search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitra Poornami"

    • பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
    • சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.

    ஓசூர்:

    சித்ரா பவுர்ணமி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

    அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சிறப்பு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. இதில், மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை யாகசாலை குண்டத்தில் நிரப்பி பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு கேது பரிகார பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மன் வழிபாடு நடத்தினர்.

    • சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்திரகுப்தன்.
    • `குப்தன்’ என்றால் `கணக்கன்’ என்று பொருள்.

    ஒரு சமயம் கயிலாயத்தில் பார்வதியும், பரமேஸ்வரனும் அமர்ந்திருந்தனர். அப்பொழுது அவர்களை தரிசிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும், 41 ஆயிரம் மகரிஷிகளும் மற்றும் தபோவனர்களும் தேடி வந்தனர். பரமேஸ்வரன் 'பூலோகத்தில் உள்ள மானிடர்களின் பாவ - புண்ணிய கணக்குகளை எழுத ஒருவரை நியமிக்க வேண்டும்' என எண்ணினார். தற்போது 'நமக்கு இருக்கும் இரு புத்திரர்களுக்கும் (விநாயகர், முருகன்), அநேகமான பொறுப்புகள் இருப்பதால், புதியதாக ஒருவர் அதையெல்லாம் கவனிப்பது நல்லது' என நினைத்தார்.

    அப்பொழுது பார்வதி தங்கக் தகட்டில் வரைந்த அழகான சித்திரத்துடன் வந்தாள். அந்த சித்திரத்தைக் கண்ட பரமேஸ்வரன் அதிசயித்தார்.

    பரமேஸ்வரன் பார்வை பட்டதும், அந்தச் சித்திரம் உயிர் பெற்று எழுந்தது. சகல தேவர்களும் ஆச்சரியப்பட, உயிர் பெற்று வந்தவரிடம் `பாவ - புண்ணிய கணக்குகளை கயிலை மலையில் அமர்ந்து எழுது' என சிவபெருமான் உத்தரவிட்டார். சித்திரத்தில் இருந்து பிறந்ததால் இவரை 'சித்திரகுப்தன்' என அழைத்தனர்.

    'குப்தன்' என்றால் `கணக்கன்' என்று பொருள். அதே நேரத்தில் தேவேந்திரனும், இந்திராணியும், ஈசனை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அதற்கான தவத்தை மேற்கொண்டிருந்தனர். இப்படி அவர்கள் தவம் இயற்றுவதற்கும் ஒரு காரணம் இருந்தது. அதை இங்கே பார்ப்போம்..

    ஒரு சமயம் தேவேந்திரன் பூமியில் புண்ணிய தலத்தை நோக்கி தீர்த்த யாத்திரை வந்தார். அப்போது வழியில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்தைக் கண்டார். அங்கு பேரழகுடன் இருந்த அவரது மனைவியான ரிஷி பத்தினி அகலிகையை கண்டார். அகலிகையை அடைய எண்ணி மறுநாள் காலையில் கோழி உருவெடுத்து சூரியன் உதிக்கும் முன் வந்து கூவினார். கவுதமர், பிரம்ம முகூர்த்தம் தொடங்கி விட்டதாக எண்ணி (சூரியன் உதிக்கப் போகிறான்) கங்கையில் நீராட கிளம்பினார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இந்திரன், கவுதமர் போல் வேடம் அணிந்து அகலிகையை அடைய ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

    அதே நேரத்தில் கவுதமர் கங்கையை நோக்கி செல்கையில், அநேக கொடிகளில் பூக்கள் அரும்பாகவே இருப்பதைக் கண்டார். பூக்கள் இன்னும் பூக்க ஆரம்பிக்கவில்லை. அதனால் பொழுது விடியவில்லை என திரும்பி வந்தார். கவுதமர் வருவதை அறிந்த இந்திரன் பூனையாக மாறி வெளியே ஓட எண்ணினான். ஆனால் கவுதமர், இந்திரனை மடக்கி "நீ எதற்காக இங்கு வந்தாய்?" என்றார்.

    அதற்கு பதிலளித்த இந்திரன், "இந்த வருட பஞ்சாங்க பலன் கேட்க வந்தேன்" என்றான். ஞான திருஷ்டியால் அனைத்தையும் அறிந்த கவுதமர், "நீ எதை எண்ணி காமம் கொண்டு இங்கு வந்தாயோ, அதே உனக்கு உண்டாகும். உன் உடல் முழுக்க ஆயிரம் யோனிகள் உண்டாகும்" என சபித்தார்.

    பின் அகலிகையின் பக்கம் திரும்பிய கவுதமர், "இந்திரன் என்பதை நீ அறியாமல் இருந்தாய். எனவே நீ கல்லாய் போவாய்" என சபித்தார். அதற்கு அகலிகை "நீங்கள் எவ்வளவு பெரிய மகரிஷி. நீங்கள் இவ்வாறு சொல்லலாமா? இதில் எனது தவறு ஒன்றும் இல்லை" எனக் கூறினாள்.

    (இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனியுங்கள். ரேணுகாதேவி ஜலத்தில் தெரிந்த கந்தர்வனின் உருவத்தை கண்ணால் கண்டு மனதால் விரும்பினாள். அதற்காக அவள் கற்பிழந்ததாக தலை வெட்டப்பட்டாள். ஆனால் அறியாமல் தன்னை இழந்த அகலிகை, மீண்டும் சாபத்தில் இருந்து விடுபட்டு கற்புக்கரசி என கொண்டாடப்பட்டாள். அந்த காலத்தில் கற்புக்கு வைத்துள்ள அளவுகோல் சரீரத்தை சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது என தெரிந்து கொள்ள வேண்டும்)

    உடனே கவுதமர், அகலிகையை நோக்கி "ராமாவதாரத்தில் ராமபிரானின் திருவடி, கல்லாயிருக்கும் உன்மேல் பட்டவுடன் உனக்கு சாப விமோசனம் ஏற்பட்டு, மீண்டும் என்னை வந்து அடைவாய்" என்று கூறினார். அப்போது இந்திரனும் கவுதமரின் திருவடியை வணங்கி, தன் தவறை மன்னிக்கும்படி வேண்டினான். "நீ பரமேஸ்வரனை குறித்து கயிலாயத்தில் தவம் செய். உனது ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறும்" என்று கூறி அருளினார்.

    அதே நேரத்தில் அகலிகை சிறிதும் கோபம் குறையாமல் "பெண்ணின் சாபம் பொல்லாதது. நீ தேவேந்திரனாக இருந்தாலும் கூட பத்தினி சாபம் உன்னை விடாது. பட்ட மரம் பூத்தாலும் பூக்கும், காய்க்காத மரமும் காய்க்கும். ஆனால் உனக்கு புத்திர பாக்கியம் ஏற்படாது" என சபித்தாள்.

    அடுத்து வந்த நாட்களில் இந்திரன், ஈசனை நினைத்து வழிபட்டதன் பலனாக, ஆயிரம் யோனிகளும், ஆயிரம் கண்களான மாறின.

    ஆனால் அகலிகை சபித்தது போல, இந்திரனுக்கு புத்திரப் பேறு மட்டும் கிடைக்கவில்லை. அந்த சாபம் நீங்கவே, இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான்.

    அப்போது பரமேஸ்வரன், காமதேனுவை அழைத்து "நீ என்னை தரிசனம் செய்து கொண்டிருந்தது போதும். நீ இப்போது தேவலோகம் செல்" என்றார். அதற்கு காமதேனு "சுவாமி உமது தரிசனத்தை விட்டு, நான் தேவலோகம் செல்ல வேண்டுமா?" என கேட்க, "நீ கவலைப்படாதே.. தேவலோகம் சென்று நீ ஒரு குழந்தையை ஈன்று கொடுத்துவிட்டு இங்கு வந்து விடலாம்" என்றார், சிவபெருமான்.

    அதன்படியே காமதேனு தேவலோகம் சென்றது. ஆனால் காமதேனுவுக்கும் புத்திர பாக்கியம் ஏற்படவில்லை. இதனால் இந்திராணி மனம் கலங்கினாள். 'நமக்கு தான் குழந்தை பேறு இல்லை. காமதேனுவுக்கும் குழந்தை பாக்கியம் இல்லையே. பத்தினி சாபம் இப்படியா வதைக்கும்' என வருந்தினாள்.

    இதை அறிந்த பரமேஸ்வரன், சித்திரகுப்தனை நோக்கி "நீ காமதேனு கர்ப்பத்தை அடைந்து, அங்கு நீ புத்திரனாகப் பிறந்து தேவலோகத்தில் வசித்து வருவாய்" என கூறி அருளினார்.

    அவரது ஆணைக்கிணங்க, காமதேனு கர்ப்பத்தில் மூன்றே முக்கால் நாழிகை இருந்து, பின் கையில் எழுத்தாணி யுடன் பிறந்தார் சித்திரகுப்தன். தேவேந்திரன் ஒளி பொருந்திய சித்திரகுப்தனை வணங்கி, "நீ இங்கிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொள்" என்றார்.

    குறுகிய காலத்தில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்ற சித்திரகுப்தன், தேவேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்கி எமபுரியில் எமதர்மராஜனின் எமபட்டிணத்தில் கணக்கராக அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுத ஆரம்பித்தார்.

    சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தன் பிறந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து கோ பூஜை

    செய்ய வேண்டும். காமதேனுவின் வயிற்றில்இருந்து சித்திரகுப்தன் பிறந்ததால், அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் பசும்பால், பசு நெய், பசுந்தயிர் ஆகியவற்றை உணவில் சேர்க்க மாட்டார்கள். உப்பில்லாத உணவுதான் உண்பார்கள். தரையில் சித்திரகுப்தன் உருவத்தை எழுதி (அவர் சித்திரத்திலிருந்து பிறந்தவர் என்பதால்) வழிபாடு செய்வார்கள்.

    சித்திரகுப்தனுக்கு பலவித சித்ரான்னங்கள் படைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உண்டு. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, பெண் சாபத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜாதக தோஷங்களும் விலகும்.

    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் (பவுர்ணமி) சித்தரகுப்தனுக்கு காலையில் விசேஷ பூஜையும், மாலையில் விமரிசையாக திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

    சித்திர குப்தன் அங்க பூஜை

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நாமாவையும் சொல்லி பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

    * பாபநாசநாய நம: பாதெள பூஜயாமி (கால்)

    * கமலவர்ணாய நம: குல்பௌ பூஜயாமி (கணுக்கால்)

    * சித்ராயநம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)

    * சித்ரரூபாய நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)

    * நதாபீஷ்டதாய நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)

    * வ்ருகோதராய நம: உதரம் பூஜயாமி (வயிறு)

    * ஓம் ப்ராக்ஞாய நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)

    * காலாய நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * பஹுரூபாய நம: பாஹூன் பூஜயாமி (புஜதண்டம்)

    * அந்தக ஸசிவாய நம: அதரம் பூஜயாமி (உதடு)

    * மத்யஸ்தாய நம: முகம் பூஜயாமி (முகம்)

    * கருணாநிதயே நம: கர்ணௌ பூஜயாமி (காதுகள்)

    * பத்ம நேத்ராய நம: நேத்ரே பூஜயாமி (கண்கள்)

    * நானாரூபாய நம: நாஸிகாம் பூஜயாமி (மூக்கு)

    * லலிதாய நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * சித்ரகுப்தாய நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஸர்வேச் வராய நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி

    • பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர்.
    • விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள்.

    தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று. பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எல்லாம் எழுதுபவர் சித்ரகுப்தர். பார்வதி தேவி வரைந்த சித்திரத்தில் இருந்து பிறந்தவர் என்பதால், அவருக்கு சித்திரகுப்தர் என்ற பெயர் ஏற்பட்டது.

    சித்ராபவுர்ணமி நாளில் விரதமிருந்து விடிய விடிய சித்ரகுப்த நயினார் கதையைப் படிப்பார்கள். அந்த காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், `சித்ரகுப்தன் படி அளக்க…' என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம்.

    சித்ர குப்தர் அவதார தினத்தில் அவரது கதையை படித்தாலோ கேட்டாலோ நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும். உடல் நலம் சீராக இருக்கும். சித்திரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனி சந்நதி உண்டு அங்கே ஏடும் எழுத்தாணியும் இன்ன பிற பொருளும் வைத்து முறையான பூஜையை நடத்தி பிரார்த்தனை செய்வார்கள்.

    நம்முடைய குற்றங்களை பொறுத்துக் கொண்டு நல்வாழ்வு அளிப்பார் என்பதற்காக சித்ரகுப்த பூஜை சித்ரா பவுர்ணமியில் நடைபெறுகின்றது. இந்த நாளில் செய்யும் தானம், சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

    • சித்தரகுப்தருக்கு உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் உள்ளது.
    • சித்திர குப்தரை வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை.

    இந்துக்களாக வாழ்கின்ற ஒவ்வொருவரின் உயிரும் எமதர்மராஜாவால் எடுக்கப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பூலோகத்தில் அவர்கள் செய்யும் பாவ- புண்ணியங்களை வைத்து எமதர்மராஜா அவர்களுக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பது தீர்மானிப்பார் என்பது நம்பிக்கை. இதையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு, சித்திரகுப்தருடையது.

    புராண வரலாறு

    புராணத்தின்படி சிவன் மற்றும் பார்வதி பூமியில் உள்ள அனைத்து மனிதர்களிடையும், நல்லொழுக்கமும் தர்மமும் அதிகம் இருக்க வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும், ஈடுபவர்களும், நற்செயல்கள் செய்பவர்களையும் கண்காணிக்க யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்தனர் எனவும், அதன் அடிப்படையில் சிவன் தங்கத்தட்டில் ஒரு படத்தை வரைந்தார் எனவும், பார்வதிக்கும் அதில் உடன்பாடு ஏற்பட்டது எனவும் நம்பப்படுகிறது.

    இருவருடைய அருளால் படம் உயிர் பெற்றது. சித்திரத்தில் இந்து உருவானதால் அவருக்கு சித்திரகுப்தர் என பார்வதி மற்றும் சிவன் ஆகியோர் பெயர் வைத்து, சித்திரகுப்தரிடம் மக்களின் பாவ-புண்ணிய கணக்குகளை பார்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர் என்பது ஐதீகம். இதனைத்தொடர்ந்து எமனின் கணக்காளராக அவர் நியமிக்கப்பட்டார் என்பது புராண கால நம்பிக்கையாக உள்ளது.

    வரவு கணக்கு செலவுகளை பார்க்கும் மிக முக்கிய கடவுளாக பார்க்கப்படும் சித்தரகுப்தருக்கு உலகில் எங்கும் கோவில் கிடையாது.

    ஒரே ஒரு கோவில் மட்டுமே உலகில் சித்திரகுப்தற்கு என உள்ளது. அந்த கோவில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.

    தொடர்ந்து பல்வேறு காலங்களில் இந்த கோவிலில் புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. 1911-ஆம் ஆண்டு கோவில் சீரமைப்பு பணியின் பொழுது சித்திரகுப்தன் மற்றும் அவரது மனைவி கர்ணிகாம்பாள் ஆகியோரின் இரண்டு உலோக சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அமைவிடம்

    சித்திரகுப்தர் கோயில் , காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ளது.

    சித்திர குப்தரை பூஜை செய்து வழிபட்டால் உயரிய பதவிகளை பெறலாம் என்பது நம்பிக்கை. தொடர்ந்து சித்திரகுப்தரிடம் தங்களுடைய வரவு மற்றும் செலவு கணக்குகளை ஒரு சீட்டில் எழுதி வைத்து, வேண்டிக்கொண்டால் நினைத்தல் லாபம் தொழிலில் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.

    இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து கேதுவுக்கு அதி தேவதையாக சித்திரகுப்தர் விளங்குவதால் இவரை வணங்கினால் கேதுவால் உண்டாகும் தீமையிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். எனவே கேது தோஷம் இருப்பவர்கள் சித்தரகுப்தரை வணங்கி வந்தால், வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை

    சித்ரா பவுர்ணமி

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்ற பின், பவுர்ணமி அன்று நகர்வலம் கொண்டு செல்லப்படுகிறார். ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்தரை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று சித்திரகுப்தர் பிறந்ததாக நம்பிக்கை உள்ளது. எனவே இந்த நன்னாளில் சித்திரகுப்தரை வணங்கினால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடிவு பிறந்து, ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    • நடவாவி கிணறு உற்சவம் வருகின்ற 23-ந் தேதி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள்.

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும், நடவாவி கிணறு உற்சவம் வருகின்ற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    நடவாவி உற்சவம்

    அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பௌர்ணமி வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் வரதர், அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள்.

    மிகவும் பிரசித்தி பெற்ற இந்த உற்சவத்தை ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நடவாவி உற்சவம் நடைபெற உள்ளது. முன்னதாக சித்திரை 9 (22-04-2024) திருவவதார உற்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தின் பொழுது விடியற்காலை மூன்று மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வந்து, பெருமாளுக்கு திருவாராதனை நிவேதனம் செய்யப்பட்டு, பெருமாள் திருமலையில் இருந்து இறங்குதல் மற்றும் பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் புறப்படுதல் விழா நடைபெறும் இரவு 7:30 மணிக்கு பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி கண்ணாடி அறையில் தரிசனம் தருவார். தொடர்ந்து இரவு 9 மணி அளவில் பெருமாள் திருக்கோவில் இருந்து மாடவீதி புறப்பாடு நடைபெறும்.

    நள்ளிரவு ஒரு மணி அளவில் பெருமாள் செவிலிமேடு கிராமங்களில் வீதி உலா நடைபெறும். தொடர்ந்து காலை 6 மணி அளவில் புஞ்சையரசந்தாங்கல் கிராம மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து வாகை கிராம மண்டகப்படி நிகழ்ச்சியும், தூசி கிராமத்திற்கு வீதி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து 23-ந் தேதி மதியம் ஒரு மணி அளவில் தூசி கிராம ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலில், சுவாமி ஓய்வு எடுப்பார்.

    மீண்டும் புறப்பட்டு நான்கு மணி அளவில் அப்துல்லாபுரம் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்று, அயங்கார் குளத்திற்கு எழுந்தருளி கிராம வீதி புறப்பாடு நடைபெறும். இரவு 7 மணி அளவில் பெருமாள் ஐயங்கார் குளம் ஸ்ரீ சஞ்சீவிராயர் கோவில் இறங்குதல் நடைபெறும், தொடர்ந்து திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    தொடர்ந்து இரவு 9 மணி அளவில், சஞ்சீவ ராயர் திருக்கோவிலில் இருந்து நடவாவி கிணற்றுக்கு புறப்பாடு நடைபெறும். 9.30 மணி அளவில் பெருமாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவு 10 மணி அளவில் நடவாவி கிணற்றில் இருந்து பாலாற்றுக்கு எழுந்தருள் உள்ள நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 24-ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில், பாலாற்றில் எழுந்தருளி செவிலியமேடு வீதி மண்டகப்படி நிகழ்ச்சியும், பங்காரு காமாட்சி காலணி மண்டக படியும் நடைபெறும்.

    விடியற்காலை 3 மணியளவில் பெருமாள் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி காட்சி தருவார். 4 மணியளவில் திரு கோவிலுக்கு எழுந்தருளி திருமுற்றவெளி நான்கு கால மண்டபத்தில் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து மதுரகவிகள் சாத்துமுறை நடைபெறும்.

    இறுதி நாள் உற்சவம்

    தொடர்ந்து 25-ந் தேதி தோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. பெருமாள் திருக்கோவில் இருந்து பல்லாக்கில் மாட வீதியாக தோட்டத்திற்கு புறப்படும், நடைபெற உள்ளது. தொடர்ந்து 26-ந் தேதி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ பெருமாள் தோட்டத்திலிருந்து திருக்கோவில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி திருமுற்றவெளி நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளி காட்சி தருவார்.

    தொடர்ந்து பெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறும். 26-ந் தேதி இரவு 7 மணி அளவில் கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் திருமலைக்கு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று உற்சவத்தில் நிறைவு பகுதி வந்தடையும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார்.
    • அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார்.

    சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர்.

    பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து ஏடு மற்றும் எழுத்தாணியை (பேப்பர் மற்றும் பேனா) உருவத்தின் அருகே வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் (பால் சேர்க்காமல்) படைத்து விளக்கேற்றி தீப ஆராதனை காண்பிக்கின்றனர்.

    பின்னர் தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும் இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.

    வழிபாடு முடிந்த பின் முறத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, தட்சிணை ஆகியவற்றை வைத்து எளியவர்களுக்கு தானம் செய்கின்றனர்.

    வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று சித்திர குப்தரின் வரலாற்றை படிக்கின்றனர். வழிபாடு முடிந்த பின் படிக்கோலத்தை அழிந்து விடுகின்றனர்.

    விரத முறையில் மக்கள் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

    சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்திர குப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

    இவர் இடது காலை மடித்து வலது காலை ஊன்றி சுகாசனம் என்ற நிலையில் உள்ளார். தனது வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஓலைச்சுவடியும் வைத்திருப்பார். இவரிடம் என்றும் வற்றாத கணக்குப் புத்தகம் உள்ளது. அதன் பெயர் அக்கிர சந்தாணி ஆகும்.

    சித்திர குப்தனுக்கு என்று தனிக்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று இங்கு சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின்னர் சித்திர குப்தர் மற்றும் சித்ரலேகா வீதி உலா வருகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று மதுரை, மானா மதுரை, பரமக்குடி போன்ற இடங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கிரிவல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமக்கும் மேலான சக்தி ஒன்று நம்மை இடைவிடாது கண்காணிக்கிறது எனவே தீய செயல்களை தவிர்த்து நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே இவ்விழாவின் சாராம்சம் ஆகும்.

    மேலும் ஒற்றுமையுடன் பகிர்ந்துண்ணல், தான தர்மம் ஆகியவற்றையும் இவ்விழா எடுத்துரைக்கிறது. எனவே நாமும் இப்பிறவியில் தீமைகளை தவிர்த்து நன்மைகள் செய்து நன்நிலையை அடைய சித்ரா பவுர்ணமி அன்று வழிபாடு மேற்கொள்வோம்.

    • சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும்.
    • அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.

    பூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி (பௌர்ணமி) என்றும் இந்நாள் அழைக்கப்பெருகிறது.

    இந்து சமயத்தில் சந்திரன் கடவுளாக கருதப்படுகிறார். அவர் தட்ச குமாரிகள் இருபத்து ஏழு பேரை மணந்த போதிலும், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் பிரியமாய் இருந்தார்.

    அதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் அழகு குறைந்து மங்கிப் போக சாபம் கொடுத்ததார். பதினைந்து கலைகளில் ஒவ்வொன்றாக குறைந்து இறுதியில் ஒன்று மட்டும் மீதமிருக்கும் போது, சிவபெருமானை தஞ்சமடைந்தார் சந்திரன்.

    சந்திரனை காக்க தனது சடாமுடியில் வைத்துக்கொண்டார், எனினும் தட்சன் சாபம் முழுவதும் தீராது, பதினைந்து நாட்கள் கலைகள் அழிந்தும், பின் பதினைந்து நாட்கள் வளர்ந்தும் வரும் என்று வரம் அளித்தார்.

    பௌர்ணமி விரதங்கள்

    இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

    சித்ரா பவுர்ணமி - சித்ரகுப்தனின் பிறந்தநாள்.

    வைகாசி பவுர்ணமி - முருகனின் பிறந்தநாள்.

    ஆனி பவுர்ணமி - இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.

    ஆடி பவுர்ணமி - திருமால் வழிபாடு

    ஆவணி பவுர்ணமி - ஓணம், ரக்சாபந்தனம்

    புரட்டாசி பவுர்ணமி - உமாமகேசுவர பூசை

    ஐப்பசி பவுர்ணமி -சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்

    கார்த்திகை பவுர்ணமி - திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு

    மார்கழி பவுர்ணமி - சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்

    தை பவுர்ணமி - சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்

    மாசி பவுர்ணமி - பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்

    பங்குனி பவுர்ணமி - சிவபெருமான் உமையம்மை திருமண நாள்

    திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று. இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது.

    அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதம் இருந்து தான தருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.

    மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை.

    சதுர்த்தசி திதி

    சதுர்த்தசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினான்காவது திதி சதுர்த்தசி ஆகும்.

    சதுர்த்தச எனும் வடமொழிச் சொல் பதினான்கு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினான்காவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

    30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினான்காம் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளில் இருந்து அமாவாசை முடிய உள்ள கிருட்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் பதினான்காம் நாளுமாக இரண்டு முறை சதுர்த்தசி திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தசியைச் சுக்கில பட்சத் சதுர்த்தசி என்றும், பூரணையை அடுத்த சதுர்த்தசியைக் கிருட்ண பட்சத் சதுர்த்தசி என்றும் அழைக்கின்றனர்.

    அமாவாசைக்கு முதல் நாள் வரும் சதுர்த்தசி இருத்தை என அழைக்கப்படுவதுடன் இது சுப காரியங்களுக்கு விலக்கப்படும்.

    ×