search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi Centenary celebration"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம்.
    • முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அண்ணாவுக்கு பிறகு தி.மு.க.வில் யார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற பிரச்சனை வந்தபோது, எல்லோரும் நாவலர் நெடுஞ்செழியனை சொல்லும்போது, எம்.ஜி.ஆர்.தான், முரசொலி மாறன் உள்ளிட்டோர் வந்து கேட்டதற்கு இணங்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோரிடம் பேசி கருணாநிதியை முதலமைச்சராக தேர்வு செய்ய செய்தார்.

    எனவே, கருணாநிதி முதலமைச்சர் ஆவதற்கு எம்.ஜி.ஆர். தான் முழுக்க முழுக்க காரணம். இதை கருணாநிதி எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே சொல்லி இருக்கிறார். இது தான் வரலாறு.

    ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஏதோ கருணாநிதியை புகழ வேண்டும் என்பதற்காக தவறாக வரலாற்றை மறைத்து பேசியது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதே போன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடத்தினார்கள். அங்கு 50 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்ட நிலையில் 899 பேர் தான் விழாவிற்கு வந்துள்ளனர். இதைவிட கருணாநிதியை கேவலப்படுத்தியது உலகத்தில் எதுவுமே இருக்காது. இந்த விழாவில், முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அவர்கள் எழுதிக்கொடுத்த உரையை அப்படியே படித்துவிட்டு செல்கிறார்கள். அதாவது, கருணாநிதியால் உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். என்று கூறுகிறார்கள். இதனை தமிழ்நாடு ஏற்குமா? எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்பார்களா?

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருக்கும் வரை கருணாநிதி பதவியில் இருந்தார். தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு கருணாநிதியால் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ ஆகமுடியவில்லை. 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பி வைத்த மாபெரும் தலைவர் தான் எம்.ஜி.ஆர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை.
    • இசை எங்கும் நிறைந்திருப்பதைப் போல, உலகம் முழுவதும் கலைஞர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கலைஞர்-கலைஞர் குழு சார்பில் 'இசையாய் கலைஞர்' என்ற நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

    கலைஞரின் நூற்றாண்டையொட்டி அரசு ஒரு புறமும் தி.மு.க. இன்னொரு புறமும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்' என்றே பெயரிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த மூன்று மாதங்களில், இளைஞர் அணி சார்பில், 15 கலைஞர் நூலகங்களை தமிழ்நாட்டில் உள்ள 15 சட்டமன்றத் தொகுதிகளில் திறந்திருக்கிறோம். அதற்கு இளைஞர் அணியினருக்கு இந்த நேரத்தில் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மனித உணர்வுகளில் இயல்பாய் கலந்திருப்பது கலை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனையும் அறியாமல் ஒரு கலையுணர்வு இருக்கும் என்று சொல்வார்கள். இந்த நிகழ்ச்சிக்கு 'இசையாய் கலைஞர்' என்பது மிகமிக பொருத்தமான தலைப்பு.

    எனக்கு இதற்கு முன்பெல்லாம் புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. கோவிட் காலத்தில் எல்லோரும் வீட்டில் அடங்கி இருந்தோம். அப்போதுதான் புத்தகங்கள் அதிகம் வாசித்தேன். இயக்குநர் கரு பழனியப்பன் நிறைய புத்தகங்கள் தந்து வாசிக்கச் சொல்வார்.

    கலைஞரின் 90-வது பிறந்தநாளின்போது, கவிப்பேரரசு வைரமுத்துவின் ஏற்பாட்டில் 90 கவிஞர்கள் கலைஞரை சந்தித்து வாழ்த்தினார்கள். அப்போது, யுகபாரதி அவர் எழுதிய 'நேற்றைய காற்று' புத்தகத்தை கலைஞருக்கு பரிசாக கொடுத்தார்.

    அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்ட கலைஞர், இது என்ன புத்தகம் என்று கேட்கிறார். பாடலாசிரியர்களை பற்றிய புத்தகம் என்று யுகபாரதி சொல்கிறார்.

    உடனே, 'இதில் நானிருக்கிறேனா' என்று கலைஞர் கேட்கிறார். 'நீங்க இல்லாமலா?' என்று பதில் சொல்கிறார் யுகபாரதி.

    இசைக்கு என்னென்ன குணங்கள் இருக்கிறதோ அந்த குணங்கள் அனைத்தும் கலைஞரிடம் இருந்தது.

    இசைக்கு நல்ல குரல் வளம் தேவை. ஏறத்தாழ 80 ஆண்டுகள் தமிழர்களை ஆட்கொண்டது 'உடன்பிறப்பே'என்றழைத்த கலைஞரின் வெண்கலக்குரல் தான். இசை எங்கும் நிறைந்திருப்பதைப் போல, உலகம் முழுவதும் கலைஞர் எங்கும் நிறைந்திருக்கிறார்.

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், வாகை சந்திரசேகர், உறுப்பினர் செயலர், மேயர் பிரியாராஜன், எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, அரவிந்த் ரமேஷ், மயிலை வேலு, காரம்பாக்கம் கணபதி, ஜெ.கருணாநிதி, கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, எபினேசர், பிரபாகரராஜா, துணைமேயர் மகேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் சிற்றரசு, இளைய அருணா, மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயா, உள்பட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார்.
    • பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

    சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:-

    கலைஞர் சினிமாவிலேயே இருந்திருந்தால், இன்னும் பல எம்.ஜி.ஆர்.களையும் சிவாஜிகளையும் உருவாக்கி இருப்பார். ஆனால் சினிமா உலகம் கொடுத்து வைக்கவில்லை. அவரை அரசியல் எடுத்துக்கொண்டது. எழுத்து, பேச்சில் வித்தகராக திகழ்ந்தவர் கலைஞர். எழுத்து இல்லையென்றால் மதம், புராணம், வரலாறு, விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசு என எதுவும் இல்லை. இயற்கை கொடுத்த சக்தி எழுத்து. அவரது வசனத்தில் நான் நடிக்கவே பயந்த காலம் உண்டு.

    மு.க.ஸ்டாலினை 1974-ல் இருந்து எனக்கு தெரியும். பிரசார காலங்களில் மு.க.ஸ்டாலினின் பேச்சை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்த ரசிகர்களில் நானும் ஒருவன். எம்.ஜி.ஆர்., சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நடிகர்களாக்கினார். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன் படங்கள் மூலமாக கிடைத்த வருமானத்தை கொண்டு சென்னை கோபாலபுரத்தில் வீடு வாங்கினார். அந்த வீட்டில் தான் இறுதிகாலம் வரை எளிமையாக வாழ்ந்தார். அவரை போல மு.க.ஸ்டாலினும் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்.

    தன்னை விமர்சனம் செய்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மருத்துவ உதவிக்கு பணம் கொடுத்து உதவி செய்தவர் கலைஞர். தன்னை மிக மோசமாக விமர்சனம் செய்த பத்திரிகையாளரை நலம் விசாரித்தே, தலை வணங்கச் செய்தவர் கலைஞர். அந்த பத்திரிகையாளர் பெயர் சோ ராமசாமி, பொதுக்கூட்டத்தில் அவரை விமர்சனம் செய்த கட்சிக்காரரை கண்டித்து அடக்கியவர் எம்.ஜி.ஆர். கடவுள் நம்பிக்கைக்காரரான ஆன்மீகவாதி சத்ய சாய்பாபா, கலைஞரை வீடு தேடி சென்று சந்தித்து பேசினார்.

    எல்லாவற்றையும் விட தேர்தலின்போது இரட்டை இலைக்கு ஒரு முன்னணி நடிகர் ஓட்டு போட்டார். ஆனால் அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டது தெரிந்தும் அவரது புதிய படத்தை பார்க்க கலைஞர் அவருக்கு அழைப்பு விடுத்தார். குளிர் ஜுரம் என்று சொல்லியும் அந்த நடிகரை கட்டாயமாக அழைத்து படத்தைப் பார்த்தார். அந்த நடிகர் நான்தான். சூரியன் பக்கத்தில் அமர்ந்தால் குளிர் ஜுரம் போய்விடும் என்று நகைச்சுவையாக அவர் அன்று பேசியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது எனது பாக்கியம் என்று பேசினார்.

    • குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

    சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.

    இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி, விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை வெள்ளம் காரணமாக கருணாநிதி நூற்றாண்டு விழா ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி நடைபெறும் 'கலைஞர் - 100' என்ற விழா, வருகிற 24-ந்தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது மழை வெள்ளம் காரணமாக இந்த விழா, ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    எனவே ஏற்கனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த 23, 24-ந்தேதிகளில் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 6-ந்தேதி விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது

    மேலும் ஜனவரி 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடன காட்சிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்டாய அவசியம் இருந்தால், சிறப்பு அனுமதி பெற்று பாடல் காட்சிகள் அமைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு.
    • இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள்.

    திருச்சி:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி-கரூர் பைபாஸ்சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விழாவில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, கல்வெட்டை திறந்து வைத்து, கொடியை ஏற்றி வைத்தார்.

    இதனை தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. அணிகளுக்கான கருத்துரை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    100 அடி உயர கொடிக்கம்பத்தை முதன்முதலில் இங்கு பார்த்து அசந்து போனேன். ஆயிரம் கொடிகள் இருந்தாலும் தி.மு.க. கொடிக்கென்று தனி சிறப்பு உண்டு. இது கலைஞரின் ரத்தத்தில் உருவான கொடி என பலமுறை பேசி உள்ளேன். 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி பறப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தி.மு.க. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடம் திருச்சி தான். திருச்சியை தலைநகராக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். விரும்பினார். எனக்கு அ.தி.மு.க. பிடிக்காவிட்டாலும், அந்த கருத்து பிடித்து இருந்தது.

    இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இருப்பதால் அவர்கள் நமக்கு அந்நியர்கள் போல் இருக்கிறார்கள். இந்தியாவின் தலைநகரம் ஐதராபாத்தில் தான் இருக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தின் தலைநகரம் மத்தியில் தான் இருக்க வேண்டும். அதற்கு திருச்சி தான் சரியாக இருக்கும். அப்படியும் ஒரு காலத்தில் நிகழும். தி.மு.க.வுக்கு வந்த சோதனைகள் போல் மற்ற கட்சிகளுக்கு வந்து இருந்தால், இந்நேரம் அந்த கட்சிகள் அழிந்து போய் இருக்கும்.

    தி.மு.க. தொண்டர்கள் தான் கட்சியின் காவல் தெய்வங்கள். எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி தி.மு.க.தான். தற்போதைய தி.மு.க. தலைமை வருங்கால தலைமையை உருவாக்குமானால், அந்த தலைவரையும் எனது தோள் மீது வைத்து தாங்குவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

    • கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.
    • மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி பிரமாண்ட விழா சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற டிசம்பர் மாதம் 24-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

    நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திர பிரகாஷ், கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர் ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக அடுத்த மாதம் 24-ந்தேதி (ஞாயிறு) அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அகில இந்திய அளவில் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி, மராத்தி, ஒரியா, குஜராத்தி என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.

    கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.

    இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

    மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், விஜய், அஜித், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்தபட்சம் 35,000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது.

    இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

    நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், டிரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.

    இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
    • அவற்றுள் ஒன்றாக மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் மகளிருக்கு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பில் ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக மகளிர் மேம்பாட்டில் கலைஞரின் பங்கு என்ற தலைப்பில் மகளிருக்கு பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. நாளை மறுநாள்(சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட தலைப்பில் 3 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கும், முன்பதிவு செய்யவும் 7502433751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள லாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தெரி வித்துள்ளார்.

    • கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    • ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை நடக்கிறது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒருவாரம் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. தி.மு.க. மகளிர் அணி சார்பில் அடுத்த மாதம் 14-ந்தேதி கருத்தரங்கு நடைபெறுகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட தேசிய பெண் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    தி.மு.க. துணை பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாளை (24-ந்தேதி) மாலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கும் கனிமொழி எம்.பி. பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

    • ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.
    • எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகியவை இணைந்து ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான ஒத்திகை நேற்று (சனிக்கிழமை) மாலை பழவேற்காடு கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் நடைபெற்றது.

    அதில் தன்னார்வலர்கள் மற்றும் செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் எலைட் பள்ளியின் 100 மாணவர்களும் பள்ளியின் தாளாளர் ஜெபஸ்டின் மற்றும் இருபதுக்கும் மேற் பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    அப்போது ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு 9,300 பனை விதைகளை நடவு செய்தனர். இதனை செயல்படுத்திட எவ்வளவு நேரம் செலவாகிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த ஒத்திகை நடைபெற்றது.

    மேலும் ஒரு பனை விதைக்கும் இன்னொரு பனை விதைக்கும் ஒரு மீட்டர் தூரம் இருக்க வேண்டும் பனை விதைகளை எப்படி குறுக்கும் நெடுக்குமாக நட வேண்டும் விதையை எந்த நிலையில் குழியில் வைக்க வேண்டும் போன்ற அனைத்து செய்முறை விளக்கங்களும் செய்து காட்டப்பட்டன.

    இதனை பின்பற்றியே, ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடபட்டுள்ளது.

    ஒத்திகை நிகழ்ச்சியை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணனின் மகனும், பனை ஆர்வலருமான கார்த்திக் நாராயணன் தலைமை தாங்கி விதை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கிரீன்நீடா அமைப்பினுடைய தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜ வேலு, இணை ஒருங்கிணைப்பாளர் ரபிக் முகமது, திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன் மற்றும் பனை வாரிய அலுவலர்கள் குமரன், ஜெபராஜ் டேவிட், தன்னார்வலர் பொன்னேரி பாலகிருஷ்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், முகப்பேர் ராஜ்குமார், மதுரவாயல் அலெக்ஸ் , ஆர்.கே நகர் ராஜேஷ், பழவேற்காடு சுரேஷ்குமார், மகளிர் ஆர்வலர்கள் ஆனந்தி, விஜயலட்சுமி, முருகேஸ்வரி,சிவசாந்தி, ராஜ புஷ்பம், சாந்தி, கவுசல்யா உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • தங்கை கனிமொழி முன்னெடுக்கும் “கலைஞர் 100”-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.
    • செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை கனிமொழி முன்னெடுக்கும் "கலைஞர் 100"-ல் வினாடி-வினா போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ம் நாள் தொடங்கவுள்ள உள்ள கலைஞர் 100 வினாடி வினா போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டத்தில் அமைச்சர்கள், விழாக்குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
    • உலக புகைப்பட தினத்தையொட்டி பத்திரிகை புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

    சென்னை:

    கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தி.மு.க. சார்பில் சிறப்பாக நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள், விழாக்குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    முன்னதாக, உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    ×