search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

    அலங்காநல்லூர்:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடிவாசல் திடலில் அரசு வழிகாட்டுதல்படி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, எம்.எல். ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, தமிழரசி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதலில் வாடிவாசலில் இருந்து கிராமத்து சுவாமி காளைகளான முனியாண்டி சுவாமி கோவில் காளை, அருவிமலை கெங்கையம் மன், கருப்பசாமி கோவில் காளை, வலசை கருப்பு சாமி கோவில் காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 1,000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. இதேபோல் தகுதி பெற்ற 600 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு தகுதியான காளைகள் லாரி, வேன்களில் கொண்டுவரப்பட்டு அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

    இன்று காலை போட்டி தொடங்கியதும் ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. கழுத்தில் மாலை, பட்டுத்துணி சகிதமாக சீறிப்பாய்ந்து வந்த நாட்டின காளைகள் துள்ளிக்குதித்து வீரத்தை காட்டியது. பெரும்பாலான காளைகள் தேங்காய் நார் பரப்பப்பட்ட களத்தில் கால்களை வாரி இறைத்து தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை பறை சாற்றியது.

    யாருக்கும் பிடிபடாமல் வளர்ப்பாளர்களின் அழைப்புக்கு செவி சாய்த்து அவர்களுடன் வெற்றியுடன் புறப்பட்டு சென்றது மேடையில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்த அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்களை வியப்படைய செய்தது. களத்தில் இறங்கி விட்டால் போட்டிதான் என்ற உணர்வில் காளையும், காளையர்களும் மல்லுக்கட்டிய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.

    சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் வாடிவாசலில் நின்று விளையாடும் சிறந்த காளைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வந்தது. முதல் சுற்றில் 2 காளைகளை அடக்கிய மதுரை ஊர்சேரியை சேர்ந்த சரவணக்குமார் முதலிடம் பிடித்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் தங்கம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், பீரோ, விலை உயர்ந்த டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினர். பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசு களைப் பெற்றனர்.

    அதிக காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் சிறந்த காளைக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த காளை, மற்றும் மாடுபிடி வீரருக்கு இரண்டாம் பரிசாக பைக் வழங்க உள்ளனர்.

    சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்து தங்க நாணயம், அண்டா, மிக்ஸி, சைக்கிள், டி.வி., மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக பெற்று சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறும்.

    காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் காயம் ஏற்படாதவாறு தென்னை நார் கழிவுகள் பரப்பப்பட்டு இருந்தது. பார்வையாளர்கள் அமருவதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தது. காயம் அடைந்த வீரர்களை ஏற்றிச் செல்ல 10-க்கும் ஆம்புலன்ஸ் வசதி வாடிவாசல் அருகிலேயே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் அலங்காநல்லூர் பேரூராட்சி பணியாளர்கள் வாடிவாசலை தூய்மைப்படுத்தினர்.

    தென்மண்டல ஐ.ஜி.நரேந்திரன் நாயர் மேற்பார்வையில், மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் 10 கூடுதல் சூப்பிரண்டுகள், 55 துணை சூப்பிரண்டுகள், 10 கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 80 இன்ஸ்பெக்டர்கள், 185 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×