search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெரினா கடற்கரை"

    • பேனா நினைவு சின்னத்தால் 32 மீனவ கிராமங்களின் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த நல்லதம்பி, ராயபுரத்தைச் சேர்ந்த தங்கம், நாகர்கோவிலை சேர்ந்த மோகன் உள்ளிட்ட மீனவர்கள் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 'மெரினா கடற்கரையில் திட்டமிடப்பட்டு உள்ள பேனா நினைவு சின்னத்தால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும். தமிழக அரசின் இந்த திட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணாக உள்ளது.

    பேனா நினைவு சின்னத்தால் 32 மீனவ கிராமங்களின் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பேனா நினைவு சின்ன திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவில்லை. எனவே பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிட வேண்டும்' என கோரப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனுவுக்கு உதவிடும் வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பொதுநல மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் தவே வாதிட முற்பட்டபோது, நீதிபதி எஸ்.கே.கவுல், 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு என்ன செய்ய முடியும்?, என்ன அடிப்படை உரிமை மீறப்பட்டு உள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது?, மீனுக்கு எப்படி இது பொருந்தும்? தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்லுங்கள் அல்லது சென்னை ஐகோர்ட்டை நாடுங்கள். ஏன் அனைத்து விவகாரங்களையும் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் சில காலம் இருந்துள்ளேன்.

    அரசியல் போராட்டத்தில் கோர்ட்டை தலையீடு செய்ய வைத்ததில்லை. அரசியல் போராட்டத்தை வேறு எங்காவது நடத்துங்கள். இந்த விவகாரம் சுற்றுச்சூழல் சார்ந்ததா? அப்படி என்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடுங்கள்' என குறிப்பிட்டார்.

    பின்னர் வக்கீல் சித்தார்த் தவே, 'அடிப்படை உரிமைகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளதால், சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம்' என வாதிட்டார்.

    அப்போது நீதிபதிகள், 'ரிட் மனு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்ய முடியாது. சுப்ரீம் கோர்ட்டை அதற்கான பணியை மட்டும் செய்ய விடுங்கள். இது போன்ற மனுக்களால் முடியாத நிலை உருவாகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்வதற்கு எது தடையாக உள்ளது?

    மாநிலத்துக்குள்ளான பிரச்சினையை மாநிலத்தில் உள்ள ஐகோர்ட்டு முதலில் விசாரிக்க வேண்டும்' என குறிப்பிட்டனர்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், 'பேனா நினைவு சின்ன திட்டம் குறித்து நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் மனுதாரர் பங்கேற்கவில்லை. ரிட் மனுவை ஜனவரி மாதம் தாக்கல் செய்துவிட்டு ஜூலை மாதம்தான் தமிழ்நாடு அரசுக்கு அளித்தார். இது போன்றுதான் மனுதாரர் இந்த வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்த வழக்கு முழுவதும் அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 6 அடி நிலம் தர மறுத்த நபர்தான் பேனா நினைவு சின்னம் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்' என வாதிட்டார்.

    மற்றொரு மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, 'நினைவிடம் அமைக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையிலேயே அது தடை செய்யப்பட்ட பகுதி இல்லை என கூறி பேனா நினைவு சின்னத்தை எழுப்ப திட்டமிட்டு உள்ளனர். இதில் எவ்வித பொதுநலனும் அடங்கவில்லை' என வாதிட்டார்.

    சென்னை ஐகோர்ட்டு அனுமதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தீர்களா? என நீதிபதி எஸ்.கே.கவுல் கேட்டார்.

    இதைத்தொடர்ந்து மனுவை திரும்ப பெற அனுமதி பெற்று அனுமதித்து தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    • பேனா நினைவுச் சின்னம் அமைக்க தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
    • தமிழக அரசு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக வங்கக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான அனுமதியை பல்வேறு நிபந்தனைகளுடன் கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது மறைவையடுத்து, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தார். இதையடுத்து, நினைவிடம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது.

    இந்நிலையில், கருணாநிதி நினைவிடம் பின்புறம் நடுக்கடலில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழகஅரசு முடிவெடுத்தது.

    42மீட்டர் உயரத்தில் அமைக்கப்படும் இந்த பேனா நினைவுச் சின்னத்துக்கு செல்வதற்காக, நினைவிடத்தில் இருந்து 290மீ தூரத்திற்கு கடற்கரையிலும், 360மீ தூரத்திற்கு கடலிலும் என 650 மீட்டர் தொலைவிற்கு கண்ணாடி பாலம் அமைக்கப்படுகிறது.

    குறிப்பாக பேனாவின் பீடம் 2263.08 சதுர மீட்டர், கடலுக்கு மேல் நடைபாதையானது 2073.01 சதுரமீட்டர், கடற்கரை- நிலம் இடையில் பாலம் 1856 சதுர மீட்டர், கடற்கரையில் நடைபாதை 1610.60 சதுர மீட்டர், நினைவிடம் முதல் பாலம் வரை 748.44 சதுர மீட்டர் பாதை என மொத்தம் 8551.13 சதுர மீட்டரில் இந்த நினைவிடம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

    மேலும், கடற்கரையில் இருந்து நினைவுச் சின்னத்துக்கு செல்ல கடற்பரப்பில் இருந்து 6 மீட்டருக்கு மேல் அமைக்கப்படும் 650 மீட்டர் நீள பாலமானது 7 மீட்டர் அகலத்தில் அமையும். அதில் 3 மீட்டர் கண்ணாடி தளமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது

    இந்த நினைவிடத்துக்கு மாநில அரசின் கடற்கரை மண்டல மேலாண்மை குழுமம் அனுமதியளித்த நிலையில், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.

    கடந்தாண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில், திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், இத்திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்க அறிவுறுத்தியது. தொடர்ந்து, கருத்து கேட்பு நடத்தப்பட்டு, அறிக்கையை மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அனுப்பியது.

    அறிக்கையை ஆய்வு செய்த கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம், வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கி இருந்தது.

    பேனா நினைவுச் சின்னம் அமைக்க தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு உள்ளது.

    இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே வரும் ஆகஸ்ட் 7-ந்தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட உள்ளது. அங்கேயே சிறிய அளவில் பேனா நினைவு சின்னம் வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் தமிழக அரசு மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முடிவை கைவிட போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பதில் கருணாநிதியின் நினைவிடத்தில் பேனா நினைவுச்சின்னம் சிறிதாக அமைக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் இந்த தகவலை அதிகாரிகள் யாரும் இன்னும் உறுதிபடுத்தவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது.
    • ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 13 சதவீதம் மட்டுமே உள்ளது. எங்களுக்கு அதிகாரம் கிடைத்தால் மரம் நடுவதை மக்கள் இயக்கமாக மாற்றி மாணவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவோம்.

    நீர் ஆதாரங்கள் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. விதையில் விஷம் தடவுவதால் தாய்ப்பால் நஞ்சாக மாறி வருகிறது. வேளாண்மை என்பது தொழில் அல்ல. அது தமிழர்களின் பண்பாடு அதனை அரசு வேலையாக செயல்படுத்துவோம்.

    கடல் என்பது மீனவர்களின் வாழ்வாதாரம். அதனை தி.மு.க. அ.தி.மு.க. தங்களது சொத்தாக மாற்றி வருகிறது. கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைப்பதை ஏற்க முடியாது. தற்போது பேனா நினைவு சின்னம் வைப்பதை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவறினால் எங்களிடம் அதிகாரம் வரும்போது அவற்றை அகற்றுவோம் என்றார்.

    முன்னதாக ஒட்டன்சத்திரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-

    பூமிக்கு எந்த உயிரினங்களாலும் ஆபத்து இல்லை. மனிதர்களால்தான் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற நுண்ணுயிரியிடம் இந்த உலகம் தோற்றுப்போனது. ஊழலை ஒழிப்பதாக சொன்னவர்கள் கொசுவைக் கூட ஒழிக்க முடியாமல் திணறி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மரங்களை வெட்டினால் 6 மாதம் சிறை தண்டனை விதிப்போம். மக்களின் தேவைக்காக மட்டுமே மணல் அள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது சொந்த தேவைகளுக்காக அள்ளி வருகின்றனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஷி, கிரைண்டர் கொடுக்க மாட்டோம். நல்ல குடிநீர், காற்று, தரமான மருத்துவம் அனைவருக்கும் கிடக்கச் செய்து பூமித்தாயை 10 ஆண்டுகளில் பச்சைப் போர்வையால் போற்றுவோம் என்றார்.

    • சென்னை மெரினா கடற்கரை ஆசியாவிலேயே மிகப்பெரிய மணல் பரப்பு கொண்ட கடற்கரையாக திகழ்ந்து வருகிறது.
    • குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    மெரினா கடற்கரையில் தாகம் தீர்க்கும் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சென்னை மெரினா கடற்கரை ஆசியாவிலேயே மிகப்பெரிய மணல் பரப்பு கொண்ட கடற்கரையாக திகழ்ந்து வருகிறது. இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசிக்க மற்றும் பொழுது போக்க வருகை தருகிறார்கள்.

    மெரினா கடற்கரையின் அழகை பாதிக்கும் வகையில் அங்குள்ள மணல் பரப்பில் பழுதடைந்த கடைகள், குப்பைகள் நிறைந்து உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி தற்போது பழுதடைந்து உள்ளது. இதனால் குடிநீர்தொட்டி முழுவதும் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது.

    இதனால் அங்கு குடிநீர் அருந்த செல்ல மக்கள் தயங்குகிறார்கள். குடிநீர் பைப்புகள் சரிவர பராமரிக்கப்படாததால் உடைந்து உள்ளன. குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் கடற்கரை மணலை சுத்தப்படுத்த 5 எந்திரங்கள் சுற்றி சுற்றி வருகின்றன.
    • கடற்கரையில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை 2017-ல் 1447 ஆக இருந்தது. இப்போது 2500 கடைகள் உள்ளது.

    உலகிலேயே அழகான கடற்கரைகளில் ஒன்று நம்மூர் மெரினா. அதே போல் மற்றொரு அமைதியான கடற்கரை பெசன்ட் நகர்.

    சென்னையின் இந்த அழகிய கடற்கரைதான் எத்தனையோ பிரபலங்களின் ஆற்றலையும், அறிவையும் வளர்க்க உந்துசக்தியாக இருந்திருக்கின்றன.

    இந்த அழகிய கடற்கரைகளை கண்டு ரசிக்கவும், காலாற நடந்து காற்று வாங்கி உடலுக்கு புத்துணர்ச்சியை ஊட்டவும் தினமும் ஏராளமானோர் இங்கு வருகிறார்கள்.

    வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வந்து குவியும் சுற்றுலா பயணிகளும் அழகை ரசிக்க வரிசைகட்டி நிற்கிறார்கள். இந்த கடற்கரைகளை அழகுபடுத்தும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

    அதன் ஒரு கட்டமாக கடற்கரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கடைகளை வரிசையாக முறைப்படுத்தினார்கள்.

    தினமும் கடற்கரை மணலை சுத்தப்படுத்த 5 எந்திரங்கள் சுற்றி சுற்றி வருகின்றன. அதாவது மணலில் இருக்கும் குப்பை கழிவுகளை சல்லடை போட்டு தேடி சேகரிப்பது தான் இந்த எந்திரங்களின் வேலை. அப்புறமென்ன கடற்கரை நேர்த்தியாகத் தானே இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை.

    அதிகாலையில் வெறும் காலில் கடற்கரை மணலில் நடைபயிற்சி சென்றால் காலுக்கு பாதுகாப்பு கிடை யாது. உடைந்து கிடக்கும் பாட்டில் துண்டுகள், குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் பார்த்தால் முகம் சுளிக்க வைக்கிறது. நடப்பதற்கு பயமுறுத்துகிறது.

    வார விடுமுறை நாட்களில் கடற்கரைக்கு வந்து பொழுதுபோக்க வரும் சில குடும்பத்தினர் கூறும்போது,

    கடற்கரை அசுத்தமாக மாறி வருவதால் கடற்கரைக்கு வருவதை தவிர்த்து விட்டதாகவும் அதற்கு பதிலாக வீட்டு பக்கத்தில் உள்ள பூங்காக்களுக்கு செல்வதாகவும் கூறினார்கள். கழிப்பிடங்கள் வெளிப்பார்வைக்குத்தான் பகட்டாக தெரிகின்றன. உள்ளே சென்றால் பராமரிப்பு இல்லாமல் நாற்றமடிக்கிறது.

    பல்லாயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வரும் இடத்தில் ஒரு கழிப்பறையை கூட சுத்தமாக, ஓட்டல்களில் இருப்பதை போல் பராமரிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டனர்.

    பொதுமக்களின் மனக்குறைகள் பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, கடற்கரையில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை 2017-ல் 1447 ஆக இருந்தது.

    இப்போது 2500 கடைகள் உள்ளது. மொத்தம் 15 விற்பனையாளர்கள் சங்கம் உள்ளது. இந்த கடைகளில் இருந்து வரும் குப்பை கழிவுகள்தான் கடற்கரை மணற்பரப்பில் சிதறுகிறது. கடைக்காரர்களிடம் குப்பை தொட்டிகளை வைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம் என்றனர்.

    கடற்கரையில் உடைந்த மதுபாட்டில்கள் ஏராளமாக சிதறி கிடக்கிறது. இதற்கு பொதுமக்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடற்கரை பாதையை அழகுபடுத்தி பராமரிக்க, குடிநீர் வசதிகள் செய்ய, இயற்கையை ரசிக்க, உட்காரும் இடங்கள் அழகு குடைகள், சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய நாடு முழுவதும் அனுமதித்துள்ளது.

    மெரினாவை பொறுத்தவரை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எல்லாம் காகிதத்தில்தான் எழுத்துக்களாக இருக்கின்றன. இன்னும் செயல் வடிவம் பெறவில்லை.

    இந்த அழகிய கடற்கரையில் நான் காற்று வாங்க போனேன். ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று தான் அன்று பூரித்தனர். ஆனால் இன்று நான் காற்று வாங்க சென்றேன் கொஞ்சம் நோயை வாங்கி வந்தேன் என்று சொல்லும் அளவில் தான் மெரினா கடற்கரை உள்ளது.

    • கருணாநிதி நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது.
    • முகப்பில் பேனா வடிவிலான தூண் வைக்கப்படுகிறது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு நினைவகம் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார்.

    கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை பொதுமக்களும்-வருங்கால தலைமுறையும் அறியக்கூடிய வகையில் நவீன விளக்கப்படங்களுடன் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் கருணாநிதிக்கு நினைவகம் அமைக்கப்படும் என்றார்.

    இந்த நினைவகம் உதய சூரியன் வடிவில் கட்டப்பட்டு வருகிறது. முகப்பில் பேனா வடிவிலான தூணும் வைக்கப்படுகிறது.

    இந்த கட்டுமான பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை இன்னும் 2 மாதத்திற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வடசென்னை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் கருணாநிதி நினைவகம் ஆகஸ்டு 7-ந் தேதி திறக்கப்படும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை கிண்டியில் அமைக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், திருவாரூரில் கலைஞர் கோட்டம் ஆகியவற்றை திறந்து வைக்க இருக்கிறோம்.

    ஆகஸ்டு 7-ந் தேதி சென்னை கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறப்பு விழா காண இருக்கிறது.

    தமிழ்நாட்டின் திரும்பும் திசை எல்லாம் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பெயரால் நினைவுச் சின்னங்களையும் உருவாக்கிய கலைஞர் பெயரிலான சின்னங்கள் மாதம்தோறும் திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் உழைப்பாளர் சிலை சென்னையின் அடையாளங்களில் ஒன்று.
    • கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உழைப்பாளர் சிலை சந்திப்பில் 30 விபத்துகள் நடந்து உள்ளன.

    சென்னை:

    மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் உழைப்பாளர் சிலை சென்னையின் அடையாளங்களில் ஒன்று.

    மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் இந்த சிலை முன்பு நின்று படம் எடுத்து கொள்வதை பார்க்க முடியும்.

    கடற்கரைக்கு ஆர்வமுடன் நடந்து செல்பவர்கள் சிக்னல் இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் கூட்டமாக ரோட்டை கடப்பதும் உண்டு. இதனால் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போலீசார் சிரமப்படுகிறார்கள். இவ்வாறு பாத சாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி ரோட்டை கடப்பதால் விபத்துகளிலும் சிக்குகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உழைப்பாளர் சிலை சந்திப்பில் 30 விபத்துகள் நடந்து உள்ளன.

    எனவே விபத்துகளை தவிர்க்கவும், பாதுகாப்பான பாதசாரிகள் பயணத்துக்காகவும் உழைப்பாளர் சிலை சந்திப்பை சீரமைக்க போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

    இதற்காக இந்த சந்திப்பில் போலீசார் வாகன போக்கு வரத்து, பொதுமக்கள் சாலையை கடப்பது, சிக்னல்கள் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது குறைந்தபட்சம் ஒரு நாளில் 10 ஆயிரம் பாதசாரிகள் உழைப்பாளர் சிலை சந்திப்பை கடந்த செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த பகுதியில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள்.

    இதன்படி பாதசாரிகள் ரோட்டை கடக்கும் தூரம் குறைக்கப்படுகிறது. வாகனங்களின் சீரான போக்குவரத்துக்காக சென்டர் மீடியன்கள் சீரமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் கூடுதல் தூரத்துக்கு அமைக்கப்படும். இந்த சந்திப்பின் தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு சென்டர் மீடியன் வைக்கப்படுகிறது.

    இந்த மாற்றங்களினால் பாதசாரிகள் வாகனங்களில் அடிபடாமல் இருக்க பிரத்யேகமான கிராசிங் லேன் அமைக்கப்படுகிறது. மேலும் ரோட்டை கடக்கும்போது சிக்னலுக்காக பாதுகாப்பாக காத்திருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படும்.

    சரியான நிறுத்த கோடுகள், திசை காட்டும் குறியீடுகள் பளிச்சென்று தெரியும் வகையில் வண்ணம் பூசப்படும். அனைத்து வயதினரும் எளிதாக கடந்து செல்லும் வகையிலும் மாற்றுத்திறனாளிகள் செல்ல சாய்வு பாதைகளும் அமைகிறது.

    அமல்படுத்தப்போகும் இந்த புதிய சீரமைப்பு வசதிகள் 3 முதல் 5 வாரங்கள் வரை பரிட்சார்த்தமாக கண்காணிக்கப்படும். அதன் பிறகு நிரந்தர மாற்றம் செய்யப்படும்.

    போக்குவரத்து மட்டுமல்லாமல் முக்கிய சந்திப்பு என்பதால் நேர்த்தியாகவும் அழகாகவும் சீரமைக்கப்படும்.

    • காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.
    • அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.

    சென்னை:

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களையொட்டி மாலை நேரத்தில் மெரினா கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு இன்று முதல் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எவ்வித போக்குவரத்து மாற்றம் செய்யப்படமாட்டாது.

    கலங்கரை விளக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு பாரதி சாலை-பெல்ஸ் ரோடு-வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் ரோடு சென்று அண்ணாசாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.

    அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது. (பெல்ஸ் சாலை ஓரு வழிப்பாதையாக மாற்றப்படும்)

    நேப்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை- பெல்ஸ் ரோடு-வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம்.

    பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கவும், வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. (விக்டோரியா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெரினா நீச்சல்குளம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது.
    • தற்போது கோடை விடுமுறையையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கி உள்ளது.

    சென்னை:

    கோடை விடுமுறையையொட்டி இன்று மெரினா நீச்சல் குளத்தில் இளைஞர்கள் ஆனந்தகுளியல் போட திரண்டனர்.

    சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பெரிய நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை இயங்கி வருகிறது. நுழைவு கட்டணம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 டிக்கெட் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

    கோடை விடுமுறையையொட்டி வெயிலில் இருந்து தப்பிப்பதற்காகவும் வாரஇறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த நீச்சல் குளத்தை பயன்படுத்தி வருகின்றனர். நீச்சல்குளம் தற்போது சீரமைக்கப்பட்டு புதிய தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. இதனால் தற்போது இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் மெரினா கடற்கரை நீச்சல் குளத்திற்கு படையெடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் தற்போது கோடைவெயில் கொளுத்துவதையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் மெரினா நீச்சல் குளத்திற்கு அலைமோதி வருகிறது. விடுமுறை தினமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள் மெரினா நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.

    நீச்சல்குளம் பராமரிப்பு அதிகாரி ரவி கூறியதாவது:-

    மெரினா நீச்சல்குளம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை விடுமுறையையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கி உள்ளது.

    தற்போது சுட்டெரிக்கும் கோடைவெயில் கொளுத்துவதையொட்டி வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் நீச்சல் குளத்துக்கு தினமும் வருகிறார்கள். ஆனந்த குளியல் போடுகிறார்கள்.

    "மே"மாதம் இறுதி வரை கூட்டம் அதிகம் இருக்கும். இளைஞர்கள், பொதுமக்கள் இன்னும் அதிகளவு வருகை தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.
    • போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே 2 வயது பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 6 மாத ஆண் குழந்தை அழுதபடி காணப்பட்டது.

    அப்போது கடற்கரைக்கு வந்த சிலர் அந்த பெண்ணை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இது குறித்து அவர்கள் மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த பெண்ணை பார்த்தனர். அப்போது அவர் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பசி மயக்கத்தில் காணப்பட்டது. 6 மாத ஆண் குழந்தையும் பசியால் அழுது கொண்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணையும் 2 குழந்தைகளையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பசி மயக்கத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு போலீசார் உணவு வாங்கி கொடுத்தனர். 6 மாத ஆண் குழந்தையும் பால் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போதை தெளிந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் ஆதரவற்ற நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.

    அந்த பெண்ணிடம் போலீசார் பெயர், கணவர் பெயர், சொந்த ஊர் பற்றிய விவரங்களை கேட்டனர். இந்தியில் பேசிய அவர் போலீசார் கேட்ட எந்த விவரங்களையும் சொல்ல மறுத்துவிட்டார். அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரை சொன்னால் அந்த மாநிலத்தை சேர்ந்தவரை வரவழைத்து அந்த பெண்ணிடம் பேச வைத்து அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டார்.

    மேலும் அந்த பெண்ணிடம் குழந்தைகளுடன் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் என்று போலீசார் கூறினார்கள். அதற்கு மறுத்த அவர் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென்று ஓட்டம் பிடித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பிடித்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அந்த பெண் காப்பகத்துக்கு செல்லமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். என்னை மீண்டும் மெரினா கடற்கரைக்கே அனுப்புங்கள். ஏதாவது வேலை செய்து என் 2 குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வேன் என்று போலீசாரிடம் கூறி வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும் 2 குழந்தைகளுக்கும் எப்படி ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

    • அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நடந்து வரும் நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது.
    • விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள அணுகு சாலையில் இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் வசிப்பவர்களுக்கு ஒரே பெரிய பொழுது போக்கு மெரினா கடற்கரைதான். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து கடல் அலைகளில் விளையாடி பொழுதை கழித்து செல்கின்றனர். கடலில் இறங்கி ஆபத்தான வகையில் விளையாடும் இளைஞர்களை போலீசார் குதிரைகளில் வந்து கண்காணிக்கின்றனர். அதனையும் மீறி இளைஞர்கள் சிலர் கடல் அலையில் சிக்கி இறக்கும் சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது.

    அனைத்து தரப்பினரும் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதையும் அமைத்து தரப்பட்டு உள்ளது. இதேபோல் முதியவர்கள் மற்றும் கை குழந்தைகளுடன் பகல் பொழுதில் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டு உள்ளது.

    அக்னி நட்சத்திரம் என்ற கத்திரிவெயில் நடந்து வரும் நிலையில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்து வருகிறது. இருந்தாலும் மெரினா கடற்கரையில் பகல் பொழுதில் மணல் சற்று சூடாகத்தான் இருக்கிறது. இதில் நடந்து செல்வது கடினம். இதனால் பகல் பொழுதில் வருபவர்கள் நலன் கருதி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மணல் பகுதியை கடந்து செல்வதற்காக மூன்று சக்கர பிளாஸ்டிக் வண்டி நிறுத்தப்பட்டு உள்ளது.

    விவேகானந்தர் இல்லம் அருகில் உள்ள அணுகு சாலையில் இந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. தேவைப்படுபவர்கள் அப்பகுதிக்கு சென்றால் வண்டிகளை பாதுகாத்து வருபவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள். இதனை பெற்றுக்கொண்டு கடல் அலை இருக்கும் பகுதி வரை சென்று வரலாம். இதற்கு பொதுமக்கள் தரப்பில் நல்ல வரவேற்பு உள்ளது. விடுமுறை நாட்களில் கூட்டம் சற்று அதிகமாக வருவதால் கூட்டத்துக்கு ஏற்ப வண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து தர வேண்டும். அத்துடன் தற்போது இருக்கும் வண்டிகளையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    தொடர் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக மெரினா கடற்கரை, வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க குவிந்து வருகின்றனர். நேற்று அனைத்து இடங்களிலுமே கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து பொழுதை கழித்தனர். மணற்பரப்பே தெரியாத அளவுக்கு கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

    பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுக்க கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இங்குள்ள புராதன சின்னங்கள், ஷீசெல் மியூசியம், கலங்கரை விளக்கம், கப்பல்துறை மியூசியம் போன்ற பகுதிகளை சுற்றி பார்ப்பதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பயணிகள் குவிந்தனர்.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானோர் கார் மற்றும் வாகனங்களில் குவிந்ததால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவளம் சாலை, கிழக்கு ராஜவீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    மே தின விடுமுறை நாளான இன்றும் காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்து உள்ளனர். அவர்கள் புராதன சின்னங்கள் முன்பு நின்றபடி செல்போன்களில் செல்பி எடுத்தும், குடும்பத்துடன் பொழுதை கழித்தும் மகிழ்ந்தனர்.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பூங்காவில் உள்ள யானை, காண்டாமிருகம், மனித குரங்கு உள்ளிட்ட விலங்குகளுக்கு கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மதிய வேளையில் ஷவர் குளியல் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட குளிர்ச்சியான பழங்கள் கொடுக்கப்படுகிறது.

    இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். பறவைகள் இருப்பிடங்களில் ஆங்காங்கே தண்ணீர் குவலைகள் வைக்கப்பட்டு உள்ளது. அதன் கூண்டுகள் சாக்கு பையால் சுற்றி அதன் மீது தண்ணீர் ஊற்றப்படுகிறது. இதனால் பறவைகளின் கூண்டுகள் உட்புறம் ஈரப்பதமான நிலையில் உள்ளன. நேற்று வண்டலூர் பூங்காவுக்கு வந்து பார்வையாளர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இன்றும் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக ஏராளமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் பைப்புகளும் அனைத்து இடங்களிலும் கூடுதலாக வைத்து உள்ளனர். இதற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ×