search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்"

    • வசந்த உற்சவம் நிறைவாக மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறும். இந்த விழா 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் மகிழ மரத்தை வலம் வந்த உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டக படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்றுவிட்டார். தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    20 அடி உயர பொம்மை

    சிவபெருமான் ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் போது உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் நின்று இருள் சூழ்ந்து விடுவதால் அந்த தியானத்தை கலைப்பதற்காக தேவர்கள் மன்மதனை சாமி மீது அம்பு விட அனுப்பி வைக்கின்றனர்.

    மன்மதன் அருணாசலேஸ்வரர் மீது பானம் தொடுத்த நேரத்தில் அருணாசலேஸ்வரரின் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்தார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று கூறப்படுகிறது.

    இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மதன் பொம்மை கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேரியது.

    அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது.

    அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மட்டும் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும்.

    • அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. முன்னதாக 13-ந் தேதி மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியின் முன்பு பந்தக்கால் நடப்பட்டது.

    தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் கோவிலில் மகிழமரம் அருகில் சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி நேற்று பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியை வலம்வந்தனர்.

     தீர்த்தவாரி

    பின்னர் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அய்யங்குளத்தில் சூல ரூபத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் அய்யங்குளத்திற்கு எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவிலில் சாமிக்கும், பராசக்தி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து இரவு கோபால விநாயகர் கோவிலில் சாமிக்கு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இரவு 11 மணியளவில் அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
    • திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கார்த்திகை மாதம் முதல் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு நடந்தது. பின்னர் சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து உற்சவ மூர்த்திக்கும், பராசக்தி அம்மனுக்கும் வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மார்கழி மாத பிறப்பு மற்றும் விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் ராஜகோபுரத்தின் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

     வட மற்றும் தென் ஒத்தவாடை தெரு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாமி தாிசனம் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி திருப்பாவை விழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்டராமர் கோவில், அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில், இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில்களில் மார்கழி மாத திருப்பாவை விழா நடந்தது.

    ஆரணி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அரியாத்தம்மன் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை வளர்பிறை பஞ்சமி விழாவையொட்டி வராகி அம்மனுக்கு சிறப்பு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சேத்துப்பட்டு இஞ்சிமேடு கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் கடுங்குளிரிலும் அதிகாலையில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வணங்கினர். இஞ்சிமேடு பெரிய மலை திருமணி சேறைவுடையார் சிவன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. ஆவணியாபுரம் சிம்மமலையில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தேசூர் ஆதிகேசவபெருமாள் கோவில், சேத்துப்பட்டு வரத சஞ்சீவிராய பெருமாள் கோவில், பெரிய கொழப்பலூர் காரக தூஷணபெருமாள் கோவில், திருக்குராயீஸ்வரர், திருமால்பாடி ரங்கநாத பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு போளூர் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. போளூர் மலை மீது அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மற்றும் சிவன் கோவில், வெண்மணியில் அமைந்துள்ள விநாயகர் கோவில், குன்னத்தூரில் அமைந்துள்ள பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×