search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
    X

    சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

    • நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.
    • அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்று அதிகாலை தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் நாளை அதிகாலையுடன் சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.

    அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர்.

    திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி சென்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டத்தால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது. பாதுகாப்புக்காக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    Next Story
    ×