search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land Measurement"

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது. #Greenwayroad

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை-சேலம் இடையே 8 வழி சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.

    இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கையகப்படுத்தப்படுகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59.1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதில் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த கரசங்காலில் இருந்து தொடங்கி ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் செல்கிறது.

    8 வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    நிலம் அளவிடும் போது விவசாயிகள் போராட்டம் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

    அவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். விவசாயிகள், கிராமமக்கள் எதிர்ப்பையும் மீறி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நிலம் அளவீடு நடந்து முடிந்து விட்டது. நிலம் அளவீடு பணியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு பணி இன்று தொடங்கியது. தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆர்.டி.ஓ ராஜூ தலைமையில் அதிகாரிகள் நிலத்தை அளந்தனர். அளவிடப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி கற்களை நட்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்காக 42 கிராமங்களில் நிலம் அளவீடு செய்யும் பணி நாளை தொடங்குகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. 40 ஆயிரம் வீடுகள் இடிக்கப்படுகின்றன. 8 மலைகளும் உடைக்கப்படுகின்றன.

    8 வழி பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகள் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதுவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அளவீடு செய்யும் பணிகள் முடிந்துள்ளன.

    நில அளவீட்டை பொறுத்தவரை 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 10 சதவீத பணிகளே உள்ளது.

    இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கான நிலம் அளவீடு செய்யும் பணி நாளை தொடங்குகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தாம்பரத்தை அடுத்த கரசங்கால் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த சாலை ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாக சென்று மாவட்ட எல்லையான பெருநகர் வழியே திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் தாம்பரம் அருகேயுள்ள கரசங்கால் பகுதியில் இருந்து நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்குகின்றன. வருவாய்த்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்வதற்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி விட்டது. உத்திரமேரூர், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    4 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் நிலத்தின் மத்தியில் 8 வழிச்சாலை அமைகிறது. எனவே அந்த விவசாயிக்கு ரோட்டின் இருபுறமும் துண்டு துண்டாக விவசாய நிலம் மீதமாகிறது. இந்த 2 நிலத்திலும் விவசாயம் செய்ய சுமார் 10 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    நிலம் அளவீடு செய்வதை எதிர்த்து ஏராளமான விவசாயிகள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து மனு கொடுத்தும் வருகிறார்கள். அவர்களிடம் கலெக்டர் பொன்னையா, “உங்களிடம் கருத்து கேட்டு உங்கள் சம்மதத்தை பெற்றுத் தான் நிலத்தை கையகப்படுத்துவோம் என்று கூறி வருகிறார்.

    ஆனாலும் தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபடியே உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளும் கடந்த 6-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலம் அளவீடு செய்யும் பணியை தடுக்க எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என்பது தொடர்பாக விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கலாம் என்று ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

    எனவே போராட்டத்தை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நில அளவீடு பணியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தொடங்குகிறார்கள். ஆனாலும் அதையும் சந்தித்து போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அளவீடு செய்த நிலத்தில் கல் பதிக்கும் பணி முடிந்து விட்டது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கல் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 22 கிராமங்களில் 54 கி.மீ. தூரத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களில் 2 கி.மீ. தூரத்துக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 74 கிராமங்களில் 122 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 59 கி.மீ. தொலைவுக்கும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

    தர்மபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் 74 கிராமங்களில் 7237 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 1300 ஏக்கர் அளவுக்கு தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

    8 வழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்ய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாய நிலங்களில் பெண்கள் உருண்டு புரண்டு அழுதனர். காலம் காலமாக உழைத்து பாதுகாத்த நிலம் பறி போகிறதே என்று பெண்கள் கண்ணீர் வடித்தனர்.

    எதிர்ப்பு கிளம்பிய கிராமங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் விவசாயிகள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். பல கிராமங்களில் நில அளவீடு பணியின்போது ரே‌ஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அதிகாரிகள் முன்பு வீசி எறிந்தும் பொது மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சிலர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள்.

    கடந்த 6-ந்தேதி 5 மாவட்ட தலைநகரங்களில் 8 வழி பசுமை சாலைக்கான அரசாணையை எரித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தி கைதானார்கள். #Greenexpressway
    சென்னை-சேலம் பசுமை சாலைக்காக வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள புகழ் பெற்ற வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நிலம் அளக்கும் பணி நடைபெற்றது.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

    கடந்த சில நாட்களாக 8 வழி சாலைக்கு நிலம் அளக்கும் பணி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி பகுதியில் நடைபெற்றது. இந்த பகுதியில் புகழ் பெற்ற மஞ்சவாடி தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு அனைத்து பொதுமக்களும் சாதி மத வேறுபாடுகள் இன்றி தங்கள் குறைகளை கூறி வேண்டி சென்றால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

    இதற்காக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது தமிழகம், கேரளம், கர்நாடகம், பாண்டிச்சேரி மற்றும் ஆந்திராவில் இருந்து வந்து செல்வார்கள். இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தொழுகையும் நடைபெறும்.

    8 வழிச்சாலைக்காக நிலம் எடுக்கும் திட்டத்தில் 4 ஏக்கர் பரப்பில் உள்ள 3 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலை உள்ளது. இதில் இந்த தர்காவை நிறுவிய ஹரத்சையத்தில் சார் அலிசா பாபா மற்றும் 5 பேரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபடும் இடமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மஞ்சவாடி கணவாய் பகுதியில் உள்ள சேர்வராயன் மலை, கல்வராயன் மலை பகுதிகளில் வாழும் காட்டெருமை, பன்றி, முள்ளம் பன்றி, குரங்கு, சிறுத்தை, கரடி, மான்கள் என்று தண்ணீர் தேடி வரும் 40 ஏக்கர் பரப்பில் உள்ள செங்குட்டை ஏரியில் நிலம் எடுக்கும்படி உள்ளது.

    இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து 8 வழி சாலை அமைத்தால் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்கு வரும் சூழல் ஏற்படும். எனவே இந்த பாதிப்பை எப்படி சரி செய்வார்கள் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    மஞ்சவாடி கணவாயில் உள்ள வாகன ஓட்டிகளின் காவல் தெய்வமாக உள்ள புகழ் பெற்ற வெள்ளையப்பன் கோவில் பகுதியில் நிலம் அளக்கும் பணி நடைபெற்றது.

    இந்த கோவில் மிகவும் பழமையானது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பயணிகளின் காவல் தெய்வமாக வெள்ளையப்பன் உள்ளார். இந்த கோவிலில் வேண்டி பூஜை செய்து வாகன சக்கரங்களில் எலுமிச்சை வைத்துவிட்டு வாகனத்தை செலுத்தினால் பாதுகாப்புடன் வெள்ளையப்பன் நம்மை காப்பார்.

    இங்கு வேண்டுதலில் பயன் அடைந்தவர்கள் தினமும் தனது உறவினர்களுடன் வந்து நேர்த்தி கடன் செலுத்தி ஆடு, கோழி, பலியிட்டு சாப்பிடுவது வழக்கம். ஞாயிற்றுக் கிழமைகளிலும், அஷ்டமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எனவே இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் சேதமின்றி பாதுகாக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு பக்தர்கள் கூறினர்.

    வன பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அரிய வகை வாகை, புங்கன், தேக்கு, மூங்கில் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சாலை பணிக்காக வெட்டப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலைக்கு முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான நிலங்களில் அதிகாரிகள் அளவீடு பணிகளை நடத்தி வருவதால் அசாம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #greenwayroad
    சேலம்:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியே இச்சாலை செல்கிறது.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டரும், தர்மபுரியில் 56 கிலோ மீட்டரும், திருவண்ணாமலையில் 123 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் 59 கிலோ மீட்டரும் என மொத்தம் 277 கிலோ மீட்டருக்கு புதிய 8 வழி சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக 5 மாவட்டங்களிலும் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. பல வீடுகளும் இடிக்கப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகிறது. தென்னை, மாமரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது.

    சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் மாமரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் அடுத்த ஆண்டு 10 ஆயிரம் டன் மாம்பழம் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    8 வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. மரங்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்பட உள்ளது.

    ஆனாலும் விவசாயிகள் பல இடங்களில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தாலும் பலத்த பாதுகாப்புடன் நில அளவீடு பணி நடந்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை மாவட்ட வருவாய்த் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 18-ந்தேதி முதல் நேற்று முன்தினம்(23-ந்தேதி) வரை 27 கிலோ மீட்டருக்கு நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நட்டனர்.

    சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாயில் தொடங்கி நாழிக்கல்பட்டி வரை (27 கி.மீ. தூரம்) இப்பணியை முடித்துள்ளனர். இவ்விடங்களில் நிலம் அளவீடும் செய்யும்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் தங்களது நிலம் பறிபோகிறது என கதறி அழுதனர். ஆனாலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு மீறி நில அளவீடு பணி தொடர்ந்து நடந்தது.

    நேற்று விடுமுறை என்பதால் நில அளவீடு பணி நடைபெறவில்லை. இன்று மீண்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலம் அளவீடு பணியை தொடங்கினார்கள்.

    சேலம் அருகே உள்ள பாரப்பட்டியில் தொடங்கி பூலாவரி, வீரபாண்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம் வரையிலான 2.86 கிலோ மீட்டர் தூரத்திற்கான நில அளவீடு பணி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

    இந்த பகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜய லட்சுமி பழனிசாமி, அவரது சகோதரியும் ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ.வுமான சாந்தா, முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தற்போது தினகரன் அணி சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான எஸ்.கே.செல்வம் ஆகியோரின் நிலங்கள் உள்ளன.

    இவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று நில அளவீடு பணி நடந்து வருகிறது. இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் வருண் வஜ்ரா வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பூலாவரியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்றுடன் சேலம் மாவட்டத்தில் நில அளவீடு பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது


    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. அந்த சமயத்தில் 8 வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தீக்குளிப்பு, தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபடலாம் என தகவல் வெளியானது.

    இதையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூடுதலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கலெக்டரிடம் மனு கொடுக்க வருபவர்களிடம் தீவிர சோதனைக்குப்பிறகே மனு கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்களை அளவிடும்பணி நடந்தது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருளப்பட்டி யில் தொடங்கி கோபிநாதம் பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, சாமியாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, சின்னமஞ்சவாடி, கோம்பூர், பெரியமஞ்சவாடி ஆகிய பகுதிகளில் இந்த பணி கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது.

    விவசாயிகள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் பதட்டம் ஏற்பட்டது. 100-க் கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று நிலத்தை அளந்தாலும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்த நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளை சம்மதிக்க வைத்தனர்.

    நில அளவிடும் பணி நேற்று மாலையுடன் முடிந்தது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 957 ஏக்கர் நிலத்தில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது. இனி அடுத்தக்கட்டமான சர்வே எண்களை வைத்து சரி பார்ப்பார்கள். அதன்பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்டு திட்டப் பணிகள் தொடங்கும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இன்று நீர்ப்பந்துறை, சட்ட மடுவூர், வணக்கம்பாடி, மண்மலை ஆகிய 4 ஊர்களில் நிலத்தை அளவீடு செய்து கல் நட்டினார்கள்.

    8 வழி சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 123 கி.மீ. தொலைவுக்கு நிலம் எடுக்கிறார்கள். ஆனால் சேலம், தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தெரிவித்தது போல திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்தும் நிலங்களில் 90 சதவீதம் தரிசு நிலம்தான் என்பதால் விவசாயிகள், அதிக இழப் பீடு தொகையை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பொண்ணாத்தூர் பகுதியில் நிலம் எடுக்கும் போது மட்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள நிலங்கள் நன்கு விளைச்சல் உள்ள விளை நிலங்களாகும்.

    இந்த நிலையில் 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பதை கண்டித்து இன்று திருவண்ணாமலையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.
    ×