search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police inquiry"

    • இந்திய பெண்னை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை கைது செய்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இங்கிலாந்தில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே (வயது 66). இவர் தேசிய சுகாதார சேவையில் மருத்துவ செயலாளராக பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்.

    இவர் வடமேற்கு லண்டனில் உள்ள எட்க்வேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று கத்தியால் அனிதாவை சரமாரியாக குத்தினார். மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்திய பெண்னை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் 22 வயதான ஜலால் டெபெல்லா என்பது தெரிய வந்தது.

    அவர் மீது கொலை மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் எதற்காக இந்திய பெண்ணை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அனிதா முகேவின் குடும்பத்தினர் கூறும்போது, அனிதா முகே தனது குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தார். அவரது மரணம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றனர்.

    • சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ஈரோடு பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில் ராஜா. இவர் இன்று ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 22 பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் சங்ககிரி சென்று கொண்டிருந்தார்.

    சங்ககிரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தாறுமாறாக ஓடிய பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது. பேருந்து ஓட்டுநர் செந்தில் ராஜாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகின. பேருந்தில் பயணம் செய்த 22 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பேருந்த ரோட்டில் தாறுமாறாக வந்த காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள அப்துல் கலாம் நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் பாதுஷா. இவரது மனைவி வகிதா கடந்த வாரம் 8-ந் தேதி காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் தென்காசி தினசரி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது காய்கறி வாங்குவதற்காக சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் வகிதாவின் மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தென்காசி போலீசில் வகிதா புகார் அளித்த நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் வகிதாவின் மோட்டார் சைக்கிளை தள்ளி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் தென்காசி படிக்கட்டு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தொழிலாளி பாரூக்நியாஸ் (வயது 50) என்பது தெரிவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு நேரில் சென்று வீட்டில் பார்த்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட்டையே மாற்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உடனடியாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த தென்காசி போலீசார் மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். தென்காசி தினசரி மார்க்கெட் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் சி.சி.டி.வி. காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

    • உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது.
    • ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள்.

    நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் கடந்த 10 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் நெல்லை சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 32 பேர் முக்கிய பிரமுகர்கள் ஆவர்.

    கடந்த 2-ந்தேதி அன்று ஜெயக்குமார் மாயமான நிலையில் மறுநாள் 3-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே ஜெயக்குமார் வீட்டு அருகே உள்ள தனது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கம்பிகளால் சுற்றப்பட்டிருந்த நிலையில் பெரிய கடப்பா கல்லும் கட்டப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

    உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது. அந்த டார்ச் லைட்டும் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த இடத்தில் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டது. தோட்டத்து கிணற்றில் இருந்து கத்தி ஒன்றும் கிடைத்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இப்படி ஜெயக்குமார் கொலை தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறார்கள்.

    ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், சந்தேக மர்மமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளப்போகும் ஒருவர் பெரிய கடப்பா கல்லை உடலில் கட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை.

    அதே நேரத்தில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சில்வர் நிறத்திலான கையடக்க பிரசை வாயில் திணித்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. எனவே ஜெயக்குமாரை யாரோ திட்டமிட்டு கொலை செய்து எரித்துக் கொன்று இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. ஜெயக்குமார் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்கள் அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் உறவினர்கள் சிலரே அவரை தீர்த்துக் கட்டி இருக்கலாமோ? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரது கடிதங்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கடிதங்கள் உயிரிழப்பதற்கு முன்பு அவரால் எழுதப்பட்டவைதானா? என்பதை கண்டறிவதற்காக தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தின் உண்மை தன்மை பற்றிய விவரங்கள் தெரியவரும்.

    ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு கிடைத்து உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமாருக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் எல்லை மீறி போய் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    இதில் ஜெயக்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது உறவினர்களே திட்டம் போட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகமும் வலுத்து உள்ளது. இப்படி ஜெயக்குமாரின் மரணத்தில் இறுதிக் கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கலாமா? என்கிற கோணத்திலும் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உயிரிழப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தனது சொத்துக்கள் தொடர்பாக ஜெயக்குமார் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அவர் எழுதியுள்ள மற்ற கடிதங்களில் தனக்கு பணம் தர வேண்டியவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். எந்த இடத்திலும் அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்கிற தகவலை குறிப்பிடவில்லை. இதன்மூலம் தனது மரணத்துக்கு பிறகு தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஜெயக்குமார் செயல்பட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இதன்மூலம் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இருப்பினும் ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம் ஒரு வாரத்தில் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.ஜி.கண்ணன் இதனை தெரிவித்துள்ள நிலையில் 10 தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை நெருங்கி உள்ள போலீசார் அவர்களை பிடிக்க பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

    • பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர்.
    • 3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் ஆண்டாங் கோவில் புதூர் கீழ்பாகம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் அஸ்வின்(வயது 12). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். அவரது மகன் ஸ்ரீவிஷ்ணு (14). இவர் அரசு பள்ளியில் 8- ம் வகுப்பு பயின்று வந்தார்.

    ஆண்டாங் கோவில் கிழக்கு பகுதி செல்வன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் மாரி முத்து (13). இந்த மாணவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

    பள்ளி விடுமுறை காலம் என்பதால் 3 பேரும் ஜாலியாக ஊரை சுற்றி விளையாடி வந்துள்ளனர். வழக்கம் போல நேற்று மாலை தங்கள் பெற்றோர்களிடம் விளையாட செல்கிறோம் என்று கூறி விட்டு வெளியே சென்றுள்ளனர்.

    ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அந்த மாணவர்கள் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து பெற்றோர்கள் அவர்களை தேட தொடங்கினர்.

    பல்வேறு இடங்களில் தேடி அலைந்த போது இரவு 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் என்பருக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் 3 பேரின் செருப்பு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    செருப்பு கிடந்த இடத்திற்கு அருகே கிணறு ஒன்றும் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிறுவர்களின் உறவினர்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் பிரத்யேக டார்ச் லைட் அடித்து பார்த்தனர். ஆனால் அங்கு ஏதும் தென்படவில்லை.

    பின்னர் அந்த நள்ளிரவிலும் கயிற்றின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, நீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது.

    இந்நிலையில் கிணற்றின் ஆழப்பகுதியில் சிறுவர்களின் உடல் தட்டுப்பட்டது, இதன் பின்னர் மேலும் சில வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி சிறுவர்களின் உடல்களை இறந்த நிலையில் ஒன்றன் பின் ஒன்றாக மீட்டனர். சிறுவர்களின் உடல்களை கண்டு பெற்றோர்கள் கதறி துடித்தனர்.

    இது குறித்து கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இந்த சிறுவர்கள் குளிக்கும் போது அஸ்வின் என்ற சிறுவனுக்கு நீச்சல் தெரியாத நிலையில் அவர் மூழ்க, நண்பனை காப்பாற்றும் முயற்சியில் மற்ற 2 சிறுவர்களும் இறங்கி இருக்கலாம். இதில் 3 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறினர்.

    உடல்களை கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல் ஈடுபட்டதற்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சோலை ராஜன்(வயது47) .

    இவர் புள்ளம்பாடி வங்கியில் தன் சொந்த தேவைக்காக தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெற்று தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார் .

    பிறகு புள்ளம்பாடி திருமழாம்பாடி சாலையில் உள்ள இ சேவை மையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சேவை மையத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை எடுக்க பெட்டியை திறந்த உள்ளார்.

    அப்பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக கல்லக்குடி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் பணத்தை கொள்ளை அடித்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் கல்லக்குடி மால்வாய் ரோடு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் தனி படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக அளித்த தகவலின் பெயரில் அவர்களை கல்லக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே வாஷிங்டன் நகரில் வசித்து வரும் கணேசன் (62 ) மற்றும் அவரது மகன் ராமு (26) எனவும், இவர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை திருடியது தெரியவந்து.

    இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

    இவர்கள் இருவர் மீதும் கோவை, நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல் ஈடுபட்டதற்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சொத்து தகராறு காரணமாக செந்தில் ஆறுமுகத்தை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது.
    • பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் (வயது32).

    வக்கீலான இவர் அந்தப் பகுதியில் மருந்துக்கடை மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு செந்தில் ஆறுமுகம் மருந்துக்கடை மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அடைத்து விட்டு இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று உள்ளார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், டி.எஸ்.பி. கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா, தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    செந்தில் ஆறுமுகத்திற்கும், கோவில்பட்டியை சேர்ந்த அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    எனவே இந்த கொலை சம்பவம் சொத்து தகராறில் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் தொழில் பிரச்சனை காரணமாக நடைபெற்றதா? என்று கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதை தொடர்ந்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு உடனடியாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது கொலையில் தொடர்புடைய 6 பேர் கும்பல், இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனத்தில் விரட்டி சென்று அவர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக செந்தில் ஆறுமுகத்தை தீர்த்து கட்டியது தெரிய வந்துள்ளது. எனினும் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளார்களா? என அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் பிள்ளையார் கோவில் 2-வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு வங்கியின் கிரெடிட் கார்டு பெற்றிருந்தார்.

    இந்நிலையில் பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த பெண் கேட்ட கேள்விகளுக்கு செல்போன் மூலம் பதில் அளித்துள்ளார். அப்போது கிரெடிட் கார்டு சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அந்த பெண், செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்(ஓ.டி.பி.) வரும் என்றும், அதனை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் கடவுச்சொல்லை பெண்ணிடம் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கியதாக பிரகாஷின் செல்போனுக்கு குறுந்தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று முறையிட்டார். அப்போது வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை பிரகாஷ் உணர்ந்தார்.

    உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் ரூ.1லட்சம் பறிபோனதால் விரக்தி அடைந்த பிரகாஷ், விஷம் குடித்து விட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரகாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 42). இவர் பெயிண்டராகவும், பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில் உள்ள அவரது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது அவரை தேடி சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடம், கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே முத்துப்பாண்டி பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் முத்துப்பாண்டியை தேடி வந்த நபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் டாஸ்மாக் பாரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மறுநாளே இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்று இருப்பது கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    • சதீஷ், ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
    • சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குடும்பத்துடன் வசிப்பவர் செல்வேந்திரன் (வயது 57). காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆனந்தலிங்கம் (25).

    இவர் கஞ்சா விற்ற வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி செல்வேந்திரனும், அவரது மனைவி பார்வதியும் வெளியே சென்று இருந்த வேளையில் அவர்களது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதில் திருடப்பட்ட, பணம் ரூ.48 லட்சம் என்றும் பின்னர் ரூ.7 லட்சம் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே 12 கிராம் தங்க நகையும், ரூ.2 லட்சமும் திருட்டு போனதாக ஆறுமுகநேரி போலீசார் 5-ந் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர் விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஏரல் சேதுக்குவாய்தான் கிராமத்தை சேர்ந்த விஜயராமன் மகன் சத்தியமுகேஷ் என்ற சதீஷ் (24) மற்றும் இவரது உறவினரான மேலாத்தூர் சொக்கப்பழக்கரையை சேர்ந்த கோபால் மகன் சச்சின் (23) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

    விசாரணையில் சதீஷ் மீது ஆறுமுகநேரி, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இப்படி ஒரு வழக்கின் காரணமாக சதீஷ் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக இருந்தபோது தான் அவருக்கும் காயல்பட்டினம் ஆனந்த லிங்கத்திற்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே சதீஷ் ஜாமீனில் வெளியே வர இருந்த சூழ்நிலையில் அவரிடம், ஆனந்தலிங்கம் உதவி கேட்டுள்ளார். அதாவது, தன்னை பெற்றோர்கள் ஜாமீனில் எடுக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதனால் நீ எங்கள் வீட்டிற்கு சென்று அங்கே வைத்திருக்கும் லட்சக்கணக்கான பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு பின்னர் என்னை ஜாமினில் வெளியே கொண்டு வந்துவிடு. நாம் அதன் பிறகு பணத்தை செலவழித்து ஜாலியாக இருக்கலாம் என்ற திட்டத்தை கூறியுள்ளார்.

    இதன்படி சதீஷ் ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் திசை திருப்பிவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். தனக்கு உதவியாக சச்சின் என்பவரை சேர்த்துக் கொண்டுள்ளான்.

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள சதீஷிடமிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.

    • விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோவை மாவட்டத்தில் இருந்து சேலம் நோக்கி இரவு செக்யூல் லாஜிஸ்டிக் என்ற பெயரில் தங்க நகைகளை கொண்டு செல்லும் தனியார் வேன் சென்று கொண்டிருந்தது.

    வேனை சசிகுமார் என்பவர் ஓட்டி வந்தார். தனியார் பாதுகாவலர் பால்ராஜ் என்பவர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் உடன் வந்து கொண்டிருந்தார். வேனில் பல்வேறு தங்க நகைக் கடைகளில் பெறப்பட்ட 800 கிலோ தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.666 கோடியாகும்.

    இந்த வேன் நள்ளிரவில் ஈரோடு மாவட்டம் சித்தோடு சமத்துவபுரம் பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஒரு வளைவில் வேன் திரும்பிய போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தங்க நகைகளை கொண்டு வந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் சசிகுமார், தனியார் பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் தங்க நகைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த வேனை பத்திரமாக மீட்டு சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதேப்போல் விபத்தில் காயம் அடைந்த சசிகுமார், பால்ராஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மற்றொரு வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 800 கிலோ தங்க நகைகள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய தொழில் நுட்ப கல்வி மையம் (என்.ஐ.டி) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யோகீஸ்வர்நாத் என்பவர் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    அவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவர் யோகீஸ்வர்நாத் விடுதியின் சி-பிளாக்கின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவர் யோகீஸ்வர்நாத் மாடியில் இருந்து குதித்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. பாடங்கள் தொடர்பாக மன அழுத்தம் ஏறபட்டதன் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய தொழில் நுட்ப கல்வி மையத்தின் விடுதியில் 7-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×