search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் 8 வழி விரைவு சாலைக்கு முன்னாள் அமைச்சர்கள் நிலங்கள் அளவீடு
    X

    சேலத்தில் 8 வழி விரைவு சாலைக்கு முன்னாள் அமைச்சர்கள் நிலங்கள் அளவீடு

    சென்னை - சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலைக்கு முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான நிலங்களில் அதிகாரிகள் அளவீடு பணிகளை நடத்தி வருவதால் அசாம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #greenwayroad
    சேலம்:

    சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியே இச்சாலை செல்கிறது.

    சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டரும், தர்மபுரியில் 56 கிலோ மீட்டரும், திருவண்ணாமலையில் 123 கிலோ மீட்டரும், காஞ்சிபுரத்தில் 59 கிலோ மீட்டரும் என மொத்தம் 277 கிலோ மீட்டருக்கு புதிய 8 வழி சாலை அமைக்கப்படுகிறது.

    இதற்காக 5 மாவட்டங்களிலும் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. பல வீடுகளும் இடிக்கப்பட உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகிறது. தென்னை, மாமரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகிறது.

    சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் மாமரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் அடுத்த ஆண்டு 10 ஆயிரம் டன் மாம்பழம் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    8 வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்கப்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. மரங்களுக்கு இழப்பீடு தொகையும் வழங்கப்பட உள்ளது.

    ஆனாலும் விவசாயிகள் பல இடங்களில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தாலும் பலத்த பாதுகாப்புடன் நில அளவீடு பணி நடந்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணியை மாவட்ட வருவாய்த் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 18-ந்தேதி முதல் நேற்று முன்தினம்(23-ந்தேதி) வரை 27 கிலோ மீட்டருக்கு நிலங்களை அளவீடு செய்து முட்டுக்கல் நட்டனர்.

    சேலம் மாவட்ட எல்லையான மஞ்சவாடி கணவாயில் தொடங்கி நாழிக்கல்பட்டி வரை (27 கி.மீ. தூரம்) இப்பணியை முடித்துள்ளனர். இவ்விடங்களில் நிலம் அளவீடும் செய்யும்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் தங்களது நிலம் பறிபோகிறது என கதறி அழுதனர். ஆனாலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு மீறி நில அளவீடு பணி தொடர்ந்து நடந்தது.

    நேற்று விடுமுறை என்பதால் நில அளவீடு பணி நடைபெறவில்லை. இன்று மீண்டும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலம் அளவீடு பணியை தொடங்கினார்கள்.

    சேலம் அருகே உள்ள பாரப்பட்டியில் தொடங்கி பூலாவரி, வீரபாண்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம் வரையிலான 2.86 கிலோ மீட்டர் தூரத்திற்கான நில அளவீடு பணி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

    இந்த பகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வீரபாண்டி ராஜா, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜய லட்சுமி பழனிசாமி, அவரது சகோதரியும் ஓய்வு பெற்ற டி.ஆர்.ஓ.வுமான சாந்தா, முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தற்போது தினகரன் அணி சேலம் புறநகர் மாவட்ட செயலாளருமான எஸ்.கே.செல்வம் ஆகியோரின் நிலங்கள் உள்ளன.

    இவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று நில அளவீடு பணி நடந்து வருகிறது. இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க 600-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் வருண் வஜ்ரா வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பூலாவரியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்றுடன் சேலம் மாவட்டத்தில் நில அளவீடு பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது


    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. அந்த சமயத்தில் 8 வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தீக்குளிப்பு, தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபடலாம் என தகவல் வெளியானது.

    இதையடுத்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கத்தை விட கூடுதலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கலெக்டரிடம் மனு கொடுக்க வருபவர்களிடம் தீவிர சோதனைக்குப்பிறகே மனு கொடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தருமபுரி மாவட்டத்தில் 54.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்களை அளவிடும்பணி நடந்தது. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே இருளப்பட்டி யில் தொடங்கி கோபிநாதம் பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, சாமியாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, சின்னமஞ்சவாடி, கோம்பூர், பெரியமஞ்சவாடி ஆகிய பகுதிகளில் இந்த பணி கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது.

    விவசாயிகள் தீக்குளிக்கப் போவதாக மிரட்டியதால் பதட்டம் ஏற்பட்டது. 100-க் கும் மேற்பட்ட போலீசாருடன் சென்று நிலத்தை அளந்தாலும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்த நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகளை சம்மதிக்க வைத்தனர்.

    நில அளவிடும் பணி நேற்று மாலையுடன் முடிந்தது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 957 ஏக்கர் நிலத்தில் நிலம் அளவிடும் பணி முடிந்துள்ளது. இனி அடுத்தக்கட்டமான சர்வே எண்களை வைத்து சரி பார்ப்பார்கள். அதன்பிறகு பொதுமக்களிடம் கருத்து கேட்டு திட்டப் பணிகள் தொடங்கும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இன்று நீர்ப்பந்துறை, சட்ட மடுவூர், வணக்கம்பாடி, மண்மலை ஆகிய 4 ஊர்களில் நிலத்தை அளவீடு செய்து கல் நட்டினார்கள்.

    8 வழி சாலைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக 123 கி.மீ. தொலைவுக்கு நிலம் எடுக்கிறார்கள். ஆனால் சேலம், தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தெரிவித்தது போல திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் அதிக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் கையகப்படுத்தும் நிலங்களில் 90 சதவீதம் தரிசு நிலம்தான் என்பதால் விவசாயிகள், அதிக இழப் பீடு தொகையை வாங்க ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பொண்ணாத்தூர் பகுதியில் நிலம் எடுக்கும் போது மட்டும் பிரச்சினை ஏற்படலாம் என்று தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள நிலங்கள் நன்கு விளைச்சல் உள்ள விளை நிலங்களாகும்.

    இந்த நிலையில் 8 வழி சாலைக்கு நிலம் எடுப்பதை கண்டித்து இன்று திருவண்ணாமலையில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.
    Next Story
    ×