search icon
என் மலர்tooltip icon
    • ரஷியா ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியா-உக்ரைன் இடையிலான அரசு ஆணையத்தின் முதல் கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது.
    • ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இங்கு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்துமத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மசூதியில் லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு அனுமதி அளித்திருந்தது. இதற்கிடையில் ஞானவாபி மசூதியை மேற்பார்வை செய்துவந்த இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

    இந்நிலையில், இஸ்லாமிய அமைப்புகளின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஞானவாபி மசூதியில் தடயவியல் சோதனையை ஒத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையை கடந்தது.
    • மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மியான்மரில் பலியானோர் எண்ணிக்கை 100 -ஐ தாண்டியது.

    நெய்பியிடாவ்:

    வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.

    இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதேபோல், மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர், உள்ளூர்காரர்கள் 24 பேர், வங்காள தேசத்தைச் சேர்ந்த 117 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
    • ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.

    ஆங்கிலத்தில் 13 பேரும், கணிதத்தில் 17 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

    இயற்பியலில் 440 பேரும், வேதியியல் 107 பேரும், உயிரியல் 65 பேரும், தாவரவியல் 15 பேரும், விலங்கியல் 34 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    • தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
    • 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

    11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.

    தேர்வு எழுதிய 7,76,844 பேரில் 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    • கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்க உள்ளார்.
    • துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்கிறார் என காங்கிரஸ் தெரிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

    தேர்தலில் வெற்றி பெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

    கடந்த 5 நாளாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

    இதற்கிடையே, சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பினர். அதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    தனக்கு ஆதரவளித்துள்ள எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார். அப்போது டி.கே.சிவகுமார் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்
    • அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 186 ரன்களை குவித்துள்ளது.

    ஐதராபாத்:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 11 ரன்னிலும், ராகுல் திரிபாதி 15 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய கேப்டன் மார்கிராமுடன் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிராம் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    பொறுப்புடன் ஆடிய கிளாசன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் ஹாரி புரூக் 27 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது.

    இதையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.

    • தொ.மு.ச. பேரவை பொன்விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
    • அப்போது பேசிய அவர், தொழிலாளர்களுக்கும், எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது என்றார்.

    சென்னை:

    தொழிலாளர் முன்னேற்றச் சங்க பேரவையின் பொன்விழா மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    நமது போக்குவரத்து தொழிற்சங்கங்களை சர்வதேச தொழிற்சங்கங்களும் பாராட்டியுள்ளன.

    தொழிலாளர் அணியுடன் எனக்கு எப்போதும் நட்பு கலந்த மோதல் உண்டு. மோதல் என்பதை ஊடல் என்று சொல்லலாம்.

    தொழிலாளர்களுக்கும், எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது. உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க. என தெரிவித்தார்.

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    சென்னை:

    சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குமரேசன், சுந்தர்ராஜ் மற்றும் அய்யம்மாள் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருளாயி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

    உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இருளாயிக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • மேற்கு வங்கத்தில் இப்படத்தை திரையிட மாநில அரசு தடை விதித்தது.

    கொல்கத்தா:

    விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

    இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்துவந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர்.

    இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம் ஓடவில்லை.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

    இதற்கிடையே, இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இது மாநில அரசின் தோல்வி அல்லது வெற்றி என்ற கோணத்தில் எதிர்க்கட்சியினர் சித்தரிக்க முயலவேண்டாம். தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதன் மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் எதிர்க்கட்சியினர் எங்களை குற்றம் சொல்லாதீர்கள் என தெரிவித்துள்ளது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியி செர்பிய வீரர் ஜோகோவிச், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் முதல் செட்டை ரூனே வென்றார். இதற்கு பதிலடியாக ஜோகோவிச் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரூனே வென்றார்.

    இறுதியில், ரூனே 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    முன்னணி வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து இத்தாலியன் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையா பதவியேற்க உள்ளார்.
    • பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    சென்னை:

    கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

    தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது.

    கடந்த 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூரில் 20-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

    இதற்கிடையே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்கிறார்.

    ×