search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்"

    • நண்பரிடமிருந்து ஷேக் முஸமில் அகமது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் முஸமில் அகமது (வயது 25). இவர் கனடா நாட்டில் ஒன்டாரியோவில் உள்ள கிச்சனர் சிட்டி கோனெஸ்டோகா கல்லூரியில் முதுகலை ஐ.டி. படித்து வந்தார். கடந்த பல நாட்களாக இவர் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது இறந்துவிட்டதாக அவரது நண்பரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷேக் முஸம்மில் அகமது உடலை விரைவில் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு அவரது மாமாவும், தெலுங்கானா மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சி தலைவரான அம்ஜத் உல்லா கான் 'எக்ஸ்' இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் , இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார். அதில் மாணவனின் உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது.
    • பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மிளகாய்பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் பொன்ஜனகன் (வயது 17).இவர் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்நிலையில் மாணவன் பொன்ஜனகன் மாலையில் டியூசன் முடித்து விட்டு நிலக்கோட்டை நால்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பணப்பை கிடந்தது. அந்த பையில் பணத்துடன் கூடிய மணி பர்ஸ், செல்போன் மற்றும் சில ஆவணங்கள் இருந்தது. இதை பார்த்த மாணவன் அதனை நிலக்கோட்டை நால் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    உடனடியாக பள்ளி மாணவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாந்திடம் இது குறித்து போலீசார் தெரிவித்தனர். மாணவனின் இந்த செயலை பாராட்டிய நிலகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் பிரசாத் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

    பள்ளி மாணவனின் நேர்மையை அவரது ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டினர். மேலும் தவற விட்ட பணப்பை மற்றும் செல்போன் யாருடையது என்று விசாரணை நடத்தியதில் துரைசாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவரவே அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவரும் பள்ளி மாணவனின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    • முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை.
    • 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது.

    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை பெறக்கூடிய 10-ம் வகுப்பு மாணவர்தான் அவர். ஆனால் தனது திறமையினால் சாதாரண சைக்கிள் ஒன்றை அதிக விலை மதிப்புள்ள சைக்கிளாக மாற்றி அசத்தியது தான் இங்கு ஆச்சரியமானது.

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சேர்ந்த காதர் ஷாமுனா என்பவரின் மகன் சுல்தான் அப்துல்காதர் (வயது16). இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதலே பொம்மை கார்கள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களையும், சிறு சிறு மின் கருவிகளையும் 'அக்கு வேறு ஆணி வேறாக' பிரித்துப் போட்டு ஆராய்ந்து மீண்டும் அதனை பொருத்தி வைத்து இயக்கி பார்ப்பதில் அலாதி ஆனந்தம் காண்பவராக இருந்துள்ளார்.

    இந்த வகையில்தான் சுல்தான் அப்துல்காதரின் கவனம் தனது சைக்கிள் மீதும் ஏற்பட்டுள்ளது. குறைந்த செலவில் அந்த சைக்கிளை பேட்டரியில் இயங்கும் மொபட் போல மாற்ற வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியுள்ளது. அவ்வப்போது தனது பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை சேமித்து தனது கனவு சைக்கிளுக்காக தேவைப்படும் பேட்டரி, மோட்டார் மற்றும் உதிரி பாகங்களை வாங்கி சேர்த்துள்ளார். பின்னர் அவற்றையெல்லாம் சைக்கிளில் பொருத்திப் பார்த்து அவ்வப்போது பரிசோதனையை நிகழ்த்தி வந்துள்ளார்.

    இந்த முயற்சியில் பல கட்ட இடர்பாடுகளை சந்தித்து சந்தித்து நிறைவாக அவர் எட்டியுள்ளதுதான் சாதனை. இப்போது இலகுவான சைக்கிள் பேட்டரி மொபட் காயல்பட்டினத்தில் பலராலும் பாராட்டப்படும் வாகனமாக மாறி உள்ளது. பட்டனை அழுத்தி 'ஸ்டார்ட்' செய்து திருகினால் 'ரெக்க கட்டி பறக்குதய்யா சுல்தானோட சைக்கிள்'. 2 மணி நேரம் 'சார்ஜ்' செய்தால் 14 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிக்க முடிகிறது. மணிக்கு 40 கிலோமீட்டர் தூர வேகம்.

    தேவைப்பட்டால் சாதாரணமாக 'பெடல்' செய்தும் பயணிக்கலாம். கூடுதலாக பேட்டரி இணைப்புடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வசதியும், தானியங்கி லாக் சிஸ்டமும் உள்ளன. இவை தவிர இந்த வண்டி எங்கே செல்கிறது என்பதை காட்டுவதற்கான ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நவீன சைக்கிளை ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. எவ்விதத்திலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இந்த சைக்கிளைப் பற்றிய பரபரப்பான பேச்சு காயல்பட்டினம் பகுதியில் உலவி வருகிறது.

    இது பற்றி சுல்தான் அப்துல்காதர் பயின்று வரும் பள்ளியின் தலைமை ஆசிரியரான அப்துல்காதர் கூறியதாவது:-

    எங்கள் மாணவன் சுல்தான் அப்துல்காதரின் இந்த சாதனையை கண்டு வியந்தோம். பள்ளியின் நிர்வாகிகளான வாவு மஸ்னவி, வாவு நெய்னா ஆகியோர் இந்த முயற்சிக்கு பாராட்டுதலை தெரிவித்ததோடு, இந்த 'சைக்கிள் மொபட்' வாகனத்தை இன்னும் மேம்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவையோ அவற்றை எல்லாம் வாங்கித் தந்து உதவுவதாக கூறியுள்ளனர். மாணவனின் தேர்வு காலம் முடிந்த பிறகு கூடுதலான சைக்கிள் மொபட்டுகளை தயாரிக்கலாமா என்பது பற்றியும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆக ஒரு சாதாரண சைக்கிளை ரூ.10 ஆயிரம் செலவில் எளிய ரக மோட்டார் வாகனமாக மாற்றி காட்டி சாதனை புரிந்துள்ளார் பள்ளி மாணவரான சுல்தான் அப்துல்காதர். இவரை காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது உள்ளிட்ட பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர். காயல்பட்டினத்தில் அரசின் இலவச சைக்கிள்களை பெற்றுள்ள மாணவர்களுக்கும் இதுபோன்று தங்கள் சைக்கிளையும் மதிப்பு கூட்டி மொபட் போல் மாற்றி அதில் பயணிக்கும் ஆசை பெருகி வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் அதிகாரிகள் இந்த மாணவனின் சாதனை முயற்சியை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    • மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.
    • மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி வெள்ளியமட்டம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவர் மேத்யூ பென்னி. இவரது தந்தை பென்னி ஏராளமான மாடுகளை வளர்த்து வந்தார். அதனை வைத்து பால் பண்ணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் பென்னி திடீரென இறந்துவிட்டார். இதனால் தனது தந்தை வளர்த்துவந்த மாடுகளை, மாணவன் மேத்யூ பராமரிக்க வேண்டிய நிலை உருவானது. இதையடுத்து அவர் தனது தந்தையின் பண்ணையில் இருந்த மாடுகள் அனைத்தையும் பராமரித்து பால் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    சிறு வயதில் மாடுகளை சிறப்பாக வளர்த்து வந்ததன் காரணமாக பிரபலமானார். இதன் காரணமாக மாணவன் மேத்யூவுக்கு விருதும் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவர் வளர்த்து வந்த 22 மாடுகளில் பல மாடுகள் அடுத்தடுத்து சுருண்டுவிழுந்தன. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர்.

    இருந்தபோதிலும் பண்ணையில் இருந்த 13 மாடுகள் அடுத்தடுத்து இறந்தன. இதனைப்பார்த்து மாணவன் மேத்யூ அதிர்ச்சியடைந்தார். தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்துகிடப்பதை பார்த்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மூலமட்டம் அருகே உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    மேத்யூ வளர்த்து வந்த மாடுகள் எப்படி இறந்தன? என்பதை கண்டறிய, இறந்து போன மாடுகள் அனைத்தும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது மரவள்ளி கிழங்கு தோல் சாப்பிட்டதே மாடுகள் இறந்ததற்கு காரணம் என்பது தெரியவந்தது.


    மாடுகள் சாப்பிட்ட மரவள்ளி கிழங்கு தோலில் ஹைட்ரோசியானிக் அமிலம் கலந்திருந்ததால் அவை இறந்திருக்கின்றன. இறந்தவற்றில் 5 மாடுகள் கறவை மாடுகள் ஆகும். 13 மாடுகள் இறந்ததால் மாணவர் மேத்யுவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

    அவர் மாடுகளுக்கு காப்பீடு எதுவும் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் அவருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தான் வளர்த்து வந்த மாடுகள் இறந்தது மாணவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இறந்த மாடுகள் அனைத்தும் அங்குள்ள தோட்டத்தில் குழி தோண்டி புகைக்கப்பட்டன.

    மற்ற மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

    • மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் சிக்கப் பல்லாப்பூர் மாவட்டம் முருகமல்லே என்ற இடத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி மாணவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதை மற்றொரு மாணவர் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த காட்சிகள் கர்நாடக மாநிலம் முழுவதும் வைரல் ஆக பரவியது. இதுபற்றி தெரியவந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு கல்வி அதிகாரி உமாதேவி என்பவர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது கல்வி சுற்றுலாவின் போது எடுத்த சில படங்கள் மற்றும் வீடியோக்களை தலைமை ஆசிரியை நீக்கியது தெரியவந்தது. இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாணவருக்கு முத்தம் கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்து கல்வித்துறை அதகாரிகள் நடிவடிக்கை எடுத்துள்ளனர்.

    • சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
    • மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
    • பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.

    விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.

    கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.

    • தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
    • குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த கொல்லாச்சேரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-வது படிக்கும் சந்தோஷ் (16) என்ற மாணவர் மாநகர பஸ்சில் படிக்கெட்டில் தொங்கிச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.

    பலத்த காயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக பஸ் டிரைவர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் மீது குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
    • எனது மகன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்

    குளச்சல் :

    இரணியல் அருகே கண்டன் விளை சடையமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 12-ம் வகுப்பு, 2-வது மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று எனது இளைய மகன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது குசவன்குழி பகுதியை சேர்ந்த தொழிலாளி ரவி, எனது மகனை வழிமறித்து மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அந்த பகுதியில் உள்ள காலி கட்டிடத்திற்கு அழைத்து சென் றார். பின்னர் எனது மகனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார்.

    இதையடுத்து எனது மகன் அங்கிருந்து ஓடி வந்து விட்டார். இந்த நிலையில் மீண்டும் எனது 2-வது மகன் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வந்தபோது வலுக்கட்டாயமாக ரவி அவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார். இதை பார்த்த எனது மூத்த மகன் ரவியை எச்சரித்தார். இதனால் எனது மகன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி யிருந்தார். இதுதொடர்பாக குளச்சல் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரவி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கேடஸ்வரா மெட்ரிக் பள்ளி வாசிப்போர் மன்ற மாணவர்களை சந்தித்து இறையன்பு பாராட்டினார்

    புதுக்கோட்டை,  

    தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளராக இறையன்பு, தனது பதவி காலத்தின் போது, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் வாசிப்போர் மன்றம் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    அதன்படி தமிழ்நாட்டில் முதன் முதலாக புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் வாசிப்போர் மன்றம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாசிப்போர் மன்றத்தின் 8வது கூட்டத்தில் இறை யன்பு எழுதிய பல்வேறு நூல்களை வாசித்து பிடித்ததைப் பகிர்ந்தனர். இதைக் கேட்டறிந்த இறையன்பு வாசிப்போர் மன்றத்தில் கலந்துகொண்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்களை சந்திக்க விரும்பினார்.

    இதனை தொடர்ந்து அவர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களும் தாங்கள் படித்த அவரின் நூல்கள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினர். மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட இறையன்பு முதன்முதலில் வாசிப்போர் மன்றம் தொடங்கியதற்கும், 8 கூட்டங்கள் நடத்தி வாசிப்பின் அவசியத்தை மாணவர்களுக்கு உணரச் செய்தமைக்கும் பாராட்டு க்கள் என்றும் குறிப்பிட்டார்.

    முன்னதாக 9ம் வகுப்பு மாணவி நெகாசினி தான் வரைந்த இறையன்பு ஓவியத்தை வழங்கினார்.நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார், காசாவயல் கண்ணன் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

    • தமிழக கபடி அணிக்கு விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
    • மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே உள்ள ஆ.தெக்கூர் ஸ்ரீ விசாலாட்சி கலாசாலை மேல் நிலைப்பள்ளி மாணவர் அன்புச்செல்வன் கபடிப் போட்டியில் தமிழக அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

    இவர் கடந்த மாதம் மானாமதுரையில் மண்டல அளவில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட கபடிப் போட்டியிலும், மாவட்ட அளவில் நடந்த போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால் தமிழக அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

    இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜன், பள்ளிச் செயலர் சேது, மாணவனின் வெற்றிக்கு சிறந்த பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் சமயகருப்பன் மற்று மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • மண்ணச்சநல்லூரில்பள்ளி மாணவன்கால் விரல்கள் துண்டானது
    • மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மண்ணச்சநல்லூர்  

    மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் நிசாந்த்(வயது15). இவர் மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி திருச்சி துறையூர் நெடுஞ்சாலை உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் பள்ளி முடிந்தவுடன் நிசாந்த் வீட்டிற்க்கு செல்வதற்க்காக அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார்.

    இந்த பேருந்து சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில் பேருந்தின் ஓட்டுநராக முசிறி தாலுக்கா புலிவலம் காலனி தெருவை சேர்ந்த பெரியசாமி (50), நடத்துனராக சமயபுரம் இந்திரா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த கமல் (42 பணியில் இருந்துள்ளனர்.

    மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததால் நிசாந்த் படியில் நின்று செய்துள்ளார்.

    இந்நிலையில் பஸ் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மாணவன் நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலாசார் வழக்கு பதிவு செய்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×