என் மலர்
இந்தியா

இந்துக்கள் புனிதமாக கருதும் திருமணம் ஆபத்தில் உள்ளது: வரதட்சணை வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் கருத்து..!
- இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணிகளால் திருமண முரண்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
- ஒரு தம்பதியினரிடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகள் அவர்களின் முழு வாழ்க்கையையும் கெடுக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் போடப்பட்டுள்ள வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் நிதின் சம்ப்ரே மற்றும் எம்.எம். நெர்லிகர் கொண்ட நாக்பூர் அமர்வு முன், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த நபரின் முன்னாள் மனைவியின் தரப்பில், நாங்கள் இருவரும் பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளோம். அதனால் வரதட்சணை கொடுமை வழக்கை ரத்து செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் "பலர் மீது வழக்குகள் பதிவு செய்யும் சமீபத்திய போக்கைக் கருத்தில் கொண்டு, கணவர் தரப்பில் இருந்து திருமண தகராறுகளை வேறு கோணத்தில் பார்ப்பது கட்டாயமாகிவிட்டது.
இரு தரப்பினரும் தங்களது பிரச்சினைகளை இணக்கமாக தீர்த்துக் கொண்டு, அமைதியான வாழ விரும்பினால், நீதிமன்றத்தில் வேலை அதை ஊக்குவிப்பதுதான். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு காரணிகளால் திருமண முரண்பாடுகள் சமூகத்தில் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஒரு தம்பதியினரிடையே ஏற்படும் சிறிய பிரச்சினைகள் அவர்களின் முழு வாழ்க்கையையும் கெடுக்கின்றன. மேலும் இந்துக்கள் புனிதமாகக் கருதும் திருமணம் ஆபத்தில் உள்ளது. திருமணங்கள் என்பது வெறும் சமூக ஒப்பந்தம் மட்டுமல்ல, இரண்டு ஆன்மாக்களை ஒன்றிணைக்கும் ஒரு ஆன்மீக சங்கமாகும்.
திருமண உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல சட்டங்களை இயற்றப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அடிக்கடி அவற்றை தவறாகப் பயன்படுத்துவதால் மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல், முடிவில்லா மோதல்கள், நிதி இழப்பு மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மீளமுடியாத தீங்கு ஏற்படுகிறது" என்றனர்.






