search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Geo"

    மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MinisterSengottaiyan #JactoGeo
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விருது வழங்கினார். தொடர்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். இதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று தமிழக முதல்வரை சந்தித்து பேச உள்ளேன்.

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற தொழில் அதிபர்கள் மாநாட்டின் மூலம் 3 லட்சத்து 41 ஆயிரம் கோடி அன்னிய முதலீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றபட்டுள்ளது.

    தமிழக இளைஞர்கள் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெரும் வகையில் தொழில் தொடங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசாக 2 கோடியே 17 லட்சம் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி தரம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan #JactoGeo



    ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசின் போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக இன்று மாலை முக்கிய முடிவு எடுக்க உள்ளது. #JactoGeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி தமிழக அரசின் 56 துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் 25-ந்தேதி மறியில் ஈடுபட்டவர்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை மட்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டம் தொடரும் என்றும், இன்றும் (28-ந்தேதி) சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் எங்களது கோரிக்கையும், அவர்களின் கோரிக்கையும் ஒன்றாக இருப்பதால் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தமிழக அரசின் போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அறவித்துள்ளது.

    மேலும் வரும் நாட்களில் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள எச்.எம்.எஸ். அலுவலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் அவசர கூட்டம் நடக்கிறது.

    அதில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், காலவரையற்ற போராட்டத்தில் இறங்குவது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்பட உள்ளது.

    போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இன்று மாலை முதல் இறங்கினால் அரசு பஸ்கள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து போராட்டத்தை முறியடிக்கவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

    இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன் கூறியதாவது:-


    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்கு முறையை அரசு கையாண்டு வருகிறது. இன்று முதல் தலைமை செயலக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால் போராட்டம் மேலும் தீவிரம் அடையும்.

    போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ. 8 ஆயிரம் கோடியை வேறு செலவுக்கு அரசு எடுத்து கொண்டது. இதே போல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த 50 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை.

    அரசு ஊழியர்களை போல போக்குவரத்து கழகத்தில் 76 ஆயிரத்து 600 பேர் புதிய பென்சன் திட்டத்தில் பணியில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவில் 21 மாதம் நிலுவை பாக்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் 14 மாத நிலுவை உள்ளது.

    240 நாட்கள் பணி முடித்ததும் போக்குவரத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆனால் 12 ஆயிரத்து 611 பேர் 1700 நாட்கள் பணி முடித்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் எங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒரே பிரச்சனை என்பதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

    முதலில் ஜாக்டோ-ஜியோ மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம், அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    சென்னையில் இன்று மாலை நடைபெறும் அவசர கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 10 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 90 சதவீத பேர் போராட்டத்தில் இறங்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
    நிதி நிலைமை மோசமாக இருக்கும்போது எம்.எல்.ஏ.க்கள் சம்பளத்தை உயர்த்தியது ஏன்? என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கேள்வி எழுப்பினர். #JactoGeo #MLAsSalary

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்தார்.

    இது தொடர்பாக ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜாக்டோ- ஜியோ போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அரசு தரப்பில் அடக்கு முறைகள் ஏவப்படுவதும், புளுகுமூட்டைகள் அவிழ்த்து விடப்படுவதும் அதிகரித்து வருகின்றன. மக்கள் மத்தியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசும், அமைச்சர்களும் அறிக்கைகள் விட்ட வண்ணம் உள்ளனர்.

    அமைச்சர் செங்கோட்டையன் தற்காலிக ஆசிரியர்களை ரூ.7,500 சம்பளத்தில் 28-ந்தேதி முதல் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை பயமுறுத்த அறிக்கை விட்டு விட்டு ரூ.7,500-க்கு ஆசிரியர்கள் கிடைக்காத நிலையில் அதை இப்போது ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

     


    ரூ.20 ஆயிரம் சம்பளம் கொடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்தாலும் அவர்களால் மாணவர்களுக்கு தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் தக்க முறையில் பாடங்களை போதிக்க முடியாது என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் அறிவர். ஆனால் அரசோ ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளை நேரடியாக அழைத்து பேசுவதை கவுரவப் பிரச்சினையாக பார்க்கிறது.

    அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது, போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரும் இந்த அரசுதான் நாங்கள் போராடாமல் எங்கள் கோரிக்கைகளை பரிசீலியுங்கள் என்று பலமுறை கெஞ்சியபோது அதைப்பற்றி சிறிதும் கருத்தில் கொள்ளாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் 110 சதவீத ஊதிய உயர்வு அளித்து அரசாணை வெளியிட்டது. ரூ.50 ஆயிரம் ஆக இருந்த எம்.எல்.ஏ. சம்பளத்தை ரூ.1 லட்சத்து 10 ஆயிரமாக உயர்த்தியபோது மட்டும் அரசின் நிதி நிலைமை செழிப்பாக இருந்ததா என்பதை அரசு விளக்க வேண்டும்.

    30 ஆண்டுகளாக அரசில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின் வழங்கப்பட்டு வரும் பயனளிப்பு ஓய்வூதியத்தை பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றிவிட்ட இவர்கள், ஒருமுறை எம்.எல்.ஏ.க்களாகவோ, எம்.பி.க்களாகவோ இருந்து விட்டால் வாழ் நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறுவதை மட்டும் பங்களிப்பு ஓய்வூதியமாக மாற்றவில்லை.

    ஆள்பவர்களும், அதிகார வர்க்கத்தினரும் தங்களுக்கு தேவையானதை கஜானாவில் இருந்தும். கருவூலத்தில் இருந்தும் சுரண்டி எடுத்துக் கொண்டு விட்ட பின் கஜானா காலியாக இல்லாமல் வேறெப்படி இருக்கும்.

    அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார். அம்மா எந்த காலத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப அமல்படுத்துவோம் என்று கூறவில்லை. சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்று தான் கூறியுள்ளார் என்கிறார். அவர் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை கண்ணாடி போட்டு கொஞ்சம் படித்துப் பார்த்திருந்தால் அந்த பொய்யான அறிக்கையை விட்டிருக்க மாட்டார்.

    நியாயமான முறையில் போராடுபவர்களை நேர்மையான முறையில் அழைத்து பேசி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசு தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களையும், ஆசிரியர்களையும் எதிரிகளைப் போல் பாவிப்பதையும் அடிமைகள் போல் நடத்துவதையும் உடனடியாக கைவிட வேண்டும்.

    வெறும் அறிக்கைகளும், புள்ளி விவரங்களும், மாற்று ஏற்பாடுகளும் அடக்கு முறைகளும், நசுக்கிவிட முடியாது என்பதை இனியாவது உணர்ந்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை உடனடியாக களைய தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  #JactoGeo #MLAsSalary

    நீலகிரி மாவட்டத்தில் 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,084 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    ஊட்டி:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருக்கும் நிலையில் அரசு பணியில் காலி இடங்களை நிரப்ப மறுப்பதோடு, சேர்க்கப்படும் பணியிடம் கூட ஒப்பந்த நியமனமாக, வெளிமுகமை நியமனமாக மாற்ற வழிவகுக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    நீலகிரியில் கடந்த 2 நாட்களாக ஊட்டி ஏ.டி.சி. திடல், மத்திய பஸ் நிலையம், கூடலூர் ஆகிய இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 4-வது நாளாக பணிக்கு செல்லாமல் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் ஒன்று கூடினர். பின்னர் நூற்றுக்கணக்கானோர் முக்கிய சாலையான ஊட்டி-குன்னூர் சாலை சந்திப்பு பகுதியில் திரண்டனர். இதனால் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். ஜாக்டோ-ஜியோ நிர்வாகி தினகரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை தொடங்கி வைத்தார்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 365 பெண்கள் உள்பட 640 பேரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டும் வந்திருந்தனர்.

    ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கியது. இப்பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை படித்துக்கொண்டு இருந்தனர். பிளஸ்-2 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடங்களை படித்தனர். இதனால் வகுப்பறைகள் வெறிச்சோடி இருந்தது. ஊட்டி தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வராத காரணத்தால், 4-வது நாளாக நேற்றும் மூடப்பட்டு இருந்ததை காண முடிந்தது. சில பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.

    ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 730 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நிர்வாகிகள் 58 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 143-ன் படி சட்ட விரோதமாக கூடுதல், 341-ன் படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர்(ஜாக்டோ-ஜியோ) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதிய பஸ் நிலையம் வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 444 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு ஊட்டி, கூடலூரில் மொத்தம் 1,084 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. #JactoGeo
    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 18 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #JactoGeo
    கடலூர்:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பெருஞ்சித்திரன்(வயது 55), விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் அறிவழகன்(35), அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் நல்லூர் ஒன்றிய செய்தி தொடர்பாளர் சாஸ்தா(38), தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் தாமோதரன்(38), அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்(52), தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன்(44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் சண்முகசாமி, ஏழுமலை உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். #JactoGeo
    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #JactoGeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    போராட்டத்தில் 4-வது நாளான நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார் நேரு கலையரங்கில் அடைத்து வைத்தனர்.

    மாலை 6 மணிக்கு மேல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நபர்களை மட்டும் கைது செய்து சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற ஊழியர்கள் தங்களையும் கைது செய்யுமாறு கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ஆசிரியர்களின் உறவினர்களும் கலையரங்கம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    பின்னர் இன்று அதிகாலை 1 மணியளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளான கோவிந்தன், சிங்கராயன், உதயகுமார், பாரி, ராஜேந்திரன், சந்திரசேகர், முத்துக்குமாரன், சுரேஷ், ராஜேஷ், ஸ்ரீராம், லெனின், லோகு உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    பின்னர் அவர்களை சேலம் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் வீட்டில் இன்று காலை ஆஜர்படுத்தினர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுவாரா, அல்லது விடுவிப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதேபோல நாமக்கல்லில் பூங்கா சாலையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் 72 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை மாஜிஸ்திரேட் வருகிற 1-ந் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார்கள். #JactoGeo
    ஈரோடு மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். #JactoGeo
    ஈரோடு:

    பழைய பென்சன் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று 4-வது நாளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் நடத்த சென்ற ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல ஈரோடு மாவட்டத்திலும் சுமார் 3 ஆயிரம் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்த முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர் பாபு, மாவட்ட செயலாளர் சுகுமார் நெடுஞ்சாலை துறை சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, மாவட்ட துணை செயலாளர் சிவகுமார், அந்தியூர் ஒன்றிய செயலாளர் நிக்கோலஸ் சகாயராஜ் மற்றும் தங்கராஜ், அண்ணாதுரை, மோகன், அண்ணாமலை உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இன்று குடியரசு தின விழாவையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று பங்கேற்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்.

    மேலும் குடியரசு தின விழாவை புறக்கணித்தால், ஆசிரியர்கள் மீது ‘17-யு’ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்விதுறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் இன்று பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளில் நடந்த குடியரசு தின விழாவிலும் கலந்து கொண்டனர்.

    பல பள்ளிகளில் 4 நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆசிரியர்-ஆசிரியர்களை பார்த்த மகிழ்ச்சியில் அவர்களை மாணவ- மாணவிகள் கைத்தட்டி வரவேற்றனர்.  #JactoGeo
    தனியார் ஊழியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #MinisterJayakumar #JactoGeo
    சென்னை:

    மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் கடந்த 22.1.2019 முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இச்சங்கங்கள் வலியுறுத்தி வரும் கோரிக்கைகள் யாவும் அரசால் பரிசீலிக்கப்பட்டு செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, போராட்டத்தை தொடங்கி, சில தீவிரமான வழிமுறைகளை அவர்கள் தற்போது கடைபிடிக்க தொடங்கியிருப்பது வேதனை அளிக்கிறது.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியே இல்லாமல் போவதுடன், அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுத்தான் சம்பளமும், ஓய்வூதியமும் தரவேண்டிய நிலை ஏற்படும்.

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறு இல்லை என்றும், அவ்வாறு செய்தால் அரசு பெறும் வரி வருவாயைவிட கூடுதலாக சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவு செய்ய வேண்டி வரும் என்றும், சில ஆண்டுகளுக்குப் பிறகு எந்த மக்கள் நலத்திட்டங்களும், வளர்ச்சிப்பணிகளும் செயல்படுத்த நிதி இருக்காது என்றும் குழு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், அரசு மக்களுக்காக இயங்க வேண்டுமே தவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க மட்டுமே இயங்கக்கூடாது என்று கருதித்தான் இந்தக் கோரிக்கையை, அரசின் நிர்வாக நலனையும், பொதுமக்கள் நலனையும் கருத்தில் கொண்டு இதை ஏற்க இயலாது என அரசு கருதுகிறது.

    ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்கியதால் அரசுக்கு ஆண்டுக்கு 14,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டாலும், அறிக்கை பெற்ற உடனே அரசு ஊதிய உயர்வை அமல்படுத்தியது. இதனால், அரசின் வருவாய் பற்றாக்குறை 2017-18ஆம் ஆண்டில் 21,594 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை 24,000 கோடி ரூபாயாக உயரும். இதை அரசு வெளிச்சந்தையில் கடன் பெற்றுத்தான் செலவு செய்கிறது.

    இந்நிலையில், ஊதிய நிலுவை வழங்க வேண்டும் என்றால் அதற்காக 20,000 கோடி ரூபாய் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுத்தான் வழங்க முடியும். கூடுதல் கடன் சுமையை சமாளிக்க வேண்டுமென்றால் மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும். இதை அரசு தவிர்க்கவே கருதுகிறது.

    இதனால் அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும். எனவே, தற்போதைய அரசின் நிதிநிலையில் இவர்களின் இந்தக் கோரிக்கை ஏற்க இயலாது என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் மாநில அரசில் இவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மேலும் இதே கல்வித் தகுதியில் பிற அரசுப் பணிகளிலும் அரசு ஊழியர்கள் பணிபுரியும் நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு தர இயலாது. அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தித் தந்தால் மேல்நிலையில் உள்ளவர்களுக்கும் ஊதியத்தை உயர்த்த வேண்டிய நிலை வரும்.

    இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கிடையே உள்ள ஒப்பீட்டுச் சமநிலையை இது வெகுவாக பாதிக்கும்.

    எனினும், இதே கல்வித் தகுதியுள்ள பிற பணியாளர்களை விட இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதலாக மாதம் 2,000 ரூபாய் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் தான், இந்தக் கோரிக்கையை செயல்படுத்த இயலாது என பலமுறை தெரிவித்தும், இப்போது போராட்டத்தில் அவர்கள் ஈடுபடுவது அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்ற உள்நோக்குடன்தான் இச்சங்கங்களும் அதன் பிரதிநிதிகளும் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தான் காட்டுகிறது.

    இடைநிலை ஆசிரியர்கள் 2003ற்கு பிறகு பணியில் சேரும் போதே, புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தான் பணிபுரிய வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

    இதுபோன்ற செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், பிற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதை உணர வேண்டும்.

    இந்த சங்கடங்களையெல்லாம் நடுநிலையான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள். ஆனால் சிலர் சங்கம் நடத்த வேண்டும் என்பதற்காகவும், தங்கள் பிரச்சனைகளை அரசியல்படுத்துவதற்காகவும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் தூண்டிவிட்டு, தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.

    மேலும், 5000 அரசுப் பள்ளிகளை மூடுவதாகவும், 3500 அரசுப் பள்ளிகளை இணைப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும்.



    இவர்களின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விழிப்போடு இருப்பதுடன், அரசின் நோக்கம் மக்கள் நலம் காப்பதே என்ற உண்மையும், எண்ணற்ற படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வளர்ச்சிப் பணிகளை அரசு தான் செய்ய வேண்டும்.

    இதை உணர்ந்து, தற்போதைய நிதி நிலையில், அரசின் நிர்வாக முன்னுரிமையைக் கருத்தில்கொண்டு, இது போன்ற தேவையற்ற போராட்டத்தை தூண்டி விடும் சங்கங்கள் வீசும் சதி வலையில் விழாமல், அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி மக்கள் பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #MinisterJayakumar #JactoGeo 
    தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த கட்டமாக அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்கிறது. #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டது. இதேபோல் தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்தது.

    அதன் பின்பும் போராட்டம் நீடிப்பதால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.

    கடந்த 4 நாட்களாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைக்கு வராமல் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



    அவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கைதான முக்கிய நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை எழிலகத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிந்தாதிரிப்பேட்டை மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இவர்களில் 5 பெண்கள் உள்பட 41 பேர் மட்டும் எழும்பூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராகுமாறு கூறி மாஜிஸ்திரேட்டு ஜாமீனில் விடுதலை செய்தார்.

    செங்கல்பட்டில் 20 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    ஈரோட்டில் 30 பேர், சேலம் நாமக்கல்லில் 97பேர், வேலூர், திருவண்ணாமலையில் 13 பேர், கோவையில் 16 பேர், நாகர்கோவிலில் 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகர்கோவிலில் கைதானவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 143, 188, 341, 353, 7(1)ஏ சி.எல்.ஏ. ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் தமிழகத்தில் பல நகரங்களில் கைதானவர்களில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே பணிக்கு வராத ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    இதை வாங்க மறுத்ததால் அவர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக இந்தப் பணிகள் நடைபெற்றன. இதன் மூலம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முழு விவரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலின் அடிப்படையில் அவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை பாய்கிறது.

    முதல் கட்டமாக ‘நோ ஒர்க் நோ பே’ அடிப்படையில் சம்பள பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு வராத நாட்களுக்கு அவர்களுக்கு சம்பளம் கிடையாது.

    அடுத்த கட்டமாக ஒழுங்கு நடவடிக்கையும், தொடர்ந்து சஸ்பெண்டு நடவடிக்கையும் பாய்கிறது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    25-ந்தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம்.

    இதை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க களப்பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய ஆசிரியர்களை பணியமர்த்துவது மிகப்பெரிய பணியாகும். நீங்கள் தனிக்கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளும் எந்தத்தடையும் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    இதுபோல் இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை ஏற்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. #JactoGeo

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் 4வது நாளாக நீடித்து வரும் நிலையில் மெரினா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 4-வது நாளாக தமிழகம் முழுவதும் நீடிக்கிறது.

    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அதையும் மீறி போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மறியல் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடந்தது. சென்னையில் எழிலகம் அருகில் ஆயிரத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மாயவன், வெங்கடேசன், தியாகராஜன், தாஸ் ஆகியோர் தலைமையில் திரண்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். எந்த நிலையிலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

    நாளை குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளை திறந்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கமாகும். இந்நாளில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதும் உண்டு.

    ஆனால் தமிழகத்தில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களைவிட கிராமப் பகுதியை சேர்ந்த பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்து தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எழிலகம் வளாகத்தில் அமர்ந்து சிறிதுநேரம் போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசினார்கள். பின்னர் மறியல் செய்வதற்காக காமராஜர் சாலைக்கு செல்ல முயன்றனர். அவர்களை சாலை பகுதிக்கு விடாமல் போலீசார் தடுப்பு வேலி அமைத்தும், கயிறு கட்டியும் வைத்து இருந்தனர்.

    ஆனால் அதையும் மீறி தடுப்பு வேலிமேல் குதித்து மெரினா சாலையில் உட்கார்ந்தனர். போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி அரசு ஊழியர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து அரசு ஊழியர்களை போலீசார் வெளியேற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். இதனால் போலீசார் சாலையில் அமர்ந்து மறியல் செய்த ஊழியர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். மற்றவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.

    மதுரை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை அன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. பணிக்கு திரும்பவேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

    அதேநேரத்தில் அரசையும், அரசு ஊழியர் பிரச்சினையை முறையாக அணுக வேண்டும் என்று கூறியுள்ளது. கோர்ட்டின் உத்தரவை மீறவில்லை. எங்களது நியாயமான கோர்க்கையை நிறைவேற்றித்தர வேண்டும் என இப்போது போராடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசை வலியுறுத்தி வருகிறோம்.

    இந்த பிரச்சினையை தீர்க்காமல் காலம் கடத்தி வந்தது அரசின் தவறு. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு நாங்கள் காரணம் அல்ல. அரசுதான் பொறுப்பு. மாணவர்கள் நலனில் எங்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது. எங்களைவிட அவர்கள் மீது அக்கறைப்பட யாராலும் முடியாது.

    தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யவில்லை. கஜா புயல் பாதிப்பு என்று கூறி பிரச்சினையை தள்ளி வைத்துவிட்டது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி இந்த பாதிப்பை ஈடுசெய்ய எங்களால் முடியும். அரசின் தவறான முடிவால்தான் இந்த பிரச்சினை. எங்கள் போராட்டம் தொடரும். அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் 4வது நாளாக ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 8 லட்சம் பேருக்கு ‘நோட்டீசு’ அனுப்பப்பட்டுள்ளது. #JactoGeo #GovtStaff
    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடந்து வருகிறது.

    கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய இந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக நீடித்தது.

    தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 8 லட்சம் பேர் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன.

    தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. நேற்றும், நேற்று முன்தினமும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    போராட்டத்தை கைவிடுமாறு ஜாக்டோ-ஜியோவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பல தடவை கோரிக்கை விடுத்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்றுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25-ந்தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதுபற்றி முடிவு எடுக்க ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னை திருவல்லிக்கேணியில் நடந்தது. கோர்ட்டு உத்தரவை ஏற்று வேலைக்கு திரும்புவதா? வேண்டாமா? என்று கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

    முடிவில் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ள 9 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தைத் தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இன்றும் 4-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடங்கிய 22-ந்தேதி முதலே பணிக்கு வராதவர்கள் யார்-யார்? என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சட்டப்பிரிவு 17-பி-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், பள்ளிகள் வாரியாக நோட்டீஸ் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய விளக்கம் அளிக்குமாறு அனுப்பப்படும் நோட்டீசுகளை சில இடங்களில் ஆசிரியர்கள் வாங்க மறுத்ததாக தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரியர்களின் வீடுகளில் நோட்டீசை ஒட்டும் பணி நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய நடந்தது. இன்றும் நோட்டீசு ஒட்டப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரிகள் துணையுடன் இந்த பணி நடந்து வருகிறது.

    இதன் அடிப்படையில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பற்றிய முழு விபரமும் இன்று மாலைக்குள் தொகுக்கப்பட உள்ளது. அந்த பட்டியலை கொண்டு நாளை (சனிக்கிழமை) முதல் அதிரடி நடவடிக்கைகள் பாய உள்ளது. சட்ட பிரிவுகளின் துணைகொண்டு பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.

    குறிப்பாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “நோ ஒர்க், நோபே” என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை நாட்களுக்கு வேலைக்கு வரவில்லையோ, அத்தனை நாட்களுக்கு சம்பளத்தை வழங்கக் கூடாது என்பதில் அரசு தீவிரமாக உள்ளது.

    இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.

    அதில் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மூலமாக பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்து பள்ளிக்கூடங்களை தங்கு தடையின்றி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அங்கேரிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் தற்காலிக ஆசிரியை மூலம் பாடம் நடத்தப்பட்டது

    அப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 சம்பளம் வழங்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அரசாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. 3 நாட்களுக்குள் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு பணியை முடிக்கும்படி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களிடம் கூறப்பட்டுள்ளது.

    பெற்றோர், ஆசிரியர் சங்கம் இல்லாத பள்ளிகளில் அருகில் உள்ள பள்ளிகளில் இயங்கும் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி தேர்வு செய்யப்படும் தற்காலிக ஆசிரியர்கள் 28-ந்தேதி முதல் பள்ளிகளில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தற்காலிக ஆசிரியர்கள் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அன்றைய தினம் மதுரை ஐகோர்ட்டு புதிய உத்தரவுகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #GovtStaff
    விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,385 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தார்கள். #JactoGeo

    விழுப்புரம்:

    புதிய ஓய்வுஊதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பும் மற்றும் கள்ளக்குறிச்சியிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.

    விழுப்புரத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தை நடத்திய ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 170 பேர் மீதும், கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்திய 150 பேர் மீதும் போலீசார் வழக் குபதிவு செய்தனர்.

    இதேபோல் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி நேற்று கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுதலை செய்தனர்.

    இந்நிலையில் தடையை மீறியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 2,065 பேர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,385 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தார்கள்.

    வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டீசு அனுப்ப அரசு உத்தரவிட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறையில் நேற்று பணிக்குவராத 381 பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

    அதில், உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதேபோல் பிற துறைகளிலும் பணிக்கு வராதவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. #JactoGeo

    ×