search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • 100 பந்துகளை மட்டுமே கொண்டு இந்த கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போல இங்கிலாந்து நாட்டில் The Hundred லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

    100 பந்துகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டு வரும் The Hundred லீக் தொடருக்கு ஐபிஎல் போல மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

    இதனால், ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாடி வரும் அணிகளில் முதலீடு செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்நிலையில், தற்போது ஒவ்வொரு அணிகளின் 49% பங்குகளை விற்பனை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. ஒவ்வொரு அணிகளின் மதிப்பும் சுமார் ரூ.900 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனிடையே முதற்கட்ட ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தரப்பில் ஏலத்திற்கான தொகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளது.

    ஹன்ட்ரட் அணிகளின் 49% பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், மீதமுள்ள 51% பங்குகள் கவுண்டி அணிகளிடம் தான் இருக்கும். அவர்களும் இணைந்தே அணியை வழிநடத்துவார்கள் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • முதலில் பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டாக்கா:

    வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    202 ரன்கள் பின்தங்கிய நிலையில், வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. மஹமதுல் ஹசன் 38 ரன்னும், முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்காக 6,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முஷ்பிகுர் ரஹீம் படைத்தார்

    முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 11 சதங்கள் மற்றும் 27 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான், இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

    இந்த தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.

    வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 24-ம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இதில் வெற்றிபெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இந்த அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கஸ் அட்கின்சன் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்து அணி விவரம்; ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், ரெஹான் அகமது, ஜேக் லீச், ஷோயப் பஷீர்.

    • கைல் வெர்ரேய்ன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்கதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 106 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 140 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கைல் வெர்ரேய்ன் 18 ரன்னிலும் வியான் முல்டர் 17 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் தொடங்கியது. இருவரும் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்தனர். முல்டர் 54 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த மகாராஜ் 0 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் வெர்ரேய்ன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்னையும் கடந்தார்.
    • முதல் தர கிரிக்கெட்டில் 18-வது இரட்டை சதம் அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    இதில் 2-வது லீக் ஆட்டம் ஒன்றில் சவுராஷ்டிரா-சத்தீஷ்கார் (டி பிரிவு) அணிகள் மோதிய ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்தது. சத்தீஷ்கார் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 578 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 75 ரன்னுடனும், ஷெல்டன் ஜாக்சன் 57 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த புஜாரா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷெல்டன் ஜாக்சன் 62 ரன்னிலும், அர்பித் வசவதா 73 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று கலக்கிய புஜாரா இரட்டை சதம் விளாசினார்.

    இது அவருக்கு ரஞ்சி போட்டியில் 9-வது இரட்டை சதமாகவும், முதல் தர கிரிக்கெட்டில் 18-வது இரட்டை சதமாகவும் பதிவானது. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் (டெஸ்டையும் சேர்த்து) அதிக இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் புஜாரா 4-வது இடத்துக்கு முன்னேறினார். இதில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் (37 இரட்டை சதம்), இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் (36), ஹென்ட்ரென் (22) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    அத்துடன் புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்னையும் கடந்தார். கவாஸ்கர், டெண்டுல்கர், டிராவிட் ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 4-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார்.

    36 வயதான புஜாரா 234 ரன்களில் (383 பந்து, 25 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷசாங்க் சிங் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அப்போது சவுராஷ்டிரா அணி 137.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 478 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் இந்த ஆட்டம் இரு அணி கேப்டன்கள் சம்மதத்துடன் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சே முடியாததால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன.

    • கடந்த முறையும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. தற்போதும் சேர்க்கப்படவில்லை.
    • செலவை கட்டுப்படுத்தும் விதமாக டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான் ஆகிய போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளன.

    லண்டன்:

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1911-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

    கடைசியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு நடைபெற்றது.

    2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு இந்தப் போட்டி நடக்கிறது. கடைசியாக 2014-ல் நடைபெற்றது.

    23-வது காமன்வெல்த் விளையாட்டான இதில் இடம் பெறும் போட்டிகள் குறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு இன்று அறிவித்தது.

    ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறையும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. தற்போதும் சேர்க்கப்படவில்லை.

    செலவை கட்டுப்படுத்தும் விதமாக டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான் ஆகிய போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறை இடம் பெற்ற போட்டியில் 7 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

    இந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். ஏனென்றால் இந்த விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை இந்தியா பதக்கம் வென்ற 6 விளையாட்டுகளும் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.

    காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

    2022 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 61 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எனது சிறு வயது பயணம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது.
    • எங்களுக்கு உணவுக்கு போதுமான பணம் இல்லாத நாட்கள் நிறையவே இருந்தது.

    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக சிராஜ் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.

    இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சிராஜ்-க்கு அம்மாநில அரசு போலீஸ் டிஎஸ்பி பதவியை வழங்கி கவுரவித்தது.

    இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் மகன் முதல் டிஎஸ்பி வரையிலான எனது பயணம் என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

    அதில், எனது சிறு வயது பயணம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது. எனது அப்பா ஆட்டோ டிரைவர். எங்களுக்கு உணவுக்கு போதுமான பணம் இல்லாத நாட்கள் நிறையவே இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் குறையவில்லை. எனது எதிர்காலத்திற்காக கிரிக்கெட்டை மட்டுமே நம்பினேன். நான் எப்போதும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு கண்டேன். 

    எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டது எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து ஆர்சிபி அணியில் இணைந்தது மிகப்பெரிய தருணம். அப்போதுதான் எனது உண்மையான பயணம் தொடங்கியது. அணியில் இணைந்த நேரத்தில் விராட் பாய் எனக்கு ஆதரவாக இருந்தார். 

    எனது தந்தையின் மரணம் போட்டியின் போது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாகும். அதன் பிறகும், நான் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற அவரது கனவை நினைத்துப் பார்த்தேன். இதனால் இந்தியாவுக்கு திரும்பவில்லை. அந்த தொடரில் வெற்றி பெற்றோம். 

    ஆசிய கோப்பை 2023 இறுதிப் போட்டியே என்னுடையே சிறந்த பந்து வீச்சு ஆகும். அந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்டர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது வெற்றிக்கு உதவியது. அதன்பிறகு எனது செயல்பாடுகள் மேம்பட்டு வருகின்றன. எனது உழைப்பிற்காக அரசு எனக்கு டிஎஸ்பி பதவியை வழங்கி உள்ளது.

    என்னுடைய இந்த பயணம் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். என சிராஜ் கூறியிருந்தார்.

    • வில்லியம்சன் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை.
    • 3-வது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்னேற்றம் காண்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    புனே:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் வருகிற 24 -ந்தேதி மராட்டிய மாநிலம் புனேயில் தொடங்குகிறது. இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியம்சன் இந்த டெஸ்டிலும் ஆட மாட்டார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பெங்களுருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆட வில்லை.

    இடுப்பு வலியில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் வில்லியம்சன் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

    வில்லியம்சன் 100 சதவீதம் முழு உடல் தகுதியுடன் இல்லை. அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றும், 3-வது டெஸ்டில் விளையாடுவதற்கு முன்னேற்றம் காண்பார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நவம்பர் 1-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார்.

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் மும்பை அணி தான் மோதிய 2 போட்டிகளில் 1 தோல்வி 1 வெற்றி பெற்றுள்ளது.

    மும்பை அணி, முதல் போட்டியில் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான 2-வது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 3-வது போட்டியில் திரிபுரா அணியுடன் 26-ந் தேதி மோத உள்ளது.

    இந்நிலையில் பிரித்வி ஷா மும்பை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அதிக எடையுடன் இருப்பதாகவும் வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேலும் இந்திய அணிக்காக அதிக போட்டிகள் விளையாடிய ரகானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் மட்டும் அதனை புறக்கணிப்பதாகவும் மும்பை நிர்வாகம் கூறியது.

    மும்பை அணியில் இருந்து நீக்கியதற்கு இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா ஓய்வு தேவை நன்றி என ஸ்டோரி வைத்துள்ளார். இரண்டு போட்டிகளில் விளையாடிய பிரித்வி ஷா 4 இன்னிங்ஸ்களில் 59 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சர்பராஸ் கான் முதல் சதத்தை பதிவு செய்தார்.
    • அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 462 ரன்கள் குவித்தது. இக்கட்டான சூழலில் பொறுப்புடன் ஆடிய சர்பராஸ்கான் டெஸ்ட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 150 குவித்து ஆட்டமிழந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி விளையாடி வரும் அவர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார்.

    இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த கையோடு மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

    அவர், தனது குழந்தையை கையில் ஏந்தி போஸ் கொடுத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கடந்த ஆண்டு செப்டம்பரில் 8 வாரங்கள் சபலென்கா முதலிடத்தில் இருந்தார்.
    • ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை.

    நியூயார்க்:

    டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன் ஒற்றையர் தரவரிசையில் கடந்த ஓராண்டாக முதலிடத்தில் இருந்த போலந்தின் இகா ஸ்வியாடெக் (9,665 புள்ளி) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சீன ஓபன் மற்றும் வுஹான் ஓபன் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை அவர் தவற விட்டது தரவரிசை புள்ளியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (9,706 புள்ளி) மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டியில் மகுடம் சூடிய அவர் சீன ஓபனில் அரைஇறுதிவரை முன்னேறி இருந்தார்.

    தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு 'நம்பர் ஒன்' இடம் கிடைத்துள்ளது. அவர் முதலிடத்தில் இருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் 8 வாரங்கள் முதலிடத்தில் இருந்தார்.

    26 வயதான சபலென்கா தனது எக்ஸ் தளத்தில், 'நம்பர் ஒன் இடம் இந்த முறை எவ்வளவு நாள் என்னிடம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்' என்று பதிவிட்டுள்ளார். அவர்கள் இடையே வெறும் 41 புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளது.

    டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்கும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அடுத்த மாதம் 2-ந்தேதி ரியாத்தில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு 1,500 தரவரிசை புள்ளி கிடைக்கும். எனவே இந்த போட்டியின் முடிவு சபலென்கா, ஸ்வியாடெக் ஆகியோரில் யாரை ஆண்டின் இறுதியில் 'நம்பர் ஒன்' அரியணை அலங்கரிக்கும் என்பது தெரிய வரும்.

    அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும் (5,963 புள்ளி), ஜெசிகா பெகுலா 4-வது இடத்திலும், கஜகஸ்தானின் எலினா ரைபகினா 5-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஜானிக் சினெர் (இத்தாலி), அல்காரஸ் (ஸ்பெயின்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜோகோவிச் (செர்பியா), மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் முதல் 5 இடங்களில் தொடருகிறார்கள்.

    • இந்த அணியில் 2 தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் -கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக அங்கு விளையாடிய 2 தொடர்களையும் வென்ற இந்திய கிரிக்கெட் அணி இம்முறை ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற தயாராகி வருகிறது.

    அதற்கு முன்பாக இந்தியா ஏ அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 முதல் தர போட்டிகளில் விளையாட உள்ளது. அதுபோக பெர்த் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராகவும் இந்தியா ஏ அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த போட்டிகளில் விளையாடுவதற்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    துணை கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    சமீபத்திய வங்கதேச தொடரில் அசத்திய நித்திஷ் ரெட்டி மற்றும் படிக்கல் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர். பவுலிங் துறையில் கலில் அகமது, முகேஷ் குமார், யாஸ் தயாள், நவ்திப் சைனி, ஆல் ரவுண்டராக அசத்தி வரும் தானுஷ் கோட்டியான் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

    ஆஸ்திரேலியா ஏ தொடருக்கான இந்தியா ஏ அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நித்திஷ் ரெட்டி, படிக்கல், ரிக்கி புய், பாபா இந்திரஜித், இஷான் கிஷன், (கீப்பர்), அபிஷேக் போரல் (கீப்பர்), முகேஷ் குமார், கலீல் அகமது, யாஷ் தயாள், நவ்தீப் சைனி, மானவ் சுதர், டானுஷ் கோட்டியான்.

    ×