search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leopard"

    • பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.

    எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் உள் அறைக்குச் சென்றது.
    • தகவலறிந்து வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச் சென்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நம்பூர் சாலையில் உள்ள திருமண மண்டப அலுவலகத்திற்குள் நுழைந்தது. அந்த அலுவலகத்தின் கதவு திறந்து இருந்ததால் வாசல் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்த நிலையில், அங்கு அலுவலக கேபினில் மோகித் விஜய் அகிரே (13), என்ற சிறுவன் தனது செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.

    அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, கேபினில் இருந்த சிறுவனை பார்க்காமல் நேராக உள் அறைக்குச் சென்றது. சிறுத்தையை பார்த்தும் சிறிதும் அச்சப்படாத அந்த சிறுவன் அலுவலகத்திற்கு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து மூடினான். இந்தச் சம்பவம் காலை 7 மணி அளவில் நடந்துள்ளது.

    சிறுத்தை புகுந்தது குறித்து வனத்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை, மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை கூண்டில் ஏற்றிச்சென்ற பிறகே அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    திருமண மண்டபத்தின் அலுவலக அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தை அலுவலகத்திற்குள் நுழைவதும், உடனே சிறுவன் அசால்டாக வெளியே சென்று பூட்டு போட்டு பூட்டுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. துணிச்சலாக செயல்பட்ட சிறுவனின் சாதுர்யத்தைப் பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக கதவைப் பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    மகாராஷ்டிராவில் உள்ள மாலேகான் நகரில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் புகுந்த சிறுத்தையை, புத்திசாலித்தனமாக மண்டபத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு சிறுவன் தப்பியோடிய சிசிடிவி வீடியோ வைரலாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வீடியோவில், 'திருமண மண்டபத்தின் கதவு பக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருக்கிறான். அப்போது கதவின் உள்ளே சிறுத்தை ஒன்று மெதுவாக வருகிறது. அதனை பார்த்த சிறுவன் எந்த பதட்டமும் இல்லாமல் வெளியே சென்று மண்டபத்தின் கதவை பூட்டி விடுவது' பதிவாகியுள்ளது.

    பின்னர், அச்சிறுவன் ஊர் மக்களிடம் இதை பற்றி தகவல் சொல்ல, அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டில் அடைத்தனர்.

    இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.
    • சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே நாய்களை கொன்று சாப்பிட்டு சுற்றித்திரியும் சிறுத்தை, ஊருக்குள் புகுந்து ஆட்டை கவ்வியதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம் மதனகிரி பகுதியில், முனீஸ்வரசாமி கோவிலையொட்டி, சனத்குமார நதி ஓடுகிறது. மழை காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தற்போது போதிய நீரோட்டமின்றி, வறண்டு புதர்மண்டி கிடக்கிறது.

    இந்நிலையில், கோவில் பின்புறம் சனத்குமார நதியின் கரையில், கடந்த 4 மாதங்களாக சிறுத்தை ஒன்று பாறை இடுக்குகளில் மறைந்து கொண்டு, அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் அருகில் உள்ள தெரு நாய்களை அடிக்கடி கவ்விக் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்தது. இதனால், கிராம மக்கள் பீதிக்குள்ளான நிலையில், தேன்கனிகோட்டை வனத்துறையினர், கூண்டு வைத்து, சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர்.

    ஆனால், சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள பண்ணையில் செயல்படும் தனியார் ஓட்டலில் இருந்து கொட்டப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக வரும் நாய்களை கடித்து தின்றவாறு, அப்பகுதியில் சிறுத்தை முகாமிட்டதை கேமரா பொருத்தி கண்காணித்ததில் பல்வேறு முயற்சிகளால் சிறுத்தை நடமாட்டம் உறுதியானது.

    இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தை தப்பியதால், சலிப்படைந்த வனத்துறையினர், கடந்த சில நாட்களாக தேடும் பணியை கைவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மாலை, அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த அடவிசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தண்டரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரைசாமி என்பவரின் ஆட்டை சிறுத்தை கவ்வியுள்ளது. அதனைக் கண்டு அவ்வழியாக சென்ற பெண் கூச்சலிட்டு உள்ளார். இதனால், ஆட்டை விட்டு விட்டு சிறுத்தை தப்பிச் சென்றது.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு துரைசாமி தகவல் தெரிவித்தார். இதன்பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். ஆனால், அதற்குள் பாறை இடுக்குகளில் சென்று சிறுத்தை மறைந்து கொண்டது. இன்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை அடித்து தின்றுள்ளதாவும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, நவீன கூண்டு அமைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கு மாறும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் நடுவில் ஒரு சிறுத்தை உலா வந்தது.

    அதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்தார். சிறிது நேரம் சாலை நடுவில் உலா வந்த சிறுத்தை பின்னர் தடுப்பு சுவரில் ஏரி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இதைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் யானைகள் நடமாட்டம், புலி, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவுவதால் உணவு, குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி இரவு நேரங்களில் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம்.

    சிலர் இயற்கை உபாதைகளை கழிக்க வாகனங்களில் இருந்து கீழே இறங்குவார்கள், அவ்வாறு செய்ய வேண்டாம். அதைப்போல் வன விலங்குகளின் நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

    • மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது.
    • கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அம்பை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி, மிளா என பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.

    இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை சேதப்படுத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடியும் வருகின்றன.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு பாபநாசம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரது மகன் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் புகுந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த சுமார் ஒரு வயதுடைய கன்றுக்குட்டியை கழுத்து பகுதியில் பிடித்து கடித்துள்ளது. இதில் அந்த கன்று குட்டியின் முகம் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.


    வலி தாங்க முடியாமல் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சத்தம் போட்டதால் சிறுத்தையானது வனப்பகுதியை நோக்கி சென்றது. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்தில் வனத்துறையினர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். குட்டி சிறுத்தை வந்திருக்கலாம் எனவும், பெரிய சிறுத்தையாக இருந்திருந்தால் கன்று குட்டியை அடித்து இழுத்து சென்று இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனசரகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, புலி, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குள் உள்ளன.

    அதே போல் வனப்பகுதியையொட்டிய கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பலர் விவசாயமும் செய்து வருகிறார்கள்.

    வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள கிராம பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது. அதே போல் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி சிறத்தை கள் வெளியேறி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்திட்டு பகுதியில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சத்திய மங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை உதய மரத்திட்டு என்ற வனப்பகுதி யை ஒட்டிய பகுதியில் நேற்று மாலை ஒரு சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டை கடந்து ஊருக்குள் சென்று ஓடியது.

    அப்போது அந்த வழியாக ஒரு முதியவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு சிறுத்தை செல்வதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அலறி கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வழியாக சிறுத்தை செல்வதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த முதியவரை மக்கள் மீட்டனர். அதற்கள் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது.

    இது குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து இரவு நேரம் என்பதால் அவர்கள் சென்று விட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதை தொடர்ந்து இன்று காலை மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள உதயமரத்திட்டு பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இன்று காலையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான நிலை உள்ளது.

    • சிறுத்தை உலா வருவதை கண்ட மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் யானை, சிறுத்தை, புலி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன. சில சமயம் யானை தாக்குதல்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா வருவதை கண்ட பொது மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து ஊருக்குள் உலா வருவது சிறுத்தையா? என கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை உலா வரும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதனைப்பார்த்து பீதி அடைந்த அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வருவது போன்று வீடியோ வெளியாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்த பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூரில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் வழியில் ஜெ.ஜெ.நகர், எம்.ஸ்.பார்க் அவென்யூ, அபிராமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் இறந்து கிடப்பதுடன், சில பூனைகள் மாயமாகியும் விட்டன. மேலும் இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சத்தம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு சென்று இரவில் நடமாடுவது என்ன என்பது குறித்து விசாரித்தனர்.

    பின்னர் அந்த பகுதியில் உண்மையிலேயே சிறுத்தை தான் நடமாடுகிறதா? அல்லது வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

    அதன்படி எம்.எஸ்.பார்க் அவென்யூ பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகேயும், ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு செல்லும் வழி உள்பட 4 இடங்களில் தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். அந்த கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஜெ.ஜெ.நகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் வயதான சிறுத்தை ஒன்று இப்பகுதியில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, சிறுத்தையின் இருப்பிடத்தை கண்டறியும் பணியை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து அந்த பகுதி முழுவதும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை குனியமுத்தூர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர் பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் தகவல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.
    • சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் அது திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற பூனையை துரத்தி சென்றது. ஆனால் பூனை தப்பிவிட்டது. தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதிக்கு 3 முறை சிறுத்தை வந்து சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது. எனவே எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் புலி, சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் டீக்கடையின் முன்பு ஒருவர் நின்று கொண்டிருந்தார். தற்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒரு சிறுத்தை அந்த நபர் கண்முன்னே பாய்ந்து ஓடியதை நேரில் பார்த்தார்.


    இதை பார்த்து அந்த நபர் அலறி கூச்சலிட்டார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தை சென்ற கால் தடம் அங்கு பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். அது சிறுத்தை கால் தடம் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

    ஆனால் நேற்று இரவு ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை. இதனையடுத்து அரியப்பம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×