search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stone quarry"

    • குடோனுக்கு பக்கத்தில் நின்றிருந்த வெடி மருந்து ஏற்றப்பட்ட இரண்டு வேன்களும் சேதமடைந்து கிடந்தன.
    • புகாரின் அடிப்படையில் 286 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அலட்சியமாக இருத்தல்), 304(2) மற்றும் 9 (பி)(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் ஆர்.எஸ்.ஆர்.கிரஷர் என்ற பெயரில் கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் அங்குள்ள வெடிமருந்து சேமித்து வைக்கும் குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். அவர்களது உடல் பாகங்கள் 1 கி.மீ. தூரம் வரை வீசப்பட்டு கிடந்தது. இந்த விபத்து தொடர்பாக கடம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆவியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    முதல் தகவல் அறிக்கையில் வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு:-

    நானும் (கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ்), கிராம உதவியாளர் மஜீத்கனியும் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது டமார் என்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே நாங்கள் இருவரும் குவாரி பக்கம் சென்று பார்த்தபோது, கிரஷருக்கு தெற்கு பக்கம் உள்ள வெடிமருந்து குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டு குடோன் தரைமட்டமாகி கிடந்தது. குடோனுக்கு பக்கத்தில் நின்றிருந்த வெடி மருந்து ஏற்றப்பட்ட இரண்டு வேன்களும் சேதமடைந்து கிடந்தன. அதன் பாகங்கள் நாலாபக்கமும் சிதறிக்கிடந்தன.

    வெடிச்சத்தம் கேட்டு வந்த கடம்பன்குளத்தை சேர்ந்த வேட்டையன் மற்றும் கிரஷரில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்த கீழஉப்பிலிக்குண்டு குருநாதனிடம் விசாரித்த போது, கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டி அழகர்சாமி மகன் கந்தசாமி, தென்காசி மாவட்டம் செந்தட்டியாபுரம் அருகன்குளம் குருசாமி ஆகியோர் குடோனில் இருந்த வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு உடல் பாகங்கள் நாலாபுறமும் சிதறி இறந்துவிட்டதாக சொன்னார்.

    மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்திருந்தும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல் உயர்ரக வெடிமருந்துகள் இறக்கும் இடத்தில் போதிய கண்காணிப்பு செய்யும் அலுவலர் இல்லாமலும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரோ மிக்சர் (நைட்ரஜன்) வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து லோடு இறக்கினாலோ, ஏற்றினாலோ வெடிவிபத்து ஏற்பட்டு உயிர் சேதத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இறக்கியுள்ளனர்.

    வெடி மருந்துகளை போதிய பாதுகாப்பு செய்து கொடுக்காமல் வெடிமருந்து குடோனில் வேலை செய்ததால் வெடிவிபத்து ஏற்பட்டு அதன் காரணமாக இருந்த மேற்படி வெடிமருந்து குடோனை முறையாக நிர்வகிக்காத அதன் உரிமையாளர் ராஜ்குமார், மேற்பார்வை செய்து வந்த உரிமையாளர்களான ராம்ஜி, மேற்பார்வையாளர் ராம மூர்த்தி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில் 286 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அலட்சியமாக இருத்தல்), 304(2) மற்றும் 9 (பி)(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இதில் தலைமறைவாக இருக்கும் ராஜ்குமார், ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோர் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட 1,200 கிலோ வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் அதன் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • கல் குவாரி குட்டையில் குளிக்க சென்ற விஜய் சாரதி, தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
    • 200 அடி ஆழ கல்குவாரி குட்டை என்பதால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    வண்டலூர்:

    தருமபுரி மாவட்டம் கோபிநாத் பட்டியை சேர்ந்தவர் விஜய் சாரதி(வயது19). இவர் பொத்தேரியில் தங்கி அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமாலை விஜய்சாரதி மற்றும் உடன் படிக்கும் நண்பர்களான உடுமலைப் பேட்டையை சேர்ந்த தீபக் சாரதி(20), தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்த முகமது இஸ்மாயில்(19) உள்பட 5 பேருடன் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட கல் குவாரிகுட்டையில் குளிக்க சென்றனர். அப்போது விஜய் சாரதி, தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதுகுறித்து காயார் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு வரை தேடியும் 3 மாணவர்க ளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. 200 அடி ஆழ கல்குவாரி குட்டை என்பதால் அவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கல்குவாரி குட்டையில் மாணவர்களை தேடும் பணி நடைபெற்றது. அப்போது விஜய் சாரதி உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் தண்ணீரில் மூழ்கிய தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

    • தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி 3 பேரின் உடல் பாகங்களை மீட்டனர்.
    • 3 பேரின் குடும்பத்துக்கும் இன்று ரொக்கமாக தலா ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்துள்ள கீழஉப்பிலிக்குண்டுவில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டியை சேர்ந்த கந்தசாமி (வயது 47), தென்காசி மாவட்டம் வடமலாபுரத்தை சேர்ந்த பெரியதுரை (25), சிவகிரி அருகன்குளத்தை சேர்ந்த குருசாமி (60) ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள்.

    தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி 3 பேரின் உடல் பாகங்களை மீட்டனர். பின்னர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தமழக அரசு சார்பில் விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இறந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு கல்குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி 3 பேரின் குடும்பத்துக்கும் இன்று ரொக்கமாக தலா ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்ததும் அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
    • வெடி விபத்தின்போது அருகே உள்ள ஒருசில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே அமைந்துள்ளது கீழஉப்பிலிக்குண்டு கிராமம். இந்த கிராமத்தையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    முறையான லைசென்ஸ் பெற்று இயங்கிவரும் இங்கு ஆவியூர், கீழஉப்பிலிக்குண்டு, கடம்பன்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்கு பாறைகளை உடைத்து ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மணல் உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் தயாரித்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே குடியிருப்புக்கு அருகாமையில் இயங்கி வரும் இந்த கல் குவாரியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இருந்தபோதிலும் அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வப்போது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் வெடிகளால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் வரை ஜல்லி துகள்கள் வந்து விழுவதாகவும், இதனால் உயிருக்கு அச்சம் ஏற்பட்டு வாழும் நிலை இருப்பதாகவும் கடம் பன்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் வெளிமாநிலத்தில் இருந்து பாறை உடைக்கும் பணிக்காக ஒரு வாகனத்தில் வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டது. அதனை அந்த குவாரியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனி அறையில் இறக்கி வைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருட்கள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்து எழும்பிய தீப்பிழம்பு பல மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காணப்பட்டது. இந்த சத்தம் சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அப்போது வெடிபொருட்கள் பாதுகாப்பு அறை முற்றிலும் தரைமட்டாகி கிடந்தது. மேலும் அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் 3 பேரின் உடல்கள் சின்னாபின்னமாகி சிதறிக்கிடந்தன.

    மேலும் அந்த பகுதியில் வெடி மருந்துகள் அதிகம் இருப்பதாலும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்ததாலும் மீட்புக்குழுவினரால் உடனடியாக அருகில் செல்ல முடியவில்லை.

    இந்த வெடி விபத்தின்போது அருகே உள்ள ஒருசில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன. இந்த வெடி விபத்து சம்பந்தமாக கடம்பன்குளம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஆவியூர் பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மேலும் சிலரது உடல்கள் வீசப்பட்டு கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

    • வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார்
    • அதிகாரிகள் கல் குவாரியை உரிய பாதுகாப்போடு இயங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும்

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த தென்னம்பூண்டியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் .இவரதுமனைவி ஜனனி (வயது24). இவர் வழக்கம் போல் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் வெடி வெடித்ததில் மலைக்கற்க்கள் பெயர்ந்து வந்து ஜனனியின் வீட்டின் மேல் கூரையில் விழுந்தது. இதில் மேற்கூரை முழுவதும் சேதமடைந்து வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த ஜனனியின் மீது விழுந்து பலத்த காயமடைந்தார் .

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது .எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கல் குவாரியை உரிய பாதுகா ப்போடு இயங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.
    • விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன

    பல்லடம்

    பல்லடம் கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் கண்காணிப்பு குழுவினா் ஆய்வு செய்தனா்.ஆய்வின்போது, குவாரிகளின் தற்போதைய நிலை, செயல்படும் தன்மை, பாதுகாப்பு நடைமுறைகள், குழந்தைத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனரா, சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளதா, விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா உள்ளிட்ட விவரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டன.

    ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமாா், மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியம், காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன், கனிம வளத்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

    • கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 150க்கும் அதிகமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது.

    இந்த குவாரிகள் நடைபெறும் இடங்களில் டிஜிட்டல் முறைப்படி ஆய்வு செய்ய கனிம வளம் மற்றும் புவியியல் துறை இயக்குனர் திட்டமிட்டார். அதன்படி முதல் கட்டமாக கரூர் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி ஆய்வு தொடங்கியது. இந்த ஆய்வினை கண்டித்து கரூர் மாவட்டத்தில் உள்ள குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் உதவி கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குனர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை) தாசில்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் 42 குவாரிகளில் ஆய்வினை முடித்தனர்.

    இதில் விதிமீறல் கண்டறியப்பட்ட 12 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க உதவி கலெக்டர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குவாரிகளுக்கு ரூ. 44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 30 கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார். இதில் விதிமீறலில் சிக்கிய 12 குவாரிகளில் ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., பழனியாண்டிக்கு சொந்தமான குவாரிக்கு மட்டும் ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குவாரி அதிபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    • குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், 2,500 கல் குவாரிகளும், 3 ஆயிரம் கிரஷர்களும் செயல்பட்டு வருகின்றன. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும், கனிம வளத்தொழில் மூலம் கிடைக்கும் ஜல்லி கற்கள் அடிப்படை ஆதாரமாகவும், அத்தியாவசியமாகவும் உள்ளது.

    தற்போது, பெரிய கனிமங்கள் வெட்டி எடுப்பதற்கான சட்ட திட்டங்களை, சிறிய மினரல் என்றழைக்கப்படும், கல், ஜல்லி உடைக்கும் சிறு வளத்துறை அமல்படுத்தி உள்ளது. அதனால், ஏற்கனவே தொழிலில் உள்ளவர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு, தொழிலை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.

    சமூக விரோதிகள் சிலர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் என்ற போர்வையில் அச்சுறுத்துவதாகவும், கனிம வளக் கடத்தல், கனிம வளக் கொள்ளை என தகவல்கள் பரவுவதாகவும், அதன் காரணமாக, குவாரி மற்றும் கிரஷர் தொழில் பாதிக்கப்படுவதாகவும் அதன் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில், குவாரி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது.

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 75-க்கும் மேற்பட்ட கல் குவாரி மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தேவையான ஜல்லி கற்கள் கிடைக்காமல் கட்டுமான பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்களை ஏற்றிச்செல்லும் லாரிகள், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    இது குறித்து, தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நடக்கின்ற அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை, தங்கள் சுயலாபத்திற்காக முடக்கும் வகையில், தமிழக கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், கடந்த, 26-ந் தேதி முதல், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    தமிழகம் முழுவதும், முற்றிலும் முறைகேடாக நடந்து வரும் கல்குவாரி, கிரஷர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, குவாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, கல்குவாரி, கிரஷர்களை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
    • கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.

    திருப்பூர் :

    பல்லடம் கோடங்கிப்பாளையத்தில் 4 புதிய கல் குவாரிகள் மற்றும் ஏற்கனவே உள்ள 16 பழைய கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்–டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாசுகட்–டுப்–பாட்டு வாரிய தெற்கு பொறியாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் பங்கேற்ற ஒருதரப்பினர், 'கல் குவாரிகள் அமைந்துள்ள பகுதியில் ஓடை மற்றும் குடியிருப்புகள் உள்ளன. பசுமை வளையங்கள் முறையாக அமைக்கவில்லை. விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை. கல் குவாரிகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உரிய விதிமுறைகளை கடைபிடித்து கல் குவாரிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும்' என்றனர்.

    மற்றொரு தரப்பினர், 'கல் குவாரியால் எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் இதர தொழில்களும் சேர்ந்தே வளர்ச்சி பெறும். பல தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளதால் கல் குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

    • புத்தேரி என்னும் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.
    • போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் இருக்கன்துறை ஊராட்சி புத்தேரி என்னும் கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.

    கல்குவாரி

    இதில் நேற்று முன்தினம் கல்குவாரியில் கற்களை தகர்க்க சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் கற்கள் வெடித்து சிதறியதில் சுடலை மற்றும் இசக்கியப்பன் என்பவரது வீட்டின் மேற்கூறையும் மற்றும் வீட்டின் பக்கவாட்டின் சிமெண்ட் பூச்சிகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

    வாழைகள சேதம்

    மேலும் கல் குவாரிகளில் வெடித்து சிதறிய கற்கள் விவசாயிகள் பயிரிட்ட வாழைகள் மீது விழுந்துள்ளது. இதனால் வாழை பயிர்களும் சேதம் அடைந்துள்ளது.

    இதையறிந்த ஊர் பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊரின் மையப் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கஞ்சி காட்சியும் போராட்டம் நடத்தினர். நேற்று இரவு விடிய, விடிய நடைபெற்ற போராட்டம் இன்றும் தொடர்கிறது.

    சம்பவ இடத்திற்கு பாரதீய ஜனதா மாவட்ட பொருளாளர் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், புத்தேரியில் கல் குவாரி அமைக்க ஆரம்பத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    போலீஸ் குவிப்பு

    கல்குவாரியால் இவ்வளவு விளைவுகள் நடந்த பின்பும் அதிகாரிகள் பொதுமக்களை வந்து சந்திக்கவில்லை. கல்குவாரியை மூடவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    இதனால் புத்தேரி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் டிசம்பா் 16 -ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

    திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அணைந்த பெருமாள் நாடானூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் வீடுகளில் விரிசல் விழுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் மற்றும் அணைந்த பெருமாள் நாடானூர் கிராம பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் தனியார் குவாரி ஒன்றுக்கு மீண்டும் கல் உடைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த குவாரி முன்பு செயல்படும்போது வீடுகளில் விரிசல் விழுந்ததாகவும் குவாரியில் வெடிக்கப்படும் வெடிகளால் கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், முதியோர் போன்றோர் பாதிக்கப்படுவதாகவும் வீடுகளில் விரிசல் விழுவதாகும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் அழகுதுரை மற்றும் முத்தமிழ் செல்வி ரஞ்சித் ஆகியோர் தலைமையில் வந்து மனு அளித்தனர்.

    ×