search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "visa"

    எச்-1 பி விசா பெற்று அமெரிக்காவில் வசிப்பவர்கள் வேறு வேலைக்கு மாறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #H1B #trump

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர்களுக்கு எச்-1 பி என்ற விசா வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் அவர்கள் அந்த நாட்டில் வேலை பார்க்க அனுமதி கிடைக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் இந்த விசாவில் தங்கி இருந்து வேலை பார்க்கலாம்.

    பின்னர் நிரந்தரமாக வேலை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு கிரீன் கார்டு விண்ணப்பித்து பெற முடியும். நீண்ட காலம் இங்கு குடியிருந்தால் அமெரிக்க குடியுரிமையும் கிடைக்கும்.

    ஆனால், அதிபராக டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணி புரிவதற்கு பல கட்டுப் பாடுகளை கொண்டு வந்துள்ளார்.

    இதன்படி எச்-1 பி விசா முறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவில் இனி வேலை பெறுவது கடினமான ஒன்றாக மாறி இருக்கிறது.

    இதற்கு முன்பு எச்-1 பி விசா மூலம் வேலையில் இருப்பவர்கள் தேவைப்பட்டால் வேறு வேலைகளுக்கு மாறிக்கொள்ளலாம். ஆனால், இப்போதுள்ள விதிமுறைப்படி வேறு வேலைகளுக்கு மாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


     

    முன்பு எல்லா விதமான வேலைகளுக்கும் எச்-1 பி விசா வழங்கப்பட்டது. இப்போது வேலைகளை உயர் தகுதி பட்டியல் என பிரித்து அந்த பட்டியலில் உள்ள வேலைகளுக்கு மட்டுமே எச்-1 பி விசா வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஒரு நபர் குறிப்பிட்ட வேலையில் பணியாற்றி வரும் நிலையில் அதே மாதிரியான வேலையை இன்னொரு நிறுவனத்தில் செய்வதற்காக மாறி செல்ல முடியாது. அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் அந்த வேலையை உயர் தகுதி பட்டியலில் சேர்த்து அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே அதில் சேர முடியும்.

    இதற்காக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட பணியாளருக்காக எச்-1 பி விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். உயர் தகுதி பட்டியலில் அந்த வேலை இருந்தால் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும்.

    சம்பந்தப்பட்டவர்களும் அந்த வேலையில் சேர முடியும். ஆனால், பெரும்பாலான வேலைகளை உயர் தகுதி பட்டியலில் சேர்க்கவில்லை.

    எனவே, குறிப்பிட்ட வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாற முடியாத நிலை எச்-1 பி விசாதாரர்களுக்கு ஏற்பட்டு உள்ளது.

    அது மட்டும் அல்லாமல் அவர்கள் தங்கள் மனைவி- குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.

    இந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் எச்-1 பி விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு இதன் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #H1B #trump

    பாகிஸ்தானில் நடைபெற உள்ள பைசாகி திருவிழாவில் கலந்துகொள்ள, இந்தியாவில் இருந்து செல்லும் 2200 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது. #BaisakhiFestival #SikhPilgrimsVisa
    லாகூர்:

    பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் பைசாகி திருவிழா மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். இந்த விழா ஏப்ரல் 12ம் தேதி துவங்கி ஏப்ரல் 21 தேதி வரை நடைபெற உள்ளது.  

    இதையடுத்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலங்களான பஞ்ச சாகிப், நன்கனா சாகிப், மற்றும் கர்தார்பூர் உள்ளிட்ட தலங்களுக்கு  சென்று வழிபாடுகள், பூஜைகள் ஆகியவற்றில் சீக்கிய யாத்ரீகர்கள்  கலந்துக் கொள்வர்.



    இந்நிலையில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் விழாவிற்கு செல்லவுள்ள  2200 சீக்கிய யாத்ரீகர்களுக்கு  பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமானதாகும்.

    இது குறித்து பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,  ‘மங்களகரமான பைசாகி திருவிழாவில் கலந்துக் கொள்ள வரும் அனைத்து சீக்கிய சகோதர , சகோதரிகளையும் பாகிஸ்தான் சார்பாக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இந்த புனிதப்பயணம் யாத்ரீகர்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைய வாழ்த்துகிறோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. #BaisakhiFestival #SikhPilgrimsVisa


     

     
    ராமநாதபுரத்தில் விசா முடிந்தும் நாட்டை விட்டு செல்லாமல் இங்கேயே தங்கி இருந்த இலங்கை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள ஒரு தியேட்டர் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்ப முயன்றார். சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை துரத்தி சென்று பிடித்தனர்.

    பின்னர் வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் இலங்கை திரிகோணமலை செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் மோகனரூபன் (வயது25) என தெரியவந்தது.

    மோகனரூபன் விசா பெற்று சில மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். 3 மாதத்திற்கு முன்பு விசா காலாவதியாகி விட்டது. ஆனாலும் அவர் இலங்கை செல்லாமல் ராமநாதபுரத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகனரூபனை கைது செய்தனர்.
    கோவை வாலிபருக்கு மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்துக்கு வேலை கிடைத்தும் லண்டன் செல்ல விசா கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    கோவை:

    கோவை போத்தனூரை சேர்ந்தவர் ரீகன்(வயது30).

    பட்டதாரியான இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக லண்டன் சென்றார். அங்குள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்த இவர் பகுதி நேரமாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் இவரது சான்றிதழ்கள் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கும், ரீகனுக்கும் இடையேயான வழக்கு 3 வருடங்களாக நடந்தது.

    இந்த வழக்கில் ரீகன் வெற்றி பெற்றார். இதையடுத்து ரீகன் மீண்டும் லண்டனில் வேலைக்கு செல்ல தயாரானார். அவருக்கு அங்குள்ள ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்துக்கு வேலை கிடைத்தது.ஆனால் பல மாதங்களாகியும் ரீகனுக்கு விசா கிடைக்கவில்லை.

    இதனால் அவருக்கு கிடைத்த வேலையும் பறிபோனதாக கூறப்படுகிறது. இது ரீகனுக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது.

    கடந்த 14-ந் தேதி இரவு வீட்டில் இருந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதிர்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளதாக துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு கூறியுள்ளார். #studentvisa

    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டுக்கான தமிழக- புதுவை துணை தூதர் கேத்தரின் ஸ்வார்டு புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரான்சுக்கு கல்வி கற்கவும், வர்த்தகம், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரான்சுக்கு சராசரி வருகையாளர் எண்ணிக்கை தற்போது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    வருகிற 2020-ம் ஆண்டில் பிரான்சில் கல்வி பயில 10 ஆயிரம் பேர் இந்தியாவில் இருந்து விசா பெறும் வாய்ப்பு உள்ளது.


    பிரான்ஸ் தூதரகத்துடன் இணைந்து இந்த சேவையை வழங்கும் முறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் புதுவையில் இருந்து பிரான்ஸ் செல்ல விசா விண்ணப்பங்கள் எண்ணிக்கை 34 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    தென் இந்தியாவிலேயே அதிக அளவில் புதுவையில் இருந்து விண்ணப்பிக்கின்றனர்.

    கொச்சியில் இது 51 சத வீதமாகவும், சென்னையில் 39 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #studentvisa

    இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி பயணம் செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா துறை மந்திரி தெரிவித்துள்ளார். #SriLankaVisa
    கொழும்பு:

    இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் தற்போது ‘விசா’ பெற்று சென்று வருகின்றனர். அந்த நடைமுறையை மாற்றி ‘விசா’ இன்றி பயணம் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இந்த தகவலை இலங்கை சுற்றுலா துறை மந்திரி ஜான் அமரதுங்கா தெரிவித்தார். இந்தியா மற்றும் சீன சுற்றுலா பயணிகள் ‘விசா’ இன்றி பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுகுறித்து ஆராய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஒரு குழு அமைத்துள்ளார் என்றும் அவர் கூறினார். #SriLankaVisa
    இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்குவதற்கான பரிசீலனைக்கான குழுவை அமைத்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
    கொலும்பு:

    இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட அண்டை நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பரிசீலனை செய்ய இலங்கையின் சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழுவின் பரிசீலனையின் அடிப்படையில், விரைவில் இந்தியாவில் இருந்து விசா இன்றி சுற்றுலா பயணிகள் இலங்கை செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஏஜெண்டுகள், விமான நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தை வசூலிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SriLanka #RanilWickremesinghe #VisaFreeEntry
    விசா முரண்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த சீன வாலிபர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்.
    ஆலந்தூர்:

    சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு விமானத்தில் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் விசா மற்றும் பாஸ்போர்ட் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீனாவை சேர்ந்த ‌ஷயாங்க் என்ற வாலிபரின் ‘விசா’வில் முரண்பாடு இருந்தது. எனவே, அவர் அடுத்த விமானத்தில் மீண்டும் சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

    இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த 10 சீன மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களுக்கான ‘விசா’வில் வராமல் சுற்றுலா ‘விசா’வில் அவர்கள் வந்த தாக குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பிரிட்டனுக்கு பணிக்கு சென்று அங்கேயே வாழும் பிற நாட்டவர்களுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என்ற சமீபத்திய அறிவிப்பை திரும்பப்பெறும் திட்டமில்லை என அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியுள்ளது. #UKImmigrantPolicy #India
    லண்டன்:

    பிரிட்டன் அரசு சமீபத்தில் குடியுரிமை பெறுவதற்கான விதிகளை கடுமையாக்கியது. இந்தியா உள்ளிட்ட அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் பணிபுரிந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பிரிட்டனில் உயர் பணிகளில் இருக்கும், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்து அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றிணைந்து மிகப்பெரிய பிரசாரம் மேற்கொண்டனர். அரசின் இந்த அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தினர்.

    இதையடுத்து, குடியுரிமை விதி குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய குடியுரிமை மந்திரி கரோலின் நோக்ஸ், அந்நிய நாடுகளில் இருந்து பிரிட்டனில் பணி புரிபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்துள்ளார். #UKImmigrantPolicy #India
    பாகிஸ்தான் லாகூரில் நடைபெற உள்ள மறைந்த மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக 300 இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கியுள்ளது. #Pakistan
    இஸ்லாமாபாத்:

    19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சீக்கிய அரசர் மகாராஜா ரஞ்சித் சிங். பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் உள்ள குருத்வாரா தேரா சாகிப் ஆலயத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜூன் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    இந்த நினைவு அஞ்சலியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்கின்றனர். இதையொட்டி, சீக்கிய யாத்ரீகர்கள் 300 பேருக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வழங்கியுள்ளது. மேலும், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி பகுதியில் இருந்து லாகூருக்கு சிறப்பு ரெயிலையும் பாகிஸ்தான் ரயில்வே அறிவித்துள்ளது.  #Pakistan
    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.

    அதைப்போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறும்வகையில், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.

    இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 பேர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 பேரும், என மொத்தம் 99 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ், 2017-18-ம் கல்வி ஆண்டில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அறிவியல், மெட்டலார்ஜி, புரடக்‌ஷன் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ஸ்வைன்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    சிவில் மற்றும் பி.டெக். பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள லெய்ப்னிஸ் பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேசன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy
    ×