search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம்"

    • சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன்படி பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில்,அங்காளம்மன் கோவில், தண்டபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.
    • தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     பல்லடம் :

    பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் பிறந்தநாள் விழா சித்தம்பலம் பிரிவில் கொண்டாடப்பட்டது.

    ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் தி.மு.க. கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நிர்வாகிகள் சாமிநாதன், சசிகுமார் இளைஞர் அணி ராஜேஸ்வரன், பாலகுமார், குப்புசாமி, பிரகாஷ், மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கனிமொழி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    • முதலிடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு ரூ.10,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
    • பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சேக் மக்தூம், பொருளாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் பூப்பந்தாட்ட குழு நடத்திய 9ம் ஆண்டு ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு ரூ.10,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.2-வது இடம் பெற்ற திருப்பூர் ஹிமாலயா அணிக்கு ரூ.7,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 3-வது இடம் பெற்ற கோவை நஞ்சுண்டாபுரம் அணிக்கு ரூ.5,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 4-வது இடம் பெற்ற பல்லடம் பூப்பந்தாட்ட குழு அணிக்கு ரூ.3,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் ராம். கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், குமரப்பன்,வேல்மணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சேக் மக்தூம், பொருளாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    • கடந்த 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
    • ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார்.

    பல்லடம்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது36). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் கடந்த 2010 ம் ஆண்டு காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் ஜீப் ஓட்டுனராக அரசு பணியில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ம் ஆண்டு பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டு ஜீப் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி திருப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இவர் பணி புரிந்த பல்லடம் தாலுகா அலுவலகத்தில் இருந்து முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால் இன்னமும் ஊதியச்சான்று கிடைக்காததால் தற்போது பணியாற்றும் இடத்திலிருந்து சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் பஸ்சில் செல்வதற்கு கூட பணம் இல்லாததால் தினமும் சூலூர் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூர் கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று விட்டு இரவு மீண்டும் 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பிரயாணம் செய்து வீடு வந்து சேர்வதாக வேதனையுடன் அவர் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து பணியாற்றுகிறேன். அக்டோபர் மாதம் 17-ந் தேதி திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரின் ஜீப் டிரைவராக இடமாறுதல் செய்யப்பட்டேன். பணியில் சேரும்போது முன் ஊதியச் சான்று வழங்க வேண்டும். இதன்படி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் முன் ஊதியச் சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் கடந்த 83 நாட்களாகியும், எனக்கு இன்னும் முன் ஊதியச் சான்று கிடைக்கவில்லை.மேலும் அக்டோபர் 1-ல் இருந்து 17ந் தேதி வரை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றியதற்கு சம்பளமும் வரவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் இன்னும் எனக்கு முன் ஊதியச் சான்று தரப்படாததால் தற்போது பணியில் சேர்ந்த இடத்தில் சம்பளம் எனக்குத் தரப்படவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்படுகிறேன். தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி சமாளித்தேன். தற்போது பஸ்சுக்கு கூட பணம் இல்லாததால் சைக்கிளில் தினமும் காங்கேயம் பாளையத்திலிருந்து திருப்பூருக்கு வந்து செல்கிறேன். சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்வதால் கடும் உடல் வலி ஏற்படுகிறது. எனவே எனக்கு உடனடியாக பாக்கி சம்பளமும் முன் ஊதியச் சான்றும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • நொச்சிபாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது.
    • கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கருப்பராயன் கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, நொச்சிபாளையம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இதன் அருகில் கோவிலுக்கு சொந்தமாக 8.99 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் ஊர் கட்டுப்பாடு குத்தகை அடிப்படையில் கிராம மக்களில் சிலர் விவசாயம் செய்து வந்தோம். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கருப்பராயன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்றது. அதன்பிறகும் விவசாயம் செய்து கோவிலுக்கு குத்தகை செலுத்தி வந்தோம்.

    இந்த நிலையில் கடந்த வருடத்தில் கோவில் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் கட்டுவதற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறநிலையத் துறையினர் கூறுகின்றனர். இந்த நிலையில் கோவில் நிலத்தை சுற்றி இருந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டது. வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நடுவதற்காக குழிகளும் தோண்டப்பட்டது.அதன்பின்னர் கடந்த ஒரு வருடமாக யாரும் இங்கு எட்டிப் பார்ப்பதில்லை. இந்த நிலையில் கம்பி வேலிகள் பழுதடைந்து விழுந்ததால், அந்த கோவில் நிலத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. கோவில் நிலம் குடிமகன்களின் பாராக மாறிவிட்டது. மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் மது பாட்டில்கள் கிடக்கின்றன. இதனைப் பார்த்து எங்களுக்கு வேதனையாக உள்ளது. தற்பொழுது இந்த கோவில் நிலம் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதா, அல்லது காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டும் எந்தத் தகவலும் இல்லாததால், தகவல் உரிமைச் சட்டத்தில் கூட கேட்டுள்ளோம். ஆனால் அதிலும் முறையான தகவல்கள் இல்லை. கண்ணெதிரே கோவில் நிலம் சீரழிவதை கண்டு வேதனையாக உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • பல்லடம் அரசு மருத்துவமனையில் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ. நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு மருத்துவமனையில் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று,அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உள்நோயாளி சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு கழிவறை உள்ளது.எனவும், கூடுதலாக கழிவறை கட்டி தர வேண்டும் என்றனர். மேலும் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவதால் அதில் காயம் அடைந்து வருவோருக்கு இங்கு முதலுதவி அளித்து கோவை,திருப்பூருக்கு அனுப்பி வைக்கின்றனர்.அங்கு சென்றடைவதற்குள் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.அவற்றை தவிர்க்க விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அரசு மருத்துவமனை டாக்டர்களுடன் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்.எல்.ஏ.,கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அவரிடம் தலைமை டாக்டர் ராமசாமி கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மருத்துவமனை திருப்பூர் மாவட்டத்தில் தேசிய தர உறுதி தரநிலைகள் சான்றிதழுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தரம் மேம்படும் வகையில், மேற்கண்ட சான்றிதழ் செயல்முறைக்கு நாங்கள் தயாராகி வருகிறோம்.இது சம்பந்தமாக, பல பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்றும் மதிப்பிடப்பட்ட செலவுகள் பின் வருமாறு:- 5000 சதுர அடிக்கு ரூ.5லட்சம் மதிப்பில் பேவர்ஸ் பிளாக்குகள் அமைத்தல் பணி,ரூ.1 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. விளக்கு உள்ளிட்ட மின் சாதனப் பணிகள், மற்றும் நோயாளிகள் பரிசோதனை விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் அமைத்தல், ரூ. 1லட்சம் மதிப்பில் அலமாரிகள் மற்றும் ஸ்டீல் ரேக்குகளை வாங்குதல், ரூ.50 ஆயிரம் மதிப்பில் பிளம்பிங், கார்பென்ட்ரி மற்றும் மேசன் பணி,ரூ. 40 ஆயிரம் மதிப்பில் சமையலறை மற்றும் இரத்த வங்கிக்கான குளிர்சாதன பெட்டி, ரூ.1லட்சம் மதிப்பில் நோயாளிகளுக்கான கைத்தறி படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் ஓவியம் வரைதல், கம்ப்யூட்டர் ,சிபியு வாங்குதல் உள்ளிட்டவை வாங்கி தர உதவ வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,கூறுகையில், பல்லடம் நகரம் வளர்ந்து வரும் தொழில் நகரமாகும் இதனை சுற்றியுள்ள பகுதிகளும் வெகுவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. இந்த சாலையில் விபத்துகள் நிகழ்ந்தால் அருகாமையில் உள்ள பல்லடம் அரசு மருத்துமனைக்கு தான் கொண்டு வருகின்றனர். இங்கு காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து கோவை, திருப்பூருக்கு பரிந்துரை செய்யும் மையமாக தான் தற்போது இருந்து வருகிறது. இங்கு சி.டி. ஸ்கேன் வசதி, எலும்புமுறிவு மருத்துவர், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி இந்த மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தகுதி உயர்வு அளிக்க வேண்டும்.

    91 படுக்கை வசதி மட்டுமே உள்ளது. அதனை 100க்கு மேல் உயர்த்த வேண்டும். தற்போது உள்ள கட்டடங்கள் பழையவையாக உள்ளன. அவற்றுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும். தேவையான இடங்களில் கழிப்பறை போதிய அளவில் கட்டப்பட வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன்.

    பல்லடம் நகரில் அதிகபடியான போக்குவரத்து பிரச்சனையால் வாகன ஒட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல்லடம் நகரில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதே போல் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.45 கோடி மதிப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளேன். இது குறித்து சட்டமன்ற கூட்டத்திலும் பல முறை பேசியுள்ளேன். தொடர்ந்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார். இந்த ஆய்வின் போது பல்லடம் அரசு தலைமை டாக்டர் ராமசாமி, டாக்டர் சுபா, ரமேஷ், மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் சித்துராஜ், பானு பழனிசாமி, துரைக்கண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் ப.நடராஜன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கந்தசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ரமேஷ், ராமு, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கட்டிடங்கள் சீரமைக்காமல், வர்ணம் பூசாமல் பழுதடைந்து உள்ளது.
    • நடுவேலம்பாளையத்தில் கட்டடம் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளன.

    பல்லடம் :

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- பல்லடம் வட்டாரத்தில், கோவை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து கடந்த 2009-2014-ம் ஆண்டுகளில் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஏழை, எளிய மக்கள் தங்களுடைய வீட்டு விஷேசங்களுக்கு குடியிருப்புகளுக்கு அருகிலேயே பயன்படுத்தும் வகையில் நடுவேலம்பாளையம் 63.வேலம்பாளையம், காளிவேலம்பட்டி,சுக்கம்பாளையம், வெங்கிட்டாபுரம், உப்பிலிபாளையம் ஆகிய இடங்களில் சமுதாய நலக்கூடங்கள் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடங்கள் சீரமைக்காமல், வர்ணம் பூசாமல் பழுதடைந்து உள்ளது.குறிப்பாக பூமலூர் ஊராட்சி நடுவேலம்பாளையத்தில் கட்டடம் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளன.

    இந்த ஊர்களில் உள்ள சமுதாய நலக்கூடங்களை சீரமைத்து, பழுதுபார்த்து, வர்ணம் பூசி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்து தர ஊராட்சி மன்ற நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது.
    • அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    பல்லடம் :

    பொங்கலூர் எஸ். ஏ. பி ஸ்டார் ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 60) என்பவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருடு போனது. அதுபோல் கொடுவாய், வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த அருணகிரி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து இரண்டேகால் பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது. மேலும் பொங்கலூர் ஏ.எல்.ஆர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.90 ஆயிரம் திருடு போனது.

    அதுபோல் ஆண்டிபாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அவினாசி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட கோவை வெள்ளமடை, வையம்பாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் பால்கார செந்தில் (52), திருப்பூர், சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன் என்பவரது மகன் சுரேந்திரன் (38) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

    அது போல் இந்த திருட்டுச் சம்பவத்தில் நகைகளை வாங்கிய கோவை பிரபு நகரை சேர்ந்த பழனியப்பன் என்பவரது மகன் செந்தில்குமார் (49) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 10.50 தங்க நகைகள் மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் நீதிமன்றத்தில் 3 பேரையும் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய பால்கார செந்திலின் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
    • 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி அம்மாபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. கால்நடைகளுக்கான மடி நோய் பராமரிப்பு, தடுப்பூசி போடுதல், கிசான் அட்டை உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துசிகிச்சை அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்போருக்கு சான்றிதழ் மற்றும் கால்நடை மருந்துகளை பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். இதில் மாணிக்காபுரம் ஊராட்சி தலைவர் நந்தினி சண்முகசுந்தரம், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன்,கால்நடை மருத்துவர் அன்பரசு, அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது.
    • 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் சட்டமன்ற தொகுதி 9.11.22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 1லட்சத்து90 ஆயிரத்து379 ஆண்களும், 1லட்சத்து94ஆயிரத்து38 பெண்களும், 69 திருநங்கைகளும் ஆக மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து486 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த 2 நாள் முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. அதில் நேரடியாகவும் மற்றும் இணையதளம் மூலமாகவும் 1841 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

    அதே போல் 290 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 816 பேர் விண்ணப்பித்துள்ளனர். முகாமில் நேரடியாக 2218 விண்ணப்பங்களும், இணையதளம் மூலமாக 729 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 2947 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தெரிவித்தார்.

    மேலும் வரைவு வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு வருகிற 8.12.22 வரை அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். வருகிற 26-ந் தேதி மற்றும் 27-ந் தேதி ஆகிய 2 நாட்களும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5.1.23 அன்று வெளியிடப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கிடையே பல்லடம் நகராட்சி பகுதியில் 253 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், ஒருவர் நீக்கத்திற்கும்,திருத்தம் மற்றும் குடிமாற்றத்திற்காக 65 பேரும் ஆக மொத்தம் 319 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம் தெரிவித்தார்.

    • காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்து காரை விட்டு இறங்கியதால் தீ விபத்தில் இருந்து இருவரும் உயிர் தப்பினர்.

    பல்லடம்:

    திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 70 ). இவர் தனது மனைவியுடன் திருப்பூரிலிருந்து பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே காரை நிறுத்தி இயற்கை உபாதை கழித்துவிட்டு மீண்டும் காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென முன்பக்க என்ஜினில் இருந்து புகையுடன் தீப்பிடித்தது. இதனை கண்டு கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்து காரை விட்டு இறங்கியதால் தீ விபத்தில் இருந்து இருவரும் உயிர் தப்பினர்.இந்த நிலையில் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மங்கலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று சென்றது.
    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மங்கலத்தில் இருந்து தாராபுரம் நோக்கி கார் ஒன்று சென்றது. பல்லடம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

    இந்தநிலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அக்கம்- பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

    ×