search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bride"

    • திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
    • ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செஞ்சி:

    திருமணம் நடந்த இடத்திலேயே ரத்த தான முகாம் நடத்தி மணமக்களும் ரத்த தானம் வழங்கிய வித்தியாசமான நிகழ்ச்சி செஞ்சி அருகே நடைபெற்றது.

    செஞ்சியை அடுத்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீ கேசவ பிரகாஷ். இவருக்கும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த யோகா மருத்துவர் சோனியா ஆகியோருக்கு நேற்று காலை செஞ்சியை அடுத்த அப்பம்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

    திருமண பத்திரிகையில் திருமணம் நடக்கும் மண்டபத்திலேயே ரத்த தான முகாம் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதன்படி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மனிதம் காப்போம் தன்னார்வலர்கள் குழு இணைந்து நடத்திய ரத்த தான முகாம் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று காலை திருமணம் முடிந்தவுடன் 8 மணி அளவில் மணமக்கள் ஸ்ரீ கேசவ பிரகாஷ்-சோனியா ஆகியோர் ரத்த தானம் வழங்கினார்கள். இதனைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 15-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினார்கள்.

    ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் இதுவரை எங்கும் நடைபெறாத வகையில் திருமணம் மண்டபத்திலேயே முகாம் நடத்தி மணமக்கள் உள்பட பலர் ரத்த தானம் வழங்கிய நிகழ்ச்சி இப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

    • போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.
    • இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே தடியூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    திருமணத்தன்று காரில் இருந்து இறங்கிய மணமகன் மதுபோதையில் தள்ளாடியபடி மணமேடை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    இதை பார்த்த மணப்பெண் உள்பட அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதையில் இருந்த மணமகன் திருமணத்தை நடத்துவதற்காக வந்திருந்த பாதிரியாரிடமும், மணமகளின் உறவினர்களிடம் தகராறு செய்தார்.

    இதனை நேரில் பார்த்து கொண்டிருந்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மணமகள் 'தனக்கு இந்த திருமணமே வேண்டாம்' என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் திருமணம் நின்றது.

    இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து அங்கிருந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மணமகளின் குடும்பத்தினர், தங்களுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் திருமணத்துக்காக பெரும் தொகை செலவு செய்ததால் மணமகனின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் திருமணத்துக்காக செலவு செய்த தொகையை நஷ்டஈடாக தரவேண்டும் என்றனர்.

    இதை தொடர்ந்து நஷ்ட ஈடாக ரூ.6 லட்சம் கொடுக்க மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருமணத்துக்காக தயார் செய்திருந்த உணவு அனைத்தும் வீணானது.

    இதற்கிடையே மதுபோதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ் (வயது 21). இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்நிலையில் 27-ந் தேதி லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர்.

    நேற்று முன்தினம் மாலை வரிசையில் சென்றனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்கம் மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி சாய் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து லட்சுமி சாயின் பெற்றோர் கூறுகையில்:-

    அவருக்கு சிறு வயது முதலே சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிணத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் புது மணப்பெண் அணிந்து இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எண்ணிக்கையில் சுமார் 18,000 பேர் மட்டுமே உள்ளனர்
    • 16லிருந்து 20 வயது முடிவதற்குள் மகளை திருமணம் செய்து கொடுக்கின்றனர்

    ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா.

    இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர்.

    இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது.

    இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் 'டேட்டிங்' அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள்.

    எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை.

    தங்கள் இன பெண்களை 16லிருந்து 20 வயதிற்குள் தங்கள் இனத்திலேயே உள்ள ஆண் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட விரும்புகிறார்கள்.

    இதற்காக வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஸ்டாரா ஜகோரா (Stara Zagora) எனும் பகுதியில் அந்த பெண்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பெற்றோருடன் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தேர்வு செய்ய அங்கு அதே இனத்து ஆண்கள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர்.

    இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தவுடன் அப்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தை கேட்கின்ற சம்பிரதாயம் நடைபெறுகிறது.

    தங்கள் பெண்ணை மணமுடித்து கொடுப்பதற்கு ஈடாக அப்பெண்ணின் பெற்றோர் கேட்கும் தொகையை அவர்களிடம் அந்த இளைஞன் கொடுத்து திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இதற்கென இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்வில் சிறு வயதிலிருந்தே சேமிக்க தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணப்பெண்ணின் தோற்றம், உருவம், மணமகனின் வளமை போன்ற அம்சங்களை பொறுத்து பெண்ணின் பெற்றோர் பெறும் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அனேக பெண்கள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு கூட பெற்றோர் விடுவதில்லை.

    "ஜிப்சி பிரைட் மார்கெட்" என வட்டார மொழியில் அழைக்கப்படும் இந்த பழக்கத்தை குறித்தும், அம்மக்களின் வாழ்வை குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    • கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.
    • தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெரு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் வயது 27 சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி வயது 22 என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏ.ஜி சர்ச்சில் திருமணம் நடைபெற்றது, திருமணத்தின் போது 80 சவரன் நகை போட்டதாக கூறப்படுகிறது.

    கடந்த 3-ந்தேதி 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமானார்.

    இது தொடர்பாக தாம்பரம் போலீசில் விக்னேஷ் புகார் செய்தார். இந்நிலையில் ஆர்த்தி தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கணவர் விக்னேஷ் உடன் வாழ பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுப்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள நல்லாம்பட்டியை சேர்ந்தவர் கூடலிங்கம். இவரது மனைவி மஞ்சு (வயது20). இவர்களுக்கு 2 மாதத்திற்கு முன்பு திருமணமானது.

    கணவர் வேலைக்கு சென்ற பின்னர் அருகில் உள்ள மாமனார் வீட்டிற்கு மஞ்சு செல்வார். சம்பவத்தன்று மஞ்சு நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.

    இதுகுறித்து மஞ்சு தனது மாமனாரிடம் கூறியுள்ளார். மா மனார் சுந்தரலிங்கத்திடம் தட்டி கேட்டார். அப்போது சுந்தரலிங்கம் அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் மாமனார் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே விவகாரத்தில் கூடலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் முத்து, முருகன், முத்து முனி யாண்டி ஆகியோர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக சுந்தரலிங்கம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு மணப்பெண் வந்தார்.
    • இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள அளவாக்கோட்டையில் அண்ணாமலை சொக்க லிங்கம் என்ற தேவநாத னுக்கும், ஐஸ்வர்யா என்ற கல்யாணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மணமக்கள் மாலை கீழச்சிவல்பட்டி வந்தனர்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான பி.அழகா புரிக்கு, பழமை மாறாத பாரம்பரிய முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டியில், மின் னொளி அலங்காரத்தில், லாந்தர் விளக்குடன் மண மகள் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்றார். கீழச்சிவல்பட்டி யின் முக்கிய வீதிகளை கடந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தரிசனம் புறப் பட்டனர். பி.அழகாபுரி வந்த மணமக்களுக்கு உற் றார் உறவினர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர். இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    • ராஜபாளையத்தில் புதுப்பெண் கணவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
    • மோட்டார் சைக்கிள் கேட்டு துன்புறுத்தியதால் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள வத்திராயிருப்பு சத்திரம் தெருவை சேர்ந்த வர் பொன்னன். இவரது மகள் லட்சுமி (வயது 24).

    இவருக்கும் ராஜபாளை யம் தெற்கு தேவதானம் கீழ மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் சிவநேசன் என்பவருக்கும் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சனை யாக கொடுக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக சிவநேசன் தனக்கு மோட்டார் சைக்கிள் பெற்றோர் வீட்டில் இருந்து வாங்கி வரும்படி லட்சுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோரின் குடும்ப சூழ்நிலையால் ேமாட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என லட்சுமி மறுத்து விட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது குறித்து சம்பவத்தன்று லட்சுமி தனது தந்தை பொன்னையா விடம் செல்போனில் கூறி யுள்ளார். அப்போது அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் லட்சுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இந்த நிலையில் சேத்தூர் போலீசில் பொன்னன் புகார் அளித்துள்ளார். அதில் எனது மகள் லட்சமி சாவில் மர்மம் இருக்கிறது. எனவே இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்கு பதிவு செய்து லட்சமி வரதட்சணை பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்

    • திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அனிதா முடிவு செய்தார்.
    • திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி அனிதா தெரிவித்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்தவர் செல்வராஜ். காய்கறி வியாபாரியான இவருக்கு இசக்கிராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இதனிடையே மூத்த மகளான அனிதாவுக்கும் கட்டாலங்குறிச்சியை சேர்ந்த யோசேப்பு மகன் சாமுவேல் கில்டன் என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. பி.ஏ. தமிழ்த்துறை 3-ம் ஆண்டு படித்து வந்த அனிதா தேர்வை எதிர்நோக்கி இருந்தார். திருமண நாளான 25-ந்தேதி (நேற்று) அவருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஏனென்றால் அதே நாளில் தான் அவருக்கான கல்லூரி தேர்வும் நடப்பதாக இருந்தது. படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனிதா முந்தைய தேர்வுகளில் எல்லாம் முதலிடத்தை பிடித்து வந்துள்ளார். திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

    இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்த போதிலும், தனது எண்ணம் ஈடேறுமா என்று தவித்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்ட மணமகன் உடனடியாக அனிதாவின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் இவர்கள் இருவருக்கும் காயல்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு மணமக்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு சென்றனர். குறித்த நேரத்தில் அனிதா தேர்வை எழுதினார். அவரை கல்லூரியின் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    • இரண்டு ஆண்டுகள் காதலித்து வந்துள்ளதால் தைரியமாக மணப்பெண் காத்திருந்தார்
    • மணமகன் திருமண ஆடை அணியாமல் தாலி கட்டினார்

    உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த இருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் திடீரென திருமண நாள் அன்று மணமகன் திருமணம் நடக்கும் இடத்தில் இருந்து ஓடிவிட்டார்.

    இதனால், மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இரண்டரை ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்ய இருந்த மணமகள் கவலைப்படாமல் மணமகனுக்காக காத்திருந்தார்.

    நேரம் செல்ல செல்ல அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போன் செய்து, எங்கு இருக்கிறார்?, திருமணத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும் நிலையில் எங்கு சென்றாய்? என்று கேட்டுள்ளார்.

    திருமணத்திற்கு எனது தாயாரை அழைத்து வர சென்றுள்ளேன் என மணமகன் சமாளித்துள்ளார். ஆனால், மணமகள் அதை நம்பாமல், மணமகனை உறவினர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்துள்ளார். அப்போது பெரேலி நகரின் புறநகரில் உள்ள ஒரு பஸ் நிலையில் பேருந்தில் உட்கார்ந்து இருந்தது கண்டுபிடித்தனர். சுமார் 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் அந்த பேருந்து நிலையத்தில் இருந்து மணமகனை அழைத்து வந்தனர்.

    பின்னர், ஒரு கோவில் முன் வைத்து திருமணம் நடைபெற்றது. மணமகள் திருமண உடையில் இருந்தாலும், மணமகன் திருமண ஆடை அணியவில்லை.

    திருமணத்திற்கு வந்த நபர்கள், மணமகள் மனம் தளாராமல் ஓடிய மணமகனை பிடித்து திருமணம் செய்த தைரியத்தை வெகுவாக பாராட்டிச் சென்றனர்.

    மணமகனுக்கு சளி பிடித்துள்ளதாகவும், அதனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    • மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது.
    • ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    புனே :

    மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி இளைஞர்கள் பலர் திருமண வேடத்தில் குதிரையில் கம்பீரமாக ஊர்வலம் சென்றனர். பேண்டு வாத்தியங்கள் முழங்கியபடி, ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் சென்றனர்.

    இந்த ஆர்ப்பரிப்பை பார்த்த பலர், கலெக்டர் அலுவலகத்தில் ஏதோ கூட்டு திருமண விழா நடக்கப்போவதாக நினைத்துவிட்டனர். ஆனால் அவர்கள் நூதன போராட்டம் செய்தது பின்னர் தான் தெரியவந்தது.

    ஊர்வலகத்தின் போது திருமண உடையில் குதிரையில் மிடுக்காக சென்றாலும், கலெக்டர் அலுவலகம் சென்றதும் அவர்களது முகத்தில் கவலை தொற்றி கொண்டது. கலெக்டரை சந்தித்த அவர்கள், திருமண வயதை கடந்தும் தங்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும் தங்களுக்கு அரசே மணப்பெண்கள் பார்த்து தர வேண்டும் என்ற நூதன கோரிக்கை மனுவையும் அவரிடம் கொடுத்தனர்.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்த ஜோதி கிராந்தி பரிஷத் அமைப்பின் நிறுவன தலைவர் ரமேஷ் பரஸ்கர் கூறியதாவது:-

    எங்களது ஊர்வலத்தை பார்த்து மக்கள் கேலி செய்யலாம். ஆனால் கசப்பான உண்மை என்னவென்றால் மகாராஷ்டிராவில் ஆண்- பெண் விகிதம் கடுமையான வித்தியாசத்தில் உள்ளது. ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    இதனால் திருமண வயதை அடைந்த பிறகும் இளைஞர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பதில்லை. பெண் சிசுக்கொலைகள் தான் இந்த பாலின வித்தியாசத்துக்கு முக்கிய காரணம். இந்த ஏற்றத்தாழ்வுக்கு அரசே பொறுப்பு. கருவில் பாலினம் கண்டறியும் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்து அரசை வலியுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகாராஷ்டிராவில் தற்போது பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 889 பெண்கள் என்ற அடிப்படையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மணமகள் டிராக்டர் ஓட்டி வந்த காட்சி மத்திய பிரதேசத்தில் சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
    வட மாநிலங்களில் சமீப காலமாக திருமண நிகழ்ச்சிக்கு வரும் மணமகள்கள் வித்தியாசமான முறையில் வருவது புதிய நாகரீகமாக மாறி உள்ளது.

    கடந்த மாதம் அரியானாவில் ஒரு மணமகள் குதிரையில் ஏறி திருமண மண்டபத்துக்கு வந்தார். அவர் கையில் வாளை ஏந்தியபடி சுழற்றி கொண்டு வந்தது திருமண விழாவுக்கு வந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

    அதேபோன்று வித்தியாசமான முறையில் பெண்கள் யோசித்து திருமண விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். நேற்று மத்திய பிரதேசத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

    அந்த மாநிலத்தின் பெதுல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மணமகள் வித்தியாசமான முறையில் மணமேடைக்கு வர ஆசைப்பட்டார். காரில் திருமண மண்டபத்திற்கு செல்லலாம் என்று அந்த பெண்ணின் பெற்றோர் சொன்னதை அவர் ஏற்கவில்லை.

    அதற்கு பதில் டிராக்டர் ஓட்டி கொண்டு திருமண மண்டபத்திற்கு வருவதற்கு அந்த பெண் விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து வாடகைக்கு டிராக்டர் கொண்டு வரப்பட்டது. அந்த பெண் மணமகளுக்கு உரிய அலங்காரம் அனைத்தையும் செய்த பிறகு கருப்பு கண்ணாடி அணிந்தபடி டிராக்டர் ஓட்டிக்கொண்டு திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    வழிநெடுக அவருக்கு அவரது உறவினர்கள் வரவேற்பு கொடுத்தனர். மணமகள் டிராக்டர் ஓட்டி வந்த காட்சி மத்திய பிரதேசத்தில் சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
    ×