search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் விபத்து"

    • தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
    • ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பிரகாஷ்( 39). இவரது மனைவி அனிதா (39). இவர் சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இன்று நடைபெறும் தேர்தலுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காக அனிதா தனது கணவர் ஜானி பிரகாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் அனிதாவின் தாய் வீடான ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஜானி பிரகாஷ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் அனிதா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது.
    • லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.

    சேலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வெந்நியை அடுத்த தறியன் விளையை சேர்ந்தவர் பிரபாகர் சிங், இவரது மகன் கேம்கோ (21), தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சத்தியபிரவீன் (21), சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவுதம் (21), சரண் (21) மற்றும் ஜெகநாத் (21) இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி மாணவர்கள் 5 பேரும் கேம்கோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை மாணவர் கேம்கோ ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கேம்கோ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதினார்.

    இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் கேம்கோ மற்றும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாணவர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றவர்கள் வலியால் அலறி துடித்தனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த மல்லூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஜெகநாத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த சத்தியபிரவீன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மாணவர் சரண் காயமின்றி தப்பினார்.

    விபத்தில் இறந்த கேம்கோ மற்றும் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.

    • இரும்பாலை வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறிய ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார்.
    • விபத்து குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயக்குமார் (38).

    கடந்த 2010-ம் ஆண்டு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்த ஜெயக்குமார் தொடர்ந்து சேலம் இரும்பாலையில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த அவர் பணியை முடித்து விட்டு இரவு 9.50 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டார். இரும்பாலை வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறிய ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் காயம் அடைந்த அவரை இரும்பாலை ஊழியர்கள் மீட்டு சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 3.50 மணிக்கு ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளது. அவரது உடலுக்கு இரும்பாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் இரும்பாலை ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விபத்தில் 2 பள்ளி பஸ்களிலும் பயணித்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    • ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல இப்பள்ளியின் 2 பஸ்கள் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பெரிய கிருஷ்ணாபுரம் அருகே அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது.

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை பஸ்கள் கடக்க முயன்றபோது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று, இந்த 2 பள்ளி பேருந்துகள் மீதும் ஒரே நேரத்தில் பலமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பள்ளி பஸ்களிலும் பயணித்த மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று பள்ளி குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தனியார் பள்ளி பஸ்கள் விபத்தானது குறித்து தகவல் வெளியானதால் விபத்து நடந்த பகுதியில் பெற்றோர்கள் குவிந்ததால் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    ஏத்தாப்பூர் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார்.
    • தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் துட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிவேல் மகன் தங்கபாலு (26). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் தினேஷ்குமார் (20) என்பவருடன் நேற்று மாலை 3 மணிக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டிற்கு சென்றனர்.

    மோட்டார் சைக்கிளை தங்கபாலு ஓட்டி சென்றார். ஏற்காட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு இரவு 7.30 மணியளவில் சேலம் திரும்பினர்.

    அப்போது கடும் பனி மூட்டத்துடன் கூடிய லேசான மழை பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்தபடியே இருவரும் மலைப்பாதையில் சென்றுள்ளனர். 17-வது மற்றும் 18-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது தங்கபாலுவின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தினேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்தார். தங்கபாலு இடது காலில் முறிவு ஏற்பட்டு சாலையில் கிடந்தார்.

    இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர் மற்றும் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்கபாலுவை மீட்டு சிகிச்சை அளித்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் பள்ளத்தில் விழுந்த தினேஷ்குமாரை தேடினர். இதில் அதிர்ஷ்டவசமாக தினேஷ்குமார் தலை மற்றும் கைகளில் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் இருவரையும் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த ஜெகன்பாபு மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
    • நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டு தெருவில் வசித்து வருபவர் ராஜதுரை (வயது 28). இவர் சேலம் மாநகராட்சியில் குப்பை அள்ளும் வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா ஈங்கூர் குட்டப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மகள் பிரியாவுக்கும் (25) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சஞ்சனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.

    குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 6-ந்தேதி மருமகனையும், மகளையும் சமாதானம் செய்து வைக்க அன்று இரவு ஈங்கூர் குட்டப்பாளையத்தில் இருந்து பிரியாவின் தந்தை பழனிசாமி (50), தாயார் பாப்பாத்தி(45), தாய்மாமா ஆறுமுகம் (49), அவருடைய மனைவி மஞ்சுளா (38), தாய்மாமன் மகன் விக்னேஷ் (20), மற்றொரு மாமன் செல்வராஜ் (55) ஆகியோருடன் ஆம்னி காரில் சேலத்துக்கு வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    அப்போது பிரியா ஒரு வாரம் தனது பெற்றோர் வீட்டில் இருந்து விட்டு வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து தனது குழந்தையுடன் பிரியா ஆம்னி வேனில் புறப்பட்டார். ஆம்னி வேனை விக்னேஷ் (20) என்பவர் ஓட்டினார். வேன் 6-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர் பைபாஸில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் அதி பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ், குழந்தை சஞ்சனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். பிரியா, டிரைவர் விக்னேஷ் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இதில் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. பிரியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த ஜெகன்பாபு (25) மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அந்த பகுதியில் நெடுஞ்சாலையில் நிறுத்தும் வாகனங்களை கண்காணித்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    • தீ விபத்தால் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது.
    • காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சேலம் அருகே எஸ்.கொல்லப்பட்டி எனும் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு குடோனில் இன்று மாலை எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறி குடோன் பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    தீவிபத்தால் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது. ஒரு பெண் உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த சிலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன் (வயது 50), சதீஷ் குமார் (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா(வயது 45), மோகனா (வயது 38), மணிமேகலா (வயது 36), மகேஸ்வரி (வயது 32), பிரபாகரன் (வயது 31), பிருந்தா (வயது 28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • தீப்பற்றியதால் உரிமையாளர்கள் அந்த இடத்தை விட்டு விலகிச் சென்று உயிர்தப்பினர்.
    • என்ன செய்வதென தெரியாமல் தவித்தபோது அவ்வழியாக குடிநீர் லாரி வந்தது.

    சேலம்:

    சேலத்தை அடுத்த மாமாங்கம் மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று உரசி விபத்துக்குள்ளாகின. கீழே விழுந்ததும் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதனால் அவற்றின் உரிமையாளர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றதால் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனத்திற்காக காத்திருந்தபோது இருசக்கர வாகனங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.

    என்ன செய்வதென தெரியாமல் தவித்தபோது அவ்வழியாக குடிநீர் லாரி வந்தது. அந்த லாரியில் இருந்த தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • விபத்தில் பலியான லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று ஒரு சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள திமிரிகோட்டை அருகே பஸ் வந்துகொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த லாரி, எதிர்பாராதவிதமாக சொகுசு பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.

    இந்த விபத்தில் லாரி டிரைவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னப்பன், மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த கிளீனர் முத்துசாமி ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் சொகுசு பஸ் டிரைவர் குதித்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். பஸ்சில் பயணம் செய்த பிரபா என்ற பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற பயணிகள் காயமின்றி தப்பினர். இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், மேச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான லாரி டிரைவர் மற்றும் கிளீனர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சமீப காலமாக விபத்துக்களமாக மாறிவிட்டது.
    • கடந்த மாதம் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். அதன்பின்னர் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் தீபா என்பவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது 14 வயது மகளின் மஞ்சள் நீராட்டு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவுக்காக தீபாவின் உறவினர்கள் 7 பேர் சென்னைக்கு செல்ல திட்டமிட்டனர். இதற்காக சேலத்தில் இருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் டிக்கெட் பதிவு செய்தனர். நேற்றிரவு அந்த பஸ்சில் செல்வதற்காக சீர்வரிசை பொருட்களுடன் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் நின்றனர். அப்போது சேலத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ் அங்கு வந்தது.

    பயணிகளை ஏற்றுவதற்காக அந்த பஸ் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சீர்வரிசை பொருட்களை பஸ்சின் பின்பகுதியில் ஏற்றினர். கிளீனர் உதவியுடன் லக்கேஜ் பெட்டி திறந்து சீர்வரிசை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சேந்தமங்கலத்தில் இருந்து ஆத்தூர் தி.மு.க. கவுன்சிலருக்கு எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த லாரி பஸ்சின் பின்னால் சீர்வரிசை பொருட்கள் ஏற்றிக் கொண்டிருந்த இருந்த 7 பேர் மீது பயங்கரமாக மோதியது.

    மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில், பெத்தநாயக்கன்பாளையம், சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, (வயது 63) அவரது மகன் ரவிக்குமார் (41) உறவினரான, தலைவாசல் அருகே ஆறகளூரை சேர்ந்த செந்தில்வேலன் (46), சுப்பிரமணி (40) மற்றும் ஆம்னி பஸ்சின் கிளீனர் சேலத்தை சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (21) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அருகில் நின்ற திருநாவுக்கரசுவின் மனைவி விஜயா(60) மற்றும் பஸ்சில் இருந்த 3 பயணிகளும் படுகாயம் அடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும், ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். வழிலியேயே விஜயா பரிதாபமாக இறந்தார்.

    இவரது உறவினர் ஜெயபிரகாஷ் (41) உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    இந்த கோர விபத்து காரணமாக அந்த வழியாக பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆம்னி பஸ் சாலை நடுவே நின்று பயணிகளை ஏற்றியதும், டாரஸ் லாரி அதிவேகமாக வந்ததுமே விபத்துக்கு காரணம் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

    விபத்தில் பலியான திருநாவுக்கரசு பெத்தநாயக்கன் பாளையத்தில் தையல் கடை வைத்துள்ளார். இவரது மகன் ரவிக்குமார் பிளக்ஸ் பேனர் கடை வைத்துள்ளார். சுப்பிரமணி லேப் டெக்னீசியனாகவும், செந்தில்வேலன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். கிளீனர் தீபன் சக்கரவர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    சேலம்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை சமீப காலமாக விபத்துக்களமாக மாறிவிட்டது. கடந்த மாதம் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலியானார்கள். அதன்பின்னர் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். நேற்று இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் தந்தை-மகன் பலியாகினர். தொடர் விபத்துகளும், பலியும் அதிகரித்துவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    விபத்து குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யா, தாசில்தார் அன்புச்செழியன், வாழப்பாடி டி.எஸ்.பி., சுவேதா, ஏத்தாப்பூர் செயல் அலுவலர் மாதேஸ்வரன் ஆகியோர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த இடத்தையும், எவ்வாறு விபத்து நடந்தது? என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியையும் பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்தனர்.

    விபத்து ஏற்படுத்திய டாரஸ் லாரியை சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்தார். விபத்து நடந்ததும் அவர் லாரியை நிறுத்திவிட்டு தலைமறைவானார். இதையடுத்து போலீசார் இன்று காலை கார்த்திக்கை கைது செய்தனர். இதனிடையே விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் டிரைவர், அம்மன்பாளையத்தை சேர்ந்த பரமேஸ்வரனும் கைது செய்யப்பட்டார். இவர் ஆம்னி பஸ்சை நடுரோட்டில் நிறுத்தியதாலேயே இந்த சோகவிபத்து நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
    • இறந்தவர்களின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலத்தில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி அரூர் நோக்கி நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது அரூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

    மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியது. பின்னர் எதிரே சிமெண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது கண்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிப்பர் லாரியில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பாரூரை சேர்ந்த இளங்கோ (வயது45), தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி தாலுகா ஈச்சம்பட்டியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்த பழனி (வயது 40) ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி உயிருக்கு போராடினர்.

    பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை உடல்களை மீட்க முயன்றனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராடி மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து உதவி கமிஷனர் சரவணகுமார், வீராணம் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டெய்னர் லாரி டிரைவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதையடுத்து போலீசார் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இதற்கிடையே இறந்தவர்களின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் மேம்பாலம் அருகே ரோட்டில் ஏறியபோது திடீரென ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.
    • காரின் முன்பகுதி, உள்பக்கம் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து 30-வது நாள் காரிய நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.

    இந்த நிலையில் இரவு கண் விழித்து தூங்காமல் இருப்பதற்காக நேற்று இரவு டீ குடிக்க வேண்டி ஆத்தூர் பஸ் நிலையத்திற்கு அவரது உறவினர்கள் ராஜேஷ், சந்தியா உள்பட 11 பேர் ஆம்னி காரில் சென்றனர். அங்கு ஒரு டீ கடையில் அனைவரும் டீ குடித்து விட்டு அங்கிருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினர்.

    காரை ராஜேஷ் ஓட்டி வந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓட்டம்பாறை மேம்பாலம் பகுதியில் வலது புறத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் மேம்பாலம் அருகே ரோட்டில் ஏறியபோது திடீரென ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி, உள்பக்கம் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது.

    இந்த விபத்தில், காரை ஓட்டிய ராஜேஷ் (வயது 29), காருக்குள் இருந்த சந்தியா (20), சரண்யா (26), ரம்யா (25), சுகன்யா (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பெரியண்ணன், கிருஷ்ணவேணி, சுதா, புவனேஸ்வரன், உதயகுமார், தன்ஷிகா (11) ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் அவர்கள் கதறினர்.

    இதை பார்த்த பொதுமக்கள் இது பற்றி ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள், கார் இடிபாடுகளில் இருந்து படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆத்தூர் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து இடிபாடுகளை அகற்றி 6 பேரையும் மீட்டு மோட்டார்சைக்கிள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் 11 வயது சிறுமி தன்ஷிகா சேலம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

    உயிரிழந்த 5 பேர் உடல்களும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.

    இது குறித்த தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். துக்க நிழ்வுக்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மாரிசாமி என்பவரது மனைவி சுதா (23), பெரியசாமி மகன் பெயரியண்ணன் (38) , ஹரிமூர்த்தி மகள் புவனேஸ்வரி (17), செல்வராஜ் மனைவி கிருஷ்ணவேணி (45), சிவகுமார் மகன் உதயகுமா ர் (17)ஆகிய 5 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தித்த கலெக்டர் கார்மேகம் மற்றும் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். மேலும் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் உடனுக்குடன் செய்யவும் டாக்டர்களிடம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அப்போது கதறி அழுதவர்களை கலெக்டர் தேற்றினார். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியையும் கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    ×