search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Sterlite Plant"

    நாகர்கோவிலில் இன்று அதிகாலை தூத்துக்குடிக்கு புறப்பட்ட கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டு மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இச்சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    தூத்துக்குடியில் நடைபெறும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

    இதையடுத்து தூத்துக்குடியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பதட்டமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்காக குமரி மாவட்டத்தில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தூத்துக்குடி சென்றனர்.

    தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளரும், பச்சை தமிழகம் அமைப்பின் நிறுவனருமான சுப. உதயகுமார் இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று காலை நாகர்கோவில், கோட்டார் இசங்கன்விளையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அவர், தூத்துக்குடி செல்ல புறப்பட்டு கொண்டிருந்தார். அவரை போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வதாக கூறினர்.

    பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கோட்டார் போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டார். இதுபோல பச்சை தமிழகம் அமைப்பின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியும் கைது செய்யப்பட்டார். ஆரல்வாய் மொழியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் சங்கரபாண்டியை கைது செய்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench
    மதுரை:

    தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமாபாபு, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில் கல்லூரி மாணவி உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 2018 ஆகஸ்ட் 14ல் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது சி.பி.ஐ. 4 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இந்த காலக்கெடு 2018 டிசம்பர் 14-ல் முடிந்தது. காலக்கெடு முடிந்து 5 மாதங்கள் கடந்தும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரி மீது கூட சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.



    துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நெருங்குகிறது. இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. தூத்துக்குடி சம்பவத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளன.

    இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வருகிற 22-ந்தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த முடிவு செய்து, தூத்துக்குடி சிதம்பர நகர் வி.வி.டி. சந்திப்பு அல்லது எஸ்.வி.ஏ. பள்ளி மைதானம் அல்லது தூத்துக்குடி நகரில் ஏதாவது ஒரு மண்டபத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் துறையினரிடம் ஏப்ரல் 26-ந் தேதி மனு அளிக்கப்பட்டது.

    இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மே 22-ந் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சாமிநாதன், தண்டபாணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை வருகிற 22-ந்தேதி தூத்துக்குடி பகுதியில் உள்ள உள்கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம்.

    இந்த கூட்டத்தில் அதிகபட்சம் 250 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டம் நடத்துவோர் போலீசாரின் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #MaduraiHCBench
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SterlitePlant #NGT #SC
    புதுடெல்லி:

    தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இதையடுத்து ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் தங்கள் தரப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



    இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. #SterlitePlant #NGT #SC
    ஸ்டெர்லைட் தொடர்பாக வல்லுநர் குழு அளித்த அறிக்கை எதிர்பார்த்ததுதான் என்றும், ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த முன்னாள்  நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தனது ஆய்வறிக்கை மற்றும் பரிந்துரைகளை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டது நீதிக்கு எதிரானது என்றும், சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி தரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம், இதுபற்றி தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்துள்ளது.

    பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆலை மூடப்பட்டதாகவும், ஆலை மீண்டும் திறக்கப்படாது என்றும் ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.



    இந்நிலையில், பா.மக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்க முடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். நான் முன்பே கூறியதுதான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டனர்” என்று கூறியுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலை தரப்பு வக்கீல்களில் ஒருவரான அரிமா சுந்தரம் இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது” என்றார். #SterliteProtest #SterliteClosureOrder #NGT 
    ஸ்டெர்லைட் வழக்கில் தருண் அகர்வால் குழு அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #NGT #NationalGreenTribunal #SterliteCase
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் கூறியது.

    இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த செப்டம்பர் 10-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 26-ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதற்கிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர், சென்னை நகரிலும் விசாரணை மேற்கொண்டனர். ஆய்வுப் பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.


    அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த அறிக்கைக்கு தமிழக அரசு ஒரு வாரத்திற்குள் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #NGT #NationalGreenTribunal #SterliteCase
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளின் பேரில் செயல்பட அனுமதி அளிக்கலாம் என தருண் அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. #SterliteProtest #SterliteClosureOrder #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் தீவிர போராட்டம் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதாகவும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி நடந்த இந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும், ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

    அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யுமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.


    அதன்படி ஆய்வு நடத்திய தருண் அகர்வால் குழு நேற்று முன்தினம் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்தது.

    அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி தரலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது நீதிக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்க உள்ளது. #SterliteProtest #SterliteClosureOrder #NGT
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரதாது அகற்றும் பணி தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் இன்று தொடங்கின. #ThoothukudiSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாத 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை பிறப்பித்தது.

    இதை தொடர்ந்து அரசின் ஆணைப்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனிடையே ஆலையில் அமிலங்கள் வைக்கப்பட்ட குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அரசு உத்தரவுப்படி உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு ஆலையில் உள்ள ரசாயனங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அமிலங்கள், பெட்ரோலிய பொருட்கள் அகற்றும் பணி கடந்த ஜூலை 2-ந்தேதி தொடங்கியது.

    அப்போது கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோ புரோபைல் ஆல்கஹால், பெட்ரோலியம் பொருட்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இந்த ரசாயன பொருட்கள் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை சுமார் 90 சதவீதம் அகற்றப்பட்டன. தாமிரதாது, ஜிப்சம், ராக்பாஸ்பேட் மட்டும் அதிக அளவில் உள்ளன.

    இதனால் முழுமையாக அகற்றப்படவில்லை. அதன்பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து ரசாயன பொருட்கள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்டு 30-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மற்றொரு உத்தரவில், குழுவின் மேற்பார்வையில் ரசாயன பொருட்களை அகற்றலாம் என்ற உத்தரவு வந்தது.

    தற்போது ஆலையில் உள்ள அனைத்து அமிலங்களும் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. ராக்பாஸ்பேட், தாமிரதாது, ஜிப்சம் ஆகியவை உள்ளன. இதில் தாமிரதாது 90 ஆயிரம் டன் உள்ளது. இந்த தாதுவில் 30 சதவீதம் கந்தகம் இருக்கும். இதில் 10 சதவீதம் ஈரப்பதம் பராமரிக்கப்பட வேண்டும். இந்த ஈரப்பதம் குறைந்தால், தாமிரதாது தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தாமிரதாதுவை அகற்ற முடிவு செய்தனர்.

    தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாமிர தாதுவை அகற்றுவதற்கான அனுமதி கொடுக்கலாம் என்று உத்தரவு வந்தது. அதன்படி தாமிர தாதுவை அகற்றுவதற்கு ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இதையடுத்து தாமிரதாது அகற்றும் பணி தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் இன்று தொடங்கின. தாமிர தாதுக்களை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதே போன்று 4 லட்சம் டன் ஜிப்சத்தையும் அகற்ற திட்டமிட்டுள்ளனர். தாமிரதாது வாங்கியவர்களிடமோ, தாமிர தாதுவை பயன்படுத்தும் வேறு நிறுவனத்திடமோ கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. #ThoothukudiSterlite

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமேயானால் மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார். #Sterlite #Thirumavalavan
    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு ஏதுவான ஒரு சூழலை தமிழக அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்பது வேதனைக்கு உரியது. அரசு இந்த ஆலையை மூடுவதற்காக வெளியிட்ட அரசாணை, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு வலிமை பெற்றதாக இல்லை. அதனை பயன்படுத்தி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பு இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டோம். இன்று அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது.


    ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பலர் உயிர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து உள்ளது. அதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம், தமிழக நீதிபதி அதில் இடம் பெறக்கூடாது என்ற எதிர்ப்பையும் தெரிவித்து இருக்கிறது.

    இந்த சூழலில், மத்திய, மாநில அரசுகள் விழிப்பாக இருக்க வேண்டும். மறுபடியும் ஆலையை திறக்க இடம் தரக்கூடாது. ஆலை திறக்கப்படுமேயானால் மீண்டும் வெகுமக்கள் புரட்சி வெடிக்கும். மக்களை சிதறடித்து விட்டோம். அச்சுறுத்தி கலைய வைத்து விட்டோம் என்று கருதாமல், நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    ஒருநபர் விசாரணை ஆணையம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறது என்பதை இறந்தவருக்கு சம்மன் அனுப்பியதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கண்துடைப்புக்காக அமைத்து இருக்கிறது. ஆகவே சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டும். அதில் பணியில் இருக்கும் ஒரு ஐகோர்ட்டு நீதிபதி மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் இடம்பெற வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்தோம்.

    எனவே ஒருநபர் விசாரணை ஆணைய நடவடிக்கையை அரசு நிறுத்தி வைக்க வேண்டும். புதிதாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும். அல்லது ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணைக்கு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அந்த விசாரணைக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார். #Sterlite #Thirumavalavan
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. #ThoothukudiSterlite
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்தது.



    அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து மே 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து, ஆலையை நடத்தி வந்த வேதாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதில் உள்நோக்கம் உள்ளதாகவும், ஆலை உற்பத்தியால் மாசு உண்டாவதாகவும் கூறப்படும் வாதத்தை ஆராய, குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வாதிட்டது. ஆனால் தமிழக அரசின் வாதத்தை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்ததோடு, ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது. இந்த விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையில் நடந்தது.

    வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெற வேண்டும். மேலும் இந்த குழு, ஆறு வாரங்களுக்குள் தங்கள் ஆய்வு பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவருடன் மேலும் அந்த குழுவில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய வனத்துறையை சேர்ந்த‌ 2 பேரும் இடம்பெற்றுள்ளார்கள்.

    இந்த குழு ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்டுள்ள மாசு குறித்து ஆய்வு செய்யும். அதை தொடர்ந்து 6 வாரத்தில் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கும். ஓய்வுபெற்ற நீதிபதி வசீப்தர் ஏற்கனவே பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #ThoothukudiSterlite

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுமார் 25 லாரிகள் மூலமாக 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Sterlite #Sulfuricacid
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்ப‌ட்டது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சப்-கலெக்டர் பிரஷாந்த் தலைமையிலான குழு மூலமாக ரசாயன கசிவை உறுதி செய்தார். குடோனில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் கசிவாகி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆலை குடோனில் இருந்து கசிவான கந்தக அமிலத்தை அப்புறப்படுத்த நடவடிக்க மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கான பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்தன. பிரத்யேக பாதை மூலமாக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டு கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் நிபுணர் குழு மூலம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை 15 டேங்கர் லாரிகள் மூலம், சுமார் 350 டன் எடையுள்ள கந்தக அமிலம் அகற்றப்பட்டது. நேற்று மேலும் 5 டேங்கர் லாரிகள் மூலம் மேலும் 100 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

    அகற்றப்பட்ட கந்தக அமிலத்தை கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள உரம் தயாரிப்பு உள்ளிட்ட ஆலைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எனவே, அந்த ஆலைகளுக்கு கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இன்று காலையில் மேலும் 5 லாரிகள் ஆலைக்குள் சென்றன. அந்த லாரிகளில் கந்தக அமிலத்தை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மதியம் நிலவரப்படி சுமார் 25 லாரிகள் மூலமாக 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அமிலத்தை டேங்கர் லாரிகளில் நிரப்பி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.



    இது தொடர்பாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் கந்தக அமிலம் உடனுக்குடன் வெளியில் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை முழுமையாக அகற்ற திட்டமிட்டுள்ளோம்” என்றார். #Sterlite #Sulfuricacid

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கையின் சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மீனவர் விடுதலை வேங்கையின் சார்பில் சுதேசி மில் அருகே போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவன அமைப்பாளர் மங்கையர் செல்வம் தலைமை தாங்கினார். கங்காதரன், திருமுகம், மோகன் முன்னிலை வகித்தனர். மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் மக்களை கொலை செய்யும் டெர்லைட் ஆவையை மூட வேண்டும், அறவழியில் போராடிய மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றது காட்டு மிராண்டித்தனமான செயல். 13 பேரை சுட்டு கொல்ல காரணமாக இருந்த மாவட்ட கலெக்டர், போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், தமிழக முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்த்தின் போது போலீசார் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதை கண்டித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் எதிர் கட்சிகள், தனனார்வ அமைப்பினர், மாணவ அமைப்பினர் உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்றும் எதிர் கட்சிகள் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திண்டுக்கல்லில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நிர்வாகிகள் கணேசன், ராணி, பாபு, மாவட்ட குழு கல்யாண சுந்தரம், நகர செயலாளர் ஆசாத், ஒன்றிய செயலாளர் அஜய் கோஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானம், நிர்வாகிகள் ஜெயமணி, பாலுபாரதி, ரவி, மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு உடனே பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷம் எழுப்பினர்.

    ×