search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket World Cup"

    • ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
    • உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.

    திருச்சி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற கிரிக்கெட் ரசிகர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான வேண்டுதல்கள், வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

    திருச்சியில் ரசிகர்கள் சற்று வித்தியாசமாக 15 அடி பிரம்மாண்டமான கிரிக்கெட் உலகக்கோப்பை மாதிரி செய்து காட்சிக்கு வைத்துள்ளனர். அத்துடன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து 'ஆல் தி பெஸ்ட் இந்தியா' என்ற வாசகத்துடன் கூடிய பேனரும் வைக்கப்பட்டு உள்ளது.

    திருச்சி மேலப்புலிவார்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதை நிறுவி உள்ளனர். இந்த உலககோப்பை மாதிரியை 11 பேர் கொண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இணைந்து 11மணி நேரம் உழைத்து தயாரித்து உள்ளனர்.

    லட்சுமி நரசிம்மன் தலைமையிலான இந்தக் குழுவினர் பிரம்மாண்டமான உலகக் கோப்பை வைத்து வாழ்த்து தெரிவிப்பது இத்துடன் 3 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பை திருச்சி, மேலப்புலிவார்டு ரோடு இப்ராஹிம் பூங்கா எதிர்வரிசையில் ஒரு வணிக வளாகத்தின் முன்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பலரும் இதை ஆர்வத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

    ஏற்கனவே திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இந்தியாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் உலகக் கோப்பையையொட்டி 60 ஆண்டு காலம் சேகரித்து பாதுகாத்து வைத்திருந்த பழங்கால நாணயங்களை கொண்டு உலகக்கோப்பையை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கண்காட்சியில் கிரிக்கெட் உலக கோப்பையை வாழ்த்தும் வகையில் 1975-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை உள்ள இந்திய நாணயங்களை கொண்டு திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலாளர் பத்ரி நாராயணனால் உருவாக்கப்பட்ட உலக கோப்பை மத்திய நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நாணயங்களில் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ், திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது இந்த நாணயங்களால் வடிவமைக்கப்பட்ட உலக கோப்பை அருகே கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.
    • சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    இந்தியா தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சமி, பும்ரா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த போட்டியில் முகமது சிராஜும் சிறப்பாக செயல்பட்டார். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், ஜடேஜா உள்ளனர்.

    ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, வெற்றி உத்வேகத்தை தக்க வைத்து கொள்ள முயற்சிக்கும்.

    பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி 7 ஆட்டத்தில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அரை இறுதியை நெருங்கிவிட்ட தென் ஆப்பிரிக்கா நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதை உறுதி செய்துவிடும். அந்த அணி பேட்டிங்கில் குயின்டான் டி காக், மார்க் ராம், வான்டெர்துசன், கிளாசன், டேவிட் மில்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதில் குயின் டான் டி காக் 545 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். பந்து வீச்சில் மார்கோ ஜேன்சன், ரபடா, மகராஜ், கோட்சி ஆகியோர் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்கா 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நெதர்லாந்திடம் மட்டும் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. மற்ற ஆட்டங்களில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

    சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும்.
    • மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.

    10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் உலக கோப்பை போட்டி தொடரில் அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுவிட்டது. மற்ற 3 அணிகள் எவை என்பதில் போட்டி நிலவுகிறது.

    தென்ஆப்பிரிக்கா 7 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிடும். அந்த அணி இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் மோத உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவின் ரன் ரேட் (+2.290) நல்ல நிலையில் உள்ளது. ஒரு வேளை இரண்டு ஆட்டங்களிலும் தோற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து எந்த இடம் என்பது அமையும்.

    ஆஸ்திரேலியா 6 ஆட் டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி யுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. எஞ்சியுள்ள மூன்று போட்டியிலும் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும். 2 வெற்றி அல்லது ஒரு வெற்றி பெற்றால் மற்ற ஆட்டங்களின் முடிவை பார்க்க வேண்டும.

    நியூசிலாந்து அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணி மீதமுள்ள இரண்டு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஒன்றில் தோற்றால் மற்ற அணிகள் முடிவை பார்த்து வாய்ப்பு அமையும்.

    ஆப்கானிஸ்தான் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று உள்ளது. மீதமுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று ரன் ரேட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவது முக்கியம்.

    பாகிஸ்தான் 6 புள்ளி களுடன் உள்ளது. எஞ்சி உள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். ரன் ரேட்டிலும் நல்ல நிலைக்கு வர வேண்டும். நியூசி லாந்துக்கு எதிராக வெற்றி பெற்று இங்கிலாந்திடம் தோற்றால் 8 புள்ளிகள் பெறும். அப்போது மற்ற ஆட்டங்களின் முடிவு சாதகமாக இருக்க வேண்டும்.

    தலா 4 புள்ளிகளுடன் உள்ள இலங்கை, நெதர்லாந்து அணிகளுக்கு ஏற குறைய வாய்ப்பு முடிந்துவிட்டது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும் அரை இறுதி வாய்ப்பு கடினம். நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 6 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று உள்ளது. மீதமுள்ள மூன்று ஆட்டங்களில் வென்றாலும் அந்த அணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு மிக குறைவு.

    வங்காளதேசம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுவிட்டது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

    • பாபர் ஆசம் தலைமையலான பாகிஸ்தான்-சகீப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
    • பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றோடு ஒவ்வொரு அணியும் தலா 6 ஆட்டங்களில் விளையாடி விடும். புனேயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    31-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் பாபர் ஆசம் தலைமையலான பாகிஸ்தான்-சகீப் அல் ஹசன் தலைமையிலான வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    பாகிஸ்தான் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (நெதர்லாந்து, இலங்கை) வெற்றி பெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 போட்டியில் (இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா) தோற்றது.

    பாகிஸ்தான் அணி தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வங்காளதேசத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்காளதேசம் 1 வெற்றி, 5 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மட்டுமே வங்காளதேசத்தை வீழ்த்தியது. பின்னர் 5 போட்டியில் தொடர்ச்சியாக தோற்றது.

    பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் வங்காளதேசம் இருக்கிறது.

    • பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார்
    • தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா மீண்டும் இடம் பிடித்துள்ளார்

    உலகக் கோப்பையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    டாஸ் வென்ற பாபர் அசாம், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியம். அந்த வகையில் இந்த போட்டியை அணுகுவோம். அனைத்து துறைகளிலும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது" என்றார்.

    பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா இணைந்துள்ளார்.

    • அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அக்டோபர் 14-ந் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைராலாகியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களை குறிவைத்து முறையற்ற வகையில் ரசிகர்கள் நடந்து கொண்டதாக ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது. 

    இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா வழங்கும் நடைமுறையில் நிலவும் தாமதம், பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் ஐசிசி-யிடம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், கடந்த 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி வீரர்களை டார்கெட் செய்து மைதானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்தும் புகார் அளித்துள்ளோம்.

    இவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.
    • விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    முதலில் 'டாஸ்' வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

    இதன் காரணமாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இந்த போட்டியின் போது பல நேரங்களில் ரசிகர்கள் 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினார்கள்.

    மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் 'ரிஸ்வான்' 49 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பப்பட்டது.

    இதனை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் 'விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.

    விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

    விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற 28-ந்தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வரும் நிலையில் பிரதமர் ரிஷிசுனக் இந்தியா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள 26 அத்தியாயங்களில் 24 அத்தியாயங்களை இரு தரப்பும் இறுதி செய்துவிட்டன. சில விஷயங்களில் உள்ள வேறுபாடுகளை களைவதன் மூலம் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு தரப்பினரும் தீவிரமாக உள்ளனர்.

    இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இந்திய பயணத்தில் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றனர்.

    மேலும் 29-ந்தேதி லக்னோவில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ரிஷிசுனக் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்தியாவுக்கு வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டார். இதில் அவர் இந்திய பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகக் கோப்பை போட் டிக்கான 15 பேர் கொண்ட அணியை வருகிற 5-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருந்தது.
    • இஷான் கிஷன் 2-வது விக்கெட் கீப்பராக உலகக் கோப்பைக்கு தேர்வாகிறார். சூர்யகுமார் யாதவும் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.

    புதுடெல்லி:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடக்கிறது.

    இதில் போட்டியை நடத்தும் இந்தியா, நடப்பு சாம்பியன், இங்கிலாந்து முன்னாள் சாம்பியன்கள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கா னிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலகக் கோப்பை போட் டிக்கான 15 பேர் கொண்ட அணியை வருகிற 5-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கெடு விதித்திருந்தது.

    மேலும் காயம் ஏதேனும் ஏற்பட்டால் செப்டம்பர் 28-ந் தேதிக்குள் கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியை இறுதி செய்யும் பணி நேற்று நடந்தது. இது தொடர்பாக தேர்வுக் குழு தலைவர் அஜீத் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இலங்கையில் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட பிறகு இந்த ஆலோசனை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகும் 15 வீரர்கள் இறுதி செய்யப்பட்டனர். அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது.

    தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து முழு உடல் தகுதி சான்றிதழ் அளிக்கப்பட்டுவிட்டதால் கே.எல்.ராகுல் அணியில் இடம் பெறுகிறார். அவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்.

    இஷான் கிஷன் 2-வது விக்கெட் கீப்பராக உலகக் கோப்பைக்கு தேர்வாகிறார். சூர்யகுமார் யாதவும் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்.

    லோகேஷ் ராகுல் அணியில் இடம் பெறுவதால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை. அவர் அணியில் இடம் பெறமாட்டார்.

    இதே போல பேட்ஸ்மேன்களில் திலக் வர்மாவும் வேகப் பந்து வீரர்களில் பிரஷித் கிருஷ்ணாவும் தேர்வு செய்யப்படமாட்டார்கள்.

    வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் சுழற்பந்து வீரர்களில் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் ஆகியோரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அல்லது செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணி வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன்கில், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அக்ஷர் படேல், இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ்.

    • ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்து உள்ளார்.
    • யசுவேந்திர சாஹல் ஏற்கனவே ஆசிய கோப்பை அணியில் இடம்பெறவில்லை.

    புதுடெல்லி:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கோப்பையை வெல்லும் அணி எது? அரைஇறுதிக்கு முன்னேறு வது யார்? என்று முன்னாள் வீரர்கள் பலர் கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.

    உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெறப்போவது யார் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்து உள்ளார்.

    அவர் தேர்வு செய்த அணியில் குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹலுக்கு இடமில்லை.

    மேத்யூ ஹைடன் தேர்வு செய்த உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-

    ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், வீராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன்.

    யசுவேந்திர சாஹல் ஏற்கனவே ஆசிய கோப்பை அணியில் இடம்பெற வில்லை.

    இதேபோல இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்த அணியில் யசுவேந்திர சாஹல் இடம் பெறவில்லை. மேலும், திலக் வர்மாவுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை.

    • விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன்.
    • விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம்.


    புதுடெல்லி:

    ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் தொடங்க இன்னும் 41 தினங்களே உள்ளன.

    ஆனால் இந்திய அணிக்கு இதுவரை 4-வது வரிசையில் விளையாடக்கூடிய வீரர் உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

    இந்த நிலையில் 4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்ரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணிக்கு "நம்பர்-4" பேட்ஸ்மேன் யார்? என்று இன்னும் பேசிக் கொண்டு இருக்கிறோம். விராட் கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விபட்டுள்ளேன். அதற்கு நான் மிகப்பெரிய ஆதரவை தெரிவிப்பேன்.

    4-வது வரிசையில் ஆடுவதற்கு விராட் கோலி பொருத்தமானவர் என்று நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் தான் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும்.

     

    ஆனால் அவர் அதை செய்ய விரும்புகிறாரா? என்று எனக்கு தெரிய வில்லை. விராட் கோலி தனது இடமான 3-வரிசையை விரும்புவதை நாங்கள் அறிவோம். அந்த வரிசையில் தான் அவர் தனது அனைத்து ரன்களையும் குவித்தார்.

    அதே நேரத்தில் அணிக்கு என்ன தேவை என்று கருதினாலும் நாம் அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 39 ஆட்டததில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.21 ஆகும். அதிகபட்சமாக 139 ரன் எடுத்துள்ளார். இந்த வரிசையில் 7 சதமும், 8 அரை சதமும் அடித்துள்ளார்.

    விராட் கோலி 3-வது வரிசயைில் 210 ஆட்டத்தில் 39 சதத்துடனும், 55 அரை சதத்துடனும், 10,777 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 60.20 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார்.

    ஒட்டுமொத்தத்தில் அவர் 275 ஆட்டத்தில் 12,898 ரன் எடுத்துள்ளார். சராசரி 57.32 ஆகும். 46 சதமும், 65 அரை சதமும் அடங்கும். விராட் கோலியும், டி வில்லியர்சும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலி 4-வது வரிசையில் ஆடும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஆகியோரில் ஒருவர் 3-வது வீரராக ஆடலாம்.

    காயத்துக்காக ஆபரேசன் செய்து கொண்ட இருவரும் அதில் இருந்து மீண்டு உடல் தகுதி பெற்றதால் ஆசிய கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை போட்டியில் அணியின் நிலை பொறுத்தே உலக கோப்பைக்கு 4-வது வரிசை இறுதி செய்யப்படும். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான், இலங்கையில் இந்த போட்டி நடக்கிறது.

    • கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    • தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 நாடு கள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது.

    இந்தப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ஆபரேசன் செய்து கொண்ட கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரது உடல் தகுதியை சோதிக்காமலேயே தேர்வானது விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது.

    அதோடு செப்டம்பர் 2-ந் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போடியில் கே.எல்.ராகுல் ஆடுவது சந்தேகம் என்றும் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் முழு உடல் தகுதி இல்லாமல் இருக்கும் கே.எல்.ராகுல் ஆசிய கோப்பை அணிக்கு தேர்வு செய்தது ஏன்? என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கே.ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து முழுமையாக குணமாகவில்லை என்று தேர்வு குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவரை தேர்வு செய்தது ஏன்? தேர்வின்போது ஒரு வீரர் தகுதியற்றவராக இருந்தால் நீங்கள் அவரை தேர்வு செய்யக்கூடாது. இதுதான் எங்களின் கொள்கையாக இருந்தது.

    தேர்வு செய்யப்படும் நாளில் ஒரு வீரர் உடல் தகுதியுடன் இல்லாவிட்டால் அவரை தேர்வு செய்யக் கூடாது. நீங்கள் அவரை (கே.எல்.ராகுல்) உலக கோப்பைக்கு தேர்வு செய்ய விரும்பினால் அதற்காக மட்டும் தேர்ந்து எடுக்கவும். தேர்வு குழுவினர் விளக்கம் சரியாக இல்லை.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

    ×