search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமாவளவன்"

    • முதல்கட்ட வாக்குப்பதிவின் தரவுகள் 10 நாட்களுக்கு பிறகே வெளியானது; ஆணையம் தாமதம் செய்தது ஏன்?
    • வாக்குப்பதிவு முடிவுகளை சிலமணி நேரங்களில் வெளியாகும் சூழலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஏன் தாமதமாகிறது?

    வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அசாதாரணமான அணுகுமுறை குறித்து பின்வரும் கேள்விகளையும் சந்தேகங்களையும் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமர்ப்பிக்கிறோம்:

    1. இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மக்களவைக்கான முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகளை 2024 ஏப்ரல் 30 அன்றுதான் வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவின் (19 ஏப்ரல் 2024) தரவுகள் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் தரவுகள் (26 ஏப்ரல் 2024) 4 நாட்களுக்குப் பிறகுதான் வெளியாயின. இது சம்பந்தமாக, தேர்தல் ஆணையத்திடம் எங்களின் முதல் கேள்வி : வாக்காளர்களின் வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்?

    2. முந்தைய சந்தர்ப்பங்களில், வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு விவரங்களை ஆணையம் வெளியிட்டது. இப்போது ஏன் இந்த மாற்றம்? அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் பலமுறை கேள்வி எழுப்பிய போதிலும், தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கத் தவறியது ஏன்? நாடு முழுவதும் பதிவான வாக்குகளை சில மணி நேரத்தில் எண்ணி முடிக்க முடியும் என்ற நிலையில், முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சாவடி வாரியான எண்களை ஏன் கொடுக்க முடியவில்லை?

    3. 19.04.2024 அன்று மாலை 7 மணி நிலவரப்படி முதல் கட்ட வாக்குப் பதிவில் (102 இடங்கள்) பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 60% என்று ஆணையம் கூறியது, அதேபோல இரண்டாம் கட்டத்தில் (88 இடங்கள்) மதிப்பிடப்பட்ட வாக்குப்பதிவு சுமார் 60.96%. ஆக இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. 20.04.2024 அன்று, ஆணையத்தின் கணிக்கப்பட்ட முதல் கட்ட வாக்குப்பதிவு 65.5% ஆகவும், 27.04.2024 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 66.7% ஆகவும் இல்லாதது ஏன்?

    இறுதியாக, 30.04.2024 அன்று, புள்ளிவிவரங்கள் முதல் கட்டத்திற்கு 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71% என உறுதிப்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு வெளியானபோதும் அது சதவீதத்தில்தான் கொடுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை வாக்காளர்களின் எண்ணிக்கையை சரியாகக் காட்டுகிறதா என்ற அச்சம். இந்தத் தாமதம் மற்றும் அறிக்கையிடல் வடிவத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

    4. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்பது இதுதான்: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து (19.04.2024 அன்று மாலை 7 மணிக்கு) வாக்குப்பதிவு தாமதமாக வெளியிடப்பட்டதில் இருந்து ஏன் 5.5% அதிகரித்தது? இரண்டாம் கட்டமாக, வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து (26.04.2024 )தரவுகள் தாமதமாக வெளியிடப்படுவதற்குள் (30.04.2024 ) இறுதி வாக்காளர் எண்ணிக்கை எப்படி 5.74% அதிகரித்துள்ளது?

    5. இவ்வாறு தாமதம் செய்யப்பட்டது மட்டுமின்றி , தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகள் , ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் போன்ற முக்கியமான, இத்துடன் தொடர்புடைய புள்ளிவிவரங்களைக் குறிப்பிடவில்லை. வாக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் முக்கியப் புள்ளி விவரங்களுடன் வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டிருந்தால், வாக்குப்பதிவு அதிகரிப்பு (5%) அனைத்துத் தொகுதிகளிலும் நடந்ததா அல்லது ஆளும் கட்சி 2019 இல் சரியாக வாக்கு வாங்காத தொகுதிகளில் மட்டுமே இந்த வாக்கு அதிகரிப்பு காணப்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    6. பொது வெளியில் எழுந்துள்ள இந்த சந்தேகங்களைப் போக்க, தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தொகுதி (மற்றும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகள்) தரவுகளை வெளியிடுவதோடு, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களையும் வெளியிட வேண்டும். உண்மையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குச் சாவடியிலும் அரசியல் கட்சிகளால் ஏதேனும் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவற்றையும் குறிப்பிட வேண்டும். (நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில், வாக்குச் சாவடி மட்டத்தில் இப்படி புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

    7. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தலைமை அதிகாரி ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சரியான வாக்காளர் எண்ணிக்கையைப் படிவம் 17C இல் பதிவு செய்கிறார். இதன் பொருள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கான வாக்களித்தோரின் எண்ணிக்கையின் தேவையான தரவுகள் ஆணையத்திடம் உள்ளன என்பதாகும். இப்போது தேர்தல் ஆணையத்திடம் நாம் கேட்கும் கேள்வி என்னவென்றால், வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களிடமும் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் இருப்பதாகக் கூறி பொறுப்பை வேட்பாளர்களிடம் மாற்றுவதற்குப் பதிலாக, மக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் அதை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தடை ?

    8. ஒரு தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், வாக்களித்தவர்களின் சரியான எண்ணிக்கை, வாக்காளர்களின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக பிரிப்பது போன்ற தகவல்களையும் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் தவிர்த்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இணையதளத்தில் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவை மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சட்டமன்றத் தொகுதிகள் அல்லது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான விவரங்கள் தொகுக்கப்படவில்லை.

    இந்த சூழலில், இந்த வெளிப்படையான குளறுபடிகளுக்கான காரணங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இறுதி முடிவுகளை மாற்றும் முயற்சி நடப்பதாக மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகத்தை நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

    எஞ்சிய கட்டங்களில் நடக்கும் தேர்தல்களின் வாக்குப்பதிவு விவரங்களை வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் படிவம் 17C இல் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.

    தேர்தல் ஆணையம் தனது கடமையை நியாயமான முறையில் நிறைவேற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கும் என்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல் துறையினரும் வழக்கம் போல பாதிக்கப்பட்ட எளிய ஆதிதிராவிட மக்கள் மீதே தாக்குதல் நடத்தி தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.
    • சாதிவெறியர்கள் தாக்கியதிலும் காவல்துறையினர் தாக்கியதிலும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாதியவாத சமூகவிரோதிகள் ஆதிதிராவிட மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். காவல் துறையினரும் வழக்கம்போல பாதிக்கப்பட்ட எளிய ஆதிதிராவிட மக்கள் மீதே தாக்குதல் நடத்தி தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

    சாதிவெறியர்களின் கல் வீச்சிலும் காவல்துறையினரின் தடியடித் தாக்குதலிலும் படுகாயமடைந்த ஆதிதிராவிடர்கள் பலரைப் பொய்வழக்கில் கைதுசெய்து சிறைப்படுத்தியுள்ளனர்.

    சாதிவெறியர்கள் தாக்கியதிலும் காவல்துறையினர் தாக்கியதிலும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் மற்றும் பலர் 'என்னும் பெயரில் ஆதிதிராவிட இளைஞர்களைக் கைது செய்வதில் காவல்துறையினர் இன்னும் தீவிரம் தீட்டிவருகின்றனர்.

    காவல்துறையின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
    • நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு எந்திரங்கள் பெட்டி அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன்.

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இதுபற்றி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா செயல் இழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சி.சி.டி.வி. எந்திரங்களை கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    பிரதமர் மோடி சமீபகாலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதிக இடங்களீல் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

    அவருடைய நிலையை மறந்து பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    வருகிற 9-ந்தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன்.

    இதே போல் மகாராஷ்டிராவில் தாராவில் போட்டியிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

    தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

    இதுவரையில் அரசியல் வரலாற்றிலேயே டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

    அதேபோல ஹேமன்சோரளை பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான ஒரு தவறான முன் மாதிரி என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

    நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.

    வழக்கு செய்த பிறகு அதன் பிறகு கைது செய்ய வேண்டிய துறையினரால் தான் கடந்த காலங்களில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அமலாக்கதுறையினர் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

    இதனால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.
    • விருதுகள் வழங்கும் விழா 25.05.2024 அன்று சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

    சென்னை :

    விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு "அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    2022 ஆம் ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி' விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொகிறோம்.

    முத்தமிழறிஞர் முனைவர் கலைஞர், மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தரமையா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக- விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

    இந்த ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை திரைப்படக் கலைஞரும், மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும்,

    பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

    அம்பேத்கர் சுடர் - பிரகாஷ்ராஜ், திரைப்படக் கலைஞர்

    பெரியார் ஒளி- வழக்கறிஞர் அருள்மொழி, பிரச்சாரச் செயலாளர். திராவிடர் கழகம்

    மார்க்ஸ் மாமணி- இரா. முத்தரசன், மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

    காமராசர் கதிர் - பேராயர் எஸ்றா சற்குணம், தலைவர் இந்திய சமூக நீதி இயக்கம்

    அயோத்திதாசர் ஆதவன்- பேராசிரியர் ராஜ்கௌதமன்

    காயிதேமில்லத் பிறை- எஸ்.என். சிக்கந்தர், மேனாள் மாநிலத் தலைவர் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா

    செம்மொழி ஞாயிறு- எ.சுப்பராயலு, கல்வெட்டியலறிஞர்

    விசிக விருதுகள் வழங்கும் விழா 25.05.2024 அன்று சென்னையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

    • தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
    • விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சி தமிழகத்தில் காங்கிரசை ஆதரித்து பிரசாரம் செய்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் 5 தொகுதிகளில் விடுதலை சிறுத்தை போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் வாபஸ் பெற்றது. மற்றொரு தொகுதியில் மனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 3 தொகுதியில் இளம் வேட்பாளர்களை நிறுத்தியது.

    இந்த நிலையில் பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் ஆகியோர் அழைப்பின் பேரில் இருவரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

    அப்போது குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி ஏற்படும் நிலையில் தங்கள் கட்சி வேட்பாளர்களால் வெற்றி வாய்ப்பு இழக்கின்ற நிலையை தவிர்க்கவும் பா.ஜ.க.வை ஒன்று சேர்ந்து வீழ்த்தவும் இதுவே நல்ல நேரம் என்பதால் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார்.

    அதனை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதி வேட்பாளர்களையும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார்.

    இது குறித்து திருமாவளவன் கூறியதாவது:-

    கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளோம். விடுதலை சிறுத்தை போட்டியிட்ட 3 தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை.

    பா.ஜனதாவுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெங்களூர் சென்ட்ரல், தெற்கு, புறநகர் பகுதியில் முக்கிய இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தேன். தேசத்தின் நலன் கருதி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
    • தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார்.

    மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது. "காங்கிரஸ் கட்சி பொது மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை முஸ்லிம்களுக்கு விநியோ கம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது" என அப்பட்ட மான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார்.

    நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது.

    அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3ஏ) இன் கீழ் குற்றமாகும்.

    இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.
    • நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

    செந்துறை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த பொது தேர்தல் 2 கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.

    சங்பரிவாருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம் இந்த பொது தேர்தல். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறோம்.

    இந்தியா கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்புகள் விடுத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விளிம்பியங்களை சிதைக்க துடிக்கிற சங்க பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.

    ஜனநாயகத்தையும் அரசியலப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கூட்டணி பலம், இன்னொரு புறம் திமுக அரசின் மூன்றாண்டு கால நலத்திட்டங்கள், மூன்றாவதாக இந்தியா கூட்டணி முன்வைக்கக்கூடிய நாட்டு பாதுகாப்பு ஜனநாயக பாதுகாப்பு என்கிற கருத்தியல் பலம் ஆக இந்த 3 பலங்களுடன் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

    எனவே பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை காப்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து எழுத தொடங்குகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நாள்தான் இன்றைய வாக்குப்பதிவு நாள்.

    தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம் பாதுகாக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். டெல்லியில் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்படும். இந்திய கூட்டணியின் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியான பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக அனைத்து தரப்பு மக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த ஆட்சியே தொடரும் என்ற எண்ணத்தில் அவர்கள் அவ்வாறு செயல்படலாம்.

    அது தவறு. தேர்தல் ஆணையம் இந்த நாளிலிருந்து நடுநிலைமையோடு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் உள்ளனர். அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.
    • சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான 'மதச்சார்பற்ற நாடு' என்பதை மாற்றி இந்தியாவை 'மதம் சார்ந்த நாடு' என அறிவிப்பதற்கும், மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை சட்ட பூர்வமாக ஆக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.

    அவர்களது நோக்கம் நிறைவேறிவிட்டால், அதாவது மீண்டும் பா.ஜ.க. பாசிசக் கும்பல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.

    அரசமைப்புச் சட்டம் தான் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்கிறது. அது இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த உரிமையும் இருக்காது. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களைக் கல்வி பெற விடாமல் தடுத்து மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு செல்வதுதான் ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவின் திட்டமாகும். அதற்காகவே அவர்கள் தேர்தல் அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்களது சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்.

    புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளின் போது அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து'நாட்டை மீட்போம்! அரசமைப்புச் சட்டம் காப்போம்' என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி வீசிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
    • இருவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவுறுத்தலின் பேரில் அக்கட்சியின் அமைப்பு குழு பொதுச் செயலாளர் ஆனந்த் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரான அருண் நேருவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட போது, உண்மைக்கு புறம்பான சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான விஷயங்களை தன்னுடைய பிரசார உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    மோடி மீண்டும் பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தேவாலயங்கள், மசூதிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று பேசியுள்ளார்.

    மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி வீசிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார். அவரது உரையில் மத வெறுப்பு பிரசாரமும் பிரதமர் மோடியின் மீதான அவதூறு பிரசாரமும் மிகவும் மேலோங்கி காணப்படுகிறது.

    பா.ஜ.க. தான் பாபர் மசூதி கட்டிடத்தை இடித்தார்கள் என்று எங்கேயும் சட்ட பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. பா.ஜ.க.வின் மேடைகளிலோ அல்லது சங்பரிவாரின் மேடைகளிலோ தொல்.திருமாவளவன் கூறுவது போல் எங்கேயும் உரையாற்றியதற்கான சான்றுகள் இல்லை.

    இது ஐ.பி.சி. சட்டப்பிரிவு 123(3A)யின் படி குற்றமாகும். இந்திய குடிமக்களிடம் மதரீதியான வித்தியாசங்களை பயன்படுத்தி மோதவிட்டு வெறுப்புணர்வோடு வாக்கு சேகரிக்கும் ஒரு யுக்தி ஆகும்.

    எனவே இருவரையும் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
    • திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது.

    புவனகிரி:

    திருமாவளவன் பிரசாரத்தில் வாலிபர்கள் மோதலில் ஈடுப்பட்டனர்.

    சிதம்பரம்(தனி) பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

    புவனகிரி அருகே ஜெயகொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மருதூர், நத்தமேடு, ஆலம்பாடி, குமுடமூலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருமாவளவன் பிரசார வண்டியை தடுத்து நிறுத்தி எங்கள் ஊருக்கு மீண்டும் வர வேண்டுமென வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு திருமாவளவன் மீண்டும் நான் வருவேன் என்று தெரிவித்தார்.

    ஆனாலும் வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மோதலில் ஈடுப்பட்டவர்களை கலைத்தனர். இந்த மோதலுக்கு போதிய போலீசார் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரம் சோதனை.
    • வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் பரபரப்பு.

    சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மற்றும் பணிகளை கவனித்து வருகிறார்.

    இந்நிலையில், திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வருமான வரித்துறையினர் சுமார் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் முதல் சுமார் ஒரு மணி நேரம் தீடீர் சோதனை நடத்தினர்.

    பின்னர் வீட்டின் உரிமையாளருக்கு, கடலூர் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு இன்று (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு வந்து ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து விட்டு சென்றனர்.

    வருமான வரித்துறையினரின் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தொல்.திருமாவளவன் கூறுகையில்," எந்த முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது ஒரு மறைமுகமான அல்லது வெளிப்படையான அச்சுறுத்தல்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் 2-வது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
    • 3-ம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்ட பட்டினத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் வெளியிட்டார். இதனை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்தறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கவர்னரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வு, அனைத்து மொழிகளிலும் அம்பேத்கர் நூல்கள், அம்பேத்கர் பிறந்தநாளை அறிவுத்திருநாளாக அறிவிப்பு, ராமர் கோவில் கட்டுமானத்தில் ஊழல் குறித்த விசாரணை, கச்சத்தீவு மீட்பு, ஊழல் ஒழிப்பு, லோக்பால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிர்ப்பு, தேர்தல் ஆணையர் நியமன சட்டம் ரத்து, வாக்குபதிவு முறைக்கு பதிலாக பழையபடி வாக்குத் தாள் முறை விகிதாச்சாரப் பிரதிநிதுத்துவம், தொகுதி மறுசீரமைப்பில் தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு, தேவையற்ற தேர்தல் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

    தமிழ்ச் செம்மொழி வாரக் கொண்டாட்டம், வறுமைக் கோட்டின் உச்சவரம்பினை உயர்த்துதல், 200 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி சட்டம், விவசாயம் மற்றும் நிலச்சீர்த்திருத்தம், விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம், ஜி.எஸ்.டி. வரி ஒழிப்பு, வருமான வரி சீரமைப்பு, விவசாயக் கடன் ரத்து , விவசாயத்திற்கு தனி பட்ஜெட், பெட்ரோலியப் பொருட்களின் மீது அரசின் விலைக் கட்டுப்பாடு, ராணுவத்தின் நிதியைக் குறைத்து கல்விக்கான நிதியை அதிகரிக்கப்படும்.

    தனியார்மயமாதலை கைவிடுதல், நீதித்துறையில் இட ஒதுக்கீடு, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு, உயர்சாதி இட ஒதுக்கீடு ரத்து, அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமை, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையே ஒழித்தல், இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல், மாநில சுயாட்சி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை , மாநில அரசுகளின் வழியே உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், வழக்காடு மொழியாக தமிழ், தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குதல், தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கோதவரி-காவிரி இணைப்புத் திட்டம், அணுமின் நிலையங்களை மூடுதல், வேலி காத்தான் ஒழிப்பு, இந்தியாவின் 2-வது தலைநகராக தமிழ்நாட்டை அறிவித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

    பாதுகாப்பு அமைச்சரவையிலும், மேலவைகளிலும் இட ஒதுக்கீடு, ஆணவக் கொலையை தடுக்க தனிச் சட்டம், பழங்குடியினருக்கு தனிப்பட்டா, தலித் கிறிஸ்த்தவர்களை பட்டியலில் இணைத்தல், பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், மதச் சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம், 3-ம் பாலினத்தவர்களுக்கு பிரதிநிதித்துவம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

    ×