவில்லியர்ஸ்தான் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
    தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஏபி டிவில்லியர்ஸ் இன்று அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது ஓய்வுக்கு ஆர்பிசி அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி டுவிட் செய்துள்ளார்.

    டிவில்லியர்ஸ் ஓய்வு குறித்து விராட் கோலி கூறியதாவது:- உங்கள் ஓய்வு என் இதயத்தை புண்படுத்தியது. இந்த காலகட்டத்தில் நான் சந்தித்ததிலேயே மிகவும் சிறந்த வீரரும், உத்வேகம் தரக்கூடிய வீரரும் டிவில்லியர்ஸ் தான். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்பை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம். நமது பந்தம் விளையாட்டிற்கு அப்பாற்பட்டது. இது தொடரும். ஐ லவ் யூ டிவில்லியர்ஸ் என விராட் கோலி பதிவிட்டுள்ளார்.

    விராட் கோலியின் பதிவிற்கு ஏபி டிவில்லியர்ஸ் லவ் யூ டு ப்ரோ என பதிலளித்துள்ளார்.

    ஏபி டி வில்லியர்ஸ் 145 போட்டிகளில் 41.10 சராசரியுடன் 4522 ரன்கள் எடுத்து ஆர்சிபி அணியின் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 6707 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
    தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்கு கொடுத்த ஆதரவிற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
    தென் ஆப்பிரிக்கா:

    தென் ஆப்பிரிக்காவின் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'எனது பெற்றோர்கள், சகோதரர்கள், எனது மனைவி டேனியல்லே மற்றும் எனது குழந்தைகள் செய்த தியாகங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை என்பதை நான் அறிவேன். எங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை முதலிடத்தில் வைக்கக் காத்திருக்கிறேன்.

    நான் பயணித்த அதே பாதையில் பயணித்த என்னுடைய அணியினருக்கும், ஒவ்வொரு எதிரணியினருக்கும், ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், ஒவ்வொரு பிசியோ தெரபிஸ்ட் மற்றும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும், நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்கு கொடுத்த ஆதரவிற்கு நான் நன்றியுடன் இருக்கிறேன்.

    கிரிக்கெட் என்னிடம் மிகவும் அன்பாக இருந்தது. டைட்டனுக்காக, அல்லது புரோட்டீசுக்காக, அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக அல்லது உலகம் முழுவதும் விளையாடினாலும், கிரிக்கெட் எனக்கு கற்பனை செய்ய முடியாத அனுபவங்களையும் வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது, அதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.

    இது ஒரு நம்பமுடியாத பயணம், ஆனால் நான் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது சகோதரர்களுடன் வீட்டிற்கு பின்புறம் விளையாடியதிலிருந்து, நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடி இருக்கிறேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை.' என்று தெரிவித்துள்ளார்.
    ×