search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeyakumar Thanasingh"

    • கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.
    • சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    20 நாட்களுக்கு மேலாகியும் இந்த வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிழவில்லை.

    எனவே இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தையும் மாவட்ட போலீசார், சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நேற்றே ஒப்படைத்தனர். உடனடியாக வழக்குப்பதிவு செய்த நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையையும் தொடங்கினர்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகா செல்வி, முனியாண்டி, சூர்யன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று திசையன் விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூருக்கு சென்று விசாரணையை தொடங்கினர்.

    இந்நிலையில் இன்று மீண்டும் கரைசுத்து புதூருக்கு சென்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் 2-வது நாளாக சம்பவம் நடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர்.

    அங்கு ஏதேனும் தடயங்கள் கிடைக்கிறதா? என்று ஆய்வு செய்த நிலையில், சம்பவம் நடந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஜெயக்குமாரின் மனைவி மற்றும் மகன்களிட மும் விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் ஜெயக்குமாரின் வீட்டில் பொருத்தியிருக்கும் கேமராக்கள், அவை எந்த திசையை பார்த்து இருக்கின்றன, வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தோட்டதிற்கான வியூ பாய்ண்ட் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    இதனிடையே ஜெயக்குமார் எழுதியதாக கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று மதியம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்து அங்கிருந்து நெல்லைக்கு வருகிறார்.

    இதனால் அவரும் கரைசுத்துபுதூருக்கு சென்று விசாரணை நடத்துவார் என்று கூறப்படுகிறது. 

    • ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.
    • நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2-ந்தேதி உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 4-ந்தேதி காலையில் அவரது வீட்டின் பின்னால் இருக்கும் அவரது தோட்டத்தில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவரது மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு மர்மம் நீடித்து வந்தது.

    இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த பல்வேறு தடயங்களின் அடிப்படையில் போலீசாரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகு பகுதியில் கடப்பாக்கல் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் அதிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.

    இதற்கிடையே அவரது டி.என்.ஏ. பரிசோதனை, உடல் எலும்புகள் மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்ரக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளுக்காக போலீசார் காத்திருந்தபோதும் தொடர்ந்து வேறு பல கோணங்களிலும் தனிப்படையினர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில் 3 வாரம் ஆகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலகராணி நியமனம் செய்யப்பட்டு, அவர் இன்று காலை மர்ம மரணம் என வழக்கினை பதிவு செய்துவிட்டு, விசாரணையை தொடங்கினார். 

    • 6 வகையான ஆய்வறிக்கைகளின் முடிவுக்காக நெல்லை மாவட்ட போலீசார் காத்திருக்கின்றனர்.
    • தனிப்படையில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பல அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    பல்வேறு தடயங்கள் சிக்கி உள்ள நிலையிலும் அவர் மரணத்திற்கு காரணம் என்ன என்பது போலீசாருக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

    இந்த வழக்கின் விசாரணையை 10 தனிப்படையினர் மேற்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொரு படையினரும் ஒவ்வொரு கோணத்தில் அரசியல், தொழில், குடும்பத்தினர், உறவினர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

    தற்போது வரை உறுதியான முடிவுக்கு வரமுடியாத சூழ்நிலையில் இறுதியாக டி.என்.ஏ. மாதிரி, உடல் எலும்பு பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட 6 வகையான ஆய்வறிக்கைகளின் முடிவுக்காக நெல்லை மாவட்ட போலீசார் காத்திருக்கின்றனர்.

    அந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும். அதன்பின்னரே அவர் கொலை செய்யப்பட்டாரா என்பதையே போலீசார் உறுதி செய்வார்கள்.

    இந்த நிலையில் இதுவரை அமைத்திருந்த தனிப்படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் இதுவரை நடைபெற்ற முக்கியமான சில கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறம்பட தேடிக்கண்டுபிடித்து கைது செய்த போலீஸ் அதிகாரிகளை கொண்டு புதிதாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த தனிப்படையில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட பல அதிகாரிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கி விட்டனர்.

    திசையன்விளைக்கு 4 ஜீப்களில் புறப்பட்டு சென்ற அந்த தனிப்படை முதலாவதாக நேற்று மாலையில் ஜெயக்குமாரின் உறவினர்கள், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடல் கிடந்த தோட்டத்தில் ஆய்வு செய்தனர். இன்றும் காலை முதலே விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

    • உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது.
    • ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள்.

    நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் கடந்த 10 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

    தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் நெல்லை சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 32 பேர் முக்கிய பிரமுகர்கள் ஆவர்.

    கடந்த 2-ந்தேதி அன்று ஜெயக்குமார் மாயமான நிலையில் மறுநாள் 3-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மறுநாளே ஜெயக்குமார் வீட்டு அருகே உள்ள தனது தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் கம்பிகளால் சுற்றப்பட்டிருந்த நிலையில் பெரிய கடப்பா கல்லும் கட்டப்பட்டிருந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடந்த 10 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி பல்வேறு தடயங்களை சேகரித்தனர்.

    உயிரிழப்பதற்கு முன்பு ஒரு கடைக்கு சென்று ஜெயக்குமார் டார்ச் லைட் வாங்கிய வீடியோவும் வெளியாகி இருந்தது. அந்த டார்ச் லைட்டும் ஜெயக்குமார் எரிந்த நிலையில் கிடந்த இடத்தில் இருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டது. தோட்டத்து கிணற்றில் இருந்து கத்தி ஒன்றும் கிடைத்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இப்படி ஜெயக்குமார் கொலை தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயாராகி வருகிறார்கள்.

    ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், சந்தேக மர்மமாகவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இருப்பினும் ஜெயக்குமாரை கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று போலீசார் கருதுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளப்போகும் ஒருவர் பெரிய கடப்பா கல்லை உடலில் கட்டிக் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை.

    அதே நேரத்தில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் சில்வர் நிறத்திலான கையடக்க பிரசை வாயில் திணித்துக் கொள்ளவும் வாய்ப்பு இல்லை. எனவே ஜெயக்குமாரை யாரோ திட்டமிட்டு கொலை செய்து எரித்துக் கொன்று இருக்கலாம் என்றே சந்தேகிக்கப்படுகிறது. ஜெயக்குமார் உடலில் இருந்து எடுக்கப்பட்ட சில பொருட்கள் அவரது வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்டவை என்பதும் தெரியவந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து ஜெயக்குமாரின் உறவினர்கள் சிலரே அவரை தீர்த்துக் கட்டி இருக்கலாமோ? என்கிற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக அவரது கடிதங்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கடிதங்கள் உயிரிழப்பதற்கு முன்பு அவரால் எழுதப்பட்டவைதானா? என்பதை கண்டறிவதற்காக தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பிறகே ஜெயக்குமார் எழுதிய கடிதத்தின் உண்மை தன்மை பற்றிய விவரங்கள் தெரியவரும்.

    ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு கிடைத்து உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயக்குமாருக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் எல்லை மீறி போய் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.

    இதில் ஜெயக்குமாரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது உறவினர்களே திட்டம் போட்டு அவரை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகமும் வலுத்து உள்ளது. இப்படி ஜெயக்குமாரின் மரணத்தில் இறுதிக் கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில் ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கலாமா? என்கிற கோணத்திலும் போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உயிரிழப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தனது சொத்துக்கள் தொடர்பாக ஜெயக்குமார் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அவர் எழுதியுள்ள மற்ற கடிதங்களில் தனக்கு பணம் தர வேண்டியவர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். எந்த இடத்திலும் அவர் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்கிற தகவலை குறிப்பிடவில்லை. இதன்மூலம் தனது மரணத்துக்கு பிறகு தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற எண்ணத்துடன் ஜெயக்குமார் செயல்பட்டிருப்பதும் அம்பலமாகி உள்ளது.

    இதன்மூலம் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இருப்பினும் ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம் ஒரு வாரத்தில் விலகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.ஜி.கண்ணன் இதனை தெரிவித்துள்ள நிலையில் 10 தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை நெருங்கி உள்ள போலீசார் அவர்களை பிடிக்க பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

    • கடந்த 2-ந்தேதி இரவு ஜெயக்குமார் மாயமாவதற்கு முன்பாக கடைசி 2 மணி நேரம் பயணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • 2-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் தோப்புவிளைக்கு நேரடியாக செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் ஒரு வாரத்தை கடந்த பின்னும் இதுவரை உறுதியான முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் நிலையில், அவர் உடல் எரிக்கப்பட்டு கிடந்த தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அங்கு ஏதேனும் தடயங்கள் சிக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நேற்றும் 5-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது ஜெயக்குமார் பிணமாக கிடந்த குழியில் மீண்டும் ஆய்வு செய்தபோது அதில் எரிந்த நிலையில் டார்ச் லைட் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏற்கனவே கடந்த 2-ந்தேதி அன்று இரவில் அவர் மாயம் ஆவதற்கு முன்பாக திசையன்விளை பஜாரில் ஒரு டார்ச் லைட் வாங்கினார். அவை அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியிருந்தது.

    இந்நிலையில் அவரது குழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அந்த டார்ச் லைட் அவர் திசையன்விளையில் வாங்கியது தானா? என்பதை அறிய கடை உரிமையாளரிடம் அந்த லைட்டை கொண்டு சென்று தனிப்படையினர் இன்று விசாரிக்கின்றனர். அதில் ஏதேனும் கைரேகைகள் உள்ளதா? என கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    தோட்டத்தில் தேக்கு மரங்கள் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து விழுந்துள்ள காய்ந்த இலை சறுகுகளை அப்புறப்படுத்தி வேறு ஏதேனும் தடயங்கள் சிக்குகிறதா எனவும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்படுகிறது.

    ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட தடயங்கள் அனைத்தும் அவரது வீடு மற்றும் தோட்ட பகுதிகளிலேயே சிக்கி வருவதால் இன்னும் சில தினங்களில் வழக்கு முடிவுக்கு வந்துவிடும் எனவும், தற்போது இறுதிகட்ட தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 2-ந்தேதி இரவு அவர் மாயமாவதற்கு முன்பாக கடைசி 2 மணி நேரம் பயணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்று இரவு உவரியை அடுத்த குட்டம் அருகே உள்ள தோப்புவிளை பகுதியில் ஜெயக்குமாரின் செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆனதாக ஏற்கனவே போலீசார் தெரிவித்தனர். அவரது சொந்த ஊரான கரைசுத்து புதூரில் இருந்து தோப்புவிளை மொத்தம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

    ஜெயக்குமார் அரசியில் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் யாரையும் சந்திக்க வேண்டும் என்றால் இந்த பாதையில் தான் வழக்கமாக குட்டம், தோப்புவிளை கிராமங்களுக்கு செல்வார். ஆனால் 2-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் தோப்புவிளைக்கு நேரடியாக செல்லவில்லை. அதற்கு பதிலாக வேறு ஒரு சுற்றுப்பாதையை பயன்படுத்தி சென்றுள்ளார். அவர் கரைசுத்துபுதூரில் இருந்து காரில் 7.30 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, மன்னார்புரம், அணைக்கரை, பெருங்குளம், உறுமன்குளம், பெட்டைக்குளம், அணைக்குடி, குட்டம் வழியாக சுமார் 43 கிலோமீட்டர் சுற்றி சென்று தோப்புவிளையை அடைந்துள்ளார்.

    அவர் மன்னார்புரம் விலக்கில் உள்ள பெட்ரோல் பங்கில் இரவு 8 மணிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு அதன் பின்னர் வேறு எங்கும் தனது காரை நிறுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. மேலும் ஜெயக்குமாரின் காரில் வேறு யாரும் பயணம் செய்யவில்லை என்றும் அந்த பங்க் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனியாக தோப்புவிளை சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மொத்தத்தில் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த இரவு நேரத்தில் அதுவும் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய காட்டு வழிப்பாதையில் 43 கிலோமீட்டர் சுற்றி அவர் பயணம் மேற்கொண்டது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவரது அந்த கடைசி 2 மணி நேர பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.
    • கிணற்றில் உள்ள சகதியில் தடயங்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், முத்துக்குளி வீரர்களும் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக போலீசார் கூடுதல் தடயங்களை தேடுவதற்காக அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

    கிணற்றில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாக கிணற்றில் உள்ள சகதியில் தடயங்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினரும், முத்துக்குளி வீரர்களும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கத்தி கண்டெடுக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார் என்பதில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயந்தி புகார் கூறியிருந்தார்.
    • சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்மமரணம் வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று ஜெயக்குமாரின் சகோதரர், மகன்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது வழக்கு தொடர்பாக பல்வேறு விபரங்களை போலீசார் அவர்களிடம் கேட்டறிந்தனர்.

    இதற்கிடையே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது ஜெயக்குமார் என்பதில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி ஜெயந்தி புகார் கூறியிருந்தார். எனவே மீட்கப்பட்ட சடலம் ஜெயக்குமார் தானா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக டி.என்.ஏ.பரிசோதனை நடத்துவதற்கு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகளை போலீசார் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    • ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர்.
    • சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் தனிப்படையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்மமரண வழக்கில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகிறது.

    கடந்த 2-ந்தேதி மாயமான அவர் 4-ந்தேதி வீட்டருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது குரல்வளை நெரிக்கப்பட்டிருந்ததும், உடல் முழுவதும் கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகில் கடப்பா கல் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது. எனவே அவரை மர்ம நபர்கள் கடத்தி கொலை செய்து தோட்டத்தில் வைத்து எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஜெயக்குமாரின் தொண்டை குழிக்குள் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் ஸ்கிரப்பர் துகள்கள் இருந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது வீட்டின் மாட்டு தொழுவத்தில் அந்த ஸ்கிரப்பரின் கவர் கிடந்துள்ளது. இதனால் அவர் அந்த இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

    தடயவியல் பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. எனினும் கொலையாளிகள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டிய முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்டவர்களை நேற்று நேரில் வரவழைத்து, தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையை வீடியோ பதிவு செய்து கொண்டதோடு பணம் வரவு-செலவு குறித்த தகவல்களை அவர்கள் கைப்பட கடிதமாக எழுதவைத்து போலீசார் வாங்கி கொண்டனர்.

    இதுஒருபுறம் இருக்க, ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். அவரது மனைவி, 2 மகன்கள் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் தனிப்படையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று புதிய வீடியோ ஒன்று வெளியானது. அதாவது எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஜெயக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும்போது அவரது கழுத்தில் தொடங்கி கால் பாதம் வரையிலும் மின் வயர் சுற்றப்பட்டிருப்பதும், முதுகு பகுதியில் கடப்பா கல் ஒன்று வைக்கப்பட்டு கட்டப்பட்டிருப்பதும் அந்த வீடியோவில் தெரிய வந்துள்ளது. மேலும் அதில் அவரது கழுத்து பகுதியில் வயரால் நெரிக்கப்பட்டு இருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

    இதனால் அவர் கொலை தான் செய்யப்பட்டிருப்பார் என்று போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் கூலிப்படையினர் தான் இதுபோன்ற முறையில் கொலை செய்வார்கள் என்பதால், ஜெயக்குமார் கொலை வழக்கில் கூலிப்படைக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

    ஜெயக்குமார் அரசியலில் மட்டுமல்லாது அரசு ஒப்பந்ததாரராக பல தொழில்களை செய்து வந்தார். மேலும் வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இதனால் தொழில் ரீதியாக ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபர்கள் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாமா? என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தியின் கோரிக்கையின் அடிப்படையில், இறந்த நபர் ஜெயக்குமார் தானா? என்பதை அறிய அவரது மகன்கள் 2 பேரிடமும் டி.என்.ஏ. மாதிரி எடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனிப்படை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஜெயக்குமார் தனது கடிதங்களில் தனக்கு வர வேண்டிய பணம் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் கடன் வாங்கியது பற்றி எந்தஒரு இடத்திலும் அவர் பெரிதாக எதுவும் சொல்லவில்லை. அவரது செல்போன் இதுவரை கிடைக்காவிட்டாலும் அவருக்கு வந்த அழைப்புகள் பற்றி ஆய்வு செய்தோம்.

    அதுபோல அவர் யார்-யாரிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் என்பது பற்றி பட்டியல் தயாரித்து ரகசியமாக விசாரணை நடத்தினோம். அப்போது தான் அவர் 50-க்கும் மேற்பட்டவரிடம் கடன் வாங்கியிருப்பது எங்களுக்கு தெரியவந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் சென்று அவர் கடன் வாங்கி இருக்கிறார்.

    பெரும்பாலும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் அவர் கடன் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. நாங்கள் இதுவரை திரட்டி உள்ள தகவல்படி அவர் ரூ.40 கோடி வரை கடன் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    கோடிக்கணக்கில் வாங்கிய கடன் பணத்தை வைத்து தான் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் கை கொடுக்காததால் பணத்தை திருப்பி கொடுக்க இயலவில்லை. இதனால் வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.

    அந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் ஜெயக்குமார் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்னிடம் பணம் திருப்பி கேட்டவர்களை பதிலுக்கு மிரட்டி இருக்கிறார். இதைத் தொடர்ந்துதான் அவருக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது.

    அப்படி கொலை மிரட்டல் விடுத்தவர்களில் ஒருவர்தான் ஜெயக்குமாரை திட்டமிட்டு கொலை செய்து இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம். அந்த நபர் நேரடியாக இந்த கொலையில் ஈடுபடாமல் கூலிப்படையை ஏவி காரியத்தை முடித்து இருக்கிறார். தென் மாவட்டங்களை பொறுத்தவரை முக்கிய நகரங்களில் கூலிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.

    மதுரை கூலிப்படையினர் ஒருவிதமாகவும், தூத்துக்குடி கூலிப்படையினர் ஒரு விதமாகவும், நெல்லை கூலிப்படையினர் ஒருவிதமாகவும் தங்களது பாணியில் கொலை செயல்களில் ஈடுபடுவார்கள். ஜெயக்குமாரின் கை, கால்களை கட்டி கொலை செய்து இருப்பது மதுரை கூலிப்படையினர் நடத்தும் பாணியாகும்.

    எனவே மதுரையைச் சேர்ந்த ஏதாவது ஒரு கூலிப்படைதான் ஜெயக்குமாரை கொலை செய்து எரித்து இருக்க வேண்டும். அது தொடர்பாக அடுத்த கட்ட விசாரணையை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.

    கூலிப்படையை ஏவிய பிரமுகர் அரசியல் பிரமுகரா? அல்லது வட்டிக்கு பணம் கொடுப்பவரா? என்பது தெரியவில்லை. அது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். ஜெயக்குமார் கொன்று எரிக்கப்பட்டது பல ஆய்வுகள் மூலம் உறுதியாகி விட்டது.

    அவர் தற்கொலை செய்து இருந்தால் அவரது கால் பாதம் எரிந்து இருக்க வாய்ப்பில்லை. தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தீக்குளித்து இருந்தால் தீ புகையை அவர் சுவாசித்து இருப்பார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது நுரையீரலில் அத்தகைய புகை தாக்கம் எதுவும் இல்லை.

    எனவே ஜெயக்குமார் கை, கால்கள் கட்டப்பட்டு கடப்பா கல்லில் இணைத்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். பிறகு அவரை தீ வைத்து எரித்துள்ளனர். இந்த பாணியிலான கொலையாளிகள் பற்றி விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவோம்.

    இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

    • ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு வரவேண்டிய பணம், மற்றவர்களுக்கு தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் விளக்கமாக எழுதி இருந்தார்.
    • இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரையிலான பணம் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடந்த 30-ந்தேதி எழுதியிருந்த கடிதத்தில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்களின் விபரங்களை எழுதியிருந்தார்.

    மேலும் அவர் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு வரவேண்டிய பணம், மற்றவர்களுக்கு தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் விளக்கமாக எழுதி இருந்தார்.

    இந்நிலையில் தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொழில் அதிபர்கள் உள்பட சுமார் 5-க்கும் மேற்பட்டோர் ஜெயக்குமாருக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி ஒப்படைத்து விடுவதாக போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராகும்போது தெரிவித்திருந்தனர்.

    அதன்படி இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரையிலான பணம் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    • திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • ஜெயக்குமார் மாயமான அன்று கையுடன் எடுத்துச்சென்ற 2 செல்போன்களும் மாயமாகி விட்டது.

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலையில் மாயமானார். 4-ந்தேதி தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

    இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கெல்லாம் சென்றார்? யாரையெல்லாம் சந்தித்தார்? என்பது குறித்து தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இதற்காக திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு 10.20 மணியளவில் அவர் திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கும் சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரித்து வரும் நிலையில் இரவு 10.30 மணிக்கு பிறகு அவரது செல்போனுக்கு பெயர் சேமித்து வைக்காத 2 வெவ்வேறு எண்களில் இருந்து போன் வந்துள்ளது. அதில் ஜெயக்குமார் பேசியுள்ளார். அந்த எண்களை போலீசார் ஆய்வு செய்து போன் செய்து பார்த்தனர். அவை சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

    ஏற்கனவே அவர் மாயமான அன்று கையுடன் எடுத்துச்சென்ற 2 செல்போன்களும் மாயமாகி விட்டது. அதனை இதுவரை போலீசார் கண்டுப்பிடிக்கவில்லை. அந்த செல்போன்கள் கிடைக்கும் பட்சத்தில் அவரது மரண வழக்கில் ஒரு உறுதியான முடிவு கிடைத்துவிடும் என்று போலீசார் நம்புகின்றனர்.

    அதேநேரத்தில் அவர் மாயமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு வந்த 2 அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து அவர்கள் யார்? எங்கிருந்து போன் செய்தார்கள்? எதற்காக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டார்கள்? என்பதை அறிய தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது.
    • 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

    மதுரை:

    மதுரையில் இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு 3 ஆண்டுகள் முடிந்து 4-ம் ஆண்டு தொடக்க விழாவை தி.மு.க. அரசு காண்கிறது. கடுமையான மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்

    தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மாட் டோம் என்று கூறினார்கள். ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டனர்.

    நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. கியாஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். அதுவும் அப்படியே இருக்கிறது. பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்கான விலையை குறைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்குவோம் என்று கூறினார்கள். தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது. ஆனால் ஒரு கோடி பேருக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள்.

    மக்களுக்கு ஏமாற்றத்தை தான் தி.மு.க. அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த 2 ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    அம்மா அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தி விட்டனர். இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை, வீழ்ச்சி தான் உள்ளது. அதுதான் உண்மையான கள நிலவரம். தி.மு.க. ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும்.

    நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலையா? தற்கொலையா? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை. இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறுக்கீடா? அழுத்தமா? என்று தெளிவாக தெரியவில்லை.

    புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது.

    3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர். தமிழகம் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது. தற்போது போலீசார் ஜெயக்குமார் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இரும்பு பிரசின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் உள்ளே உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×