search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பாவம் செய்து விட்டோம் என மனம் வருந்தி நோன்பு இருக்கிறார்கள்.
    • எப்போதும் இறைவனோடு நடப்பவர்களுக்கு நோன்பு என்பது அவசியமற்றது.

    யோவானின் சீடர்கள் இயேசுவிடம் வந்து ஒரு கேள்வியைக் கேட்கின்றனர். `நாங்களும், பரிசேயர்களும் அதிகமாய் நோன்பு இருக்க, உமது சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை' என்பதே அந்தக் கேள்வி. இயேசுவின் வழியை ஆயத்தம் செய்ய வந்தவர் யோவான்.

    ஆனால் அவருடைய சீடர்கள் இன்னும் பரிசேயர்களின் வழிகளை அளவுகோலாய் வைத்தே நடக்கின்றனர். இயேசு அவர்களுடைய கேள்விக்கு இன்னொரு கேள்வியை பதிலாகக் கொடுக்கிறார்.

    'மணமகன் தங்களோடு இருக்கும் வரை அவருடைய தோழர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?' என கேட்கிறார் இயேசு. யூதர்களுடைய திருமணம் ஒரு கோலாகலமான திருவிழாவைப் போல நடக்கும். மணமகனும், மணமகளும் திருமணம் முடிந்தவுடன் ஹனிமூனுக்காக ஓடிப்போவதில்லை. ஒரு வார காலம் வீட்டிலேயே தங்கியிருப்பார்கள். மணமகனுடைய நெருங்கிய நண்பர்கள் கூடவே இருப்பார்கள்.

    ஏழை மக்களுக்கும், எளிய மனிதர்களுக்கும் அத்தகைய நிகழ்வுகள் அத்திப்பூத்தார் போல் நடக்கின்ற அதிசயச் செயல்கள். அந்த நாட்களில் மகிழ்வாக உண்டு, குடித்து, ஆடிப்பாடி அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

    நோன்பு என்பது உள்ளத்தில் துயரம் எழும்போது வருகின்ற ஒரு நிகழ்வாக பல பழங்காலக் குறிப்புகள் சொல்கின்றன. ஏதேனும் ஒரு பெரிய பாவத்தைச் செய்து விட்டால் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கவும், இனிமேல் அத்தகைய பாவத்தைச் செய்ய மாட்டேன் என உறுதியெடுக்கவும் மக்கள் நோன்பு இருந்தார்கள்.

    பழைய ஏற்பாட்டில் யோசேப்புவை சகோதரர்கள் விற்று விடுகின்ற நிகழ்ச்சியை நாம் அறிவோம். அந்த பாவத்தில் பங்கு பெற்றதற்காக ரூபன் மிகவும் மனம் வருந்துகிறார். அந்த துயரம் அவரை ஏழு ஆண்டுகள் நோன்பு இருக்க வைக்கிறது.

    இந்த ஏழு ஆண்டுகளும் அவர் எந்த இன்பத்தையும் அனுபவிக்கவில்லை, குடிக்கவில்லை, மாமிசம் உண்ணவில்லை. கடுமையான நோன்பு இருந்து வருந்தினார் என்கிறது ரூபனின் ஏற்பாடு என்கின்ற புற நூல் ஒன்று.

    இறைவனின் பார்வை தங்களை நோக்கி நீள வேண்டும் என்பதற்காகவே பெரும்பாலான நோன்புகள் பண்டைய காலங்களில் நிகழ்ந்தன. விவிலியம் முழுவதும் அதற்கான பல குறிப்புகள் உள்ளன.

    பென்யமின் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் தங்களுக்கு வெற்றி வேண்டுமென அழுது புலம்பிய இஸ்ரேல் மக்கள், பெத்தேலுக்கு வந்து உண்ணா நோன்பு இருந்தார்கள் என்கிறது நீதித் தலைவர்கள் நூல்.

    வேற்று தெய்வங்களை வழிபட்டு வந்த இஸ்ரேல் மக்கள், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்து விட்டோம் என மனம் வருந்தி நோன்பு இருக்கிறார்கள்.

    நோன்பு என்பது இறைவனின் கடைக்கண் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதற்காக நடப்பது. தங்களுடைய இதயத்தின் துயரமும், வேண்டுதலும் உண்மையானது என்பதை நிரூபிக்க நடப்பது. இறைவனே தங்களோடு இருக்கும்போது அது அவசியமற்றது தானே? என்பதே இயேசுவின் கேள்வி சொன்ன ஒரு மறைமுக பதில்.

    அதே நேரம் இயேசு நோன்பு தேவையில்லை என சொல்லவில்லை. தனது முடிவு சிலுவை என்பதையும் அவர் அறிந்திருந்தார். எனவே அவர் சொல்கிறார், `மணமகன் விடைபெறும் காலம் வரும். அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள். காரணம், அது துயரத்தின் காலம். அது பிரிவின் காலம். இறைவன் இல்லை என கலங்கும் காலம்'.

    இயேசுவின் காலத்தில் பரிசேயர்கள் நோன்பை வெளி அடையாளமாகத் தான் செய்து வந்தார்கள். அவர்கள் இறைவனின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்பதை விட, மனிதர்களின் பார்வை தங்கள் மீது திரும்ப வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள்.

    அவர்கள் திங்கட்கிழமைகளையும், வியாழக்கிழமைகளையும் நோன்புக்காக தேர்ந்தெடுப்பார்கள். அது தான் சந்தை கூடும் காலம், கூட்டம் வரும் காலம். அந்த நாட்களில் குளிக்காமல், நல்ல ஆடை அணியாமல், கலைந்த தலையோடு, சோர்ந்த முகத்தோடு கடை வீதிகளில் உலவுவார்கள். சிலர் முகத்தை வெளிறியதாய்க் காட்டும் முகப்பூச்சுகளையும் அணிவதுண்டு.

    அப்போது அவர்களைப் பார்க்கும் மக்கள், 'அடடா.. எவ்ளோ பெரிய ஆன்மிக வாதி' என புகழ்ந்து பேசுவார்கள். அதுவே அவர்களுடைய நோக்கம். அதைக்கண்டிக்கும் விதமாகத் தான் இயேசு 'நோன்பு இருப்பதை மறைவாகச் செய்யவேண்டும்' என்றார்.

    இறைவன் நம்மோடு இருப்பது கொண்டாட்டத்தின் காலம். அவர் நம் இதயத்தில் இருப்பது மகிழ்வின் காலம். ஒருவேளை நாம் பாவம் செய்து அவரை விலக்கி வைத்தால் அந்த நேரத்தில் நாம் நோன்பு இருப்பது அவசியமாகிறது. எப்போதும் இறைவனோடு கூடவே நடப்பவர்களுக்கு நோன்பு என்பது அவசியமற்றதாகி விடுகிறது.

    • அன்னை ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்தாலும், அவளது உதட்டில் புன்னகை.
    • உடல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பூமாதேவியின் மகனாக பிறந்த நரகாசுரன், பிராக்ஜோதிஷாபுரம் என்ற இடத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தான். அந்த ஊர் தற்போதைய அசாம் மாநிலத்தின் தலைநகராக விளங்கும் கவுகாத்தி ஆகும். அவன் மக்களை துன்புறுத்தி வந்ததைத் தொடர்ந்து, துவாபர யுகத்தில் கிருஷ்ண பகவான் தன் மனைவி சத்யபாமாவுடன், நரகாசுரன் இருப்பிடம் சென்று அவனை அழித்து மக்களை காத்தார். அவன் அழிந்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுவதாக புராணம் சொல்கிறது. கவுகாத்தியில் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.

    பிற்காலத்தில் வடநாட்டில் வெற்றி கண்ட சோழமன்னன், அங்கே கங்கை, பிரம்மபுத்திரா உள்பட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் எடுத்துக்கொண்டு தன் சேனைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது தீபாவளி அன்று பிராக்ஜோதிஷாபுரம் சென்று, அங்குள்ள ஆலயத்தில் வழிபாடு நடத்தினான். கிருஷ்ணரை மனமாற வேண்டிக்கொண்டு தனது படைகளுடன் மீண்டும் தன் தலைநகருக்கு திரும்பிக் கொண்டிருந்தான்.

    வழியில் நெய்தவாயல் என்ற பகுதியில் ஒரு மணற்பாங்கான நிலப்பரப்பில் வந்து கொண்டிருந்தபோது, சோழ மன்னனின் படைகளில் உள்ளவர்களுக்கு பெரும் களைப்பு ஏற்பட்டது. அப்போது அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. "மன்னா.. நீங்கள் தற்போது செல்லும் பகுதி மிகவும் ஆபத்தானது. களைப்புடன் காணப்படும் உங்கள் படை வீரர்களும், குதிரைகளும் பலியாக வாய்ப்பு உள்ளது" என்றது அந்தக் குரல்.

    இதைக்கேட்டு செய்வதறியாது திகைத்து நின்றான் மன்னன். அப்போது அங்கே ஒரு பெண் வந்தாள். அவள் "கவுகாத்தி வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு வந்துள்ள நீங்கள், புனித நீரை கொண்டு வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தப் பகுதியில் கோவில் ஒன்றை அமைத்து, புனித தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கி புனித நீரை தெளித்துச் சென்றால், உங்களுடைய பயணம் பாதிப்பின்றி அமையும். மேலும் நீங்கள் ஆட்சி செய்யும் பகுதி மேலும் சிறப்படையும்" என்று தெரிவித்து விட்டு, மறைந்தாள்.

    இதையடுத்து நெய்தவாயல் என்ற அந்த பகுதியில் ஒரு பெரிய குளத்தை தன் படை வீரர்களை கொண்டு வெட்டினான், சோழ மன்னன்.

    அந்த பணி நடந்து கொண்டிருந்த நேரத்தில் மன்னனின் கனவில், கவுகாத்தியில் தரினம் செய்த அம்மன் தோன்றினாள். எனவே அங்கே அமைத்த ஆலயத்தில் அம்மன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்கு `கவுகாத்தி அம்மன்' என்று பெயரிட்டு வழிபாடு செய்தான்.

    அசாம் மாநில பிராக்ஜோதிஷாபுரம் கோவிலில் உள்ள கவுகாத்தி அம்மன் வடிவிலேயே இங்குள்ள அம்மனும் அருள்பாலிக்கிறார். இந்த அன்னையின் வலது பக்க கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கதாயுதம், அபய ஹஸ்த முத்திரை தாங்கியும், இடது பக்க கரங்களில் சங்கில் திரிசூலம், செந்தாமரை மலர் உள்ளிட்டவற்றுடன் எட்டு கரங்களைக் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

     இந்த அன்னை ஆக்ரோஷமான தோற்றத்தில் இருந்தாலும், அவளது உதட்டில் உள்ள புன்னகை, இந்த அம்பாளை சாந்த சொரூபிணியாகவும் காட்டுகிறது.

    சோழ மன்னனால் 16 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஊருணியாக அமைக்கப்பட்ட தீர்த்தம், இவ்வாலய தீர்த்தமாக விளங்குகிறது.

    என்றும் வற்றாத சுத்தமான, சுவையான நீருடன் தாமரை மலர்களால் நிரம்பிய புஷ்கரணியாக இது உள்ளது. விரதம் இருந்து இந்த புஷ்பகரணியில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால், தீவினைகள் அகலும். உடல் ஆரோக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இவ்வாலயத்தில் ஆடி மாத திருவிழா, பவுர்ணமி பூஜை, ஞாயிறு, வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நினைத்த காரியத்தை நிறைவேற்றித் தரும் அம்மனாக, இந்த கவுகாத்தி அம்மன் இருக்கிறார்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ளது, நெய்தவாயல் கிராமம். சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்கள் மீஞ்சூரில் நிற்கும். இங்கு இறங்கி, அங்கிருந்து அரசு பஸ் அல்லது ஆட்டோக்கள் மூலமாக 3 கிலோமீட்டர் தூரம் உள்ள நெய்தவாயலை அடையலாம்.

    • அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முன்னதாக 13-ந் தேதி மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் நடப்பட்டது.

    தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி நேற்று பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியை வலம்வந்தனர்.

     தீர்த்தவாரி

    பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரவு 11 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நாளை காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

    சென்னை:

    சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கான சித்திரைமாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாளில் தர்மாதி பீடத்தில் அருள்பாலிப்பதுடன், புன்னைமர வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 5.15 மணிக்கு கருடசேவை நடக்கிறது.

    வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரிய பிரபை, சந்திர பிரபை, தொடர்ந்து வருகிற 27-ந்தேதி நாச்சியார் திருக்கோலத்தில் பல்லக்கு சேவையும் நடைபெறுகிறது. 6-ம் நாள் திருவிழாவான வருகிற 28-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் வடம் பிடிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ஏகாலியர் மரபிலே தோன்றிய சிவத் தொண்டர் தான் திருக்குறிப்புத் தொண்டர்.
    • சிவனடியார்களின், குறிப்பறிந்து தொண்டாற்றும் ஆற்றல்மிக்கவர்.

    மாதேவியார், முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து சிவபெருமானை வழிபட்ட பெருமைமிக்க காஞ்சி என்னும் திருத்தலத்திலே ஏகாலியர் மரபிலே தோன்றிய சிவத் தொண்டர் தான் திருக்குறிப்புத் தொண்டர். சிவனடியார்களின், குறிப்பறிந்து தொண்டாற்றும் ஆற்றல் மிக்கவர் ஆகையால் இவர் இச்சிறப்புப்பெயர் பெற்றார்.

    அடியார் ஆடையின் மாசுகழப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசுகழியும் என்ற தத்துவத்தை உணர்ந்த இப்பெரியார், தொண்டர்களின் துணிகளைதுவைத்துக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். அடியார்களின் பக்தியையும்,புகழையும், அன்பையும் உலகறியச் செய்யும் இறைவன் திருக்குறிப்புத்தொண்டரின் பெருமையையும் உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார்.

    ஒருநாள் இறைவன் கந்தல் உடுத்துக்கொண்டு மேனியிலே திருநீறு விளங்க,திருக்குறிப்புத் தொண்டர் இல்லத்திற்கு எழுந்தருளினார்.

    அப்பொழுதுகுளிர்காலம்! குளிரினால் நடுங்கிக் கொண்டே வந்தார் எம்பெருமான்! அடியாரின் வருகையைக் கண்ட தொண்டர் விரைந்து சென்று அடியாரின் அடிபணிந்து அவரை வரவேற்று அமரச் செய்தார்.

    மெலி்ந்த உடல், திருவெண்ணீற்று பிரகாசம், அழுக்கடைந்த கந்தல் துணி இவற்றைக் கண்டு மனம் வருந்தினார் திருக்குறிப்புத்தொண்டர். அடியாரைநோக்கி, ஐயனே! தங்கள் திருமேனி சொல்ல முடியாத அளவிற்கு இளைத்திருப்பதற்கு யாது காரணமோ? என்று வினவினார் இறைவன் குறுநகைபுரிந்தார்.

    அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாத திருக்குறிப்புத்தொண்டர் தேவரீர் எம் இல்லத்திலே எழுந்தருளியது எமது பாக்கியம் தான்.

    மேலும் எனக்குப் புண்ணியம் தரக்கூடியது அடியாரின் ஆடையைச் சுத்தம் செய்துதருவதற்கு எமக்கு ஐயன் இடும் கட்டளைதான். அதனால் தங்கள் ஆடையை என்னிடம் தாருங்கள். தங்கள் மேனியில் உள்ள திருநீறு போல் சுத்தமாக வெளுத்துத்தருகிறேன் என்று பணிவோடு கேட்டார்.

    அன்பின் அமுதமொழி கேட்டு சிவனார்பெரும் அதிர்ச்சி அடைந்தவர் போல் பாவனை செய்தார். ஐயையோ! இக்கந்தலை உம்மிடம் கொடுத்துவிட்டு யாம் என்ன செய்வது? தாங்க முடியாத இந்தக் குளிர் காலத்தில் இத்துணியையும் வெளுப்பதற்காக உம்மிடம் கொடுத்துவிட்டால் என் பாடு திண்டாட்டம் தான் என்றார்.

    திருக்குறிப்புத்தொண்டர் முகத்தில் வேதனை படர்ந்தது! தொண்டர் கவலையும், கலக்கமும்மேலிட மீண்டும் தேவரீர் அங்ஙனம் இயம்பலாகாது என்றார். சங்கரர் சற்றுநேரம் சிந்திப்பவர் போல் பாவனை செய்தார். மாலை மயங்குவதற்குள் துவைத்து சுத்தமாக உலர்த்தி எம்மிடம் சேர்ப்பிக்க வேண்டும்.

    அந்தி நீங்குவதற்குள் தங்கள் துணியை சுத்தமாக வெளுத்துக்கொண்டு வந்து தருகிறேன். அப்படி என்றால் நன்று! ஏனென்றால் இது குளிர் காலம். எம்மால் குளிரைச் சற்று கூட பொறுக்க முடியாது. தொண்டரை சோதிக்க வந்த அம்பலவாணர், கந்தல் துணியைக் கொடுத்தார். அவரும் கந்தலைக் கண்களில் ஒற்றிக்கொண்டு நீர்த்துறை நோக்கி களிப்போடு புறப்பட்டார்.

    நீர்த்துறையை அடைந்த தொண்டர், ஆடையைத் துவைக்கத் தொடங்கினார். இறைவர் வருணனுக்கு கட்டளையிட்டார். உடனே வருண பகவான் பூலோகத்திற்கு புறப்பட்டார். அனல்சூழ்ந்த வானம், திடீரென்று கார் மேகங்களால் மூழ்கியது! எங்கும் கும்மிருட்டு கவ்விக் கொண்டது.

    தொண்டரின் இதயத்திலும் இருள் சூழ்ந்தது. கண் கலங்கினார். மழை பயங்கரமாக பெய்யத் தொடங்கியது. இடியும் மின்னலும் ஒன்றொடொன்று கலந்து பயங்கரமாக மாறியது. பேய் மழை அடிக்கத்தொடங்கியது. தொண்டரோ செய்வதறியாது திகைத்தார்.

    மழை நின்றுவிடும் என்று எண்ணி ஏமாந்தார். மழை நின்றபாடில்லை. பொழுது மட்டும் போய்க்கொண்டே இருந்தது. கங்கையை பெருக்க விட்டவன் இப்பொழுது வருணனை பெருகவிட்டான். அடியார் இடி சாய்ந்த மரம் போல் நிலை தளர்ந்தார்.

    அவர் உடல் மழையாலோ அன்றிக் குளிராலோ நடுங்கவில்லை; அடியார் மீதுகொண்டுள்ள பக்தியாலும், பாசத்தால் ஏற்பட்டுள்ள பயத்தாலும் நடுங்கியது. அவரது கண்களில் நீர் மல்கியது. மனம் துடிதுடித்துப் புலம்பினார். ஐயோ! ஏழை நான் என் செய்வேன்? தொண்டருக்குச் செய்யும் திருப்பணியில் இப்படியொரு பேரிடி வீழ்ந்து விட்டதே!

    மழை ஆரம்பித்தபோது வீட்டிற்குச்சென்று காற்றாட உலர்த்தியிருந்தால் கூட இந்நேரம் உலர்ந்திருக்குமோ! அவ்வாறு செய்யாமல் மழை நின்றுவிடும், நின்றுவிடும் என்று காலந் தாழ்த்திஇப்பொழுது ஈரத்துணியோடு நிற்கிறேன்! என் அய்யனுக்கு என்ன பதில்கூறுவேன்?

    பாவம் அவர் இந்நேரம் குளிரால் நடுநடுங்கிக் கொண்டிருப்பாரே! தள்ளாத வயதில் அப்பெரியவருக்கு இந்த அளவிற்கு பொல்லாத கொடுமையை செய்த பாவியாகி விட்டேனே! வெளுத்துத் தருகிறேன் என்று வீரம் பேசிய நான், வெறும் வீணாகி விட்டேனே!

    அடியார்க்குத் துரோகியாக மாறிய பின்னும் இந்தப்பாவி உயிரை வைத்துக் கொண்டு உலகில் வாழ்வதா? ஆகாது, ஆகவே திருக்குறிப்புத்தொண்டர், துணி துவைக்கும் கருங்கல்லை நோக்கினார்.

    தம் தலையைப் பாறையில் மோதி உடைத்துக் கொள்ளப் போனார். அதற்குமேல் அன்புத் தொண்டனை சோதனை செய்து புண்படுத்த விரும்பவில்லை எம்பெருமான்! தொண்டரைக் காக்க திருவுள்ளம் பற்றினார்.

    நாயனார் தலை, கல்லில் மோதி சிதையுறுவதற்குள் எம்பெருமானின் மலர்க்கை பாறையினின்றும் வெளிப்பட்டு அவரது சிரத்தைத் தாங்கிக் காத்தது. அருட்கரம் ஒன்று தம் தலையைத் தடுத்தது கண்டு திருக்குறிப்புத் தொண்டர் திகைத்தார். அப்பொழுது வானத்திலே பேரொளி பிறந்தது. உமையாளுடன் விடையின் மீது காட்சியளித்தார் சிவபெருமான்.

    திருக்குறிப்புத் தொண்டர் கீழே விழுந்து எழுந்து அரனாரை வணங்கினார். எம்பெருமான், அடியவரைத் திருமுகம் மலர நோக்கி, மூன்று உலகத்திற்கும் உம்முடைய பெருமையையும், புகழையும் வெளிப்படுத்தினோம். இனிமேல் கயிலைக்கு வந்து எம்முடனே இருப்பீராக என்று பேரருள்பாலித்தார்.

    திருக்குறிப்புத்தொண்ட நாயனார் பல காலம் உலகில் வாழ்ந்து, திருத்தொண்டுகள் பல செய்தார். இறுதியில் இறைவன் மலரடி அணைந்து மகிழும் பேரின்பத்தைப் பெற்றார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.

    திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் குருபூஜை சித்திரை மாதம் சுவாதிநட்சத்திரத்தில் அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.

    • திருவள்ளூர் வீரராகவர் கண்ணாடி பல்லக்கில் பவனி.
    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, சித்திரை 11 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை முழுவதும்.

    நட்சத்திரம்: சுவாதி நள்ளிரவு 12.48 மணி வரை. பிறகு விசாகம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவையாறு ஸ்ரீசிவ பெருமான் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. வீரபாண்டி ஸ்ரீசவுமாரியம்மன் பவனி. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவர் கண்ணாடி பல்லக்கில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. திருகுறிப்பு தொண்டர் நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராமர் சுவாமி திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-பண்பு

    கடகம்-நட்பு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-வெற்றி

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- முயற்சி

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-பெருமை

    மீனம்-பொறுமை

    • பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர்.
    • இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த 21-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நள்ளிரவு முதல் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருகை தந்து தானிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா? மது மற்றும் போதை பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.

    பக்தர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விரைந்து சென்றனர். இன்று சித்ரா பவுர்ணமி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். மொட்டை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். சித்ரா பவுர்ணமியையொட்டி வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தானிப்பாறைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • பன்னிரு திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் என்பதால் இது தேவாரம்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப்பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத் தையும் பார்க்கலாம்.

    பாடல்

    தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

    ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

    விளக்கம்

    திருஞானசம்பந்தர் ஒரு காதினில் தோட்டினையும், மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்த பெருமான், காளையை தனது வாகனமாகக் கொண்டும், தன்னிடம் சரணடைந்த பிறை சந்திரனை தனது சடையில் ஏற்ற வண்ணமும், சுடுகாட்டு சாம்பலை, தனது உடல் முழுவதும் பூசியபடி இருக்கிறார். அவர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்வனாக விளங்குகிறார்.

    அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மன், முன்பொரு நாளில் தன்னை பூஜித்து வணங்கியதன் காரணமாக, அவருக்கு படைப்புத் தொழிலை சரியாகச் செய்யும் வகையில் அருள்புரிந்தவர், சிவ தொறு பெருமான். இவரே பெருமை உடையதும், பிரமாபுரம் என்று அழைக் கப்படுவதுமான சீர்காழி நகரினில் உறைந்து அருள் செய்யும் எனது மதிப்புக்குரிய தலைவன் ஆவார்.

    • நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
    • இன்று காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் அந்த தேர் வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று 2-வது நாள் தேரோட்டம் நடந்தது. காலை 10 மணி அளவில் மீண்டும் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்குரத வீதி, கடைவீதி வழியாக மதியம் 2 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறிய தேர் வடம் பிடித்து நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைகிறது. இரவு 10 மணிக்கு வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) பரிவேட்டையும், 25-ந்தேதி தெப்பத்தேர் விழாவும், 26-ந்தேதி நடராஜ பெருமாள் மகா தரிசனம் நடக்கிறது. 27-ந்தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது.

    • நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.
    • அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.

    அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி சென்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது. பாதுகாப்புக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    • 24-ந் தேதி காஞ்சி சித்திரகுப்தர் திருக்கல்யாணம்.
    • 27-ந் தேதி சங்கடஹர சதுர்த்தி.

    23-ந் தேதி (செவ்வாய்)

    * சித்ரா பவுர்ணமி.

    * மதுரை கள்ளழகர் மாலை மாற்றி வைகை ஆற்றில் எழுந்தருளல்.

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி விடையாற்று உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    24-ந் தேதி (புதன்)

    * மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் பவனி.

    * காஞ்சி சித்திரகுப்தர் திருக்கல்யாணம்.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதி உலா.

    * சமநோக்கு நாள்.

    25-ந் தேதி (வியாழன்)

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி நவநீத சேவை, தெப்ப உற்சவம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    26-ந் தேதி (வெள்ளி)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் சூரிய பிரபையில் பவனி.

    * ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    27-ந் தேதி (சனி)

    * சங்கடகர சதுர்த்தி.

    * சென்னை கேசவப் பெருமாள், நாச்சியார் திருக்கோலம், இரவு தங்கப் பல்லக்கில் பவனி.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    28-ந் தேதி (ஞாயிறு)

    * சென்னை கேசவப் பெருமாள் இரவு யானை வாகனத்தில் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், இரவு புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு.

    * வீரபாண்டி கவுமாரி அம்மன் பவனி.

    கீழ்நோக்கு நாள்.

    29-ந் தேதி (திங்கள்)

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், சென்னை கேசவப் பெருமாள் கோவில்களில் ரத உற்சவம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவைகுண்டம் வைகுண்டபதி ஆலயங்களில் சுவாமி திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ் வாருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    • சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்திரகுப்தன்.
    • `குப்தன்’ என்றால் `கணக்கன்’ என்று பொருள்.

    ஒரு சமயம் கயிலாயத்தில் பார்வதியும், பரமேஸ்வரனும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது அவர்களை தரிசிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும், 41 ஆயிரம் மகரிஷிகளும் மற்றும் தபோவனர்களும் தேடி வந்தனர். பரமேஸ்வரன் 'பூலோகத்தில் உள்ள மானிடர்களின் பாவ - புண்ணிய கணக்குகளை எழுத ஒருவரை நியமிக்க வேண்டும்' என எண்ணினார். தற்போது 'நமக்கு இருக்கும் இரு புத்திரர்களுக்கும் (விநாயகர், முருகன்), அநேகமான பொறுப்புகள் இருப்பதால், புதியதாக ஒருவர் அதையெல்லாம் கவனிப்பது நல்லது' என நினைத்தார்.

    அப்பொழுது பார்வதி தங்கக் தகட்டில் வரைந்த அழகான சித்திரத்துடன் வந்தாள். அந்த சித்திரத்தைக் கண்ட பரமேஸ்வரன் அதிசயித்தார்.

    பரமேஸ்வரன் பார்வை பட்டதும், அந்தச் சித்திரம் உயிர் பெற்று எழுந்தது. சகல தேவர்களும் ஆச்சரியப்பட, உயிர் பெற்று வந்தவரிடம் `பாவ - புண்ணிய கணக்குகளை கயிலை மலையில் அமர்ந்து எழுது' என சிவபெருமான் உத்தரவிட்டார். சித்திரத்தில் இருந்து பிறந்ததால் இவரை 'சித்திரகுப்தன்' என அழைத்தனர்.

    'குப்தன்' என்றால் `கணக்கன்' என்று பொருள். அதே நேரத்தில் தேவேந்திரனும், இந்திராணியும், ஈசனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அதற்கான தவத்தை மேற்கொண்டிருந்தனர். இப்படி அவர்கள் தவம் இயற்றுவதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதை இங்கே பார்ப்போம்..

    ஒரு சமயம் தேவேந்திரன் பூமியில் புண்ணிய தலத்தை நோக்கி தீர்த்த யாத்திரை வந்தார். அப்போது வழியில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்தைக் கண்டார். அங்கு பேரழகுடன் இருந்த அவரது மனைவியான ரிஷி பத்தினி அகலிகையை கண்டார். அகலிகையை அடைய எண்ணி மறுநாள் காலையில் கோழி உருவெடுத்து சூரியன் உதிக்கும் முன் வந்து கூவினார். கவுதமர், பிரம்ம முகூர்த்தம் தொடங்கி விட்டதாக எண்ணி (சூரியன் உதிக்கப் போகிறான்) கங்கையில் நீராட கிளம்பினார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இந்திரன், கவுதமர் போல் வேடம் அணிந்து அகலிகையை அடைய ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

    அதே நேரத்தில் கவுதமர் கங்கையை நோக்கி செல்கையில், அநேக கொடிகளில் பூக்கள் அரும்பாகவே இருப்பதைக் கண்டார். பூக்கள் இன்னும் பூக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் பொழுது விடியவில்லை என திரும்பி வந்தார். கவுதமர் வருவதை அறிந்த இந்திரன் பூனையாக மாறி வெளியே ஓட எண்ணினான். ஆனால் கவுதமர், இந்திரனை மடக்கி "நீ எதற்காக இங்கு வந்தாய்?" என்றார்.

    அதற்கு பதிலளித்த இந்திரன், "இந்த வருட பஞ்சாங்க பலன் கேட்க வந்தேன்" என்றான். ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்த கவுதமர், "நீ எதை எண்ணி காமம் கொண்டு இங்கு வந்தாயோ, அதே உனக்கு உண்டாகும். உன் உடல் முழுக்க ஆயிரம் யோனிகள் உண்டாகும்" என சபித்தார்.

    பின் அகலிகையின் பக்கம் திரும்பிய கவுதமர், "இந்திரன் என்பதை நீ அறியாமல் இருந்தாய். எனவே நீ கல்லாய் போவாய்" என சபித்தார். அதற்கு அகலிகை "நீங்கள் எவ்வளவு பெரிய மகரிஷி. நீங்கள் இவ்வாறு சொல்லலாமா? இதில் எனது தவறு ஒன்றும் இல்லை" எனக் கூறினாள்.

    (இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனியுங்கள். ரேணுகாதேவி ஜலத்தில் தெரிந்த கந்தர்வனின் உருவத்தை கண்ணால் கண்டு மனதால் விரும்பினாள். அதற்காக அவள் கற்பிழந்ததாக தலை வெட்டப்பட்டாள். ஆனால் அறியாமல் தன்னை இழந்த அகலிகை, மீண்டும் சாபத்தில் இருந்து விடுபட்டு கற்புக்கரசி என கொண்டாடப்பட்டாள். அந்த காலத்தில் கற்புக்கு வைத்துள்ள அளவுகோல் சரீரத்தை சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது என தெரிந்து கொள்ள வேண்டும்)

    உடனே கவுதமர், அகலிகையை நோக்கி "ராமாவதாரத்தில் ராமபிரானின் திருவடி, கல்லாயிருக்கும் உன்மேல் பட்டவுடன் உனக்கு சாப விமோசனம் ஏற்பட்டு, மீண்டும் என்னை வந்து அடைவாய்" என்று கூறினார். அப்போது இந்திரனும் கவுதமரின் திருவடியை வணங்கி, தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். "நீ பரமேஸ்வரனை குறித்து கயிலாயத்தில் தவம் செய். உனது ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறும்" என்று கூறி அருளினார்.

    அதே நேரத்தில் அகலிகை சிறிதும் கோபம் குறையாமல் "பெண்ணின் சாபம் பொல்லாதது. நீ தேவேந்திரனாக இருந்தாலும் கூட பத்தினி சாபம் உன்னை விடாது. பட்ட மரம் பூத்தாலும் பூக்கும், காய்க்காத மரமும் காய்க்கும். ஆனால் உனக்கு புத்திர பாக்கியம் ஏற்படாது" என சபித்தாள்.

    அடுத்து வந்த நாட்களில் இந்திரன், ஈசனை நினைத்து வழிபட்டதன் பலனாக, ஆயிரம் யோனிகளும், ஆயிரம் கண்களான மாறின.

    ஆனால் அகலிகை சபித்தது போல, இந்திரனுக்கு புத்திரப் பேறு மட்டும் கிடைக்கவில்லை. அந்த சாபம் நீங்கவே, இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான்.

    அப்போது பரமேஸ்வரன், காமதேனுவை அழைத்து "நீ என்னை தரிசனம் செய்து கொண்டிருந்தது போதும். நீ இப்போது தேவலோகம் செல்" என்றார். அதற்கு காமதேனு "சுவாமி உமது தரிசனத்தை விட்டு, நான் தேவலோகம் செல்ல வேண்டுமா?" என கேட்க, "நீ கவலைப்படாதே.. தேவலோகம் சென்று நீ ஒரு குழந்தையை ஈன்று கொடுத்துவிட்டு இங்கு வந்து விடலாம்" என்றார், சிவபெருமான்.

    அதன்படியே காமதேனு தேவலோகம் சென்றது. ஆனால் காமதேனுவுக்கும் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. இதனால் இந்திராணி மனம் கலங்கினாள். 'நமக்கு தான் குழந்தை பேறு இல்லை. காமதேனுவுக்கும் குழந்தை பாக்கியம் இல்லையே. பத்தினி சாபம் இப்படியா வதைக்கும்' என வருந்தினாள்.

    இதை அறிந்த பரமேஸ்வரன், சித்திரகுப்தனை நோக்கி "நீ காமதேனு கர்ப்பத்தை அடைந்து, அங்கு நீ புத்திரனாகப் பிறந்து தேவலோகத்தில் வசித்து வருவாய்" என கூறி அருளினார்.

    அவரது ஆணைக்கிணங்க, காமதேனு கர்ப்பத்தில் மூன்றே முக்கால் நாழிகை இருந்து, பின் கையில் எழுத்தாணி யுடன் பிறந்தார் சித்திரகுப்தன். தேவேந்திரன் ஒளி பொருந்திய சித்திரகுப்தனை வணங்கி, "நீ இங்கிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொள்" என்றார்.

    குறுகிய காலத்தில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்ற சித்திரகுப்தன், தேவேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி எமபுரியில் எமதர்மராஜனின் எமபட்டிணத்தில் கணக்கராக அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுத ஆரம்பித்தார்.

    சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தன் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கோ பூஜை

    செய்ய வேண்டும். காமதேனுவின் வயிற்றில்இருந்து சித்திரகுப்தன் பிறந்ததால், அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் பசும்பால், பசு நெய், பசுந்தயிர் ஆகியவற்றை உணவில் சேர்க்க மாட்டார்கள். உப்பில்லாத உணவுதான் உண்பார்கள். தரையில் சித்திரகுப்தன் உருவத்தை எழுதி (அவர் சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால்) வழிபாடு செய்வார்கள்.

    சித்திரகுப்தனுக்கு பலவித சித்ரான்னங்கள் படைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, பெண் சாபத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜாதக தோஷங்களும் விலகும்.

    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் (பவுர்ணமி) சித்தரகுப்தனுக்கு காலையில் விசேஷ பூஜையும், மாலையில் விமரிசையாக திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

    சித்திர குப்தன் அங்க பூஜை

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாமாவையும் சொல்லி பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    * பாபநாசநாய நம: பாதெள பூஜயாமி (கால்)

    * கமலவர்ணாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)

    * சித்ராயநம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)

    * சித்ரரூபாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)

    * நதாபீஷ்டதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)

    * வ்ருகோதராய நம: உதரம் பூஜயாமி (வயிறு)

    * ஓம் ப்ராக்ஞாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)

    * காலாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * பஹுரூபாய நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)

    * அந்தக ஸசிவாய நம: அதரம் பூஜயாமி (உதடு)

    * மத்யஸ்தாய நம: முகம் பூஜயாமி (முகம்)

    * கருணாநிதயே நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)

    * பத்ம நேத்ராய நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்)

    * நானாரூபாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)

    * லலிதாய நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * சித்ரகுப்தாய நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஸர்வேச் வராய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி

    ×