search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஸ்வினி வைஷ்ணவ்"

    • தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது.
    • நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் ‘ஜன சுவிதா’ கடைகள் நிறுவப்படும்.

    புதுடெல்லி :

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது 2023-24-ம் நிதியாண்டில் ரெயில்வேயில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பயணிகள் முன்பதிவு முறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், சாப்ட்வேர் மற்றும் இணையதள வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் கிட்டத்தட்ட 10 மடங்கு வேகம் இருக்கும்.

    தற்போது ஒரு நிமிடத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் வழங்கும் திறன் உள்ளது. இதை நிமிடத்திற்கு 2.25 லட்சமாக மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    இதைப்போல பயணிகளின் விசாரணை அழைப்புகளை எதிர்கொள்ளும் திறனையும் நிமிடத்துக்கு 40 ஆயிரம் என்ற இலக்கில் இருந்து 4 லட்சமாக அதிகரிக்கும் திட்டம் உள்ளது.

    2022-23-ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த 4,500 கி.மீ. புதிய ரெயில் பாதை இலக்கு எட்டப்பட்டு உள்ளது. இது நாளொன்றுக்கு 12 கி.மீ. ஆகும். அதேநேரம் 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாளுக்கு 4 கி.மீ.யாக இருந்தது.

    2023-24-ம் நிதியாண்டில் 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் புதிய பாதைகள், இரட்டைமயமாக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

    நாடு முழுவதும் 2 ஆயிரம் ரெயில் நிலையங்களில் 'ஜன சுவிதா' கடைகள் நிறுவப்படும். இவை 24 மணி நேரமும் திறந்து இருக்கும். இந்த கடைகளில் தினசரி உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.

    ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கிழ் 550 ரெயில் நிலையங்களில் 594 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையங்களின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்படும்.

    2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரெயில்வேக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2.40 லட்சம் கோடியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சிறிய தயாரிப்பான வந்தே மெட்ரோ உருவாக்கப்படும். இது பெரிய நகரங்களில் பணியாற்றும் மக்களுக்கு வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    • ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன.

    புதுடெல்லி:

    ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில், "ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் முன்னெடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான முகாம்கள் நடத்தப்படுகிறது.

    ரெயில் பயணச்சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது.
    • புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

    சுமார் 3 ஆண்டுகளாக சலுகை இல்லாத நிலையில், மீண்டும் எப்போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கட்டண சலுகை இப்போதைக்கு கிடையாது என்று சூசகமாக தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது:-

    பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.

    ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது.

    புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், இப்போதைக்கு ரெயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை வலுப்படுத்தும்.
    • வாரணாசி ரெயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மறுசீரமைக்கப்படுகிறது.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது என்றும், உலகிலேயே சிறந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாக இதை மாற்றும் வகையில் சுமார் 7000 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

    பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்கும் வகையில் தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் தயாரிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகப் பிரதிநிதிகள் குழுவினருடன் மந்திரி வைஷ்ணவ் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அந்தக் குழுவினர் அவருடன் பகிர்ந்து கொண்டனர்.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக குழுவினரின் முயற்சிகளை மந்திரி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் வாரணாசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே காசி தமிழ்ச் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார். இதுபோன்ற பரிமாற்ற நிகழ்ச்சிகள் நமது பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்கி, இரு பகுதி மக்களிடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • சென்னை- திருச்செந்தூர் ரெயில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
    • மத்திய இணை மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.

    மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.

    இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம்-கோவை ரெயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய பதில் கடிதத்தில். கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் இனி தினசரி இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ரெயில்வே அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, வரும் 4ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் வாரம் முழுவதும் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    • மின்னணுவியல் துறையில் மட்டும் 3 மில்லியன் வரை வேலை வாய்ப்பு உருவாகும்.
    • அறிவாற்றல், கணினி சார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதே பிரதமரின் நோக்கம்.

    இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கவுன்சில் சார்பில், டெல்லியில் தேசிய அளவிலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்கேற்ற கருத்தரம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மத்தியமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:

    மின்னணுவியல் மற்றும் பிபிஓ பிரிவில் எதிர்வரும் 2 ஆண்டுகளில் 10 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதில் மின்னணுவியல் துறையில் மட்டும் 2.5 முதல் 3 மில்லியன் வேலைவாய்ப்புகளும், பிபிஓ பிரிவில் 8 மில்லியன் வேலைவாய்ப்புகளும், எதிர்வரும் 2 ஆண்டுகளில் கூடுதலாக உருவாக்கப்படும். இதனை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சாத்தியமாக்கும். இதனால்தான், மத்திய அரசு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

    அறிவாற்றல், கனிணி சார்ந்த கல்வியறிவு ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் அம்சம். தகுதி, திறமை மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆரோக்கியமான சூழலை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மூலதனச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு நிதி உதவி.

    டிஜிட்டல் இந்தியா தொடர்பான மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மூன்று நாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழில்நுட்பத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.

    டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையிலான முக்கிய அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டம் சென்றடைய தகவல் தொடர்புத்துறை முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். நாடு முழுவதும் புதிதாக 25,000 தொலைத் தொடர்பு கோபுரங்களை நிறுவ 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார். அடுத்த 500 நாட்களில் இந்த கோபுரங்கள் அமைக்கப்படும் என்றார்.

    மாநிலங்களின் மூலதனச் செலவினங்களுக்காக சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், தொலைத் தொடர்புத்துறையில் வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் உகந்த கொள்கைகளை மாநிலங்கள் வகுத்து செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் கதி சக்தி திட்டத்தில் இணைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    • அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார்.
    • அப்போது பேசிய அவர் எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    47 ரெயில் நிலையங்களுக்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்த நிலையில், 32 ரெயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.

    200 ரெயில் நிலையங்களை சீரமைக்க அரசு பெரிய திட்டம் வகுத்துள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதிகள், காத்திருப்பு ஓய்வறைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

    எதிர்காலத்தில் இந்தியாவில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இருக்கும். அவற்றில் 100 ரெயில்கள் மராத்வாடாவின் லத்தூரில் உள்ள பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.

    பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் நெடுஞ்சாலைகள் அல்லது ரெயில்வே மூலம் இணைக்கப்பட்டு வருகின்றன. மராத்வாடாவின் சில பகுதிகளும் இணைக்கப்படும் என தெரிவித்தார்.

    • தொலைத் தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
    • எதிர்காலத்துக்கு ஏற்ற தொலைத் தொடர்பு சட்டம் அவசியம்.

    டெல்லியில் நடைபெற்ற தொலைத் தொடர்பு கள அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் மாநாட்டில் உரையாற்றிய மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:

    டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில் தரமான தொலைத்தொடர்பு இணைப்பு அவசியம். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, தொலைத் தொடர்புத்துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும்

    நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் பழங்கால தொலைத் தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம். இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரெயில்வேக்கு ரூ.100 செலவாகிறது என்றால், வெறும் ரூ.45 மட்டுமே பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.
    • அக்டோபர் முதல் பி.எஸ்.என்.எல்.லில் 5ஜி சேவை தொடங்க உள்ளது.

    பிஜ்னோர்

    ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம் சென்றுள்ளார். பிஜ்னோரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெயில் பயணிகளுக்கு 55 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக கூறினார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'ரெயில்வேக்கு ரூ.100 செலவாகிறது என்றால், வெறும் ரூ.45 மட்டுமே பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகைக்காக மத்திய அரசு ரூ.62 ஆயிரம் கோடி செலவிட்டது' என்று தெரிவித்தார்.

    புதிய ரெயில் திட்டங்கள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மின்சார ரெயில்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அவை என்ஜின் இல்லாமல 2-வது அல்லது 3-வது பெட்டியில் இருந்து இயக்கப்படும் வகையில் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.

    தொலைத்தொடர்பு துறையையும் வகித்து வரும் அஸ்வினி வைஷ்ணவ், அக்டோபர் முதல் பி.எஸ்.என்.எல்.லில் 5ஜி சேவை தொடங்கப்படுவதாகவும், அடுத்த 500 நாட்களில் 5 பெரிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    • பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2023 ஆகஸ்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    சென்னை:

    பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    தற்போது புதுடெல்லி - வாரணாசி, புதுடெல்லி - வைஷ்ணோ தேவி இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயிலில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சென்னை ஐ.சி.எப்.,பில் நடந்து வந்த தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.

    இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலில் இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொள்ள மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஐ.சி.எப்., வந்தார். அங்குள்ள பணியாளர்களிடம் தமிழில் நலம் விசாரித்த அவர், சோதனை ஓட்டத்திற்கு தயாராகவுள்ள புதிய வந்தே பாரத் ரெயிலில் ஏறி பார்வையிட்டார்.

    அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில் வரும் 2023 ஆகஸ்டுக்குள், 75 வந்தே பாரத் ரெயில்களை நாடு முழுதும் இயக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

    • 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • சில ரெயில்களில் பயணிகளுக்கு உதவ அடிப்படை மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது:

    ரெயில்வே பாதுகாப்புப் படை, பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி ரெயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சமூக ஊடகங்கள் மூலம் ரெயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் சில ரெயில்களில் அடிப்படை மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரெயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆன்லைன் மூலம்,பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு தரமான சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், ரெயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×