என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alanganallur Jallikattu"

    • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.
    • 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

    உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

    சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகள் நடைபெற்றது.

    இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான ரூ.8 லட்சம் மதிப்பிலான காரை கருப்பாயூரணி கார்த்தி பரிசாக தட்டிச்சென்றுள்ளார்.

    இதேபோல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 2வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து, 11 காளைகளை அடக்கி பாசிங்காபுரத்தைச் சேர்ந்த தர் 3வது இடத்தை பிடித்துள்ளார்.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் நின்று மிரட்டிய ஏவிஎம் பாலாவின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த காளைக்கான முதல் பரிசை வென்ற காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    சிறந்த காளைக்கான 2வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்செல்வனுக்கு பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    சிறந்த காளைக்கான 3வது பரிசை வென்ற காளையின் உரிமையாளரான மதுரையை சேர்ந்த கென்னடிக்கு இ-பைக் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

    • ஜல்லிக்கட்டு போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.
    • படுகாயம் அடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பு.

    உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியை, இன்று காலை சுமார் 7:00 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஆகியோர் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

    சுமார் 1,100 காளைகளும், ஏறத்தாழ 600 மாடுபிடி வீரர்களும் இப்போட்டியில் களமிறங்கி உள்ளனர். போட்டி மொத்தம் 10 முதல் 12 சுற்றுகளாக நடைபெறுகிறது.

    இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காவலர்கள், வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 48 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இதில், வீரர்கள் 17 பேர், காளை உரிமையாளர்கள் 12 பேர், பார்வையாளர்கள் 15 பேர், காவலர்கள், தீயணைப்பு வீரர் என 4 பேர் காயமடைந்துள்ளனர்.

    காளை முட்டியதில் படுகாயம் அடைந்த 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    • மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் அரசு பணி வழங்கப்படும்.

    அலங்காநல்லூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் அன்று (15-ந்தேதி) அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், களத்தில் நின்று நீண்ட நேரம் விளையாடிய காளையின் உரிமையாளர்களுக்கும் கார், டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளைடக்கி பரிசு பெறும் சிறந்த வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை கண்டு களிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தார். அவரை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வத்துடன் போட்டியை கண்டுகளித்தார். அப்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கும் தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். அதே நேரத்தில் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகளையும், புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த மதுரை மண் என்பது வீரம் விளைந்த மண்ணாகவும், அப்படிப்பட்ட வீரம் விளைந்த இந்த மண்ணில் வீர விளையாட்டான உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்கின்றபோது நமக்கு எல்லாம் வீரமே வருகிறது. அதனை அடக்குகிற காளையர்களை பார்க்கும்போது நம்முடைய தமிழ் மண்ணுக்கு பெருமையாக இருக்கிறது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இந்த வீரம் விளைந்த மண்ணில் அறிவு வளர்ச்சிக்காக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது உங்களுக்கு எல்லாம் தெரியும்.

    அதேபோல தமிழர்களின் அடையாளமாக இந்த வீர விளையாட்டுக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசின் மிகப்பெரிய சாதனை.

    ஆகவே இதை சொல்லுகின்ற நேரத்தில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் ஜல்லிக்கட்டை பார்க்க முதலமைச்சராக வந்திருக்கக்கூடிய நான் ஏதாவது அறிவிப்புகளை வெளியிட்டு போனால்தான் உங்களுக்கும் திருப்தி. எனக்கும் திருப்தி. அதனால் 2 அறிவிப்புகளை நான் மகிழ்ச்சியோடு அறிவிக்க விரும்புகிறேன்.

    முதல் அறிவிப்பு பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டியில் பங்பெற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கக்கூடிய வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணி அமர்த்தி வழிவகை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2-வது அறிவிப்பு உலக புகழ்பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு அறிவிப்பும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். அந்த மகிழ்ச்சியோடு "தமிழர்கள் எல்லோரும் வெல்வோம் ஒன்றாக" என்று கூறி விடைபெறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் தொண்டர்கள், பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார். வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின் வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார்.

    ஜல்லிக்கட்டு போட்டியில் களத்தில் மிரட்டிய காளையின் உரிமையாளருக்கு தங்க மோதிரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அணிவித்தார்.

    அவருடன் போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, கே.என். நேரு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன் கண்டு ரசித்தனர்.

    • மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதன் சுற்றில் மஞ்சள் நிற ஆடையுடன் மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர்.
    • சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000-க்கும் மேற்பட்ட காளைகள், காளையர்கள் பங்கேற்றுள்ளனர்.

    அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசல் வழியாக அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இன்று காலை 10 மணி அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம்காணும் காளைகள், மாடுபிடி வீரர்கள் முழு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதன் சுற்றில் மஞ்சள் நிற ஆடையுடன் மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

    • தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
    • உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் வருகிற பொங்கல் பண்டிகையை யொட்டி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்ப ரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.

    பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.

    தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளி விவரங்களும் தர வரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.

    1 கோடியே 30 லட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ் நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 லட்சம் அரிசி அட்டை தாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது.

    தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று.

    தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய –நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.

    கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.

    உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அமைச்சர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன.

    கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டு உள்ளேன்.

    தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ம் நாள் அதாவது, தை மாதம் 3-ம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.

    தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், பாராளுமன்றக் கழகக் குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன்.

    சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடை பெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

    கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் - தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது.

    அலங்காநல்லூர்:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.

    இந்த ஆண்டு அவனியாபுரத்தில் வருகிற 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த 5-ந்தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான அடிக்கல் நடப்பட்டது. இன்று பாலமேடு, அலங்காநல்லூரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழாக் குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    இதேபோன்று பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசலில் முகூர்த்தக் கால் விழா அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடை பெற்றது.

    விழாவின்போது அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    அரசின் வழிகாட்டுதல் படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு உட்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட தகுதியான ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.

    காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது. பரிசு பொருட்கள் அனைத்தும் விளம்பரதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்பட்டு வழக்கம் போலவே சிறப்பான பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.

    • காளைகளை துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது.
    • இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல் துணிந்து நின்று அவற்றை அடக்கும் மாடுபிடி வீரர்கள் வீரம் அசாத்தியமானது. தமிழர்களுடைய வீரத்தையும், கலாச்சாரத்தை பறைசாற்றும் இந்த ஜல்லிகட்டுப் போட்டிகளை காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலகம் முழுவதும் இருந்து திரள்வார்கள்.

    பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறந்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் காரும், சிறந்த காளைக்கு அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் 1,000 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 7 மருத்துவ குழுக்கள் 20 மருத்துவர்கள் உட்பட 80 பேர் மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்னிலையில் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    ஜல்லிக்கட்டு போட்டிக்காக 2 எஸ்.பிக்கள், 8 ஏ.டி.எஸ்.பிக்கள், 29 டி.எஸ்.பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், நடிகர் சூரியும் இந்த போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.

    • முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு களத்திற்கு சென்று மீண்டும் காளைகளை அடக்கினார்.
    • 9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார்.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின.

    7 சுற்றுகளின் நிறைவில் அபி சித்தர் என்ற வீரர் 23 காளைகளை அடக்கி முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் ஒரு காளையை அடக்கும் முயற்சியில் எதிர்பாராத விதமாக காவலதுறையினரின் வேனில் மோதி காயமடைந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் களத்திற்கு சென்று மீண்டும் காளைகளை அடக்கினார்.

    9ம் சுற்று முடிவில் அபி சித்தர் 25 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருந்தார். அஜய் 19 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திலும், ரஞ்சித் குமார் 12 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.

    • சிறந்த காளையின் உமையாளர் புதுக்கோட்டை தமிழ்ச்செல்வனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 53 பேர் காயமடைந்தனர்

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளையர்களின் பிடியில் சிக்காமல் பெரும்பாலான காளைகள் கெத்து காட்டின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரம், தங்க காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

    விறுவிறுப்பாக மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. மொத்தம் 823 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில், அபி சித்தர் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    20 காளைகளை அடக்கிய ஏனாதி அஜய் என்பவர் இரண்டாம் பரிசும், 12 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் ரஞ்சித் மூன்றாம் பரிசும் பெற்றனர். 

    புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 53 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    • உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.
    • அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.


    ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் இன்று நடப்பட்டது. அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    இந்நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    இதன்பின் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் 23 அல்லது 24-ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதனை முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட உள்ளது.
    • அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.

    அலங்காநல்லூர்:

    தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ந்தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழா குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கால்கோள் நடும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு, தி.மு.க. அவைத் தலைவர் பாலசுப் பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமிநாதன், டி.எஸ்.பி. பாலசுந்தரம், யூனியன் ஆணையாளர் பிரேமராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17-ந்தேதி அரசு வழிகாட்டுதல் படி சீரும் சிறப்புமாக நடைபெறும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.


    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். மேலும் மாடு பிடிக்கும் அனைத்து மாடு பிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும்.

    கன்றுடன் கூடிய நாட்டு பசு மாடு, தங்க நாணயம், கட்டில் பீரோ, உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மாடு பிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.

    காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட உள்ளது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ரூ.44 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் இந்த மாத இறுதியில் திறக்கப்படும். தமிழக முதல்வர் திறந்து வைப்பார். இன்னும் ஓரிரு நாட்களில் அரங்கம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×