search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jai Sriram"

    • விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.
    • விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    சென்னை:

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    முதலில் 'டாஸ்' வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக ரன்கள் எடுத்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.

    இதன் காரணமாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இந்த போட்டியின் போது பல நேரங்களில் ரசிகர்கள் 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினார்கள்.

    மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர் 'ரிஸ்வான்' 49 ரன்னில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பப்பட்டது.

    இதனை பலரும் விமர்சனம் செய்துள்ளனர். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இது தொடர்பான வீடியோவை பதிவு செய்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் 'விருந்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில் பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான முழக்கங்களை ஏற்க முடியாது.

    விளையாட்டு என்பது நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கும் சக்தியாக இருக்க வேண்டும். விளையாட்டு என்பது எப்போதும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும்.

    விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்து உள்ளார்.

    ×