search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குனியமுத்தூர்"

    • சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

    கோவை:

    கோவை குனியமுத்தூரில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் வழியில் ஜெ.ஜெ.நகர், எம்.ஸ்.பார்க் அவென்யூ, அபிராமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

    இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் இறந்து கிடப்பதுடன், சில பூனைகள் மாயமாகியும் விட்டன. மேலும் இரவு நேரங்களில் நாய்கள் குரைக்கும் சத்தம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மதுக்கரை வனச்சரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கு சென்று இரவில் நடமாடுவது என்ன என்பது குறித்து விசாரித்தனர்.

    பின்னர் அந்த பகுதியில் உண்மையிலேயே சிறுத்தை தான் நடமாடுகிறதா? அல்லது வேறு வனவிலங்கா என்பதை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்தனர்.

    அதன்படி எம்.எஸ்.பார்க் அவென்யூ பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகேயும், ஜெ.ஜெ.நகர் பகுதிக்கு செல்லும் வழி உள்பட 4 இடங்களில் தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர். அந்த கண்காணிப்பு கேமரா மூலம் அங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஜெ.ஜெ.நகர் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் வயதான சிறுத்தை ஒன்று இப்பகுதியில் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி, சிறுத்தையின் இருப்பிடத்தை கண்டறியும் பணியை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இணைந்து அந்த பகுதி முழுவதும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை குனியமுத்தூர் ஜெ.ஜெ.நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியானதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநகர் பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் தகவல் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நடை மேடை அமைக்க கோரி கோவை மாநகராட்சிக்கு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    குனியமுத்தூர்:

    கோவை குனியமுத்தூரில் மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    காலை மற்றும் மாலை பள்ளி விடும் நேரத்தில், பள்ளி குழந்தைகள் சாலையை கடந்து செல்லும் போது சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் மாலையில் பள்ளி விடும் சமயத்தில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது.

    இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.இதனால் பள்ளி முன்பாக நடைமேடை அமைக்கப்பட்டால் பள்ளி குழந்தைகள் நடை மேடை வழியாக சாலையை கடந்து, மறுபுறம் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    குனியமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகே பயன்பாட்டில் இல்லாமல் ஒரு இரும்பால் ஆன நடைமேடை உள்ளது. கடந்த 5 வருடத்திற்கும் மேலாக நடைமேடை யாருக்கும் பயனில்லாமல் வீணாக நின்று கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் இந்த நடைமேைடயை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். நடைமேடை மேலே ஏறி நின்று பார்த்தால் பாட்டில்களையும் பிளாஸ்டிக் கப்புகளையும் காண முடிகிறது.

    இத்தகைய சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அப்புறப்படுத்தி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக இந்த நடைமேடையை அமைத்தால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×