search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu CM"

    கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதால், புழக்கடை கோழி வளர்ப்பு தொழில் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. எனவே, புழக்கடை கோழி வளர்ப்பை மேலும் ஊக்குவிக்க சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு தலா 50 கோழிகள் வீதம் மொத்தம் ரூ.25 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

    பின்னர் 25 கோடி ரூபாயை 50 கோடி ரூபாயாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி கிராமப்புற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பீட்டில், 77 ஆயிரம் கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு, தலா ஒருவருக்கு 50 விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    அதன் அடையாளமாக 5 பெண் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிகள் மற்றும் கூண்டுகளை அவர் வழங்கினார். அப்போது, அரசால் வழங்கப்படும் இக்கோழிகளை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று பயனாளிகளிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

    இத்திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அருகில் உள்ள 4 அல்லது 5 கிராமங்களில் உள்ள பயனாளிகள் ஒரு குழுவாக அமைக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவர்.

    ஒரு பயனாளிக்கு நான்கு வார வயதுடைய 50 எண்ணிக்கை அசில் இன கோழிகள் - சேவல் மற்றும் பெட்டை சரிவீதத்தில் வழங்கப்படுவதால், அடுத்த 16 வாரத்தில் 20 சேவல்களை விற்று வருவாய் ஈட்டலாம். மீதமுள்ள 25 பெட்டை மற்றும் 5 சேவல்களை பராமரிப்பதன் மூலம், இனப்பெருக்கத்திற்கு உகந்த முட்டைகளை உற்பத்தி செய்து, அதன்மூலம் அதிக கோழிகளை உற்பத்தி செய்து, நிலையான வாழ்வாதாரத்தை பெற வாய்ப்பு உருவாக்கப்படும்.

    இத்திட்டம் கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை பெருக்கி, கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

    இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் ஞானசேகரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். #ChennaiExhibition #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொருட்காட்சியை தொடங்கிவைத்து பேசியதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினால் நடத்தப்படும் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழிற் பொருட்காட்சியின் இந்த ஆண்டு கருப்பொருள், சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மயமாற்றம் என்பதாகும். 28 மாநில அரசு துறைகள், 16 மாநில பொதுத்துறை நிறுவனங்கள், 2 மத்திய அரசு நிறுவனங்கள், 4 பிறமாநில அரசு நிறுவனங்கள் மற்றும் 60 தனியார் அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

    பொருட்காட்சியில் துபாயில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தின் மாதிரி வடிவம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், மேக கூட்டங்களை பிரதிபலிக்கும் மாதிரி ஆகிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டு சாதனங்கள் இந்த பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மாநில அரசின் ஆக்கப்பூர்வமான பணிகளையும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களையும், மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அரசுத்துறை அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்துவருகிறது. மருத்துவத்திற்கு வருபவர்களும், உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கு வரும் மாணவர்களும் என தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்தவண்ணம் உள்ளனர்.

    2014, 2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டில் 34 கோடியே 50 லட்சம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 48 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை சிறப்பான வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இந்த சாதனைகளுக்காக அரசை பாராட்டாமல், ஒருசிலர் இந்த அரசைப் பற்றி வேண்டுமென்றே ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை மக்களிடத்திலே பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் கூறும் கற்பனை குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகிற பொருட்களை மக்கள் பயன்படுத்திட செய்வதுதான் பொருளாதார வளர்ச்சியின் முதல்படி. அதன் அடிப்படையில் பொருட்காட்சிகள் உருவாக்கப்பட்டன.

    வெறும் பொருட்களின் காட்சியாக மட்டும் அவை இல்லாமல், சுற்றுலா வளங்களையும், அரசின் திட்டங்களை மக்கள் அறிந்திடவும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்னவென்று தெரிந்துகொள்ளவும் உதவுகிற பொருட்காட்சிகளாக இதனை மாற்றியவர் எம்.ஜி.ஆர். இந்த பொருட்காட்சி எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த 1977-ம் ஆண்டு முதல் ஒரு புதிய வடிவத்தைப் பெற்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா வரவேற்றார். சுற்றுலா ஆணையர் பழனிகுமார் நன்றி கூறினார்.

    இந்த பொருட்காட்சி இன்று (வியாழக்கிழமை) முதல் 70 நாட்கள் நடைபெறும். பெரியவர்களுக்கு ரூ.35, சிறியவர்களுக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும். தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறும். 
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த தமிழக முதல்வராக்க காங்கிரஸ் ஓத்துழைக்கும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar #MKStalin
    ஆலந்தூர்:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தூத்துக்குடி செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலை, இலக்கியம், அரசியல் ஆகியவற்றில் புகழ்பெற்று கொடிகட்டி பறந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரது சிலையை திறக்க அன்னை சோனியா காந்தி, அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வந்து பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி.

    சிலை திறப்பு விழாவின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து அறிவித்துள்ளார். இதை முழுமனதுடன் வரவேற்கிறோம்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி மறைமுகமாக இயக்கும் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வரும். அடுத்து தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார்.


    இதற்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும். எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட்டு வெற்றியை குவிக்கும்.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க விடாமல் தடுப்பதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி, இந்த ஆலையை மூடுவதற்கு நிரந்தர தடை பெற வேண்டும்.

    இந்த ஆலையை மூடுவதற்காக நடந்த மக்கள் போராட்டத்தில் 13 பேர் உயிர்தியாகம் செய்துள்ளனர். அதை அவமதிக்கும் வகையில் மீண்டும் ஆலை திறக்கப்படுவதை முழு மூச்சுடன் அரசு தடுக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இன்று தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று இருப்பதற்கு காங்கிரசும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை பெற்று செயல்படுத்திய தி.மு.க.வும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

    கடந்த நான்கரை வருடங்களாக மத்தியில் ஆட்சி செய்யும் மோடியின் பா.ஜனதா அரசு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin
    மடியில் கனம் இல்லாததால் எந்த வழக்குகளையும் சந்திக்க தயார் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். #ADMK #EdappadiPalanisamy
    உளுந்தூர்பேட்டை:

    அ.தி.மு.க.வின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் எம்.ஜி.ஆர். திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அ.தி.மு.க. கொடியை ஏற்றியும், விழாவை தொடங்கி வைத்தும் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து வெளியேறி, அண்ணா கனவை நனவாக்க 1972-ம் ஆண்டு இதே நாளில் அ.தி.மு.க.வை உருவாக்கினார். அன்று முதல் இன்று வரை தமிழகம் அ.தி.மு.க.வின் கோட்டையாக உள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் கட்சி பிளவுபட்டபோது அதை ஒன்றுபடுத்திய பெருமை ஜெயலலிதாவை சேரும். கழகம் பிளவுபட்டபோது சேவல் சின்னத்தில் இருந்து வெற்றி பெற்ற 27 சட்டமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். அதில் இருந்து 44 ஆண்டுகாலமாக இந்த இயக்கத்திற்காக உழைத்து கொண்டு இருக்கிறேன்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஒரு வருடம் 8 மாதம் ஆகி இருக்கிறது. அவர் விட்டுச்சென்ற பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தை அதிகமாக ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க. தான். கிட்டத்தட்ட 28 ஆண்டு காலம் ஆட்சி செய்து இருக்கிறது.

    இந்த கட்சியை மிரட்டி பார்க்கின்றனர். எங்களுக்கு மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. உங்களுக்கு தான் பயம் உள்ளது. புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டிய விவகாரத்தில் ஊழல் நடந்தது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டபோது நீங்கள் நீதிமன்றம் சென்றீர்கள். ஆனால் என் மீது நீங்கள் புகார் கொடுத்தீர்கள். நாங்கள் நீதிமன்றம் செல்லவில்லை.

    நெடுஞ்சாலை ஒப்பந்த வழக்கில் நீதிமன்றம், அவர் அதிகாரத்தில் இருக்கிறார், எனவே விசாரணை சரியாக நடக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளி என்று கூறவில்லை. மடியில் கனமில்லாததால் எந்த வழக்குகளையும் சந்திக்க தயார்.

    எங்கள் இயக்கத்தில் அதிக வக்கீல்கள் உள்ளனர். வழக்குதொடர எங்களுக்கும் தெரியும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மக்களுக்கு சேவை செய்து வருகிறோம் நீங்கள் சீண்டி விட்டீர்கள். அதற்கான பலனை அனுபவிக்க தான் போகிறீர்கள்.

    புதிய தலைமை செயலகத்திற்கு ஆணையம் அமைக்கப்பட்டது தொடர்பாக கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் உடனே ஏன் தடையாணை வாங்குகிறீர்கள். ஆகவே உங்களுக்கு பயம் இருக்கிறது. எத்தனை வழக்குகளையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக மக்களுக்காக நாங்கள் தான் எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளோம்.

    தி.மு.க.வில் கருணாநிதி, அவருக்கு பின்னர் மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி வந்துள்ளார். இது வாரிசு அரசியல். எனவே தி.மு.க. ஒரு கட்சி அல்ல, கம்பெனியாக்கிவிட்டார்கள். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. அண்ணா இருந்த போது, சாதாரண தொண்டன் கூட எம்.பி., எம்.எல்.ஏ. ஆனார்கள்.

    அதேபோன்று தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொண்டனுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தனர். இதுபோன்ற எண்ணம் உடைய இயக்கம் அ.தி.மு.க. தான்.

    எங்களை பொறுத்தவரை நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. ஆக நாங்கள் எதுவும் பேசலாம். கொள்கையுடன் இருக்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. தான். தமிழக மக்களுக்கு எந்த கட்சி நன்மை செய்கிறதோ அவர்களுடன் தான் கூட்டணி வைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #IndependenceDayIndia #EdappadiPalaniswami
    சென்னை:

    சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    அரசால் நடத்தப்பட்ட சட்டப் போராட்டத்தின் விளைவாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அரசு பெற்றுத் தந்தது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எடுத்த முடிவின் படி ஜுன் மாதம் நமக்கு வர வேண்டிய 9.19 டி.எம்.சி. அடி தண்ணீர் கிடைக்கப் பெற்றது. ஜுலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு 31.24 டி.எம்.சி. அடி தண்ணீர்.


    ஆனால் ஜுலை மாதம் இயற்கை அன்னையின் அருளால் தென்மேற்கு பருவ மழை அதிகளவில் பொழிந்ததன் காரணமாக, 1 லட்சம் கன அடிக்கும் அதிகமான நீர் மேட்டூர் அணைக்கு வந்து, 5 ஆண்டுகளுக்குப் பிறகு அணை தனது முழு கொள்ளளவினை இரண்டு முறை எட்டியுள்ளது. ஜுலை மாதம் 19 ஆம் நாளன்று டெல்டா மாவட்டத்தில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுவதற்காக, மேட்டூர் அணை என்னால் திறக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமை புரட்சி ஏற்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, 2011-12 முதல் 2017-18-ம் ஆண்டு வரையிலான காலத்தில் உணவு தானிய உற்பத்தி ஐந்து முறை 100 லட்சம் மெட்ரிக் டன்னை கடந்து சாதனை படைத்துள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில நிதியிலேயே செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதனூர் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கதவணை ஒன்று 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இஸ்லாமிய பெருமக்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்வதற்காக இந்தாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 6 கோடி ரூபாய் மானியம் வழங்க ஆணையிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3,780 நபர்கள் இந்த ஆண்டு மட்டும் பயன்பெற்றுள்ளனர்.

    சென்னையில் பணிபுரியும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்களுக்காக, வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் மகளிர் விடுதி ஒன்று அரசு நிதியுதவியுடன் கட்டப்பட உள்ளது.

    ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்துவ பயணிகளின் எண்ணிக்கை இந்தாண்டு முதல் 500லிருந்து 600ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜுலை மாதம் இறுதிவரை 1 கோடியே 96 லட்சத்து 94 ஆயிரத்து 132 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

    1.1.2019 முதல் தமிழ்நாட்டில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் குறுகிய காலத்திலேயே அமல்படுத்தப்பட்டது.

    சென்னையின் பல்வேறு முனையங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், மாதவரம் முதல் கோயம்பேடு வரையிலுமான வழித்தடங்களுக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம்-2ன் கீழ் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


    முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 4,880 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 27.80 லட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர்.

    மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 1,500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 2,276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளும், முதலமைச்சரின் சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 420 கோடி ரூபாய் செலவில் 20,000 வீடுகளும் கட்டப்படும்.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அம்மா அறிவித்தார். அந்த அறிவிப்பை நனவாக்கும் வண்ணம், இந்த திட்டம் பிரதமரின் திருக்கரங்களால் அம்மாவின் பிறந்த நாளான 24.2.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தின் கீழ் நாளது வரை 16 ஆயிரத்து 903 மகளிருக்கு 36 கோடியே 69 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, பொது அமைதி நிலவ வேண்டும்.

    2018-ம் ஆண்டிற்கான அறிக்கையில், ஆளுமையில் இரண்டாவது சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இது மாநில அரசின் நிர்வாகத் திறமைக்கு வழங்கப்பட்ட சான்றாகும்.

    நமது மாநிலம் சார்பாக நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ; அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தங்கம், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் வென்றாலோ; அல்லது நமது நாட்டின் சார்பாக கலந்து கொண்டால் கூட, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில், தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள்ஒதுக்கீடாக வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


    நாட்டின் விடுதலைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த தியாகச் செம்மல்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 13,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

    விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, நாட்டிற்காக குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புற பணியாற்றியவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு விருதுகளை வழங்கினார். பின்னர் விருதுபெற்றவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அங்கிருந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு பொட்டலங்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் கோட்டையின் வெளிவாயில் வழியாக வந்து அங்கு கூடி இருந்த பொது மக்களையும் சிறப்பு அழைப்பாளர்களை யும் பார்த்து வணங்கியபடி சென்றார்.

    நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சபாநாயகர் தனபால், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி, எம்.பி-எம்.எல். ஏ.க்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  #IndependenceDayIndia #EdappadiPalaniswami
    சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது சுதந்திர தின உரையில் பெருமையுடன் குறிப்பிட்டார். #IndependenceDayIndia
    சென்னை:

    நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வணக்கம் தெரிவித்து சுதந்திர தின உரையாற்றினார். தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு துறையின் சாதனைகளை பட்டியலிட்டு அவர் பேசியதாவது:-

    இந்திய சுதந்திர போராட்டத்திற்கான வேள்வி தமிழகத்தில்தான் தொடங்கியது. சுதந்திர போராட்டத்தில் அதிகம் பங்கெடுத்தது தமிழகம் தான். நாட்டுக்காக போராடிய வரலாற்று நாயகர்களை நாம் போற்றி புகழ வேண்டும்.

    ஜெயலலிதா வழியில், தமிழக அரசு ஏழைகளுக்கு பாடுபட்டு வருகிறது. தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்து வருகிறது. பள்ளிக் கல்வித்துறையில் அரசு சாதனை படைத்து வருகிறது. நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்க குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 88 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #IndependenceDayIndia #EdappadiPalaniswami #FreedomStruggle
    சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். #IndependenceDayIndia #EdappadiPalaniswamy
    சென்னை:

    இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றினார். விழாவில் மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேவகவுடா, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே அத்வானி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் தமிழகத்திலும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோட்டைகொத்தளம் உள்பட தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்தது. காலை 9 மணியளவில் கோட்டை கொத்தளத்திற்கு வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின்னர் 9.15 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.


    விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோட்டையில் 2-வது முறையாக தேசியக்கொடி ஏற்றியது குறிப்பிடத்தக்கது. #IndependenceDayIndia #EdappadiPalaniswamy #FortStGeorge
    தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.157 கோடியே 29 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.157 கோடியே 29 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம், கரூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ரூ.86 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 சேமிப்பு கிடங்குகள் மற்றும் 16 நெல் சேமிப்பு சைலோ கொள்கலன்கள் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் திறந்து வைத்தார்.

    மேலும், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை, இணையதளத்தில் விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள www.mangalammasala.com என்ற வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி (செல்போன் அப்ளிகேசன்) ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

    பள்ளி கல்வித்துறை சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம், மதுரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் நபார்டு கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 28 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆய்வகத்துடன் கூடிய 22 வகுப்பறை கட்டிடத்தை தலைமை செயலகத்தில் இருந்தவாறு எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    மேலும், அரியலூர், தர்மபுரி, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருப்பூர், திருவாரூர், திருவள்ளூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ.157 கோடியே 29 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy #Tamilnews 
    நீலகிரி சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். #NilgiriBusAccident #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் கேத்தி கிராமம் அருகே இன்று (நேற்று) காலை உதகையில் இருந்து குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், மந்தாடா என்ற இடத்திற்கு அருகில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த தகவல் கிடைத்தவுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, சிறப்பான சிகிச்சை அளிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைவாக சென்று, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #NilgiriBusAccident #EdappadiPalanisamy #tamilnews
    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.

    அதைப்போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறும்வகையில், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.

    இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 பேர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 பேரும், என மொத்தம் 99 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ், 2017-18-ம் கல்வி ஆண்டில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அறிவியல், மெட்டலார்ஜி, புரடக்‌ஷன் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ஸ்வைன்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    சிவில் மற்றும் பி.டெக். பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள லெய்ப்னிஸ் பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேசன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy
    ×