search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி தேர்தல்"

    • இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது.
    • வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று மாலை தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னுடைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார். உலக நாடுகளும் நம் மாநிலத்தை எடுத்துக்காட்டாக சொல்கிற அளவுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

    இதேபோல, பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மேலும், 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதி காரமா, பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க்களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கிற ஆணவத்தில் இருக்கின்றனர்.

    நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.

    இத்தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம், எதிர்காலத்தை சார்ந்ததாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.

    இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. இதில், அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு, மனு நீதியை சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர்.

    இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும்.இத்தேர்தல் என்பது 2-வது சுதந்திர போரை போன்றது.

    எனவே, ஒவ்வொருவரும் 10 வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க செய்யுமாறு கேட்டு கொள்ள வேண்டும். தஞ்சை தொகுதி வெற்றி வேட்பாளர் முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

      புதுச்சேரி:

      புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பொதுகூட்டத்தில் பிரசாரம் செய்தார்.

      அப்போது அவர் பேசியதாவது:-

      புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் மண்ணுக்கு வந்துள்ளேன். விடுதலை இயக்க தளபதி மக்கள் தலைவர் வ.சுப்பையாவை போற்றி பாதுகாத்த புரட்சி மண்ணுக்கு வந்துள்ளேன். கடல் அழகும், இயற்கை அழகும் கொஞ்சும் புதுவைக்கு வந்துள்ளேன். புதுவை காங்கிரஸ் வேட்பாளராக, இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு அறிமுகம் தேவையில்லை. புதுவை மக்களின் நலனுக்காக பாடுபட்ட விடுதலை போராட்ட குடும்பத்தை சேர்ந்தவர்.

      இப்போது 2-ம் விடுதலை போராட்டத்துக்காக வேட்பாளராக நிற்கிறார். 8 முறை எம்.எல்.ஏ., 40 ஆண்டு காங்கிரஸ் உறுப்பினர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர், சபாநாயகர், 2 முறை முதலமைச்சர் என பழுத்த அரசியலுக்கு சொந்தமானவர். 2-ம் முறையாக பாராளுமன்ற செல்ல ஆதரவு கேட்டு இருகரம் கூப்பி ஆதரவு கேட்டு நிற்கிறார். கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற வைப்பீர்களா? ஸ்டாலின் தூதுவனாக உங்கள் பகுதி மக்களிடமும் வாக்கு சேகரியுங்கள். அப்புறம் என்ன? வைத்திலிங்கம் வெற்றி உறுதி.

      தமிழ்நாட்டில் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்ட போது, துணிச்சலாக கவிஞர் புதுவை சிவம் வெளியிட்ட மண். கலைஞர் அரசியல்வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய மண் புதுவை. எனவே கலைஞருக்கு தமிழகமும், புதுவையும் ஒன்றுதான். அந்த உணர்வோடு ஸ்டாலினும் புதுவை மக்கள் மீது தனி பாசம் கொண்டவன்.

      இங்குள்ள சிவா, சிவக்குமார், நாஜிம் போன்ற திராவிட முன்னேற்ற உடன் பிறப்புகளும் புதுவைமக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுகின்றனர். அந்த உணர்வோடுதான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். புதுவை வளர்ச்சிக்கு தி.மு.க.வும், காங்கிரசும் பாடுபட்டால் மாநிலத்தை எப்படி பின்னோக்கி கொண்டுசெல்லலாம் என பா.ஜனதா செயல்படுகிறது.

      இதை மக்கள் பார்த்து வருகிறார்கள். வைத்திலிங்கம் சபாநாயகராக இருந்தபோது, துணைநிலை கவர்னர் மோதினார். பா.ஜனதா கட்சி பொறுப்புகளை சேர்ந்தவர்களை நியமன உறுப்பினர்களாக நியமித்து சட்டமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கினர். ஆட்சியில் இருந்த அரசை புறக்கணித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

      கவர்னரால் பிரச்சினை

      மக்கள் அடிப்படை வசதிகளை செய்யாமல், வசதிகள் இல்லை என காரணம் காட்டி ரேஷன்அரிசியை தடை செய்தனர். பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை ஏன் என கேள்வி கேட்டனர். இப்படி செய்தவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு, ஒத்துழைக்காமல் அரசியல் சட்ட கடமையை காற்றில் பறக்கவிட்டு புதுவை நிர்வாகத்தை சீர்குலைத்தது பா.ஜனதா. கவர்னர் கிரண்பேடி.

      அவர் ஐபி.எஸ். ஆக இருந்தவர். ஆனால் துணைநிலை ஆளுநராக அரசியல் சட்டத்தை மீறி செயல்பட்டார். தமிழகத்திலும் ஒரு கவர்னர் உள்ளார். அவரும் ஐ.பி.எஸ். படித்தவர். அவரிடம் மாட்டி முழித்துக்கொண்டு இருக்கிறோம். அவரே இருக்கட்டும் என நாம் சொல்கிறோம். அவர் இருந்தால் தி.மு.க.வுக்கு பெரிய பிரசாரமே நடக்கிறது. காவல்துறையில் பதவிக்காலம் முடிந்தவுடன், இவர்களை கவர்னராக்கி அரசியல் சட்டத்தை மீறி பா.ஜனதா ஏஜெண்டுகள் போல விளம்பரத்துக்காகவே செயல்படுகின்றனர். கவர்னர்கள் தொல்லை கொடுப்பது எதிர்கட்சி மாநிலம் மட்டுமல்ல.

      புதுவையில் ஆளும் கூட்டணியில் உள்ள ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி. பா.ஜனதாவை பொறுத்தவரை புதுவை மக்களின் முன்னேற்றம், வளர்ச்சி பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதுதான் பா.ஜனதாவின் கொள்கை.

      தமிழகம்போல மாநிலம் இருந்தால் நகராட்சியாக மாற்ற வேண்டும். புதுவை போல யூனியன் பிரதேசத்தை கிராம பஞ்சாயத்தாக மாற்ற வேண்டும். ஒட்டுமொத்தாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதுதான் பா.ஜனதாவின் தீர்மானம். அதனால்தான் கூட்டணி அரசு இருந்தாலும், புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காமல், தன் கைப்பிடியில் பா.ஜனதா வைத்துள்ளது. அவர்களுக்கு கைப்பாவையாக புதுவை முதலமைச்சர் ரங்கசாமி உள்ளார். இந்த அவலங்கள் தீர இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். நாடு மீண்டும் ஜனநாயக பாதையில் கம்பீரமாக நடை போட வேண்டும்.

      மாநில உரிமைகள் மட்டுமல்ல, யூனியன் பிரதேச உரிமைகளும் பாதுகாக்கப்பட இந்தியா கூட்டணியை நாடு தழுவிய அளவில் அமைத்துள்ளோம். புதுவை முன்னேற வேண்டும். புதுவை மக்கள் வாழ்வில் புதுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.

      பா.ஜனதா ஆட்சி வீட்டுக்கு போக வேண்டும். இந்தியா கூட்டணி டெல்லியில் ஆட்சியில் அமர வேண்டும்.

      ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்போது சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை கூறியுள்ளோம். அதில் முக்கிய வாக்குறுதியாக புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம்.

      இது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்துள்ளது. புதுவை மக்களின் பல நாள் கனவான மாநில அந்தஸ்து ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் நிறைவேறப்போகிறது.

      மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. தி.மு.க. சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளோம்.

      சிறுபான்மையினர் எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும். தேசியநெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

      பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். காரைக்கால், நாகை, தஞ்சை இரட்டை ரெயில்பாதை, கிழக்கு கடற்கரை சாலையில் கன்னியாகுமரி வரை புதிய ரெயில்பாதை அமைக்கப்படும்.

      மாநில கவர்னர் அதிகாரம் குறைக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். பிடியில் சிக்கியுள்ள சர்வதேச நகரமான ஆரோவில், அரவிந்தர், அன்னை கனவுப்படி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். புதிய கல்விக்கொள்கை புதுவையில் நீக்கப்படும். ஜிப்மரில் மீண்டும் இலவச மருத்துவம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் ஜிப்மர் கிளை முழு அளவு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

      10 ஆண்டு மோடி ஆட்சியில் புதுவைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம். மின்துறையை தனியாருக்கு தாரை வார்க்க சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

      மின் கட்டண விலையை கேட்டால் ஷாக் அடிக்கிறது. துணை நிலை ஆளுநர் மூலம் அரசியல் கூத்துகளை அரங்கேற்றி வருகின்றனர்.

      கிரண்பேடிக்கு பிறகு சகோதரி தமிழிசை வந்தார். புதுவையில் உட்கார்ந்துகொண்டு, தமிழக அரசியலை பேசினார். தேர்தல் வந்தவுடன் பா.ஜனதாவுக்கு திரும்ப சென்றுவிட்டார். புதுவை வரலாற்றில் கவர்னர் மாளிகையில் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதுதான் புதுவைக்கு பா.ஜனதா செய்த சாதனை.

      ரங்கசாமியை தங்கள் பேச்சை கேட்க சொல்லி பாடாய் படுத்துகிறார்கள். ரங்கசாமி தனி கட்சி தொடங்க காரணமே நமச்சிவாயம் தான்.

      இப்போது அவருக்காக ரங்கசாமி ஓட்டு கேட்டு வருகிறார். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறினார் என்று கணக்கு போட்டால் தலையே சுற்றுகிறது.

      இவ்வாறு அவர் பேசினார்.

      • தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.
      • நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு விஜய் வசந்த் வாக்குகள் சேகரித்தார்.

      பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

      தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன.

      தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியும் ஒன்றாகும். தற்போது கன்னியாகுமரி உறுப்பினராக உள்ள விஜய் வசந்த் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையொட்டி அவர் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

      அந்த வகையில், குமரி மாவட்டத்தின் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு பகுதிக்கு சென்ற விஜய் வசந்த், அதங்கோட்டாசான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னர் அங்குள்ள மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார்

      இதேபோன்று, நடைக்காவு பகுதியில் திறந்த வாகனத்தில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் அங்குள்ள கடைகள், பேருந்து நிறுத்தத்தில் நின்ற பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தார் விஜய் வசந்த். இந்த பிரசாரத்தின் போது கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ்குமார், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

      • ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை.
      • சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

      அமேதி:

      உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தவை. இந்திராகாந்தி காலத்தில் இருந்தே அங்கு காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது.

      அமேதி தொகுதியில் கடந்த 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராகுல் காந்தி தொடா்ந்து வெற்றி பெற்றாா்.

      கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தோ்தலில் ராகுலை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி ஸ்மிருதி இரானியை நிறுத்தியது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக சுமாா் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியை தழுவினார்.

      வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற் கொண்டு அந்த தொகுதியை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான தொகுதியாக மாற்றி இருக்கிறார்.

      இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற தோ்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சாா்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவது யார் என்பது தொடர்ந்து சஸ்பென்சாக உள்ளது.

      உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட காங்கிரஸ் அமேதி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது

      கடந்த முறை தோல்வியை தழுவிய ராகுல் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட மனு செய்து உள்ளார். அவர் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து மீண்டும் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமேதியில் மே 20-ந்தேதி 5-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      இதற்கிடையே அமேதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட்வதேராவை போட்டியிட செய்ய முயற்சி நடப்பது தெரிய வந்துள்ளது.

      இது தொடர்பாக பேட்டியளித்த ராபா்ட் வதேரா, 'ஸ்மிருதி இரானியை தோ்வு செய்ததன் மூலம் தாங்கள் செய்த தவறை அமேதி தொகுதி மக்கள் இப்போது உணா்ந்து விட்டனா். சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

      சோனியா குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்தான் தங்கள் தொகுதியை மீண்டும் பிரதி நிதித்துவப்படுத்த வேண்டும் என அமேதி தொகுதி மக்கள் எதிா்பார்க்கின்றனா். நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், அமேதி தொகுதியை தோ்வு செய்ய வேண்டும் என்று அந்த தொகுதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.

      ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை. அவர் மீது நில மோசடி வழக்குகள் உள்ளன. அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

      அவர் தேர்தலில் போட்டியிட்டால் அந்த மோசடி புகார்களை பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.

      • மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
      • ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கடப்பா தொகுதி வேட்பாளர் அவிநாஷ் ரெட்டி ஆகியோர் இலக்காக இருப்பார்கள்.

      திருப்பதி:

      ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் சொந்த தொகுதியான கடப்பா மாவட்டத்தில் பஸ் யாத்திரை மூலம் பிரசாரத்தை தொடங்கினார். மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

      இதுகுறித்து சர்மிளா எனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

      எனது தேர்தல் பிரசாரத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கடப்பா தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் அவிநாஷ் ரெட்டி ஆகியோர் இலக்காக இருப்பார்கள்.


      கடவுளின் ஆசியோடும் தந்தையின் ஆசியோடும் தாயின் அன்போடும் மகனின் கடைசி ஆசைப்படி பிரசாரத்திற்கு செல்கிறேன். நீதிக்காக போராடும் எனக்கு ஆந்திர மக்களின் ஆசி கிடைக்கும் என்று நம்புகிறேன்.

      இந்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துங்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

      சர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றது முதல் தனது சகோதரரான முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

      தற்போது அவரது பாணியிலேயே பஸ் யாத்திரையாக செல்லும் சர்மிளா, ஜெகன் மோகன் அரசையும் அவரது செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது.

      • இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார்.
      • விஷ்ணு பிரசாத் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      பண்ருட்டி:

      கடலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் செல்ல காரில் வந்தார். அப்போது பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். வாகன சோதனயில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை குழு அதிகாரி தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் விஷ்ணு பிரசாத்தின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர்.

      இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று பண்ருட்டிபகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      • புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
      • வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார்.

      புதுச்சேரி:

      இந்தியா கூட்டணி கட்சி சார்பில் புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

      அவர் தொகுதி வாரியாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார். அப்போது வள்ளலார் சாலையில் வாக்கு கேட்டு வேனில் சென்று கொண்டிருந்தார்

      இன்று காலை முதலே புதுவையில் வெயில் சுட்டெரித்தது. காலை 11.10 மணி அளவில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி அருகில் இருந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மீது சரிந்தார்.

      உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். வேனை நிறுத்தி அருகேயிருந்த வீட்டில் அமர வைத்தனர்.

      அருகாமையில் இருந்த டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் வைத்திலிங்கத்தை பரிசோதித்தார். அப்போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிக வெயில் இருப்பதால் குடிநீர், ஜூஸ் பருகும்படி டாக்டர் அறிவுருத்தினார்.

      இதையடுத்து வைத்திலிங்கத்துக்கு எலுமிச்சை ஜூஸ் அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பகல் 11.30 மணியளவில் மீண்டும் ஜீப்பில் ஏறி வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.

      • வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
      • காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

      பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

      இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது.

      இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

      இதில் திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


      இந்நிலையில் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தெருக்கூத்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

      இந்த வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.

      இந்நிலையில் வேட்பாளர் உடன் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.முநாசர், திமுக எம்எல்ஏக்கள் வி. ஜி ராஜேந்திரன், மாதவரம் சுதர்சனம் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் உள்பட 5 பேர் வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான த.பிரபுசங்கரிடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

      பின்னர் சுதாரித்துக் கொண்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் தேர்தல் விதிகளை மீறி 6 பேர் இருப்பதால் ஒருவர் வெளியேற வேண்டும் என எச்சரித்தார்.

      இதையடுத்து மாவட்ட காங்கிரஸ் தலைவரும் பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் வேட்பு மனு தாக்கல் அறையில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

      • தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.
      • நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

      இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

      4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.


      கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகர மேயர் ரெ. மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


      • 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது
      • புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

      புதுச்சேரி:

      பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட யூனியன் பிரதேசமான புதுவையில் 1963-ம் ஆண்டு முதல் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடந்து வருகிறது.

      ஆரம்பகால தேர்தல்களில் சுதந்திரத்துக்கு போராடிய கட்சி காங்கிரஸ் என்பதால் மக்களிடம் பெரியளவில் மதிப்பு இருந்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க.வும், அதிலிருந்து பிளவுபட்டு அ.தி.மு.க.வும் தொடங்கியபோது புதுவையிலும் அந்த கட்சிகளின் ஆதிக்கம் தொடங்கியது.

      பெரும்பாலும் சட்டமன்றத்தில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. 2 முறையும், தி.மு.க. 4 முறையும், என்.ஆர். காங்கிரஸ் 2 முறையும் ஆட்சி அமைத்தனர். 1963-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

      அதன்பிறகு நடந்த பல தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தனர்.

      அதேநேரத்தில் இதுவரை நடந்த 15 பாராளுமன்ற தேர்தல்களில் 11 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 1963, 1967, 1971 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அதன்பின் 1980, 1984, 1989, 1991, 1996 என 5 முறை தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றது. பின்னர் 1999, 2009, 2019 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

      பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் புதுவை காங்கிரசின் கோட்டையாகவே திகழ்ந்தது.

      யூனியன் பிரதேசமான புதுவை மக்களும், மத்தியில் உள்ள ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களித்தால் புதுவைக்கு நன்மை கிடைக்கும் என வாக்களித்தனர்.

      வ.சுப்பையா, ப.கண்ணன் ஆகியோர் புதுவைக்கென தனி கட்சி தொடங்கினர். ஆனால் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை, பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 2011-ல் காங்கிரசில் பிளவை ஏற்படுத்தி ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி ஆட்சியையும் பிடித்தார்.


      தொடர்ந்து 2014-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. 2019-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம், பதவியை ராஜினாமா செய்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

      அவர் தற்போது சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் 2-வது முறையாக பாராளுமன்ற தேர்தலில் களத்தில் இறங்கியுள்ளார்.

      அதேநேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரசில் பெரும் பிளவு ஏற்பட்டது. அமைச்சராக இருந்த நமச்சிவாயம், கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜனதாவில் இணைந்தார்.

      அவருடன் சேர்ந்து காங்கிரசில் இருந்த பல்வேறு பிரிவுகள், அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் வெளியேறினர். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தற்போது காங்கிரசுக்கு புதுவை லாஸ்பேட்டை தொகுதி, மாகி தொகுதி ஆகியவற்றில் மட்டுமே 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

      ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடித்தளம் வரை கட்டமைப்பு உள்ளது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைத்து தொகுதியிலும் உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் பலமும் உள்ளது. இதோடு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

      2021 சட்டமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து புதுவை மீண்டும் காங்கிரசின் கோட்டை என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. தங்களுக்கு சாதகமாக சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.

      ஏனெனில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். 22 எம்.எல்.ஏ.க்கள் பலத்தோடு பா.ஜனதா போட்டியிட்டாலும் மக்கள் ஆதரவோடு மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதற்காக அனுபவத்தின் மூலம் பிரசார வியூகம் அமைத்து தலைவர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

      புதுவை தொகுதி காங்கிரசுக்கு மீண்டும் 'கை' கொடுக்குமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்து விடும்.

      • மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
      • தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

      தஞ்சாவூர்:

      தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

      பா.ஜனதா 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

      வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு கூட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


      எனது பிரசாரம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி தொடங்கி 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

      மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்களது பிரசாரம் அமையும்.

      தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.
      • வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன.

      திருவனந்தபுரம்:

      கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

      தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்துவிட்டன. இதையடுத்து கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

      மேலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஏப்ரல் மாதம் தொடங்கியதும், கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். கேரள மாநிலத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொகுதி வயநாடு மக்களவை தொகுதி.

      அதற்கு காரணம் அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தியே, இந்த முறையும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மேலும் இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் களம் காணுகிறார்.


      இதன்காரணமாக இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டுகட்சிகள் இந்திய அளவில் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், வயநாடு தொகுதியில் இருகட்சிகளும் தனித்தனியாக களம் காணுகின்றன. அவர்களுடன் வயநாடு தேர்தலில் களம் காணப்போகும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் யார்? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவரான சுரேந்திரனே அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

      வயநாடு தொகுதியை பொறுத்தவரை 2009-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய தேர்தலில் ராகுல்காந்தியை, சுரேந்திரன் எதிர்கொள்ள உள்ளார்.

      சுரேந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பத்தினம்திட்டாவில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தை பிடித்தார். மேலும் அவர் 2016-ம் ஆண்டு நடந்த சட்மன்ற தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்யிட்டு வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.


      2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் சுரேந்திரன் போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தான் 2020-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய சுரேந்திரனுக்கு தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

      அவர் வயநாடு தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ராகுல் காந்தி மற்றும் ஆனி ராஜா ஆகியோருக்கு சவால் விடும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

      காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா ஆகிய மூன்று கட்சிகளுமே வயநாடு தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு நிலவும் முன்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது தேர்தல் முடிவு வந்தபிறகே தெரியவரும்.

      ×