என் மலர்
நீங்கள் தேடியது "President Droupadi Murmu"
- திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
திருப்பதி:
ஜனாதிபதி நேற்று மாலை 4.30 மணிக்கு தனது மகள் இதி ஸ்ரீ முர்மு மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு அறநிலையத்துறை மந்திரி ராம நாராயண ரெட்டி, உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, கலெக்டர் வெங்கடேஸ்வரர், எம்.எல்.ஏ. புலிவர்த்தி நானி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் சாலை மார்க்கமாக பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருப்பதி மலைக்கு வந்து பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 9.30 மணி அளவில் வராஹ சாமியை தரிசனம் செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி வரவேற்பு அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து திரவுபதி முர்மு குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருப்பதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.
- இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக வல்லபாய் படேல் இருந்தார்.
இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
டெல்லியில் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் ஒரு சிறந்த தேசபக்தர்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பியவர். அவர் தனது அசைக்க முடியாத உறுதிப்பாடு, அசாத்திய தைரியம் மற்றும் திறமையான தலைமை மூலம் நாட்டை ஒன்றிணைக்கும் வரலாற்றுப் பணியை நிறைவேற்றினார். அவரது அர்ப்பணிப்பும் தேசிய சேவை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, நாம் ஒன்றுபட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது. இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு பின்னால் உந்து சக்தியாக அவர் இருந்தார், இதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில் அதன் விதியை வடிவமைத்தார். தேசிய ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் பொது சேவை மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இளம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா என்ற அவரது தொலைநோக்கு பார்வையை நிலைநிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
- ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
- அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
ஏப்ரல் 22-ந்தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்தார்.
இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய ஜனாதிபதியாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் சிறப்பு சாதனை படைக்கும் பெண்மணியாகவும் திரவுபதி முர்மு பதிவாகி உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
- மலையேறி செல்லும் போது, அவர் சோர்வடைந்தால் சன்னிதானத்துக்கு டோலியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் மாதாந்திர பூஜையும் நடைபெறும். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது.
அதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 22-ந்தேதி சபரிமலைக்கு வருகிறார். அவர் கடந்த மே மாதமே சபரிமலைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அப்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் சிறப்பு விமானத்தில் வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், பின்பு பம்பைக்கு காரில் செல்கிறார்.
பம்பையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு இருமுடி கட்டுடன் மலையேறி செல்கிறார். அதே நேரத்தில் மலையேறி செல்லும் போது, அவர் சோர்வடைந்தால் சன்னிதானத்துக்கு டோலியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதற்காக 5 டோலிக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் அதனை தூக்கிச் செல்லக்கூடிய தொழிலாளர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல் முதல் பம்பை வரையிலும், பம்பை முதல் சன்னிதானம் வரையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதனை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதிக்கான சிறப்பு பாதுகாப்பு குழுவினர் இந்த வாரம் சபரிமலைக்கு வருகிறார்கள்.
- உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
- மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும்.
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தால் மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரெயில் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இது உலகின் மிக ஆடம்பரமான ரெயில்களில் ஒன்றாகும்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மகாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு சிறப்பு ரெயிலில் பயணம் செய்தார். அவர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் மதுராவுக்கு செல்ல இந்த ரெயிலில் பயணம் மேற்கொண்டார். ஜனாதிபதி மற்றும் அவரது ஊழியர்களுக்கான ஜனாதிபதி அறை, டீலக்ஸ் அறைகள், உணவகங்கள், ஓய்வறைகளைக் கொண்ட பெட்டிகள் சொகுசு ரெயிலில் உள்ளன.
இன்று காலை 8 மணிக்கு திரவுபதி முர்மு பயணம் செய்த மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரபிரதேசத்தின் பிருந்தாவன் சாலை ரெயில் நிலையத்தை காலை 10 மணிக்கு சென்றடைந்தது.
பிருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீபாங்கே பிகாரி கோவில், நிதிவன்-குப்ஜ கிருஷ்ணா கோவில் ஆகியவற்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனம் மற்றும் பூஜை செய்தார். பின்னர் அவர் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் வழிபடுகிறார். அதன்பின் மாலையில் அந்த சிறப்பு ரெயிலில் டெல்லிக்கு புறப்படுகிறார்.
இதுதொடர்பாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, மகாராஜா எக்ஸ்பிரஸ் ரெயில் அமைப்பில், ஜனாதிபதி சூட், டீலக்ஸ் சூட்கள், உணவகங்கள், ஓய்வறைகள் உள்ளிட்ட 12 பெட்டிகள் இருக்கும். மூத்த ரெயில்வே ஊழியர்களுக்காக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. தடையற்ற சேவைகளை உறுதி செய்வதற்காக 2 என்ஜின்கள் இருக்கும். ஒரு என்ஜின் இயங்கும் அதே வேளையில், மற்றொரு என்ஜின் தொழில்நுட்ப சிக்கல்களை சரிசெய்ய உடன் பயணிக்கும் என்றார். ஜனாதிபதியின் இந்த பயணத்தை தொடர்ந்து ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பிற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டன.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு ரெயில் மூலம் ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து தனது சொந்த ஊரான ராய்ரங்பூருக்குப் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர உள்ளார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு எந்த நாளில் வந்தாலும் அவரை வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள தேவசம்போர்டு மந்திரி வாசவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சபரிமலை வர உள்ளதாக தெரிவித்தார்.
துலாசம பூஜைக்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வர இருப்பதாகவும், இது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் வந்துள்ள நிலையில், சரியான தேதி விவரம் தெரிய வரவில்லை. அதேநேரம் அவர் எந்த நாளில் வந்தாலும் வரவேற்க கேரள அரசும் தேவசம் வாரியமும் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.
- தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்.
- இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
சென்னை:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார்.
மைசூருவில் இருந்து சிறப்பு இந்திய விமானப் படை விமானம் மூலம் மதியம் 11.40 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர மேயர் பிரியா, டி .ஆர்.பாலு எம்.பி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி. வெங்கட்ராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், இந்திய ராணுவத்தின் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
பின்னர் அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தம்பாக்கம் சென்றார். அங்கு உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில் மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் ஆர்.என். ரவி ஜனாதிபதிக்கு விருந்தளித்து உபசரிக்கிறார். இன்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் டிரோன்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, சென்னையில் ஜனாதிபதி பயணம் செய்யும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பின்னர் நாளை காலை 9:30 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
இந்த விழா நிறைவடைந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு செல்கிறார். அங்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். ரங்கநாதரை தரிசித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் மீண்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து தனி விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஸ்ரீரங்கம் பஞ்சகரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் நேற்று ஹெலிகாப்டரை இறக்கி ராணுவ அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு இன்று முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி கவர்னர் மாளிகை, திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் திருவாரூர் நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஜனாதிபதி சென்னை மற்றும் திருச்சி வந்து செல்லும் அவரது பயணத்திட்ட வழித்தடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள சரக்கு மற்றும் கூரியர் சேவைகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் சஞ்சய் சேத் மரியாதை ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
- தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.
- கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தானது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற செப்டம்பரில் நடைபெற உள்ளது.
செப்டம்பர் 3-ந்தேதி நடைபெறும் 10-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பார் என தமிழ்நாடு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.
கடந்தாண்டு மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதியின் வருகை கடைசி நேரத்தில் ரத்தான நிலையில் இந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.
- ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் 14 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், மசோதா ஒப்புதலுக்கு காலநிர்ணயம் குறித்து உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேள்வி எழுப்பிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில்,
* மாநில சுயாட்சியை காக்க அனைத்து மாநிலங்களும் உறுதிபூண வேண்டும்.
* இந்திய அரசியலமைப்பு சட்ட கட்டமைப்பு பாதுகாத்திட மாநில முதல்வர்கள் முன்வர வேண்டும்.
* ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே ஜனாதிபதி குறிப்பின் நோக்கம்.
* ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சீர்குலைக்க வெளிப்படையாக பா.ஜ.க. முயற்சிக்கிறது.
* நாட்டின் கூட்டாட்சி அமைப்பு, மாநில சுயாட்சியை பாதுகாக்க முன்வர வேண்டும்.
* ஜனாதிபதி அனுப்பிய குறிப்பை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
* மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதிக்க ஆளுநர் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
* மாநில அரசுக்கு எதிராக பிடிவாதப்போக்கை ஆளுநர்கள் கடைபிடித்தால் இந்த தீர்ப்பு உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று மாலை, அசாம் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருந்தார்.
- அசாம் மாநில கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று மாலை, அசாம் மாநிலத்துக்கு 2 நாட்கள் பயணமாக செல்ல இருந்தார்.
நாளை நடக்கும் மாநில அரசு விழாவில், நடன கலைஞர் சோனல் மான்சிங்குக்கு விருது வழங்க இருந்தார். கவுகாத்தி பல்கலைக்கழக 32-வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்ள இருந்தார்.
ஆனால், காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக ஜனாதிபதி தனது அசாம் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
இதுதொடர்பாக அசாம் மாநில கவர்னர் மாளிகைக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பிரதமா் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் கான்பூருக்கு இன்று பயணம் மேற்கொண்டு ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பிரதமரின் கான்பூா் பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன.
- பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் மாதம்தோறும் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்தபடி உள்ளனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற மே மாதத்தின் மத்தியில் மாதாந்திர பூஜை நடைபெறும் போது சபரிமலைக்கு வர திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.
சபரிமலை செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் ஜனாதிபதி, பின்பு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நிலக்கல்லுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்லும் அவர், பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள், திருவிதாங்கூர் தேவசம்போர்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
மேலும் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதை மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்திருக்கின்றனர்.






