search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Green Way Road"

    8 வழிச்சாலை திட்ட தொடர்பான வழக்கில் கோர்ட்டு நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்று தம்பித்துரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GreenWayRoad #ThambiDurai

    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கில் தமிழ் நாட்டில் நல்ல திட்டங்கள் அமைய நீதி துறை தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    மு.க.அழகிரி பேரணி நடத்த அவருக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

    தமிழிசை - மாணவி சோபியா வாக்குவாதம் சம்பவம் பற்றி முழுமையாக எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #GreenWayRoad #ThambiDurai

    செங்கம் அருகே பசுமை சாலைக்கு நிலம் தரமறுத்த 5 விவசாயிகளை போலீசார் அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GreenwayRoad
    செங்கம்:

    சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக 5 மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கலசப்பாக்கம், செங்கம், போளூர் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து அளவீடு செய்து குறியீடு கற்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    செங்கம் அடுத்த கட்ட மடுவு ஊராட்சி அத்திப்பாடி கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடந்த நில அளவிடும் பணியின்போது சில விவசாயிகள் தங்கள் நிலத்தை பசுமை சாலைக்காக தர மறுத்து அளவீடு பணியை தடுத்தனர். இதனால், தற்காலிகமாக அப்பகுதியில் நிலம் அளவிடும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர்.

    இந்த நிலையில், அத்திப்பாடி கிராமத்தில் விடுபட்ட அளவீடு பணியை தொடருவதற்காக தாசில்தார் ரேணுகா தலைமையிலான வருவாய்த்துறையினர் சென்றனர். விவசாயிகளின் எதிர்ப்பை முறியடிக்க டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    அப்போது அருள் என்ற விவசாயிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உள்ள மாந்தோப்பு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை தகர்த்து எறிந்து அதிகாரிகளை போலீசார் உள்ளே அழைத்து சென்றனர். 10 ஏக்கர் மாந்தோப்பு மற்றம் மணிலா பயிரிடப்பட்டிருந்த நிலத்தை அளந்து குறியீடு கற்களை நட்டனர்.

    இதற்கு, அருள் உள்ளிட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசமடைந்த போலீசார் அருள் உள்ளிட்ட விவசாயிகளை அடித்து, உதைத்து தரதரவென இழுத்துச் சென்று மேல்செங்கம் போலீஸ் நிலையத்தில் சிறை வைத்தனர். பின்னர், அருள் மற்றும் மனோகரன், முத்துக்குமார், இந்திரா என்ற பெண், மற்றொரு மனோகரன் என மொத்தம் 5 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். மற்ற விவசாயிகளை இரவில் விடுவித்தனர்.

    பசுமை சாலைக்காக நிலம் தர மறுத்த விவசாயிகளை போலீசார் தாக்கி கைது செய்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #GreenwayRoad
    காஞ்சீபுரத்தில் பசுமை வழிச்சாலையை எதிர்த்து போராடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Greenwayroad

    காஞ்சீபுரம்:

    பசுமை வழிச்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்தது.

    காஞ்சீபுரம் அடுத்த மணல்மேடு பகுதியில் நேற்று நிலம் அளவிடும் பணி நடைபெற்று வந்த நிலையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிக்கு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வந்தனர்.

    அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் ஏ.டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நேரு, மற்றும் நிர்வாகிகள் மோகனன், சங்கர், கனகராஜ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காஞ்சீபுரம் ஏ.டி.எஸ்.பி. சந்திர சேகரன் ஒருமையில் பேசுவதாகவும் நில எடுப்பு பணிகள் நடைபெறும் இடத்தில் அதிக அளவில் போலீசாரை குவித்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தினர்.

    இந்த நிலையில் போராட்டக்காரர்களை அடைத்து வைத்திருந்த மாகரல் காவல் நிலையத்தினை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து டி.எஸ்.பி. பஞ்சாட்சரம் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். #Greenwayroad

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு 2-வது நாளாக நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது. #Greenwayroad

    செங்கல்பட்டு:

    சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்கள் வழியாக இச்சாலை செல்கிறது. இதற்காக சுமார் 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. படப்பை கரசங்கால், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், வளையங்கரணை பகுதியில் 12.4 கிலோ மீடடர் தூரத்துக்கு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடை பெற்றது. செங்கல்பட்டு அருகே உள்ள ஆப்பூர், பாலூர், கொளத்தாஞ்சேரி பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் முத்துவடி வேலு, தாசில்தார் ரமா மற்றும் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து கல் நட்டினர். அப்பகுதியில் 19 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதையொட்டி அங்கு டி.எஸ்.பி. கந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள கிராமங்கள் வழியாக சுமார் 59 கிலோ மீட்டர் செல்வது குறிப்பிடத்தக்கது. #Greenwayroad

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது. #Greenwayroad

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை-சேலம் இடையே 8 வழி சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.

    இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கையகப்படுத்தப்படுகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59.1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதில் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த கரசங்காலில் இருந்து தொடங்கி ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் செல்கிறது.

    8 வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    நிலம் அளவிடும் போது விவசாயிகள் போராட்டம் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

    அவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். விவசாயிகள், கிராமமக்கள் எதிர்ப்பையும் மீறி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நிலம் அளவீடு நடந்து முடிந்து விட்டது. நிலம் அளவீடு பணியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு பணி இன்று தொடங்கியது. தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆர்.டி.ஓ ராஜூ தலைமையில் அதிகாரிகள் நிலத்தை அளந்தனர். அளவிடப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி கற்களை நட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது.

    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் கருத்துக்கு வாய்ப்பூட்டு போடக்கூடாது என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #GreenWayRoad #MKStalin

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை- சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எந்த திட்டத்தை தீட்டினாலும் மக்கள் நலனுக்காகவே தீட்டுகிறது. மக்கள் சுதந்திரமான கருத்துக்களை தெரிவிப்பதே இந்திய அரசின் சிறப்பான வழிமுறை.

    இந்த சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக அரசியல் கட்சிகளும், மக்களும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க விடாமல் காவல்துறையினர் வாய்ப்பூட்டு போடும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

    பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக பொதுக் கூட்டம் நடத்த த.மா.கா.வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பா.ம.க. பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரனும் கைது செய்யப்பட்டுள்ளார். செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     


    மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் அதை தடுக்கும் வகையில் கைது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.

    இவ்வாறு செய்வதால் ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கு எதிராக எதையும் செய்துவிட முடியாது. சேலம் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களிடம் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. எனவே மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து நிபுணர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

    ஜனநாயக நாட்டில் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமைக்கு எதிராக நடந்து கொண்ட அரசு வீழ்ந்ததுதான் வரலாறு. எனவே இந்த போக்கை அரசு கைவிட வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியிலும் இது போன்ற சாலைகள் அமைக்கப்பட்டன. அதற்கான நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் மக்களிடம் எதிர்ப்பு இல்லை. இப்போது மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. எனவே தான் மாற்று பாதை அமைக்க வலியுறுத்துகிறோம். #GreenWayRoad #MKStalin

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலையை எதிர்ப்பது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்த கறுப்பு கொடி போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தங்களது முழு ஆதரவினை தெரிவித்துள்ளது. #GreenWayRoad
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழிச் சாலை என்ற பெயரில புதிதாக ஒரு சாலையை அமைக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 10,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட இருக்கிறது. பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    சாலைக்காக விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 6000 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கிறது. விவசாயிகளுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஆழ்குழாய் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், ஏரிகள், குளங்கள் என நீராதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட இருக்கிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், வன விலங்குகள் உட்பட இடம் பெயர வேண்டிய நிலை ஏற்படும்.

    ஆயிரக்கணக்கானோர் தங்களின் குடியிருப்புகளை இழந்து வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், அரசு போராடும் மக்கள் மீது காவல்துறையை ஏவி மிரட்டுவது, அச்சுறுத்துவது, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத அணுகு முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    தமிழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில் நாளை (26-ந் தேதி) காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிப்பது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது. மக்களின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சேலத்திலிருந்து சென்னை வரையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழி சாலைத் திட்டம் ஒன்றை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த முற்பட்டுள்ளன. இதனால் ஐந்து மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் விளை நிலங்களும் குடியிருப்புகளும் பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்படுபவர்களின் கருத்தை அறியாமலும், ஒப்புதலை பெறாமலும், பயமுறுத்தி பலவந்தப்படுத்தி நிலங்களைப் பறிப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது. மறுப்பு தெரிவிக்கும் மக்களை பொய் வழக்கு போட்டு கைது செய்கிறது. இந்த அடக்குமுறையைக் கண்டித்தும் நிலப்பறிப்பை எதிர்த்தும் 5 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி அறவழியில் போராடுவதென்று முடிவு செய்துள்ளனர். நாளை (26-ந்தேதி) நடைபெறும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GreenWayRoad
    சென்னையில் இருந்து சேலத்துக்கு அமைய இருக்கும் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும் என தமிழிசை சவுந்தரராஜன் கூரியுள்ளார். #Greenwayroad #TamilisaiSoundararajan
    வேலூர்:

    மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூரில் நடந்தது. கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் நேர்மறை அரசியல் வேண்டும். அதை பா.ஜ.க.வால் மட்டும் கொடுக்க முடியும். ஆனால் தமிழ்நாட்டில் எதிர்மறை அரசியல் தலைத்தூக்கிக் கொண்டிருக்கிறது.

    பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் அதிகப்படியாக தமிழகத்துக்குத் தான் ரூ.2 ஆயிரத்து 600 கோடி வழங்கப்பட்டுள்ளது. மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபிறகு 24 சதவீதம் பால் உற்பத்தி அதிகரித்து வெண்மைப் புரட்சி ஏற்பட்டுள்ளது.

    இன்று புதிது புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல்வாதி கமல்ஹாசன், இன்று (நேற்று) ராகுல்காந்தியை சந்தித்துள்ளார். அவரிடம் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கேட்டு தெரிந்து கொண்டதாக ராகுல்காந்தி கூறியிருக்கிறார். அப்படியென்றால் திருநாவுக்கரசர் தகுதியற்றவரா?

    தமிழர்கள் சுகாதாரமாக வாழ பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளார். ஆனால் எந்த வளர்ச்சித் திட்டமும் வரக்கூடாது எனச் சிலர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 8 வழி பசுமைச்சாலை வந்தால் சென்னையில் இருந்து சேலத்துக்குச் செல்ல 3 மணிநேரம் தான் ஆகும். அந்தப் பாதை வரும் வழியெல்லாம் வளர்ச்சிப் பெறும். விவசாயம் பாதிக்கும் என்றால் அந்தத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துச் செல்லாது.

    10 வருடத்துக்கு முன்பு சென்னையில் இருந்து வேலூருக்கு வருவதற்கு 4 மணிநேரம் ஆனது. வாஜ்பாய் கொண்டு வந்த திட்டத்தால் இன்று 2 மணிநேரத்தில் வந்து விடுகிறோம். 8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன்பெறும். ஆனால் சுயநலத்துக்காக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்.



    வளர்ச்சியை தடுப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் குழப்பம் விளைவிப்பவர்கள் கைது செய்யப்பட வேண்டும். நாம் எப்போதும் கற்பூரத்தை எரித்துதான் எதையும் தொடங்குவோம். ஆனால் வைகோ தனது தொண்டரை எரித்துதான் தொடங்குவார்.

    மோடியை எதிர்க்க அனைவரும் ஒன்று சேருகிறார்கள். முயல்கூட்டம் ஒன்றுசேர்ந்து சிங்கத்தை வெற்றிபெற முடியாது.

    இந்தியாவில் 22 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியை பிடித்து 65 சதவீதம் காவிமயமாகி விட்டது. கர்நாடகாவிலும் விரைவில் ஆட்சி கவிழும். அங்கும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.

    காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிக்க முடியாது என குமாரசாமி கூறுகிறார். இதனால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வரும் திராணி தி.மு.க.விற்கு உண்டா?. தமிழ்நாட்டில் தேர்தல் வந்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது. தற்போது தமிழகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தி.மு.க.தான் காரணம்.

    சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது. பெண்கள் சினிமாக்காரர்களை நம்பமாட்டார்கள்.

    அது, அம்மாவோடு முடிந்து விட்டது. இனி தமிழ்நாட்டுக்கு மோடி தான் அம்மா. சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் நக்சலைட்டுகள் ஊடுருவியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வெகுவிரைவில் காவிக்கொடி பறக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Greenwayroad #TamilisaiSoundararajan
    சேலம் எட்டு வழி பசுமை சாலை சர்வே பணியை நிறுத்தக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 23-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. #Greenwayroad #DMK

    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படுவதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    ஜனநாயக ரீதியில் போராடும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தும் முதல்-அமைச்சர் தன் சொந்த மாவட்ட மக்கள் மீது ஏவிவிட்டுள்ள காவல்துறை அடக்குமுறையை நிறுத்தவில்லை. குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை பிரயோகித்து ஜனநாயக பூர்வமான அறவழி போராட்டங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது இந்த அ.தி.மு.க அரசு.


    எனவே, சேலம் பசுமை சாலை திட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆக்கப்பூர்வமான கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தவும், அதுவரை விளைநிலங்கள் வழியாக நடத்தப்படும் சர்வேயை நிறுத்தி வைக்கவும், போராடும் மக்கள் மீதான அ.தி.மு.க அரசின் காவல்துறை அடக்கு முறைக்கு கண்டனம் தெரிவித்தும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க சார்பில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி 23-ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில், ராஜேந்திரன், எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ஆ.ராஜா ஆகியோர் முன்னிலையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Greenwayroad #DMK

    சென்னை-சேலம் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Greenwayroad #Farmersstruggle

    சேலம்:

    சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள், மலைகள் கையகப்படுத்தப்பட உள்ளது.

    இதனால் சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போராட்டத்தை தூண்டி விட்டதாக ஆச்சாங்குட்ட பட்டியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி முத்துக்குமார், அன்னதானப்பட்டியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து ஆகியோர் 15 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

    சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மானூஷ் கடந்த மாதம் 3-ந் தேதி நடிகர் மன்சூர் அலிகானை சேலத்திற்கு அழைத்து வந்து 8 வழி விரைவு சாலை அமையும் பகுதிகளை காண்பித்தார். அப்போது நிரூபர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் சேலம் - சென்னை பசுமை வழிசாலை திட்டத்தை கைவிடா விட்டால் 8 பேரையாவது வெட்டி கொல்வேன் என ஆவேசமாக பேசினார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய தீ வட்டிபட்டி போலீசார் நேற்று முன்தினம் நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதுபோல 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து போராடுபவர்களையும், போராட்டத்துக்கு தூண்டி விடுபவர்களையும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தி கைது செய்து வருகிறார்கள்.

     


    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஆட்சேபனை இருந்தால் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததை அடுத்து கடந்த 14-ந்தேதி ஆட்சேபனை மனுக்களை விவசாயிகள் கொடுத்தனர். இதையடுத்து ஜூலை மாதம் 10-ந் தேதி கலெக்டர் தலைமையில் அடுத்த கட்ட கூட்டம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    அந்த கூட்டம் நடக்கும் வரை 8 வழி சாலைக்கு நில எடுப்பு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என அதிகாரிகள் விவசாயிகளிடம் உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் சற்று அமைதியாக இருந்தனர்.

    ஆனால் அதிகாரிகள் நேற்று திடீரென 8 வழி பசுமை சாலைக்கான திட்டப்பணிகளை அதிரடியாக தொடங்கினார்கள். சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான மஞ்சவாடியில் இருந்து அடிமலைப்புதூர், செட்டியார் காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, வலசையூர் பகுதியில் கையகப்படுத்த கூடிய நிலத்தை அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணியில் மாவட்ட வருவாய்துறையினர் ஈடுபட்டனர்.

    முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் நிலங்களை அளந்து எல்லை கற்கள் நட்டதை பார்த்த விவசாயிகளும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகளை கண்டு கொள்ளாத அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் விவசாய பயிர்களுக்கு நடுவே சாலை அமைப்பதற்கான எல்லை கற்களை நட்டனர். மஞ்சவாடி கணவாய் முதல் வலசையூர் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு நேற்று நில அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கல் நடப்பட்டது.

    இந்த சாலைக்காக 70 மீட்டர் அகலத்தில் விவசாய நிலங்கள் எடுக்கப்படுகிறது. பசுமையான தென்னை மரம், பூஞ்செடிகள், மாந்தோப்பு, கொய்யாதோப்பு, நெல் வயல்களுக்கு இடையே அளவீடு செய்ததால் அந்த பகுதி விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறினர்.

    ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நில அளவீடு செய்யும் பணி நடந்த போது அங்கு திரண்டு வந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உண்ணாமலை என்பவர் தனது விவசாய நிலத்தில் படுத்து உருண்டு புரண்டு கதறி அழுதார். என்னை கொன்று விட்டு நிலத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கதறினார்.

    உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உண்ணாமலை, அவரது மகன் ரவிச்சந்திரன், மருமகள் சுதா, சகுந்தலா, பிரகாஷ், நடராஜ் ஆகிய 6 பேரை கட்டாயப்படுத்தி வேனில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்களை இரவில் விடுவித்தனர்.

    அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் 25-க்கும் மேற்பட்ட உளவு பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

     


    இந்த நிலையில் நேற்று மாலை ஓமலூரை அடுத்த ஆர்.சி. செட்டிபட்டியில் ஓமலூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் போலீசாரிடம் சிக்கினார்.

    ஏற்கனவே இவரை போலீசார் போராட்டத்தை தூண்டி விடுவதாக தேடி வந்தனர். அவரை கண்டதும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். நேற்றிரவு அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டபட்டி பகுதியில் 2-வது நாளாக இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது:- சேலம்- சென்னைக்கு 8 வழி பசுமை சாலை தேவையில்லாத திட்டம், பசுமையான விளை நிலங்களை அழித்து சென்னைக்கு விரைவாக செல்ல வேண்டுமா? தென்னை மரங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்துள்ளோம்.

    தற்போது எனது கண் முன்னே அதனை அழிக்க துடிக்கிறார்கள்.இதனால் மிகவும் மன வேதனையில் தவித்து வருகிறோம். ஜூலை மாதம் 10-ந் தேதி கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று நினைத்திருந்த நிலையில் திடீரென நில அளவீடு செய்யும் பணி மேற்கொள்வது அத்து மீறிய செயல், எனது நிலத்தில் எல்லை கல்லை நான் நடவிடவில்லை என்றார். #Greenwayroad #Farmersstruggle

    ×