search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு"

    • ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருவிழா என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார்.
    • 2026-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் புரட்சி ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும் என்பது தான் விதி.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாபெரும் தலைவரான எம்.ஜி.ஆருக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது நல்ல விஷயம்தானே. அதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை. இப்போது அல்ல, எப்போதும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்திவிட்டாரே...

    ஜல்லிக்கட்டு ஒரு சனாதன திருவிழா என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். தமிழர்களின் பெருமையே வீரமும், காதலும்தான். வீரத்தின் சின்னம் ஜல்லிக்கட்டு.

    அண்ணாமலையை முதலமைச்சராக்க ரஜினிகாந்த் விருப்பப்பட்டதாக துக்ளக் குருமூர்த்தி கூறியிருக்கிறாரே.... இதற்கான பதிலை ரஜினிகாந்த்தான் சொல்ல வேண்டும். ரஜினிகாந்த் எதுவுமே சொல்லாத சூழலில், அவர் சொன்னதாக குருமூர்த்திதான் இதனை கூறியுள்ளார். ரஜினி சொல்லட்டும், அதன்பிறகு நான் சொல்கிறேன். அறையில் நடந்ததை அம்பலத்தில் சொல்லட்டும். நாங்கள் பதில் அளிக்கிறோம். எது எப்படி இருந்தாலும், அது இலவு காத்த கிளி, அது நடக்காத விஷயம். 2026-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் புரட்சி ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரும் என்பது தான் விதி.

    தமிழகத்தில் தாமரையை மலர வைக்க எவ்வளவோ முயற்சிக்கிறார்கள். அது அவர்களது ஆசை. ஆனால் இரட்டை இலை பெரியளவில் துளிர்த்து பசுமையாக காட்சியளிக்கிறது. அதுகிட்ட எதுவுமே எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 810 காளைகள் பங்கேற்றன.
    • ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு.

    உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

    இன்று காலை 7 மணிக்கு துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது.

    மொத்தம் 810 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    அமைச்சர் மூர்த்தியின் அறிவுறுத்தல்படி எஞ்சிய காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

    18 காளைகளை அடக்கி கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் இரண்டாம் பரிசு பெற்றார்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக மேலூர் குணா என்பவரின் மாடு வென்று கார் பரிசு பெற்றுள்ளது.

    சிறந்த காளையாக 2ம் பரிசுக்கு மதுரை காமராஜபுரம் வெள்ளைக்காளி சௌந்தர் என்பவரின் மாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது முதல் பரிசு பெறும் கருப்பாயூரணி கார்த்தி, 2022ம் ஆண்டிலும் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டனர்.
    • வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

    கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை வரும் 24ம் தேதி நிறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை அலங்காநல்லூர் கீழக்கரைக்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    தமிழரின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று, அதில் திமில் பெருத்த 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளையர்கள் களத்தில் சந்தித்துள்ளனர்.

    புழுதி பறந்த நிலத்தில் நடந்த பண்பாட்டு நிகழ்வை, சுமார் 3 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

    வெற்றி பெற்ற காளைகளும் - வீரர்களும் பரிசுகள் பெற்றார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன்.

    தமிழரின் வீரவிளையாட்டை ஊக்குவிப்போம்! எக்காலத்திலும் பண்பாட்டைப் காப்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.
    • நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தமிழர் திருநாளான பொங்கல் வந்துவிட்டாலே கிராமங்கள் களை கட்ட தொடங்கிவிடும். 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் பல்வேறு நூதன போட்டிகள் நடத்தி கிராம மக்கள் அசத்துவது வழக்கம்.

    மாடுகளை பிடிக்கும் வீர விளயாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பொங்கல் விழாவில் நடைபெற்ற பல்வேறு நூதன போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வார்கள். இந்த மோதலில் உடையும் தேங்காயை, மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர். ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் விளையாட்டு திடலில் போர் தேங்காய் உடைக்கும் விளையாட்டு போட்டி நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து முன்பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர்.

    தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர். பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் வைத்து மோதி உடைத்தனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் சென்றனர். போர் தேங்காய் பரிசுப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாவடுகுறிச்சி முத்துக்குமார் அதிக தேங்காய்களை உடைத்து முதல் பரிசு ரூ.4004 மற்றும் சுழற்கோப்பை பெற்றார்.

    இதேபோல செரியலூரில் நேற்று நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், இது எங்களின் சந்தோசத்துக்காக நடத்தப்படும் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்க போர்காய் தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து தேங்காய்கள் வாங்க வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பே தேங்காய் வாங்கிவிட்டோம் என்றனர்.


    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகை மலை ஊராட்சி, கள்ளை தொட்டியப்பட்டியில் கம்பளத்து நாயக்கர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வருடாந்தோறும் தை மாதம் 1-ந்தேதி கள்ளையில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக ஊர் கவுண்டர் முன்னிலையில் பரிவட்டம் வாங்கி எட்டுப்பட்டி பொதுமக்கள் முன்பாக மாரியம்மன் கோவிலை வலம் வந்து சுற்றி மாடுகளை விரட்டி மறித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய கலையான தேவராட்டம், புல்லாங்குழல் வாசித்தல், கோமாளி ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது,

    விழாவில் கல்லை ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாடு மறித்தல் நிகழ்ச்சியில் 70 களை மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கண்டுகளித்தனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    • மாடு முட்டிய அதிர்ச்சியில் போலீஸ்காரரும் திடீரென மைதானத்துக்குள் மயங்கி விட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் திமிலை உயர்த்தி சீறிவரும் காளைகளை மல்லுக்கட்டி மடக்கும் காளையர்கள் கூட்டமும் ஆர்ப்பரித்து வருகிறது.

    போட்டியில் ஜெயிக்கும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்க காசுகள், மோட்டார் சைக்கிள், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த போட்டியை ஒழுங்குபடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காளைகளை வரிசைப்படுத்துவதிலும், அவிழ்த்து விடப்பட்ட காளைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கவும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் மீது திடீரென ஜல்லிக்கட்டு காளை சீறிப்பாய்ந்தது. இதில் நிலை குலைந்துபோன போலீஸ்காரர் மைதானத்துக்குள் கீழே விழ... காளையும் அவரை நோக்கி முன்னேறி முட்டியது. இதில் அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் லேசான காயம் ஏற்பட்டது. மாடு முட்டிய அதிர்ச்சியில் போலீஸ்காரரும் திடீரென மைதானத்துக்குள் மயங்கி விட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவ குழுவினரிடம் அழைத்துச் சென்றனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். ஜல்லிக்கட்டு மைதானத்துக்குள் காளை முட்டியதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதியம் வரை 2 போலீஸ்காரர்கள் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.

    • ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார்.
    • பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து, களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தின் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும், ஒரே ஜல்லிக்கட்டில் அதிக எண்ணிக்கையிலான காளைகள் (2,000) கலந்துகொண்ட மாவட்டமாகவும், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் அமைந்துள்ள மாயன் பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று வன்னியர் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதே போல் 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.

    கோவில் காளையை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. வீரர்களும் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன், மோட்டார் சைக்கிள், கட்டில், பீரோ, எவர் சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கினார்.

    காயமடைந்த வீரர்களுக்கு மருத்து உதவி செய்ய மருத்துவகுழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

    ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.
    • கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம்.

    சென்னை:

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம்.

    "தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்" என நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

    உலகம் அதிர உரக்கச்சொல்வோம்...

    கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை "தமிழும் திமிலும்" எமது பேரடையாளம் என கூறியுள்ளார்.

    • ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கும், மாட்டு உரிமையாளருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வருகிறார்.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கலன்றும், பாலமேட்டில் நேற்றும் நடைபெற்றன.

    இதையடுத்து இன்று அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.


    விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கும், மாட்டு உரிமையாளருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண நடிகர்கள் அருண் விஜய், சூரி மற்றும் ஏ.எல். விஜய் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தனர். விழா மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். இதனிடையே விழா மேடையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நடிகர் அருண் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

    அலங்காநல்லூர்:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசல் திடலில் அரசு வழிகாட்டுதல்படி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, எம்.எல். ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, தமிழரசி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து சுவாமி காளைகளான முனியாண்டி சுவாமி கோவில் காளை, அருவிமலை கெங்கையம் மன், கருப்பசாமி கோவில் காளை, வலசை கருப்பு சாமி கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 1,000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. இதேபோல் தகுதி பெற்ற 600 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டுவரப்பட்டு அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை போட்டி தொடங்கியதும் ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. கழுத்தில் மாலை, பட்டுத்துணி சகிதமாக சீறிப்பாய்ந்து வந்த நாட்டின காளைகள் துள்ளிக்குதித்து வீரத்தை காட்டியது. பெரும்பாலான காளைகள் தேங்காய் நார் பரப்பப்பட்ட களத்தில் கால்களை வாரி இறைத்து தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை பறை சாற்றியது.

    யாருக்கும் பிடிபடாமல் வளர்ப்பாளர்களின் அழைப்புக்கு செவி சாய்த்து அவர்களுடன் வெற்றியுடன் புறப்பட்டு சென்றது மேடையில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்த அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்களை வியப்படைய செய்தது. களத்தில் இறங்கி விட்டால் போட்டிதான் என்ற உணர்வில் காளையும், காளையர்களும் மல்லுக்கட்டிய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.

    சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. முதல் சுற்றில் 2 காளைகளை அடக்கிய மதுரை ஊர்சேரியை சேர்ந்த சரவணக்குமார் முதலிடம் பிடித்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசு களைப் பெற்றனர்.

    அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் சிறந்த காளைக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த காளை, மற்றும் மாடுபிடி வீரருக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்க உள்ளனர்.

    சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம், அண்டா, மிக்ஸி, சைக்கிள், டி.வி., மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

    காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. காயம் அடைந்த வீரர்களை ஏற்றிச் செல்ல 10-க்கும் ஆம்புலன்ஸ் வசதி வாடிவாசல் அருகிலேயே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் அலங்காநல்லூர் பேரூராட்சி பணியாளர்கள் வாடிவாசலை தூய்மைப்படுத்தினர்.

    தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன் நாயர் மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் 10 கூடுதல் சூப்பிரண்டுகள், 55 துணை சூப்பிரண்டுகள், 10 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 80 இன்ஸ்பெக்டர்கள், 185 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 14 காளைகளை அடக்கி பொதும்பு பிரபாகரன் முதல் இடம் பிடித்தார்
    • 11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் இரண்டாம் இடம் பிடித்தார்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் போட்டிகள் பிரபலமானவை.

    மாட்டு பொங்கலான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது நிறைவடைந்தது.

    முதல் இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் கார் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும், பைக், தங்கக்காசு, ஃப்ரிட்ஜ், தொலைக்காட்சி பெட்டி என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    இதில் பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார். 2020, 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களிலும் முதலிடம் பிடித்தவர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

    11 காளைகளை அடக்கி சின்னப்பட்டி தமிழரசன் 2-ஆம் இடத்தில் உள்ளார். அவருக்கு இரு சக்கர வாகனம் பரிசாக கிடைத்தது.

    கொந்தகை பகுதியை சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகளை அடக்கி 3-வதாக இடம் பிடித்தார்.

    சிறந்த காளையாக புதுக்கோட்டை ராயவயல் சின்னகருப்பு காளைக்கு முதல் பரிசை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டில் 42 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும்.
    • அவனியாபுரம் ஜல்லிகட்டு சிறப்பாக நடைபெற்ற நிலையில் இன்று பாலமேடு ஜல்லி கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    மதுரை எலியார்பத்தியில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில், காளை குத்தி ஒருவர் உயிரிழந்துள்ளார். எலியார்பத்தி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அங்கு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் இருந்து ஓடிவந்த காளை, ரமேஷ் என்ற இளைஞரின் இடது மார்பில் முட்டியது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    உயிரிழந்த ரமேஷ்-க்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஒரு வயதில் பெண்குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.

    • முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் வாய்ந்ததாகும்.

    காளையாக இருந்தாலும், காளையர்களாக இருந்தாலும் வீரத்தை மட்டுமின்றி அன்பையும், பாசத்தையும், விசுவாசத்தையும் மண்ணில் விதைக்கும் திருவிழாவாகவே இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் பொங்கல் தினமான நேற்று அவனியாபுரத்தை தொடர்ந்து, இன்று பாலமேட்டில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் அரசு வழிகாட்டுதல் படி ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து தெய்வங்களான 7 சுவாமி காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 1,000 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதேபோல் தகுதிபெற்ற 700 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டு வரப்பட்டு இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. இந்த காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாரம்பரியம் மிகுந்த ஊராகும். அவனியாபுரம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட போதிலும், அதிக அளவிலான காளைகள் பாலமேட்டில்தான் அவிழ்க்கப்படுகிறது. அதன்படி நன்கு பயிற்சி பெற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

    திமிலை உயர்த்தி கெத்து காட்டிய காளைகளின் அருகில் செல்லக்கூட அச்சப்பட்ட மாடுபிடி வீரர்கள் தடுப்புக்கட்டைகள் மீது ஏறி நின்று கொண்ட காட்சிகளையும் அவ்வப் போது காணமுடிந்தது. தில்லும், தெம்பும் இருந்தால் என்னை அடக்கிப்பார் என்று சீறியபடி காளைகள் களமாடியதை உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பார்த்து ரசித்தனர்.

    இதில் சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. படுகாயம் அடையும் வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் மருத்துவ குழுவினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தன.

    போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் காளையர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடி படாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் மற்றும் இரண்டாம் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கன்று குட்டியுடன் மாடு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் பைக் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு சமூக ஆர்வலர் பொன்குமார் சார்பில் காங்கேயம் மயிலை பசு மற்றும் கிடாரி கன்று குட்டி வழங்க உள்ளனர். சீறிப் பாய்ந்து வந்த காளைகளை காளையர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம் முதல் மிக்சி, கிரைண்டர், அண்டா உள்ளிட்ட பொருட் களை பரிசாக பெற்று சென்றனர்.

    காளைகளுக்கும், மாடு பிடி வீரக்ளுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டி ருந்தது.

    ×