search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cauvery management board"

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
    • இதில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது.

    இந்த அமைப்புகள் கூடும் கூட்டத்தில் தமிழகம் தனக்கு தேவையான, உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூட உள்ளது. இது 29-வது கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடக கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது.
    • இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது. இந்த அமைப்புகள் கூடும் கூட்டத்தில் தமிழகம் தனக்கு தேவையான, உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் நாளை மறுநாள் (1-ந் தேதி) கூட உள்ளது. இது 28-வது கூட்டம் ஆகும். இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் இருந்து காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், முதன்மை பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
    • நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும்.

    புதுடெல்லி:

    காவிரிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.

    ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரள மாநில அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து பங்கேற்றனர்.

    இதில் தமிழ்நாட்டில் இருந்து காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன், முதன்மை பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

    இந்த மாதம் கர்நாடகத்தில் இருந்து பருவமழையால் காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். ஆனால் தர வேண்டிய பழைய நிலுவை அப்படியே உள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 11 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். அது கிடைக்கவில்லை. இந்த டிசம்பர் மாதம் 6 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். அதையும் சேர்த்து மொத்தம் 17 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். எனவே அந்த தண்ணீர் கிடைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி தண்ணீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும்.

    நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

    • கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது.
    • கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    ஓசூர்:

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில் இன்று முழு அழைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    கர்நாடகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கன்னட அமைப்புகளின் சார்பில் சமீப நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று, கர்நாடக ரக்ஷன வேதிகே (சிவராம் கவுடா அணி) கன்னட ஜாக்ருதி வேதிகே, மற்றும் கன்னட கூட்டமைப்புகளின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    முன்னதாக, அத்திப்பள்ளியிலிருந்து மாநில தலைவர் சிவராம் கவுடா, மஞ்சுநாத் தேவா, நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த கன்னட அமைப்பினர், பின்னர் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், பெண்கள் உள்பட சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகன ஓட்டிகள் தலமலை வனச்சாலையை பயன்படுத்தி கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
    • கர்நாடகாவுக்கு சென்ற சரக்கு வாகனங்களும் தமிழக எல்லையான பண்ணாரி, புளிஞ்சூர் சோதனை சாவடிகள் வரை மட்டுமே சென்றன.

    சத்தியமங்கலம்:

    தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் மட்டும் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அன்றைய தினம் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

    அதன்படி சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பகுதியில் இருந்து கர்நாடக செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதேபோல் சரக்கு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என கன்னட அமைப்புகள் அறிவித்து இருந்தன. அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான தாளவாடி அடுத்த ராமாபுரம், கும்டாபுரம், பாரதிபுரம் எடத்திகட்டை, அருள்வாடி, காரப்பள்ளம், கேர்மாளம் ஆகிய மாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் இன்று காலை 6 மணி முதல் கர்நாடகாவில் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.

    சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வாகன ஓட்டிகள் தலமலை வனச்சாலையை பயன்படுத்தி கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்தையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பண்ணாரி தாளவாடி வழியாக தினமும் இயக்கப்பட்டு வந்த 9 தமிழக அரசு பஸ்கள் இன்று சத்தியமங்கலம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கர்நாடகாவுக்கு செல்ல வந்த பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    அதேபோல் கர்நாடகாவுக்கு சென்ற சரக்கு வாகனங்களும் தமிழக எல்லையான பண்ணாரி, புளிஞ்சூர் சோதனை சாவடிகள் வரை மட்டுமே சென்றன. அங்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பண்ணாரி சோதனைச்சாவடி மற்றும் புளிஞ்சூர் சோதனை சாவடியில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    இதேபோல் அந்தியூர் மற்றும் பர்கூர் வழியாக வரட்டுபள்ளம் சோதனை சாவடி, பர்கூர் போலீஸ் நிலைய சாவடி, கர்கே கண்டி ஆகிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்தியூரில் இருந்து மைசூருசெல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் கர்நாடகா-தமிழக எல்லை பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பெங்களூரு, மண்டியா, மைசூரு, துமகூரு, ராமநகர், ஹாசன், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், குடகு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டது.
    • பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது.

    பெங்களூரு:

    காவிரி ஒழுங்காற்று குழு தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடுவதற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பை நடத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளும், சங்கங்கள் உள்ளிட்ட 1,900 அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது.

    இதையடுத்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்துக்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தலைநகர் பெங்களுருவில் பேரணிகள் நடத்தவும் எந்த அமைப்புக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

    போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் இன்று நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி 5 பேருக்கு அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது. அதோடு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தாலோ அல்லது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ பந்த் நடத்தும் அமைப்பின் நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அமைப்பின் நிர்வாகிகளுக்கும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் தடை உத்தரவை மீறியும் பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீசார் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெங்களூரு, மண்டியா, மைசூரு, துமகூரு, ராமநகர், ஹாசன், பெங்களூரு புறநகர், சாம்ராஜ்நகர், குடகு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டது. ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடவில்லை. பெங்களூருவில் கடைகள், ஓட்டல்கள், திரையரங்குகள், வர்த்தக நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் மூடப்பட்டது. பெங்களூருவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வழக்கம்போல் பால், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி அத்தியாவசியம் என்பதால் திறக்கப்பட்டு இருந்தது.

    கர்நாடகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு காரணமாக கல்லூரிகளில் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இன்று பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான 2-வது மற்றும் 4-வது செமஸ்டர் தேர்வுகள் அக்டோபர் மாதம் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், மாகடி ரோடு, அல்சூர், இந்திரா நகர் உள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து வாகனத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர். மேலும் ஓசூர்-பெங்களூரு எல்லையான எலெக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, மடிவாளா, மாரத்தஹள்ளி, பிடிஎம் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு தமிழக அரசு விரைவு பஸ்கள் நேற்று நள்ளிரவு முதல் இயக்கப்படவில்லை.

    இதேபோல் சேலம் மேட்டூரில் இருந்து பாலாறு வழியாக கர்நாடக செல்லும் பஸ்கள், சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் பஸ்கள், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள், தர்மபுரி, ஈரோடு பகுதியிலிருந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் ஓசூர் எல்லை, மேட்டூர் அருகே உள்ள எல்லை, ஈரோடு தாளவாடி எல்லையில் டிரைவர்கள் வரிசையாக நிறுத்தி இருந்தனர். வேலைக்கு செல்பவர்கள் தமிழக சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பெங்களூரு செல்வதற்கு வந்த இலகு ரக வாகனங்களும் தமிழக எல்லையில் பேரிகார்டர் வைத்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன. எல்லையில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன் எச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கர்நாடக முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 26-ந் தேதி பெங்களூருவில் முழு அடைப்பை நடத்தி இருந்தனர்.

    இந்த நிலையில், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, கர்நாடகத்தில் இன்று காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    முழு அடைப்புக்கு பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், 1,900 அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இன்று காலை 10 மணியளவில் பெங்களூரு டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அடைப்புக்கு அனுமதி இல்லை என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

    என்றாலும், கர்நாடக முழு அடைப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடைகள், ஓட்டல்கள் மூடப்படுகிறது. பால், மருந்து கடைகள், ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் திறக்கப்பட்டு இருக்கும். பெங்களூருவில் வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் மூடப்படுகிறது.

    முழு அடைப்புக்கு கர்நாடக சினிமா வர்த்தக சபை ஆதரவு தெரிவித்து இருப்பதால், இன்று தியேட்டர்கள் திறக்கப்படாது என்றும், எந்த விதமான சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட உள்ளது. நகைக்கடைகளும் மூடப்படுகின்றன. பெங்களூருவில் ஆட்டோக்கள், வாடகை கார்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இன்று ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயக்கப்படாது.

    நடைபாதை வியாபாரிகளும், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து, நடைபாதை கடைகள், ஓட்டல்கள் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளனர். மெட்ரோ ரெயில்கள் மட்டும் பெங்களூருவில் எப்போதும் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    முழு அடைப்புக்கு அனுமதி கிடையாது என்று போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளதால், இன்று அரசு பஸ்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் முழு அடைப்பின் நிலைமையை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது.

    இதற்கிடையில், பெங்களூரு உள்பட மாநிலத்தின் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு முன் எச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க 80 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • கடந்த காலங்களை ஒப்பிடும்போது கர்நாடகத்தின் 4 அணைகளிலும் 54 சதவீத அளவுக்கு தண்ணீர் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.
    • காவிரி அணைகளுக்கு எவ்வளவு நீர் வருகிறது, வெளியேற்றப்படும் நீரின் அளவு எவ்வளவு என்பதை மூடிமறைக்க முடியாது.

    புதுடெல்லி:

    தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    உரிய தண்ணீர் இன்றி டெல்டா பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகி வருகின்றன. ஆனால் தண்ணீர் தர கர்நாடக அரசு மறுத்து வருகிறது.

    காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இவ்வாறு கர்நாடக அரசு பிடிவாதம் செய்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளில் கோர்ட்டு தலையிட முடியாது என கூறிவிட்டனர். இதனால் காவிரி மேலாண்மை ஆணையம், வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறமுடியாத சூழ்நிலை கர்நாடகத்துக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனையடுத்து காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.

    இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்படுவதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் அங்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டம் காணொலி காட்சி மூலம் டெல்லியில் இருந்து நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒழுங்காற்று குழு தலைவர் வினீத் குப்தா தலைமை தாங்கினார். காவிரியோடு தொடர்புடைய 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த மாநிலங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர். கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது.

    கூட்டத்தின் தொடக்கத்தில் வழக்கமான நிகழ்ச்சி நிரலின்படி, 4 மாநிலங்களிலும் பெய்த மழையின் அளவு, அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பின் விவரம் மற்றும் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு போன்ற தரவுகளை ஒழுங்காற்று குழு அதிகாரிகள் சேகரித்தனர்.

    அதைத் தொடர்ந்து நீர் பங்கீடு தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது, 'செப்டம்பர் மாதம் வரை 123.14 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது வரை 40 டி.எம்.சி. மட்டுமே வழங்கியுள்ளது. எனவே இந்த பற்றாக்குறையை சமன் செய்ய காவிரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்' என்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    ஆனால் கர்நாடக அரசு தரப்பில் பங்கேற்ற அதிகாரிகள் அதை மறுத்து, 'தமிழ்நாட்டுக்கு இனி தண்ணீர் திறக்க வழி இல்லை' என கூறினர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பற்றாக்குறை இன்னும் நீடிப்பதாகவும், கடந்த காலங்களை ஒப்பிடும்போது கர்நாடகத்தின் 4 அணைகளிலும் 54 சதவீத அளவுக்கு தண்ணீர் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்த அவர்கள், அதனால்தான் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்கிறோம் என்று விளக்கம் அளித்தனர்.

    இருந்தாலும் ஒழுங்காற்று குழு அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தண்ணீர் பற்றாக்குறை என்பது சரியானதுதான். ஆனாலும் தமிழ்நாட்டின் நிலையையும் பார்க்க வேண்டும் என கூறி, 3 ஆயிரம் கனஅடி வீதம் மேலும் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரைத்தனர்.

    இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.

    இதற்கிடையே கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி அணைகளுக்கு எவ்வளவு நீர் வருகிறது, வெளியேற்றப்படும் நீரின் அளவு எவ்வளவு என்பதை மூடிமறைக்க முடியாது. ஒகேனக்கல் பிலிகுண்டுலு அளவீட்டு மையத்தில் நீர்வரத்து குறித்த விவரங்கள் பதிவாகிறது. இதை 2 மாநில அதிகாரிகளும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கேட்கிறது. எங்களால் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.

    அதனால் நீர்வரத்து, நீர்வெளியேற்றம் குறித்த விஷயத்தில் பொய் சொல்ல முடியாது. நாம் பொய் சொன்னால் உண்மை தகவல்களை அதிகாரிகள் கூறுவார்கள். நாம் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது மழை பெய்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அதிகாரிகள் உண்மை தகவல்களை எடுத்து வைத்துள்ளனர். தமிழக அரசு வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடி நீர் கேட்டுள்ளது. அதை ஒழுங்காற்று குழு நிராகரித்துள்ளது. இது கர்நாடக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

    காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக எப்போதும் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் சென்று கொண்டிருக்கும். அணையில் இருந்து கூடுதலாக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்தால் போதும்.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • ஓசூரிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன.
    • தமிழக எல்லையான ஜுஜுவாடி அருகே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஓசூர்:

    காவிரி பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் இன்று கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ் சங்கம் உள்பட 150க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

    இதையொட்டி ஓசூரிலிருந்து பெங்களூருக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நேற்று இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டன. அதே போல், இரவு 12 மணிக்குள் அனைத்து தமிழக பஸ்களும் பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி திரும்பிவிட்டன.

    பெங்களூருவில் முழு அடைப்பையொட்டி, 400-க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், கர்நாடக அரசு பஸ்கள் மட்டும் குறைந்த அளவில் பெங்களூரு சென்று வருகின்றன.

    மேலும் சில தனியார் பஸ்களும் பெங்களூரு சென்றன. தமிழக அரசு பஸ்கள், பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக எல்லைவரை மட்டும் சென்று வந்தன. தமிழக எல்லையான ஜுஜுவாடி அருகே தமிழக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
    • பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், மாகடி ரோடு, அல்சூர், இந்திரா நகர் உள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சில கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

    இதையடுத்து இன்று தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் பேரணிகள் நடத்தவும் எந்த அமைப்புக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

    போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நள்ளிரவு முதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி 5 பேருக்கு அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது. அதோடு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தாலோ அல்லது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ பந்த் நடத்தும் அமைப்பின் நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி அமைப்பின் நிர்வாகிகளுக்கும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பெங்களூரு நகரில் போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீசார் என 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தவிர வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்புக்கு பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

    பொதுமக்களின் நலன் கருதியும் மற்றும் அவசர தேவையை கருத்தில் கொண்டும் பெங்களூருவில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பந்த் காரணமாக பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடவில்லை. திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டது. கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் திறந்திருந்தன. பெங்களூரு மைய பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக இருந்தது.

    அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த முழு அடைப்பு காரணமாக பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை பெங்களூரு நகர மாவட்ட கலெக்டர் தயானந்த் பிறப்பித்துள்ளார்.

    ஐ.டி. நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படி ஐ.டி. நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்தனர். போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், மாகடி ரோடு, அல்சூர், இந்திரா நகர் உள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து வாகனத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர்.

    மேலும் ஓசூர்-பெங்களூரு எல்லையான எலக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு, மடிவாளா, மாரத்தஹள்ளி, பிடிஎம் லே அவுட் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீஸ் தடை உத்தரவை மீறியும் பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கன்னட அமைப்பினர் காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட முதல் மந்திரி சித்தராமையா, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் உருவ பொம்மையுடன் போராட்டம் நடத்தினர்.

    பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு 250 தமிழக அரசு விரைவு பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் கர்நாடகாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் நள்ளிரவில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை.

    இதேபோல் சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் பஸ்கள், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள், தர்மபுரி, ஈரோடு பகுதியிலிருந்து செல்லும் பஸ்கள் அனைத்தும் தமிழக எல்லை பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டன.

    தமிழகத்தில் இருந்து தினசரி கர்நாடகா வழியாக வட மாநிலங்களுக்கு 35ஆயிரம் லாரிகள் செல்கிறது. இந்த லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் ஓசூர் எல்லை, மேட்டூர் அருகே உள்ள எல்லை, ஈரோடு தாளவாடி எல்லையில் டிரைவர்கள் வரிசையாக நிறுத்தி இருந்தனர். அதேபோல் வடமாநிலங்களில் இருந்து பெங்களூரு வழியாக தமிழகத்திற்கு 30 ஆயிரம் லாரிகள் வருகிறது. இந்த லாரிகளும் மாநில எல்லையில் நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் நடந்து வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந்தேதி கர்நாடக முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதையொட்டி 29-ந்தேதி டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை கண்டன ஊர்வலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

    • முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.
    • வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட சில கன்னட சங்கங்கள், முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை.

    பெங்களூரு:

    காவிரி நீர் தொடர்பாக கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது.

    தங்களிடம் போதிய நீர் இல்லாததால் இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதை கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த 23-ந் தேதி மண்டியாவில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இந்த முழு அடைப்புக்கு தமிழ் சங்கம் உள்பட150-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட சில கன்னட சங்கங்கள், முழு அடைப்புக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளன. ஓலோ, ஊபர் டாக்சி சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்றும், வழக்கம்போல் இயங்கும் என்றும் கூறியுள்ளன.

    முழு அடைப்பையொட்டி நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் இன்று ஊர்வலம் நடக்கிறது.

    பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு நேற்று நள்ளிரவு 12 மணியில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். பாதுகாப்புக்காக 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தமிழக அரசு பஸ்கள் தமிழக-கர்நாடகா எல்லையான ஓசூர் சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.
    • கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    பெங்களூரு:

    சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மைசூரு, மண்டியா உள்பட 5 மாவடங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 22 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மண்டியா மற்றும் மத்தூரில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளதை கண்டித்து சில கன்னட அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் பெங்களூருவில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி நாளை 26-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    போராட்டத்தையொட்டி பெங்களூருவில் நாளை ஆட்டோக்கள், லாரிகள், அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் இயக்கப்படாது. மேலும் ஐ.டி. நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பல்வேறு துறைகள், தொழில் அமைப்புகள், கடைகள் செயல்படாது. அதுபோல் பெங்களூருவில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளும் நாளை இயங்காது. வழக்கம்போல் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்து கடைகள் மற்றும் அவசர சேவைகள், அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்படும்.

    தமிழக அரசு பஸ்கள் தமிழக-கர்நாடகா எல்லையான ஓசூர் சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது.

    முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெங்களூருவில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது, மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது, சட்டவிரோத செயல்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக பெங்களூருவில் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் உள்ளனர். எங்கெங்கு தேவைப்படுகிறதோ அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இதற்கிடையே கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. இதில் கூட்டமைப்பில் உள்ள அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், எங்களை பொறுத்தவரையில் கர்நாடகம் முழுவதும் போராட்டம் நடைபெற வேண்டும். அதன்படி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 29-ந் தேதி கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முழு அடைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

    ×