search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் துரைமுருகன்"

    • காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.

    சென்னை:

    அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் அவர்கள் முழு அடைப்பு நடத்துவது பற்றி நான் ஒன்றும் சொல்ல தேவையில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால், சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிற தனி அதிகாரம் என்ன ஆகும் என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும்.

    அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் தங்களுடைய கருத்துக்கு எதிர்ப்பு வருவதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதையும் சுப்ரீம் கோர்ட்டு தான் தீர்மானிக்க வேண்டும்.

    13.9.2023 முதல் 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. நாளையுடன் அந்த 15 நாள் கெடு முடிகிறது. இடையில் கர்நாடகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் நமக்கு தர வேண்டிய தண்ணீரை தந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 2500 கனஅடி, 3000 கனஅடி என்று வழங்கியவர்கள் படிப்படியாக இன்று காலை நிலவரப்படி 7 ஆயிரம் கனஅடி திறந்து விட்டுள்ளனர்.

    இன்னும் நமக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரவேண்டி இருக்கிறது. நாளைக்குள் இந்த தண்ணீர் வந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் ஆன்லைனில் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் நமக்கு தேவையான 12,500 கனஅடி தண்ணீரை தர வேண்டும் என்று வற்புறுத்துவோம்.

    காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறக்க வேண்டும்.

    பாஜக கூட்டணியில் இருக்கக் கூடாது என்பதை உணர்ந்துதான் அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி முறிவு, அவர்கள் வீட்டில் நடப்பது, அதைப்பற்றி நாம் கருத்து கூற முடியாது.

    அதிமுக- பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா? இருக்கக்கூடாதா என்பதை அந்த கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரியில் இருந்து மொத்தம் 107 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும்.
    • கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது.

    புதுடெல்லி:

    தமிழகத்துக்கு தேவையான காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

    அதுமட்டுமின்றி காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் கர்நாடக அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

    காவிரியில் இருந்து மொத்தம் 107 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட வேண்டும். இந்த நீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் காய்ந்து கிடக்கிறது.

    இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் 12 பேர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்க நேற்று டெல்லி சென்று இருந்தனர்.

    நேற்று மாலை 4 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் மத்திய மந்திரியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமரை பார்க்க மத்திய மந்திரி சென்று விட்ட காரணத்தால் எம்.பி.க்கள் குழுவினர் நேற்று சந்திக்கவில்லை.

    இதனால் இன்று காலையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழுவினர் 12 பேர் மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    மத்திய மந்திரியை சந்தித்த பிறகு அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மத்திய மந்திரி ஷெகாவத்தை சந்தித்தீர்களே? என்ன சொன்னார்?

    பதில்:- வழக்கமான சந்திப்புதான். கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தர மறுக்கிறார்கள்.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். கர்நாடகாவில் கிட்டத்தட்ட 54 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருக்கிறது. ஆங்காங்கே சின்னசின்ன அணையை கட்டி கே.ஆர்.சாகர் வரும் முன்பே தண்ணீரை தேக்கி வைத்து உள்ளனர்.

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு 13-ந்தேதி 12,500 கனஅடி கொடுக்கலாம் என்று அவங்களே சொன்னார்கள். ஆனால் 5 ஆயிரம்தான் காவிரி மேலாண்மை ஆணையம் கொடுக்க சொல்லி உள்ளது. 5 ஆயிரம் சொன்னாலும் நேற்று கூட 3,500 கனஅடி தான் திறந்து விடப்பட்டு உள்ளது.

    கர்நாடகம் நினைத்திருந்தால் நேற்றே திறந்து விட்டிருக்கலாம். அவர்களுக்கு தண்ணீர் திறந்து விடும் எண்ணம் கிடையாது. அதனால் மத்திய அரசு என்ன செய்ய போகிறீர்கள் என கேட்க வந்தோம். நாங்கள் அணையை முழுவதும் திறந்து விடுங்கள் என்று கேட்கவில்லை.

    தண்ணீரை எப்படி பங்கீட்டு கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழி சொல்லி உள்ளது. அதன்படி கூட தண்ணீர் தரவில்லை. அதனால் நாங்கள் அப்பீல் செய்தோம். எனவே காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஆனால் நாங்கள் வந்தாலும் ஒரு மனுவை வாங்குகிறீர்கள். அவர்கள் வந்தாலும் ஒரு மனுவை வாங்கி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இதுதான் எங்களுடைய கொடுமை என்றோம்.

    உடனே மத்திய மந்திரி ஒழுங்காற்று குழு சேர்மனை கூப்பிட்டு கேட்டார். அவர் ஒரு கணக்கு சொன்னார். 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தான் தர முடியும் என்று கூறினார். கர்நாடகாவில் குடிநீருக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தார். எவ்வளவுதான் குடிநீருக்கு கொடுப்பது.

    ஏற்கனவே நாங்கள் நடுவர் மன்றத்தில் வாங்கியதில் 17 டி.எம்.சி. சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த பிறகு அதுவும் குறைந்து விட்டது. அதற்கு பிறகும் குடிநீர் என்றால் எப்படி? உடனே நாங்கள் சொன்னோம், எங்களுக்கும் பல பகுதிகளில் குடிநீர் மையமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பகுதியான இடங்கள் காவிரி நீரை குடிநீராக பயன்படுத்துகிறார்கள். இப்போது கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தலை விரித்து ஆடுகிறது என்று சொன்னோம்.

    உடனே மத்திய மந்திரி நாங்கள் என்ன செய்வது என்றார். அப்படியானால் மத்திய அரசு எதற்கு இருக்கிறது என்று கேட்டோம். மத்திய அரசு நடவடிக்கை இல்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறோம் என்று கூறி உள்ளோம்.

    சுப்ரீம் கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

    கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டில் என்ன வாதங்கள் வைக்கப்படும்?

    பதில்:- இதுபோன்ற வாதங்கள் காவிரி நீர் ஒழுங்காற்று குழு தந்துள்ள புள்ளி விவரங்கள் படி தண்ணீர் தாருங்கள் என்கிறோம். 12,500 கனஅடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என கூறியபடி கேட்கிறோம்.

    நாங்கள் சேர்மனிடம் கேட்டோம், நீங்கள் இங்கிருந்து உட்கார்ந்து கொண்டு சொல்கிறீர்களா? அல்லது உங்க ஆட்கள் அங்கு மானிட்டர் செய்கிறார்களா? என கேட்டேன். அதற்கு அவர் எங்க ஆட்கள் மானிட்டர் செய்கிறார்கள் என்று கூறினார்.

    கேள்வி:- மத்திய மந்திரி கடைசியாக என்ன பதில் கூறினார்?

    பதில்:- கர்நாடகம் தண்ணீர் இல்லை என்று சொன்னாலும் நாங்கள் தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட சொல்லி உள்ளோம் என்றார்.

    நாங்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருவதால் அதுவரையாவது 5 ஆயிரம் கனஅடி திறந்து விடுங்கள் என்றோம்.

    கேள்வி:- மத்திய மந்திரி கர்நாடகம் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளும் விதம் சரி என்று மத்திய மந்திரி நினைக்கிறாரா? அல்லது தவறு என நினைக்கிறாரா?

    பதில்:- அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை. ஆனால் நீங்கள் இந்த விஷயத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நான் மத்திய மந்திரியிடம் தெரிவித்தேன்.

    கேள்வி:- கர்நாடக முதல்-மந்திரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட பேசுவதாக உங்களுக்கு உறுதிமொழி கொடுத்து உள்ளரா?

    பதில்:- அந்த மாதிரி உறுதிமொழி எதுவும் கொடுக்கவில்லை.

    கேள்வி:- மத்திய மந்திரி முடிவாக என்னதான் சொன்னார்?

    பதில்:- தண்ணீருக்கு சொல்லி உள்ளது கொடுத்திருக்காங்க மழை வந்தால் பார்க்கலாம் என்றார்.

    கேள்வி:- காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண 'ராசிமணல்' அணை கட்டப்பட வேண்டும் என்ற ஒரு கோரிக்கை உள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லையே.

    பதில்:- அதுக்கும் இதுக்கும் சம்பந்தப்படுத்தாதீர்கள். அந்த கதையே இப்போது வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநகராட்சி அதிகாரிகள் எந்த வேலையும் பார்க்கவில்லை.
    • பொதுமக்கள் குறைகளை அமைச்சரிடம் சென்று முறையிடுவார்கள்.

    துன்பப்படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா என்பதைப் போல் அமைச்சர் துரைமுருகன் மக்கள் மத்தியில் நின்று பேசியது ஆச்சரியமாக இருந்தது.

    காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர் பேசும்போது, வேலூர் மாநகராட்சி பகுதியில் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக கிடக்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் எந்த வேலையும் பார்க்கவில்லை. வேலை பார்க்காத அதிகாரிகளை பட்டையை உரிக்கணும் என்றார்.

    பொதுமக்கள் குறைகளை அமைச்சரிடம் சென்று முறையிடுவார்கள். ஆனால் அமைச்சரே குறைகளை பார்த்து வேதனைப்படும்போது யாரிடம் சென்று முறையிடுவார்கள்.

    • அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
    • குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 4 முறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதுவரை வேலூர் மாநகராட்சியில் நிறைவான பணிகள் எதுவும் நடக்கவில்லை.

    பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    இனி ஒவ்வொரு மாதமும் 6-ந் தேதி மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும். அடுத்த கூட்டத்திற்குள் மாநகராட்சியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பணிகள் பகுதி வாரியாக நடைபெறும்.

    காவேரி மேலாண்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணை நடக்க இருந்தது. கர்நாடக அரசு அவசரமாக விசாரிக்க தேவையில்லை என கூறியதை தொடர்ந்து, வழக்கு வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைக்க ப்பட்டுள்ளது. அன்று நடக்கும் விசாரணையில் தமிழகத்தின் வாதங்களை முன்வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
    • தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    சென்னை:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கவில்லை. காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். தமிழகத்திற்கு 9ம் தேதிவரை 37.9 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அரசு தரவேண்டும் என்றும், இந்த தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்கவில்லை. இதனால் தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் செல்லுவதைத் தவிர வேறு வழியில்லை.

    ஆகஸ்ட் 11ம் தேதி வரை கர்நாடகா 53.77 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கி இருக்க வேண்டும்.

    ஆனால் கர்நாடக அரசு வழங்கி இருப்பதோ 15.79 டி.எம்.சி தான், பற்றாக்குறை 37.97 டி.எம்.சி

    தஞ்சை தரணியில் பயிர்கள் எல்லாம் காய்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. தஞ்சை வறண்டால் தமிழ்நாடே வறண்டு போகும் என்பார்கள் என தெரிவித்துள்ளார்.

    • டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
    • காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்க உள்ளார்.

    சென்னை:

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    ஆலோசனைக்கு பின் டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்திக்க உள்ளார். காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் துரைமுருகன் தெரிவிக்க உள்ளார்.

    • கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு தமிழ் நாட்டில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேகதாது அணை கட்ட விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில், வேலூரில் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துறை முருகன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எவ்வித பேச்சுவார்த்தை, சமரசம் செய்தாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்.

    மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும்.

    காவிரி பிரச்சினை குறித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம்.
    • அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை.

    சென்னை:

    கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அங்கு சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளார்.

    கர்நாடக அமைச்சரவை பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சென்றிருந்தார். புதிதாக பதவி ஏற்ற கர்நாடக காங்கிரஸ் அரசு காவிரி பிரச்சனையில் சுமூகமாக நடந்து கொள்ளும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால் பதவி ஏற்ற ஓரிரு நாளில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று வெளிப்படையாக பேசினார். அவரது பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சென்னையில் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்-மந்திரியான சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம் என்று தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். சிவக்குமார் பதவி ஏற்றவுடன் வேறு பணிகளை செய்வார் என நினைத்தோம். ஆனால் அண்டை மாநிலங்களுடன் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. நாங்கள் மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கவில்லை.
    • நான் இரண்டு நாட்களாக சென்னையில் இல்லை.

    சென்னை:

    தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.

    இதையடுத்து இன்று மதியம் தி.மு.க. மூத்த அமைச்சரான துரைமுருகன், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை மறுத்த அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு 'யாமறியேன் பராபரமே' என்று கூறிய அமைச்சர் துரைமுருகன், அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்றே எனக்கு தெரியாது. அமைச்சர்களை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம்; அதை அவரே முடிவெடுப்பார்.

    தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கவில்லை.

    நான் இரண்டு நாட்களாக சென்னையில் இல்லை. நடக்கும்போது அனைத்தும் நடக்கும். நான் ஆளுநரை சந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுவாணி தான் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக தெரிவித்தார்.
    • கேரளா அரசு 70 மில்லியன் வரை நீரை தேக்கும் அளவு அணை கட்டியிருப்பதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

    சென்னை:

    சட்டசபையில் சிறுவாணி அணை விவகாரத்தில் தமிழ்நாடு கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி, சிறுவானி அணையின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்தி வந்துள்ளதாகவும், அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், தடுப்பணை கட்டுவதாக செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பியுள்ளதாகவும், அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.

    தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது குடிநீர் ஆதார பிரச்சினை என்றும், சிறுவாணிக்கு வரும் தண்ணீர் அணை கட்டினால் வராது எனவும், அணை கட்டப்பட்டால் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சிறுவாணி தான் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், இந்த செய்தி எங்களுக்கும் வந்திருப்பதாகவும், கேரளா அரசு 70 மில்லியன் வரை நீரை தேக்கும் அளவு அணை கட்டியிருப்பதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர் என்றும், தமிழ்நாடு கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் விளக்கம் அளித்தார்.

    • ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை.
    • ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இந்தமுறை ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். வேலூர் கதிர் ஆனந்த் எம்.பி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

    கூட்டத்தில், முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அடுத்த லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முதலமைச்சர் அறிவித்தவாறு வாக்காளர் பட்டியலின்படி பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் தயாரிப்பது, கட்சியில் மேலும் ஒரு கோடி உறுப்பினர்களை இணைப்பது, ஈரோடு இடைத்தேர்தலில் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பூத்களில் அதிக ஓட்டுகளை சேர்த்த தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கும் பாராட்டு தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

    ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டது குற்றத்தின் அடிப்படையில் நடந்ததாக யாரும் கருதவில்லை. அவகாசத்தின் அடிப்படையில் மேல்முறையீட்டுக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. கோர்ட் கதவு திறக்கப்பட்டிருக்கிறது.

    ஆனால், அவர் அதை பயன்படுத்தும் முன்பாகவே அவசரமாக தண்டனை வழங்கியிருப்பது ஜனநாய கருத்துக்கு உகந்ததல்ல.

    ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டை மெஜாரிட்டியுடன் ஆளும் ஒரு கட்சி தனிமனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற எண்ணம் அரசியல் நோக்கர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எல்லா தலைவர்களுமே இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறியுள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் இந்தமுறை ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். இனி, அதை படுக்கைக்கு அடியிலேயே அவர் வைத்திருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சென்றடைவதற்கு முன் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும் என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

    சம்பா, தாளடி விளைச்சாலுக்காக தொடர்ந்து அடுத்த ஆண்டு (ஜனவரி) 28-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து 250 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

    இதன் மூலம்  காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடியில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பயன் பெறுகிறது. 

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருவதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் 23.04.2022 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்திற்கு (82 சதவிகிதம்) பணிகள் முடிவடைந்துள்ளது. 

    இதில் ஆறுகள் தூர்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இப்பணிகள் தினசரி 210 கி.மீ. நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 

    ஆறுகள் வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் அனைத்தும் 31.05.2022-ற்குள் முழுமையாக முடிக்கப்படும். 

    இவ்வாறு அமைச்சர் திரு.துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    ×