search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College Students Dead"

    • சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
    • உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது பஸ் உரசியதில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 3 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    மதுராந்தகத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்த கமலேஷ்(வயது19), சூனாம்பேடு தனுஷ்(19), மோகல்வாடி பகுதியை சேர்ந்த மோனிஷ்(19) உள்ளிட்டோர் படித்து வந்தனர். அவர்கள் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    இன்று காலை கமலேஷ் உள்ளிட்ட மாணவர்கள் அனைவரும் வழக்கம் போல் சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்த போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென பஸ் உரசியது.

    இதில்படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கமலேஷ், தனுஷ், மோனிஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் இடிபாட்டில் சிக்கி சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் கமலேஷ், தனுஷ், மோனிஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்றொரு மாணவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

    தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பலியான 3 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பஸ்சின் மற்றொரு படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மேலும் 5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

    பலியான 3 மாணவர்களும் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவர்களது பெற்றோர் கதறி துடித்தனர். மாணவர்களின் உடல்களை பார்த்து உடன் படித்த மாணவர்கள் கண்ணீர் வடித்தனர். இதனை பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது.
    • லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.

    சேலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வெந்நியை அடுத்த தறியன் விளையை சேர்ந்தவர் பிரபாகர் சிங், இவரது மகன் கேம்கோ (21), தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சத்தியபிரவீன் (21), சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவுதம் (21), சரண் (21) மற்றும் ஜெகநாத் (21) இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி மாணவர்கள் 5 பேரும் கேம்கோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை மாணவர் கேம்கோ ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கேம்கோ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதினார்.

    இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் கேம்கோ மற்றும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாணவர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றவர்கள் வலியால் அலறி துடித்தனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த மல்லூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஜெகநாத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த சத்தியபிரவீன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மாணவர் சரண் காயமின்றி தப்பினார்.

    விபத்தில் இறந்த கேம்கோ மற்றும் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.

    • ஆஸ்பத்திரிக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • தகவல் அறிந்ததும், அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    வால்பாறை:

    கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் 5 மோட்டார் சைக்கிள்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர்.

    சோலையாறு நல்லகாத்து சுங்கம் என்ற இடத்துக்கு சென்ற அவர்கள், சோலையார் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது மாணவர் வினித் ஆற்றில் உள்ள சுழலில் சிக்கி கொண்டு சத்தம் எழுப்பினார்.

    அவரை காப்பாற்றுவதற்காக, தனுஷ், சரத், நபில், அஜய் ஆகியோர் ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களும் சுழலில் சிக்கி வெளியில் வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கினர்.

    இதை கரையில் இருந்த சக நண்பர்கள் பார்த்து அபயகுரல் எழுப்பவே அருகே வசித்து வரும் பொதுமக்கள் ஓடி வந்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வினித், தனுஷ், அஜய், சரத், நபில் ஆகிய 5 பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர்களது உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது, அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்தவர்களில் வினித், தனுஷ், அஜய் ஆகியோர் கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தை சேர்ந்தவர்கள். இதில் வினித்தும், தனுசும் அண்ணன் தம்பிகள் ஆவர்.

    ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் சுற்றுலா சென்ற இடத்தில் இறந்ததால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும், அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு இறந்த 5 கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிணத்துக்கடவு மணிகண்டபுரத்திற்கு சென்ற அவர் வினித், தனுஷ் ஆகியோரின் பெற்றோர்களான ராமகிருஷ்ணன்- கவிதா, அஜயின் பெற்றோர் ரவி-தெய்வானை ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • மாணவர்கள் பலியான பகுதியில் இதுபோன்று சிலர் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது.
    • மாணவர்கள் பலியான விவரம் அறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து 4 பேரின் உடலையும் பார்த்து கதறி அழுதனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வடூகரை பகுதியை சேர்ந்தவர் சயீத் உசேன்(வயது 21), குட்டூரை சேர்ந்தவர்கள் அபிஜான் (20), அர்ஜூன்(21), பூங்குன்றத்தை சேர்ந்தவர் நிவேத் கிருஷ்ணா (22).

    இவர்கள் 4 பேரும் திருச்சூரில் உள்ள இருவேறு கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் நேற்று திருச்சூர் அருகே கைனூர்சிரா பகுதியில் உள்ள மணலிப்புழா ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களில் ஒருவர், திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் தத்தளித்தார். இதனைப் பார்த்த மற்றொருவர் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அவர்களை காப்பாற்ற மற்ற 2 பேரும் ஆற்றுக்குள் சென்றனர்.

    இவ்வாறாக 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக சென்று ஆற்றில் மூழ்கினர். இதனை அந்த பகுதியில் நின்ற மாணவிகள் பார்த்து போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருச்சூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜய் கிருஷ்ணா தலைமையிலான மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    அவர்களும், ஸ்கூபா டைவிங் குழுவினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் 4 பேரும் அடுத்தடுத்து பிணமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து 4 மாணவர்களின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்கள் பலியான விவரம் அறிந்த அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து 4 பேரின் உடலையும் பார்த்து கதறி அழுதனர்.

    மாணவர்கள் பலியான பகுதியில் இதுபோன்று சிலர் தண்ணீரில் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது. இதனால் அந்த பகுதி அபாயகரமான இடம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த எச்சரிக்கையையும் மீறி சிலர் அந்த பகுதிக்கு சென்று குளிக்கிறார்கள்.

    அப்போது இதுபோன்ற அசம்பாவிதம் நடப்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    • தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரனின் மகன் ஜெகநாதன் (வயது 19). மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் மகன் (18) இவர்கள் இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஜெகநாதன் பிஎஸ்சி பயர் அண்ட் சேப்டி 3-ம் ஆண்டும், விக்னேஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இருவரும் கல்லூரிக்கு சேங்காலிபுரம் பகுதியில் இருந்து ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் பள்ளி வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்து தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×