search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு... அமைச்சர் மூர்த்தி தகவல்
    X

    சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு... அமைச்சர் மூர்த்தி தகவல்

    • காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட உள்ளது.
    • அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.

    அலங்காநல்லூர்:

    தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ந்தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட கலெக்டர் சங்கீதா, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழா குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து கால்கோள் நடும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு, தி.மு.க. அவைத் தலைவர் பாலசுப் பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் சுவாமிநாதன், டி.எஸ்.பி. பாலசுந்தரம், யூனியன் ஆணையாளர் பிரேமராஜன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வழக்கத்தை போலவே இந்த ஆண்டும் உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17-ந்தேதி அரசு வழிகாட்டுதல் படி சீரும் சிறப்புமாக நடைபெறும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்படும்.


    கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக முதலமைச்சர் சார்பில் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் வழங்கப்படும். மேலும் மாடு பிடிக்கும் அனைத்து மாடு பிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் வழங்கப்படும்.

    கன்றுடன் கூடிய நாட்டு பசு மாடு, தங்க நாணயம், கட்டில் பீரோ, உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மாடு பிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம்.

    காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட உள்ளது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ரூ.44 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் இந்த மாத இறுதியில் திறக்கப்படும். தமிழக முதல்வர் திறந்து வைப்பார். இன்னும் ஓரிரு நாட்களில் அரங்கம் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×