search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர தாதுக்கள் அகற்றும் பணி தொடக்கம்
    X

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர தாதுக்கள் அகற்றும் பணி தொடக்கம்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரதாது அகற்றும் பணி தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் இன்று தொடங்கின. #ThoothukudiSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே மாத 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை பிறப்பித்தது.

    இதை தொடர்ந்து அரசின் ஆணைப்படி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனிடையே ஆலையில் அமிலங்கள் வைக்கப்பட்ட குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அரசு உத்தரவுப்படி உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டு ஆலையில் உள்ள ரசாயனங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அமிலங்கள், பெட்ரோலிய பொருட்கள் அகற்றும் பணி கடந்த ஜூலை 2-ந்தேதி தொடங்கியது.

    அப்போது கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோ புரோபைல் ஆல்கஹால், பெட்ரோலியம் பொருட்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இந்த ரசாயன பொருட்கள் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை சுமார் 90 சதவீதம் அகற்றப்பட்டன. தாமிரதாது, ஜிப்சம், ராக்பாஸ்பேட் மட்டும் அதிக அளவில் உள்ளன.

    இதனால் முழுமையாக அகற்றப்படவில்லை. அதன்பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை தொடர்ந்து ரசாயன பொருட்கள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்டு 30-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மற்றொரு உத்தரவில், குழுவின் மேற்பார்வையில் ரசாயன பொருட்களை அகற்றலாம் என்ற உத்தரவு வந்தது.

    தற்போது ஆலையில் உள்ள அனைத்து அமிலங்களும் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. ராக்பாஸ்பேட், தாமிரதாது, ஜிப்சம் ஆகியவை உள்ளன. இதில் தாமிரதாது 90 ஆயிரம் டன் உள்ளது. இந்த தாதுவில் 30 சதவீதம் கந்தகம் இருக்கும். இதில் 10 சதவீதம் ஈரப்பதம் பராமரிக்கப்பட வேண்டும். இந்த ஈரப்பதம் குறைந்தால், தாமிரதாது தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தாமிரதாதுவை அகற்ற முடிவு செய்தனர்.

    தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாமிர தாதுவை அகற்றுவதற்கான அனுமதி கொடுக்கலாம் என்று உத்தரவு வந்தது. அதன்படி தாமிர தாதுவை அகற்றுவதற்கு ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்படும். இதையடுத்து தாமிரதாது அகற்றும் பணி தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் இன்று தொடங்கின. தாமிர தாதுக்களை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதே போன்று 4 லட்சம் டன் ஜிப்சத்தையும் அகற்ற திட்டமிட்டுள்ளனர். தாமிரதாது வாங்கியவர்களிடமோ, தாமிர தாதுவை பயன்படுத்தும் வேறு நிறுவனத்திடமோ கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. #ThoothukudiSterlite

    Next Story
    ×