search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Army"

    • இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
    • சாதாரண விஷயங்களுக்கே சாக்கு போக்கு சொல்பவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பெண்கள் தான் சாதிக்கிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவர் சரண்யா. இவர் விரைவில் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பதவி ஏற்க உள்ளார்.

    இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர். மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டுமே ஆவார்.

    சரண்யா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ராணுவத்தில் சேருவதற்கு முன்பு அவர் விவசாய வேலைகளை பார்த்து வந்தார். கால்நடைகளையும் வளர்த்தார். கபடி வீராங்கனையும் ஆவார்.

    அவர் ராணுவ பயிற்சியில் சேர்ந்து 3 முறை தோல்வியை தழுவினார். இந்த முறை அவர் சாதித்து விட்டார்.

    இது தொடர்பாக சரண்யாவுக்கு பயிற்சி அளித்த கமாண்டர் கூறியதாவது:-

    சரண்யா அந்தியூர் பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவரது வீட்டை சுற்றி வனப்பகுதி உள்ளது. அவரது வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்துக்கு 20 கி.மீ. தூரம் மண் ரோட்டில் செல்ல வேண்டும். அந்த மண் ரோட்டில் கார் கூட செல்ல முடியாது. இதனால் அவர் பயிற்சிக்கு வருவதற்காக அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவார். வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் தனியாக மண் ரோட்டில் 20 கி.மீ. தூரம் சென்று அங்கு ஒரு இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு 4 பஸ்கள் மாறி பயணம் செய்து காலை 7 மணிக்கு பயிற்சிக்கு வந்து விடுவார். சில நாட்கள் அவர் 7.05 மணிக்கு வருவார். அப்போது அவரை திட்டுவேன். ஆனால் அவர் இவ்வளவு சிரமப்பட்டு வருவதை ஒருநாள் கூட என்னிடம் சொன்னதில்லை. 5 நிமிடம் தாமதமாக வந்து நான் திட்டும்போது மன்னிப்பு கேட்டு விட்டு இனி சரியான நேரத்துக்கு வந்து விடுவதாக கூறுவார்.

    இந்த விஷயங்கள் எல்லாம் நான் அவரது வீட்டுக்கு சென்றபோதுதான் தெரிய வந்தது. அதையும் சரண்யா சொல்லவில்லை. அவரது தாயார் சொல்லித்தான் எனக்கு தெரியும். அவரது வீட்டுக்கு சென்றபோது பாதி தூரம்தான் காரில் செல்ல முடிந்தது. மீதி தூரம் நடந்தே சென்றோம்.

    சரண்யாவின் தாயார் என்னிடம் பேசியபோது, "சரண்யா அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவார். அவர் எப்படி பயிற்சிக்கு செல்கிறார் என்பதே எனக்கு தெரியாது. 6 மாதமாக இப்படியே கஷ்டப்பட்டார். இவ்வளவு சீக்கிரம் எழுந்து செல்கிறாயே... உனது கமாண்டர் மனிதனா, மிருகமா? என்று திட்டி இருக்கிறேன்" என்றார். அதற்கு நான் சிரித்துக்கொண்டே அந்த கமாண்டர் நான்தான் என்றேன்.

    சாதாரண விஷயங்களுக்கே சாக்கு போக்கு சொல்பவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பெண்கள் தான் சாதிக்கிறார்கள். இவர்கள்தான் சிங்கப் பெண்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
    • இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும்

    புதுடெல்லி:

    இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், இந்த கொள்முதல் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.

    இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதாவது, ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பில் 60 ஹெலிகாப்டர்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர, இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், இந்திய ராணுவத்திற்கு 307 ஏடிஏஜிஎஸ் ஹோவிட்சர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாங்கப்படும்.

    • ஜீரோ டிகிரிக்கும் குறைவான காலநிலைக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் குளிர்கால உடை அணிந்து விளையாடினர்.
    • இந்த விளையாட்டின் சில படங்கள் இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டன.

    லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு அருகே இந்திய ராணுவ வீரர்கள், உயரமான பகுதியில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    அதில் இயற்கை எழில் சூழ்ந்த ஒரு தற்காலிக ஆடுகளத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஜீரோ டிகிரிக்கும் குறைவான காலநிலைக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் குளிர்கால உடை அணிந்து விளையாடினர். 

    இந்த விளையாட்டின் சில படங்கள் இந்திய ராணுவத்தின் ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டன. 

    இவ்வளவு உயரமான இடங்களில் ராணுவம் விளையாட்டில் ஈடுபடுவதைப் பார்த்து பலர் ஆச்சரியப்பட்டனர்.

    • இந்திய அரசாங்கம் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்புப் படையினர், மருத்துவ குழுவினர் ஆகியோரை அனுப்பியுள்ளது.
    • சிரியாவின் அலெப்போ நகரில் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது.

    டமாஸ்கஸ்

    துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6-ந்தேதி ரிக்டர் 7.8 என்ற அளவில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கமும் ஏற்பட்டு உள்ளது.

    நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 41 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்தும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்திய அரசாங்கம் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்புப் படையினர், மருத்துவ குழுவினர் ஆகியோரை அனுப்பியுள்ளது. இந்த நிலையில் சிரியாவின் அலெப்போ நகரில் இந்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண உதவிகளை இந்திய ராணுவம் சிரியா அரசிடம் ஒப்படைத்தது. இதில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில், "நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு 'உலகம் முழுவதும் ஒரே குடும்பம்' என்ற கொள்கையின் அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள்.
    • அக்னிபாத் திட்ட வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 ந் தேதி மத்திய அரசு அறிவித்தது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டடத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 4வது வருடம் அவர்களது சம்பளம் ரூ. 40,000 ஆக இருக்கும்.

    இந்நிலையில் அக்கினிபாத் வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கி வசதிகளை அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் பலன்கள் பாதுகாப்புத்துறை சம்பளத் தொகுப்பைப் போல இருக்கும் என்றும், கூடுதலாக, பணி நிறைவின்போது தொழில் முனைவராக மாற விரும்பும் அக்னிவீரர்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழு ஈடுபடுகிறது.

    செர்ஜியேவ்ஸ்கி:

    பல்முனை ராணுவ உக்தி மற்றும் செயல்திறன் பயிற்சியான வோஸ்டாக் - 2022, ரஷியாவின் கிழக்கு ராணுவ மாவட்ட செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியுள்ளது. வரும் 7 வரை இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த பயிற்சி பிற ராணுவக் குழுக்கள், பார்வையாளர்களிடையே தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

    இந்த முகாமில் கோர்க்கா ரைஃபிள்ஸ் படையை சேர்ந்த இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்றுள்ளனர். 7 நாட்களில் கூட்டு களப்பயிற்சிகள், போர் விவாதங்கள் மற்றும் வீர, தீர பயிற்சிகளில் இந்திய ராணுவ குழுவினர் ஈடுபடுகின்றனர்.

    ராணுவ அம்சங்கள், செயல் முறைகளை நடைமுறைப்படுத்துதல், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றை குறித்து ரஷிய ராணுவத்தினருடன் இந்திய ராணுவ குழுவினர் பகிர்ந்து கொள்வார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • இந்திய ராணுவம் மூன்று ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தது.
    • இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உயிரிழப்பு,

    ஸ்ரீநகர்:

    கடந்த 72 மணி நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளின் மூன்று ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அக்னூர் செக்டரில் உள்ள பல்லன்வாலா பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 21 அன்று, நௌஷேராவின் ஜங்கர் செக்டாரில் பணியில் இருந்த ராணுவ வீரர்கள், அதிகாலையில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் நடமாட்டத்தைக் கண்டனர். அவர்களில் ஒருவன் இந்திய போஸ்ட் அருகே வந்து வேலியை வெட்ட முயன்றான்.

    இதையடுத்து அந்த பயங்கரவாதி மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உயிருடன் பிடித்தனர். உடனடியாக அந்த பயங்கரவாதிக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தில் உள்ள சப்ஸ்கோட் கிராமத்தில் வசிக்கும் தபாரக் உசேன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    மேலும் நடைபெற்ற விசாரணையில், இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததை பயங்கரவாதி ஒப்புக்கொண்டான். பாகிஸ்தான் உளவுத்துறை சேர்ந்த கர்னல் யூனுஸ் சௌத்ரி என்பவர் தனக்கு 30,000 பாகிஸ்தான் ரூபாயை கொடுத்து அனுப்பியதாக தபாரக் உசேன் தெரிவித்தான்.

    இந்நிலையில் கடந்த 22ந் தேதி ஜம்முகாஷ்மீரின் நௌஷேரா மாவட்டத்தின் லாம் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்ட முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணிவெடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய ராணுவ வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.

    • இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
    • நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்.

    ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை சாதனம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனம், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் ஆகியவற்றை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.

    இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • தேச சேவைக்காக பணியின் போது உயிரை தியாகம் செய்யும் வீரர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு

    அக்னிபாத் திட்டத்திற்கு, வட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் ஆட் சேர்ப்பு குறித்து பாதுகாப்புத்துறை சார்பில் முப்படைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

    அப்போது பேசிய ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, இந்திய ராணுவத்தில் ஒழுக்கம்தான் அடித்தளம் என்றார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தீவைப்பு உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும் அவர் கூறினார். ராணுவத்தில் சேர விரும்புபவர்களுக்கும் எந்த போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை என்ற சான்றிதழ் தேவை என்றும், இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தும் என்றும் அதன் அடிப்படையிலேயே சான்றிதழ் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் 1.25 லட்சமாக உயரும் என்றும் அவர் தெரிவித்தார். முப்படைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17,600 பேர் முன்கூட்டியே ஓய்வு பெறுகின்றனர் என்றும், ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வீர்கள் என்று யாரும் அவர்களிடம் கேட்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு பணி நிறைவுக்கு பிறகு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பில் வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீடு அறிக்கப்பட்டுள்ளது, வன்முறை சம்பவங்களின் எதிரொலியாக இல்லை என்றும், அவர் விளக்கம் அளித்தார். அக்னிபாத் திட்டத்தில் இணையும் அக்னி வீரர்கள் பணியின் போது நாட்டிற்காக உயிரை தியாகம் செய்திருந்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்தார்.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் பெண்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு போர் கப்பல்களிலும் பணி வழங்கப்படும் என்றும் வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி குறிப்பிட்டார். அக்னிபாத் திட்டத்தில் சேரும் முதல் பேட்ஜ் கடற்படை அக்னி வீரர்களுக்கு நவம்பர் 21 முதல் ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்கா பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகள் தொடங்கும் என்றார்.

    இந்திய விமானபடையில் அக்னிவீரர்களுக்கான ஆன்லை தேர்வு செயல்முறை முதல் கட்டமாக ஜூலை 24ம் தேதி தொடங்கும் என்றும், ஏர் மார்ஷல் எஸ்கே ஜா குறிப்பிட்டார். இதில் தேர்வு செய்யப்படும் முதல் பேட்ஜ் வீரர்களுக்கு டிசம்பர் 30க்குள் பயிற்சிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

    • இந்தியக் கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
    • இந்த நடவடிக்கை வெளிநாட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்க உதவும்

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் ரூ.76,390 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இந்திய ராணுவத்திற்கான பல்வேறு வாகனங்கள், பீரங்கிகள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இது நாட்டின் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு தொழிலுக்கு ஊக்கமளிப்பதுடன், வெளிநாட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்கவும் உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் இந்தியக் கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கும் ரூ.36,000 கோடி மதிப்பிலான பரிந்துரைகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    பாலகோட் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை தொடர்ந்து கடந்த 1½ மாதங்களில் மட்டும் 513 முறை பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி கூறினார். #BalakotStrike #India #Pakistan
    ஜம்மு:

    காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட காலமாக அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் புலவாமாவில் துணை ராணுவத்தினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி 26-ந் தேதி குண்டுவீசி தாக்குதலை தொடுத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது.

    இது தொடர்பாக ஒயிட் நைட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் நேற்று ரஜோரி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பாலகோட் தாக்குதலுக்கு பிறகான கடந்த 1½ மாத காலத்தில் மட்டும் காஷ்மீர் எல்லையில் ஏறக்குறைய 513 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் அரங்கேற்றி இருக்கிறது. இதில் பீரங்கி குண்டுகள், நவீன துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களை 100 முறைக்கும் மேலாக பயன்படுத்தி இருக்கிறது. இதைப்போல கிராமப்பகுதிகளையும் தங்கள் இலக்குகளாக்கி இருந்தனர்.

    இந்த தாக்குதல்களில் நமது தரப்பில் 4 வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். சுமார் 45 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.

    இந்த தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய தரப்பில் இருந்து சரியான பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சரியான விவரங்கள் இல்லை. ஏனெனில் இந்திய ராணுவத்தை போல பாகிஸ்தான் தனது சேத விவரங்களை வெளியில் சொல்லாது.

    எனினும் நமக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில், நமது பகுதிக்கு ஏற்பட்ட சேதத்தை விட 5 முதல் 6 மடங்கு அதிக சேதம் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.

    இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் தரப்பில் இருந்து குறிபார்த்து சுடும் சம்பவங்கள் கடந்த பிப்ரவரி 27-ந் தேதிக்கு பிறகு நடைபெறவில்லை. இதற்கு நாம் மேற்கொண்ட வெற்றிகரமான பாதுகாப்பு நடவடிக்கைகளே காரணம் ஆகும்.

    இவ்வாறு பரம்ஜித் சிங் கூறினார்.

    நாடாளுமன்ற தேர்தலில் ராணுவ வீரர்களின் செயல்பாட்டை வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பரம்ஜித் சிங், இந்த விவாதத்தில் தலையிட ராணுவம் விரும்பவில்லை எனக்கூறினார். இதைப்போல ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் பரம்ஜித் சிங் உறுதிபட தெரிவித்தார்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பந்திபோரா மற்றும் சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. #JKEncounter #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரவு வரை நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    பொதுமக்களை கேடயமாக பிடித்து வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த ஒருவரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். அதன்பின்னர் சண்டையின்போது ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


    இதேபோல் சோபியான் மாவட்டம் இமாம்சாகிப் பகுதியில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    பாரமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. #JKEncounter #MilitantsKilled
    ×