search icon
என் மலர்tooltip icon

    மியான்மர்

    • அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி, கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார்.
    • ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது.

    நேபிடாவ்:

    தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி வந்தவர் ஆங் சான் சூகி. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அவர் கடந்த 2020-ம் ஆண்டு பொதுதேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார். இருப்பினும் கிளர்ச்சியாளர்களால் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. இதனிடையே ஆங் சான் சூகிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் புத்தாண்டை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் உள்பட 3300 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
    • தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நேபிடோவ்:

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார்.

    இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மியான்மர் நாட்டில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது.

    யாங்கூன்:

    மியான்மர் நாட்டில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது என ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
    • ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

    மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் சில பகுதிகளை போராளி குழுக்கள் கைப்பற்றியது. மேலும் தாக்குதலில் வீரர்களும் உயிரிழந்தனர்.

    போராளி குழுக்களுடன் மோதலில் மியான்மர் ராணுவம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மியான்மரில் முதல் முறையாக ராணுவ சேவை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    முந்தைய ராணுவ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட 2010 மக்கள் ராணுவ சேவைச் சட்டத்தின் கீழ், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆயுதப் படைகளில் சேர்க்கப்படலாம். தேசிய அவசர காலங்களில் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.

    இதுகுறித்து ராணுவ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறும்போது: "மியான்மரின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தை செயல்படுத்துவது எதிரிகளுக்கு வலிமையைக் காட்டுவதன் மூலம் போரைத் தடுக்க உதவும்.

    தேசப் பாதுகாப்பு என்பது சிப்பாயின் பொறுப்பு மட்டுமல்ல. இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களின் பொறுப்பாகும். தேசிய பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. அதனால் மக்கள் ராணுவ சேவை சட்டத்தின் கீழ் அனைவரும் பெருமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கூற விரும்புகிறேன்" என்றார்.

    2021-ம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் ராணுவத்தில் இருந்து 14 ஆயிரம் வீரர்கள் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2023 முதல் ஆயுதமேந்திய பூர்வ குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் போர் நடக்கிறது
    • தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது

    இந்தியாவின் அண்டையில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு மியான்மர் (முன்னர் பர்மா). இதன் தலைநகரம் நேபிடா (Naypyidaw).

    2021 பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் உள்நாட்டு புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றியது.

    இதை தொடர்ந்து ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வர கோரும் உள்நாட்டு அமைப்புகளுக்கும் ராணுவத்திற்கும் போர் நடைபெற்று வருகிறது.

    கடந்த 2023 அக்டோபர் முதல் ஆயுதமேந்திய அந்நாட்டு பூர்வ குடிமக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் போரில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

    மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    மியான்மரில் உள்ள ராக்கைன் (Rakhine) மாநிலத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    பல வருடங்களாக மியான்மருக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை (Ministry of External Affairs), ராக்கைன் மாநிலத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    ராக்கைன் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் உள்நாட்டு பிரச்சனையால், அங்கு இந்தியர்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு ஏற்படலாம். மேலும் அங்கு தகவல் மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் ராக்கைன் மாநிலத்திற்கு பயணிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த மாநிலத்தில் தற்போது உள்ள இந்தியர்கள் அனைவரையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

    இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வன்முறை அதிகரித்ததால், கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியுறவு துறை இது குறித்து கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • நெய்பிடாவில் இருந்து 90 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம்.
    • நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

    மியான்மரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6.29 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேபோல், நெய்பிடாவில் இருந்து 90 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை.

    • தன்னாட்சி கோரி 1960களில் இருந்தே போராட்டங்கள் நடைபெறுகின்றன
    • தாக்குதலில் 11 குழந்தைகளும் உயிரிழந்தனர்; 56 பேர் காயமடைந்தனர்

    கடந்த 2021ல் மியான்மரில் நடைபெற்ற ராணுவ புரட்சியின் விளைவாக அந்நாட்டில் ஆட்சியில் இருந்து வந்த ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கி எறியப்பட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது.

    மியான்மரில் தன்னாட்சி கோரி பல வருடங்களாக போராடி வரும் அமைப்பு, கசின் சுதந்திர குழு (Kachin Independence Organization). இது மியான்மர் (முன்னர் பர்மா) அரசை எதிர்த்து 1960களில் இருந்தே போராடி வருகிறது. போராடங்கள் 2011க்கு பிறகு தீவிரமடைந்துள்ளன.

    இந்நிலையில், வடகிழக்கு மியான்மரில் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள லைசா (Laiza) நகருக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கான மோங் லாய் கெட் (Mong Lai Khet) முகாம் பகுதியில் வெடி குண்டு தாக்குதல்கள் நிகழ்ந்தது. இத்தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 30 பேர் கொல்லப்பட்டனர்; 56 பேர் காயமடந்தனர். காயமடைந்தவர்களில் 44 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என கசின் சுதந்திர குழு அறிவித்துள்ளது. கசின் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சுதந்திர குழுவிற்கு அளித்து வரும் ஆதரவை விரும்பாத மியான்மர் ராணுவம் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவதாக இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    "இத்தாக்குதல் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான ஒரு போர் குற்றம்", என முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

    இத்தாக்குதலின் பின்னணியில் ராணுவம் இருப்பதை திட்டவட்டமாக மறுத்த ஆட்சியில் இருக்கும் "ஜன்தா" ராணுவ அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜா மின் டுன் (Zaw Min Tun), "அப்பகுதியில் ராணுவத்தினருக்கு எந்த செயல்பாடும் எப்போதும் இருந்ததில்லை. போராடும் அமைப்பினர் வெடிப்பொருட்களை தேக்கி வைத்ததால் அதில் விபத்து ஏற்பட்டு இது நிகழ்ந்திருக்கலாம்," என தெரிவித்தார்.

    இந்த நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகளின் சபை தனது ஆழ்ந்த கவலையையும், இரங்கலையும் தெரிவித்துள்ளது.

    • சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கனிமத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    யாங்கூன்:

    மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக லாபம் கிடைக்கும் இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மழைக் காலங்களில் வழக்கமாக சுரங்கத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்படும்.

    ஆனால் நிலச்சரிவில் சிக்கியவர்கள், ஜேட் கனிமத்தை தேடி வந்த உள்ளூர்வாசிகள் என்று தெரியவந்துள்ளது. அண்டை நாடான சீனாவில் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து இங்கு வந்து ஜேட் கணிமத்தை எடுக்கும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    ஒழுங்குப்படுத்தப்படாத இந்த சுரங்கப் பணியில் ஆண்டுதோறும் ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது.

    இந்த நிலையில் கச்சின் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கனிமத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. மீட்பு படையினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியானார்கள். மேலும் 14 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். அங்கு பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    • கடந்த 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை
    • வீடுகளில் முதல் தளங்கள் வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் தத்தளிப்பு

    மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கமானதுதான். இருந்தாலும், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை காரணமாக பலர் வெளியேறிய நிலையில், வெள்ளத்தில் அளவு அதிகரிக்க மீட்புப்படையினர் வீட்டில் இருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.

    இரண்டு மாடி கொண்டு கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.

    கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

    • மலேசியா நோக்கிச் சென்ற படகில் சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்தனர்.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வங்காளதேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில் இருந்து தப்பித்து ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியா மற்றும் இந்தோனேசியாவை அடைய முயற்சிக்கின்றனர்.

    அந்த வகையில், மலேசியா நோக்கிச் சென்ற படகில் சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்தனர். இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி இதுவரை 17 சடலங்களை மீட்டுள்ளதாகவும், எட்டு பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

    இவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
    • தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 749 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    நோபிடாவ்:

    தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் ஆங் சான் சூகி (வயது 78). அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் கடந்த 2020-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஆனால் தேர்தலில் மோசடி செய்ததாக கூறி அடுத்த ஆண்டே இவரது பதவி பறிபோனது. இதனால் அங்கு மீண்டும் ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது. மேலும் 2½ ஆண்டுகளுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ஆங் சான் சூகி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது தொடர்பாக பல வழக்குகள் அந்த நாட்டின் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவற்றுள் சில வழக்குகளில் அவருக்கு இதுவரை 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    புத்த சமயத்தை பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் புத்தர் முதன் முதலாக போதனை செய்த தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கு சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.

    அந்தவகையில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 749 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பலரது மரண தண்டனை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி முன்னாள் தலைவரான ஆங் சான் சூகியின் சிறை தண்டனையையும் தற்போது 27 ஆண்டுகளாக குறைத்து ராணுவ கவுன்சிலின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அங்கு விதிக்கப்பட்டு இருந்த அவசர நிலையும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டது.

    • தேர்தலை தள்ளி வைத்ததற்கு நாட்டில் நடைபெறும் வன்முறையை ராணுவம் காரணமாக தெரிவித்துள்ளது.
    • நாட்டின் சில மாநிலங்களில் தொடர்ந்து நடக்கும் சண்டைக்கு மத்தியில் தேர்தல் நடத்த முடியாது.

    மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பொது தேர்தல் நடத்தப்படும் என்று ராணுவம் உறுதியளித்தது.

    இந்த நிலையில் மியான்மரில் அவசர நிலை நீட்டிக்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது. 4-வது முறையாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தலை நடத்துவதற்கும், அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் போதுமான பாதுகாப்பு இன்னும் தேவைப்படுவதால் அவசர கால சட்டத்திற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    தேர்தலை தள்ளி வைத்ததற்கு நாட்டில் நடைபெறும் வன்முறையை ராணுவம் காரணமாக தெரிவித்துள்ளது. ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹவேயிங் கூறும்போது, நாட்டின் சில மாநிலங்களில் தொடர்ந்து நடக்கும் சண்டைக்கு மத்தியில் தேர்தல் நடத்த முடியாது. வரவிருக்கும் தேர்தல்களை அவசரமாக நடத்தக் கூடாது என்பதால் எங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.

    மியான்மரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய போது ஒரு வருடத்துக்கு பிறகு தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தது. அதன்பின் 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் மீண்டும் தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×