என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.
    • இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

    இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்தது எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.

    உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.

    மும்பை மேற்கு குர்லா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் ஷோரூமை இன்று மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்து வைத்தார். இந்த ஷோரூமின் ஒருமாத வாடகை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஷோரூமில் டெஸ்லா மாடல் Y கார்கள் 59.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

    • விமானத்தின் வலது இறக்கையின் நுனிப் பகுதி சேதமடைந்தது.
    • மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து பயணிகளை டெல்லிக்கு அனுப்பியது.

    மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில், அகாசா ஏர் விமானம் மீது சரக்கு லாரி மோதியதில், விமானத்தின் வலது இறக்கையின் நுனிப் பகுதி சேதமடைந்தது.

    திங்கள்கிழமை அதிகாலை 7:05 மணிக்கு மும்பையில் இருந்து டெல்லி செல்லவிருந்த QP1410 என்ற விமானம் ஓடுதளத்தில்  நிறுத்தப்பட்டிருந்தபோது, சரக்கு கன்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    விபத்துக்குள்ளான விமானம் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அகாசா ஏர், மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து பயணிகளை டெல்லிக்கு அனுப்பியது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணிகளால் திருமண முரண்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
    • ஒரு தம்பதியினரிடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகள் அவர்களின் முழு வாழ்க்கையையும் கெடுக்கின்றன.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் போடப்பட்டுள்ள வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    நீதிபதிகள் நிதின் சம்ப்ரே மற்றும் எம்.எம். நெர்லிகர் கொண்ட நாக்பூர் அமர்வு முன், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த நபரின் முன்னாள் மனைவியின் தரப்பில், நாங்கள் இருவரும் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளோம். அதனால் வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

    அப்போது நீதிபதிகள் "பலர் மீது வழக்குகள் பதிவு செய்யும் சமீபத்திய போக்கைக் கருத்தில் கொண்டு, கணவர் தரப்பில் இருந்து திருமண தகராறுகளை வேறு கோணத்தில் பார்ப்பது கட்டாயமாகிவிட்டது.

    இரு தரப்பினரும் தங்களது பிரச்சினைகளை இணக்கமாக தீர்த்துக் கொண்டு, அமைதியான வாழ விரும்பினால், நீதிமன்றத்தில் வேலை அதை ஊக்குவிப்பதுதான். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணிகளால் திருமண முரண்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    ஒரு தம்பதியினரிடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகள் அவர்களின் முழு வாழ்க்கையையும் கெடுக்கின்றன. மேலும் இந்துக்கள் புனிதமாகக் கருதும் திருமணம் ஆபத்தில் உள்ளது. திருமணங்கள் என்பது வெறும் சமூக ஒப்பந்தம் மட்டுமல்ல, இரண்டு ஆன்மாக்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆன்மீக சங்கமாகும்.

    திருமண உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல சட்டங்களை இயற்றப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அடிக்கடி அவற்றை தவறாகப் பயன்படுத்துவதால் மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல், முடிவில்லா மோதல்கள், நிதி இழப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மீளமுடியாத தீங்கு ஏற்படுகிறது" என்றனர்.

    • கல்லூரி மாணவன் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளார்.
    • படுகாயமடைந்த கல்லூரி மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மகாராஷ்டிராவின் சடாரா மாவட்டத்தில் ரீல்ஸ் மோகத்தில் காரை தாறுமாறாக ஓட்டி ஸ்டண்ட் செய்த கல்லூரி மாணவன் சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் காருடன் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆனால் 300 அடி பள்ளத்தில் விழுந்த மாணவன் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • 2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது
    • சஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.

    மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் ஒரு தனியார் அறையில் பணம் நிறைந்த புகைபிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    2019-24 சட்டமன்றத் தேர்தலுக்கு இடையில் அவரது சொத்துக்கள் கணிசமாக அதிகரித்துள்ளது தொடர்பாக விளக்கம் நேற்று வருமான வரித் துறை சமீபத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு வெளியிடப்பட்ட மறுநாளே இந்த வீடியோ வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    அவுரங்காபாத் (மேற்கு) தொகுதி எமில்ஏவும் பாஜக கூட்டணி அரசின் அமைச்சருமான சஞ்சய் ஷிர்சாத், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவைச் சேர்ந்தவர்.

    இந்த வீடியோவை உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

    ஆனால் வீடியோவில் காணப்படும் சூட்கேசில் பணம் இல்லை என்றும், அது துணிகளை வைப்பதற்கான பை என்றும் சஞ்சய் ஷிர்சாத் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

    சிலர் வருமான வரித்துறையில் தனக்கு எதிராக புகார் அளித்ததாகவும், இதன் காரணமாக தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கிடையேசஞ்சய் ஷிர்சத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே கோரியுள்ளார்.

    • தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி.
    • மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கலந்து கொண்டார்.

    அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி குறித்த புத்தகத்தை வெளியீட்டு மோகன்பகவத் பேசியதாவது:-

    தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி. அவசர நிலைக்கு பிந்தைய அரசியல் குழப்பத்தின் போது முடிவுகளை சரியாக கணித்தவர். அவரது இயல்பு மிகவும் நகைச்சுவையானது. மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார்.

    தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மோகன் பகவத்தின் இந்த பேச்சு விவாதங்களுக்கு களம் அமைத்துள்ளது. எதிர்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க தூண்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    பிரதமர் மோடிக்கு இப்போது 74 வயது ஆகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் கூறுகையில், எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த்சிங் போன்ற தலைவர்களை 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்ப்போம் என கூறினார். 

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர்.
    • சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போக்சோ, மானபங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தானே மாவட்டம் சகாப்பூர் பகுதியில் ஆர்.எஸ். தமானி என்ற தனியார் பள்ளி உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக கூறப்படுகிறது. கழிவறையை ரத்தக்கறையாக்கிய மாணவியை கண்டறிய பள்ளி ஆசிரியைகள் விசித்திர செயலை அரங்கேற்றினர். அதன்படி மாதவிடாய் இருப்பதாகக் கூறிய மாணவிகளின் இடது கை ரேகையை பதிவு செய்தனர். அதே நேரத்தில் மாதவிடாய் இல்லை எனக்கூறிய மாணவிகளை கழிவறைக்கு அழைத்து சென்று நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு திரும்பியதும் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர். பள்ளியில் அரங்கேறிய இந்த கொடூர சம்பவத்தை கேட்டு கொந்தளித்த பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளியின் முதல்வர், பெண் ஊழியர், ஆசிரியைகள் 4 பேர் உள்பட 8 பேர் மீது போக்சோ, மானபங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தானே தனியார் பள்ளியில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்திய விவகாரத்தில் போலீசார், பள்ளி முதல்வர் மாதுரி கெய்க்வாட் மற்றும் பெண் ஊழியர் நந்தாவை அதிரடியாக கைது செய்தனர். இதேபோல மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி முதல்வர் உத்தரவின் பேரில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு தானே மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

    இதற்கிடையே இந்த பிரச்சினை நேற்று மகாராஷ்டிரா சட்டசபையிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோலே, முற்போக்கான மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்கக்கூடாது என கவலை தெரிவித்தார்.

    தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத், மாணவிகளுக்கு எதிராக கொடூரம் நடந்த பள்ளியின் முதல்வர் ஒரு பெண் என வேதனை தெரிவித்தார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோதி கெய்க்வாட் தனியார் பள்ளி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையடுத்து பதிலளித்து பேசிய மந்திரி கிரிஷ் மகாஜன், ''தானே தனியார் பள்ளி விவகாரத்தில் ஏற்கனவே போலீசாா் நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.

    • குழந்தையை இந்த சண்டையில் கருவியாக்க கூடாது என்றும் நீதிபதி ஜோஷி வலியுறுத்தினார்.
    • ஒரு மைனர் குழந்தையை, குறிப்பாக முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, இரத்த பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது.

    மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்ற வெறும் சந்தேகத்தின் பேரில், மைனர் குழந்தைக்கு DNA சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், 2013 இல் பிரிந்தபோது, மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருந்தார்.

    கணவர் தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கூறி விவாகரத்து கோரினார். ஆனால், விவாகரத்து மனுவில் அவர் குழந்தையின் தந்தை இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. இந்த நிலையில், குழந்தைக்கு DNA சோதனை கோரிய கணவரின் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

    மைனர் குழந்தைக்கு DNA சோதனைக்கு உத்தரவிட்ட குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி ஆர்.எம். ஜோஷி உத்தரவிட்டார்.

    இத்தகைய மரபணு பரிசோதனைகள் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

    கள்ளத்தொடர்பு காரணமாக விவாகரத்து கோர ஒருவருக்கு உரிமை உள்ளது என்பதாலேயே, DNA சோதனைக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த அவர், மனைவி மீது கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டு இருந்தால், அதை DNA சோதனை மூலம் அல்லாமல், வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கலாம் என்று தெரிவித்தார்.

    குழந்தையை இந்த சண்டையில் கருவியாக்க கூடாது என்றும் நீதிபதி ஜோஷி வலியுறுத்தினார். ஒரு மைனர் குழந்தையை, குறிப்பாக முடிவெடுக்கும் திறன் இல்லாதபோது, இரத்த பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவர் மேற்கோள் காட்டினார். 

    • ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம்
    • இதற்கு மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளித்து, அலோபதி மருந்துகளை பரிந்துரை செய்யலாம் என்ற மகாராஷ்டிர அரசின் அறிவிப்புக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் (IMA) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிரா மருத்துவ கவுன்சில் ஜூன் 30 அன்று வெளியிட்ட அறிவிப்பில் ஹோமியோபதி மருத்துவர்கள் நவீன மருத்துவத்தில் பயிற்சி பெறுவதற்காக நவீன மருந்தியலில் சான்றிதழ் படிப்பை (CCMP) படிக்க மாநில மருத்துவக் கல்வி மற்றும் மருந்துகள் துறை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .

    அதாவது ஹோமியோபதி மருத்துவர்கள் 6 மாத மருந்தியல் படிப்பை படித்தால் அலோபதி சிகிச்சை அளிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மகாராஷ்டிர அரசியல் தலைவர்கள், பல ஹோமியோபதி மருத்துவக் கல்லூரிகளை நடத்தி வருகிறார்கள், அவர்களின் அழுத்தத்தால் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று இந்திய மருத்துவர்கள் சங்க தலைவர் சந்தோஷ் தெரிவித்தார்.

    • PUCL மற்றும் APCR நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
    • ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளன.

    மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள போட் மற்றும் பிராங்குட் கிராமங்களில், வகுப்புவாத அச்சுறுத்தல்கள் மற்றும் சமூக-பொருளாதார புறக்கணிப்புகள் காரணமாக முஸ்லிம் குடும்பங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இவர்களில் பலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசிப்பவர்கள். கிராமங்களைச் சேர்ந்த இந்துத்துவா அடிப்படைவாதிகள், இவர்களை பூர்வீகமற்ற முஸ்லிம்கள் என்று கூறி புறக்கணிப்பை நியாயப்படுத்துகின்றனர்.

    மனித உரிமை அமைப்புகளான PUCL மற்றும் APCR நடத்திய உண்மை கண்டறியும் விசாரணையில், அச்சமான சூழல், வணிகங்கள் மூடல், சீர்குலைந்த வாழ்க்கை மற்றும் குடும்ப இடம்பெயர்வுகள் கண்டறியப்பட்டன.

    மே 2 அன்று, பாட் கிராமத்தில் பாஜக மற்றும் பிற வலதுசாரி அமைப்புகள், அம்மன் சிலையை அவமதித்ததாக முஸ்லிம்களைக் குற்றம் சாட்டி பேரணிகள் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பூர்வீகமற்ற முஸ்லிம்களைப் புறக்கணிக்கக் கோரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

    PUCL இது தொடர்பாக புனே கிராமப்புற காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது. சுவரொட்டிகள் அகற்றப்பட்டாலும், பேக்கரிகள், சலூன்கள் போன்ற முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகள் மூடப்பட்டே கிடக்கின்றன. காவல்துறையிடம் புகார் அளித்தும் வணிகங்களைத் திறக்க எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்று முஸ்லிம்கள் தெரிவித்தனர்.

    ஒரு பேக்கரி உரிமையாளர், தனது குடும்பம் 40 ஆண்டுகளாக வசித்தாலும், உத்தரப்பிரதேசத்தில் தங்கள் பூர்வீகம் என்பதால் வெளியாட்கள் என்று முத்திரை குத்தப்படுவதாகக் கூறினார். மூடப்பட்ட பல முஸ்லிம் பேக்கரிகள் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துள்ளன.

    இந்து ராஷ்டிர சேனா உறுப்பினர் தனஞ்சய் தேசாய், முஸ்லிம் வணிகர்களை கடைகளை விட்டு வெளியேறும்படி மிரட்டி வருவதாகக் கூறப்படுகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு பழைய இரும்பு கடைக்கு தீ வைக்கப்பட்டதில் ரூ. 20 லட்சம் இழப்பு ஏற்பட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. மத இடங்களும் இலக்காகின. முஸ்லிம்களின் நடமாட்டம் வாட்ஸ்அப் குழுக்களால் கண்காணிக்கப்பட்டது.

    பலர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கள் பூர்வீக கிராமங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காங்கிரஸ் தாலுகா தலைவர் அசோக் மாத்ரே, ஆர்எஸ்எஸ், சிவ் பிரதிஷ்டான் மற்றும் இந்து ராஷ்டிர சேனா போன்ற குழுக்கள் இந்து கிராமவாசிகளின் மனதைக் கெடுத்துள்ளதாகக் கூறினார்.

    பொருளாதார புறக்கணிப்புகளை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று PUCL கண்டித்துள்ளது. சிவில் உரிமைக் குழுக்கள் இந்த மீறல்களை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன. 

    • குடிபோதையில் காரை பெண் மீது இடித்து விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
    • காரைவிட்டு இறங்கும்போது அரை நிர்வாணமாக இருந்தது தெரிய வந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (MNS) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பை முன்னெடுத்தார். இதனால் மகாராஷ்டிரா அரசு மும்மொழிக்கொள்ளை திட்டத்தை திரும்பப் பெற்றது.

    இதற்காக ராஜ் தாக்கரே வெற்றி விழா நடத்தினார். மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் எம்.என்.எஸ். கட்சித் தலைவரின் மகன் குடிபோதையில், அரை நிர்வாணமாக மராத்தி பெண்ணிடம் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜாவித் ஷேக்கின் மகன் ரஹில் ஷேக். இவர் கடுபோதையில், மேலாடை இல்லாமல் கார் ஓட்டி வந்துள்ளார். கார் ஒரு பெண்ணின் மீது மோத, காரில் இருநது இருந்து இறங்கிய ரஹில் ஷேக் நடந்து கொண்ட விதம் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது.

    இச்சம்பவம் குறித்த வீடியோவை அந்த பெண் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதை ரீ-போஸ்ட் செய்த சிவசேனா தலைவர் சஞ்சய் நிருபம், எம்என்எஸ் கட்சியை மிகவும் சாடியுள்ளார். மராத்தி கலாச்சாரத்தை பாதுகாப்பும் எனக் கூறும் அவர்களுடைய உண்மையான முகம் இதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

    • பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
    • மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.

    மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின்கீழ் , மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை 3-வது கட்டாய மொழியாக மாற்ற அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.

    தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நவநிர்மாண் சேனா மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இணைந்து மும்பையில் நேற்று வெற்றி பேரணி நடத்தினர்.

    மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.

    இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே மராத்தி மொழியை திணிக்க மராட்டியர் யாராவது முயற்சி செய்துள்ளார்களா?

    தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் இந்தியை திணிக்க  முயற்சி செய்து பாருங்கள்!. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் எங்களை கட்டாயப்படுத்தினால், எங்கள் சக்தியைக் நாங்கள் காட்டுவோம்" என்று தெரிவித்தார். 

    ×