search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers' Struggle"

    விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் வேளாண் விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, அவர்களின் நிலங்களை அளவிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளை வாழ வைக்க வேண்டிய அரசு, காவல்துறை மூலமாக விளைநிலங்களை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை எதற்காகவும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் விளைநிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் 13 மாவட்ட விவசாயிகளும் ஒன்று சேர்ந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் என்ற அமைப்பை உருவாக்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் காரணமாக மின் பாதை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.



    பவர் கிரிட் நிறுவனம் கோவை மாவட்டத்தில் காவல்துறை உதவியுடன் விவசாயிகளை விரட்டியடித்து விட்டு, நிலங்களை அளந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது சட்டவிரோதமாகும். இதை கண்டித்து கோவை சுல்தான்பேட்டையில் விவசாயிகள் தொடர் உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விவசாய விளைநிலங்கள் வழியே மின் கோபுரங்களை அமைக்கும் மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நில அளவீடு பணிகளை தொடங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகள் போராட்டத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முழு ஆதரவை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Ramadoss
    வாசுதேவநல்லூர், சிவகிரி பகுதியில் விவசாய நிலங்களை அழித்து 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் கறுப்பு கொடிகளை நட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகிரி:

    திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை 147 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்குவழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் 1,863 ஏக்கர் நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் சிவகிரி, புளியங்குடி, வாசு தேவநல்லூர் பகுதியில் 69 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சாலை அமைய உள்ளது. இதில் பெரும்பகுதி விவசாய நிலங்களாகும். தற்போதுள்ள திட்டப்படி 4 வழி சாலை அமைந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆயிரக்கணக்கான வாழை, தென்னை, மா, எலுமிச்சை மரங்கள் அழிக்கப்படும் நிலை உள்ளது.

    இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள். இதை தவிர்த்து அருள்புத்தூர் முதல் பாம்பு கோவில்சந்தை வழியாக சாலை அமைந்தால் அதில் பெரும்பகுதி தரிசு நிலமாக இருக்கிறது.

    மேலும் இத்திட்டம் சில பெருநிறுவனங்கள், உயர்நிலை அரசியல் தலைவர்களின் லாபத்துக்காக கொண்டு வரப்படுகிறது. பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமல் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ளக்கூடாது என அப்பகுதி விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று சிவகிரி பகுதி விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு வழிசாலைக்காக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைதுறை கற்களை அகற்றிய விவசாயிகள் அங்கு கறுப்பு கொடிகளை நட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வாசு தேவநல்லூர், சிவகிரி தாசில்தார்கள் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. #tamilnews
    பழனி அருகே எரமநாயக்கன்பட்டியில் உள்ள பட்டிகுளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விவசாயிகள் போராட்டம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
    பழனி:

    பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்ட பகுதியில் பட்டிகுளம் உள்ளது. இக்குளம் சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இக்குளத்தின் மூலம் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், இக்குளத்தில் உள்ள நீரின் மூலம் எரமநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, பச்சள நாயக்கன்பட்டி, பொட்டம் பட்டி, ராசாபுரம்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. இக்கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் இக்குளத்தில் உள்ள நீரின் அளவை பொறுத்ததே ஆகும்.

    குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு அடிப்படையாக விளங்கும் இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று பட்டிகுளம் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் இக்குளத்தின் மேல் ஏறிநின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

    இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கூறியதாவது, பட்டிகுளம் 6 கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்திற்கு அடிப்படையானது. இக்குளத்தின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்குநாள் ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    தடுப்பணை அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த கோட்டைமேடு ஊராட்சியை சேர்ந்தது பரளிகண்மாய். இதன் மூலம் கோட்டைமேடு, மற்றும் புதுப்பட்டி கிராமங்களில் சுமார் 260 ஏக்கர் விவாசாய விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதற்கு முல்லை பெரியாறு பிரதான கால்வாய் மூலம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கண் மாய்க்கு நீர் வரும் பாதையில் தனிநபர்கள் தடுப்பணை அமைத்து நீரினை பயன் படுத்தி வருகின்றனர்.இதனால் கண்மாய்க்கு வரவேண்டிய தண்ணீர் முழுமையாக வரவில்லை. இதனால் கண்மாய் பாசன விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

    இதுகுறித்து பாசன விவசாயிகள் கலெக்டர், கோட்டாட்சியர், பொதுப் பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு ஏற்கனவே கொடுத்துள்ளனர்.

    மேலும் தடுப்பணைகள் அமைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலங்காநல்லூர் நிலையம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைதொடர்ந்து விவசாயிகள் புகார் மனுவை கொடுத்துவிட்டு சென்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். #Farmersstruggle

    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணத்தில் ஆண்டுதோறும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு ஸ்ரீமுஷ்ணம் கீழ் மற்றும் மேல்புளியங்குடி, ஸ்ரீராமன், ரெட்டிபாளையம், கரப்பை போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல் கொள்முதல் செய்து பயன்பெற்று வந்தனர்.

    இந்த ஆண்டு நெல் கொள்முதல் தாமதமாக கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஓரிரு நாட்கள் மட்டும் திறந்து குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்தனர்.

    ஆனால், விவசாயிகள் அந்த நெல் கொள்முதல் நிலையம் முன்பு நெல்களை மூட்டைகளாகவும், குவியல் குவியலாகவும் வைத்தனர். நெல் மூட்டைகளை எடை போடுங்கள் என்றால், எடை மிஷின் சரியில்லை. நெல் நனைந்தால் எடைபோட முடியாது எனவும் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் தினமும் சரியான நேரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்தும், தற்போது இந்த கொள்முதல் நிலையம் தினமும் இரவு நேரத்தில் மழை பெய்வதால் உடனடியாக நெல் மூட்டைகளை எடை போட வேண்டும் என்று வலியுறுத்தி நெல் குவியல் முன்பு நின்று கொண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இது குறித்து நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்த விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த சனிக்கிழமை இந்த நிலையத்துக்கு எடைபோட செல் எடுத்து வந்தேன். இதுவரை எடை போடவில்லை. கடந்த ஆண்டு விருத்தாசலம் செல்லும் சாலையில் நெல் கொள்முதல் நிலையம் பரந்து விரிந்து பாதுகாப்பான இடத்தில் இருந்தது.

    இந்த ஆண்டு அரசு இடத்தில் மலைமேடு பகுதியில் பள்ளம்-மேடாக உள்ள இடத்தில் இந்த நிலையத்தை தொடங்கி உள்ளனர். அதனால் நெல் குவியலாக உள்ள இடத்தில் மழைநீர் தேங்கி குட்டைப்போல் காட்சி அளிக்கிறது.

    மேலும் இரவு நேரங்களில் பன்றிகள் புகுந்து குவித்து வைத்துள்ள நெல்களை தின்று சேதப்படுத்தி விடுகிறது. கடன் மற்றும் நகை பொருட்களை அடமானம் வைத்து பயிரிட்டு பின்பு அறுவடை செய்து அதில் பணத்தை பெற்று கடன்களை அடைக்கலாம் என்றால் வட்டி கூட கட்ட முடியாத நிலையில் உள்ளோம். எனவே அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை காலதாமதம் இல்லாமல் திறந்து எங்கள் நெல் மூட்டைகளை எடைபோட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பாபநாசத்தில், நாளை வாய்க்கால்களை தூர்வாரக்கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. #Farmers

    பாபநாசம்:

    பாபநாசம் ஒன்றியம் பெருமாங்குடி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சங்க மாநில தலைவர் மாலாபுரம் கோ.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. பாசன கிளை வாய்க்கால்கள் முழுவதும் தூர்வாரவேண்டும். கடை மடை வரை தண்ணீர் செல்லும் வகையில் நீர் திறக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைநெல்,பூச்சி மருந்து உரம் வழங்கவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

    நுகர்பொருள் வாணிப கழகத்தில் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு தட்டுப் பாடின்றி சாக்கு வழங்க வேண்டும் உள்பட ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் புதிய பேருந்துநிலையம் அருகில் நாளை (வியாழக்கிழமை) மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

    மேடவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சோழிங்கநல்லூர்:

    பள்ளிக்கரணை அருகே உள்ள மேடவாக்கத்தை சேர்ந்தவர்கள் மனோகர், மகாலிங்கம், தேவதாஸ். சகோதரர்களான இவர்கள் அதே பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இவர்களது விவசாய நிலத்தை சுற்றிவிதிமுறையை மீறி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் விவசாய நிலத்திற்கு வரும் கால்வாயை ஆக்கரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    இதன் காரணமாக அவர்களால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கால்வாய் ஆக்கிரமிப்பு பற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் இன்று காலை விவசாயிகள் மனோகர், மகாலிங்கம், தேவதாஸ் ஆகியோர் குடும்பத்துடன் திடீரென மேடவாக்கம் ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சிட்லபாக்கம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது குறித்து விவசாயி மனோகர் கூறும்போது, “அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு திட்ட அனுமதி வழங்கியதால் விவசாய நிலத்தை சுற்றி அடுக்குமாடி வீடுகள் மற்றும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.

    கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாய நிலத்துக்கு தண்ணீர் வருவதில்லை. அரசு ஆணையை மீறி வழங்கப்பட்ட திட்ட அனுமதியை திரும்ப பெற்று விவசாய நிலத்திற்கு வழிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இல்லையெனில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

    “பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று விவசாயிகள் கோ‌ஷங்களை எழுப்பினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தாசில்தார் மனோகரன் தலைமையில் நடந்தது. திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் விவாதம் நடைபெற்று கொண்டிருந்தபோது, 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தியபடி, பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பியபடி கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்குள் வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டாம், வாழ்வாதாரத்தை பிச்சையாக போட வேண்டும்’’ என்று கோ‌ஷங்களை எழுப்பினர்.

    அந்த சமயத்தில் அங்கிருந்த மற்றொரு தரப்பு விவசாயிகள், ‘‘பசுமை வழிச்சாலை எங்களுக்கு வேண்டும் என்று ஆதரவு கோ‌ஷங்கள்’’ எழுப்பினர். இதனால் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாயிகளாக இல்லாதவர்களை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 தரப்பு விவசாயிகளையும் இருக்கையில் போலீசார் அமர வைத்தனர்.

    இதையடுத்து மீண்டும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் தொடங்கி தொடந்து நடைபெற்றது. அப்போது விவசாயி ஒருவர், பசுமை வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தீவிரவாதிகள் மீது தான் போலீசாரின் அடக்குமுறை இருந்தது. ஆனால் தற்போது விவசாயிகள் மீது போலீசாரை ஏவுகின்றனர்’’ என்றார்.

    அப்போது அங்கிருந்த சில விவசாயிகள் கூட்டத்தில் ‘‘அரசியல் பேசக்கூடாது. பசுமை வழிச்சாலைக்கு எதிராக யாரும் பேசக் கூடாது’’ என்றனர். மற்றொரு தரப்பு விவசாயிகள் தனிப்பட்ட கருத்தை தெரிவிக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று கூறி கோ‌ஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து திருவோடு ஏந்தி வந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அவர்கள் வெளியே வந்து பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கையில் வைத்து இருந்து திருவோடுகளை கீழே போட்டு உடைத்தனர். அப்போது போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    8 வழி பசுமை சாலைக்காக செய்யாறு அடுத்த பெரும்பாளை கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் அளவிடும் பணியை தொடர்ந்தனர்.

    அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 73) என்பவரின் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலமும், ஒரு கிணறும் கையகப்படுத்தப்பட்டதாக அளவீடு செய்து கல் நடப்பட்டது. இதைப்பார்த்த கிருஷ்ணன் தனது நிலத்தில் விழுந்து, புரண்டு கதறி அழுதார்.

    எனினும் ஒருபுறம் அதிகாரிகள் அளவீடு பணியை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் ஓடிச் சென்று அருகில் உள்ள தனது கிணற்றில் திடீரென குதித்து தற்கொலைக்கு முயன்றார்.



    இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக ஓடிச் சென்று, கிராம மக்கள் உதவியுடன் கிருஷ்ணனை கயிறு கட்டி கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், எனக்கு விவசாயத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. எனது நிலம் பறிபோவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாலை அமைக்கும்போது மூடப்படும் எனது கிணற்றிற்குள்ளே என்னையும் சேர்த்து புதைத்து விடுங்கள்’’ என்று கதறினார்.

    தொடர்ந்து இன்று காலை சேத்துப்பட்டு தாலுகாவில் நாச்சியாபுரம் கோரமங்கலம் பகுதியில் நிலம் அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டம் ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் நில கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Greenwayroad #Farmersstruggle

    சேலம்:

    சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள், மலைகள் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதனால் சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தை தூண்டி விட்டதாக ஆச்சாங்குட்ட பட்டியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி முத்துக்குமார், அன்னதானப்பட்டியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் 15 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

    சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மானூஷ் கடந்த மாதம் 3-ந் தேதி நடிகர் மன்சூர் அலிகானை சேலத்திற்கு அழைத்து வந்து 8 வழி விரைவு சாலை அமையும் பகுதிகளை காண்பித்தார். அப்போது நிரூபர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் சேலம் - சென்னை பசுமை வழிசாலை திட்டத்தை கைவிடா விட்டால் 8 பேரையாவது வெட்டி கொல்வேன் என ஆவேசமாக பேசினார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய தீ வட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதுபோல 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களையும், போராட்டத்துக்கு தூண்டி விடுபவர்களையும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கைது செய்து வருகிறார்கள்.

     


    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஆட்சேபனை இருந்தால் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை அடுத்து கடந்த 14-ந்தேதி ஆட்சேபனை மனுக்களை விவசாயிகள் கொடுத்தனர். இதையடுத்து ஜூலை மாதம் 10-ந் தேதி கலெக்டர் தலைமையில் அடுத்த கட்ட கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அந்த கூட்டம் நடக்கும் வரை 8 வழி சாலைக்கு நில எடுப்பு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என அதிகாரிகள் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் சற்று அமைதியாக இருந்தனர்.

    ஆனால் அதிகாரிகள் நேற்று திடீரென 8 வழி பசுமை சாலைக்கான திட்டப்பணிகளை அதிரடியாக தொடங்கினார்கள். சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மஞ்சவாடியில் இருந்து அடிமலைப்புதூர், செட்டியார் காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, வலசையூர் பகுதியில் கையகப்படுத்த கூடிய நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணியில் மாவட்ட வருவாய்துறையினர் ஈடுபட்டனர்.

    முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் நிலங்களை அளந்து எல்லை கற்கள் நட்டதை பார்த்த விவசாயிகளும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் விவசாய பயிர்களுக்கு நடுவே சாலை அமைப்பதற்கான எல்லை கற்களை நட்டனர். மஞ்சவாடி கணவாய் முதல் வலசையூர் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு நேற்று நில அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கல் நடப்பட்டது.

    இந்த சாலைக்காக 70 மீட்டர் அகலத்தில் விவசாய நிலங்கள் எடுக்கப்படுகிறது. பசுமையான தென்னை மரம், பூஞ்செடிகள், மாந்தோப்பு, கொய்யாதோப்பு, நெல் வயல்களுக்கு இடையே அளவீடு செய்ததால் அந்த பகுதி விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறினர்.

    ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நில அளவீடு செய்யும் பணி நடந்த போது அங்கு திரண்டு வந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உண்ணாமலை என்பவர் தனது விவசாய நிலத்தில் படுத்து உருண்டு புரண்டு கதறி அழுதார். என்னை கொன்று விட்டு நிலத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கதறினார்.

    உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாமலை, அவரது மகன் ரவிச்சந்திரன், மருமகள் சுதா, சகுந்தலா, பிரகாஷ், நடராஜ் ஆகிய 6 பேரை கட்டாயப்படுத்தி வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்களை இரவில் விடுவித்தனர்.

    அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட உளவு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

     


    இந்த நிலையில் நேற்று மாலை ஓமலூரை அடுத்த ஆர்.சி. செட்டிபட்டியில் ஓமலூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் போலீசாரிடம் சிக்கினார்.

    ஏற்கனவே இவரை போலீசார் போராட்டத்தை தூண்டி விடுவதாக தேடி வந்தனர். அவரை கண்டதும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். நேற்றிரவு அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டபட்டி பகுதியில் 2-வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது:- சேலம்- சென்னைக்கு 8 வழி பசுமை சாலை தேவையில்லாத திட்டம், பசுமையான விளை நிலங்களை அழித்து சென்னைக்கு விரைவாக செல்ல வேண்டுமா? தென்னை மரங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்துள்ளோம்.

    தற்போது எனது கண் முன்னே அதனை அழிக்க துடிக்கிறார்கள்.இதனால் மிகவும் மன வேதனையில் தவித்து வருகிறோம். ஜூலை மாதம் 10-ந் தேதி கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் திடீரென நில அளவீடு செய்யும் பணி மேற்கொள்வது அத்து மீறிய செயல், எனது நிலத்தில் எல்லை கல்லை நான் நடவிடவில்லை என்றார். #Greenwayroad #Farmersstruggle

    பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி வேளாங்கண்ணியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கலைந்து சென்றனர்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகைமாலி, தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் பூவைமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கை கண்டித்தும், காப்பீடு தொகை வழங்காத கொளப்பாடு கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவலறிந்த நாகை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன அலுவலர் தினேஷ், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் விடுப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

    இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த முத்துபெருமாள், ஜீவானந்தம், வரதன் உள்பட விவசாயிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். 
    தஞ்சையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்பட 60 பேரை வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையில் பாதுகாப்புக்கு வந்த போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரை மாணிக்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடுவர் நீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை பிப்ரவரி 16-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 3 முறை உத்தரவிட்டும் அதனை மத்திய அரசு நடைமுறைபடுத்தவில்லை.

    தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை. காவிரி பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு கர்நாடகாவில் நடைபெறும் தேர்தல்தான் காரணம்.

    அதில் தங்களுக்கு பாதகமாக முடிவு அமைந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது.

    காவிரி தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல் உற்பத்தி கேள்விகுறியாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக அரசு காவிரி தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    ×