search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dengue"

    • புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.
    • இதனால் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    புதுச்சேரி,:

    புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதனால் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இதனை தடுக்கும் வகையில் புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. இணைச் செயலாளர் லாவண்யா மற்றும் மாரி ஆறுமுகம் ஆகியோர் ஏற்பாட்டில் உழவர்கரை தொகுதியில் கொசு மருந்து அடிக்கப்ப ட்டது. தொகுதியில் உள்ள லாம்பர்ட் சரவணன் நகர், ஜவகர் நகர், ஜெயா நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த கொசு மருந்து அடிக்கும் பணியை வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர், தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பணி உழவர்கரை தொகுதி முழுவதும் தொடர்ந்து நடைபெறும். நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, சதீஷ்குமார் மற்றும் சிவக்குமார், உழவர்கரை நிர்வாகிகள் கில்பர்ட், அருள்ராஜ், சக்திவேல், சண்முகம், குமரேசன், சபர், பிரவீண், குமார், முத்துபாண்டி, அன்புசரளா, அமலா, உமா, சந்திரா, மாலதி, ஜூலி, புஷ்பா, மரி, ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடம் உண்டு.
    • எலும்பை முறித்ததுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படும்.

    மழைக்கால மாதங்களில் மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடம் உண்டு. கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்கு பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கான அறிகுறிகள். எலும்பை முறித்ததுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். உடலில் அரிப்பும் ஏற்படும், சிவப்பு புள்ளிகள் தோன்றும்.

    பெரும்பாலானோருக்கு 7-ம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

    பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் பரவும் டெங்கு வைரசானது, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

    கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் மிகவும் கவனத்துடன் விரைந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். டெங்கு நோய்க்கென்று தனியாக சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

    • உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும் துணை புரியும்.
    • பழங்கள் சாப்பிட்டு வருவது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
    தமிழகத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, பிளேட்லெட்டுகள் இழப்பு, உடலில் ஏற்படும் அழற்சி காரணமாக டெங்கு பாதிப்புக்குள்ளானவர்கள் அதில் இருந்து முழுமையாக மீண்டு வர காலதாமதமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.


    கிவி

    டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைய உட்கொள்ள வேண்டிய சத்தான பழங்களுள் ஒன்று கிவி. இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், டிரோலாக்ஸ் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை மேம்படுத்தவும், டெங்கு காய்ச்சலை திறம்பட எதிர்த்துப் போராடவும் உதவும்.

    உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும் துணை புரியும். டெங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 2 கிவி பழங்கள் சாப்பிட்டு வருவது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும்.

    மாதுளை

    மாதுளை பழத்தில் இரும்புச் சத்து அதிகம் உண்டு. ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் உதவும். மேலும் டெங்கு காய்ச்சலின்போது ஏற்படும் சோர்வை குறைக்கும். உடல் ஆற்றலையும் மேம்படுத்தும்.

    சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கு உதவி செய்யும். பிளேட்லெட்டுகளுடன் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். ரத்தப்போக்கு அபாயத்தை குறைக்கவும் செய்யும்.

    பப்பாளி

    பப்பாளியில் பப்பைன், கரிகைன், சைமோபாபைன், அசிட்டோஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை வலுப்படுத்தி டெங்கு தொடர்பான வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. டெங்குவில் இருந்து விரைவாக மீளவும் உதவும்.

    பீட்ரூட்

    இதில் இரும்பு மற்றும் போலிக் அமிலம் அதிகம் உள்ளன. அவை ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசியமானவை. மேலும் பீட்ரூட்டில் நச்சு நீக்கும் பண்புகள் உள்ளன. அவை கல்லீரலை சுத்தப்படுத்தவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். டெங்கு தொடர்பான அழற்சியின் காரணமாக உடலில் உள்ள பிளேட்லெட்டுகள் சேதம் அடைவதை தடுக்கும். இருப்பினும் பிளேட்லெட் அளவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது.

    கீரை

    கீரையில் வைட்டமின் கே மிகுதியாக இருக்கும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை நேரடியாக உயர்த்தாது. ஆனால் ரத்த அணுக்கள் நன்றாக உறைவதற்கு உதவும். அதனால் டெங்கு நோயாளிகள் கீரையை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இரும்பு, போலேட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. டெங்கு போன்ற வைரஸால் ஏற்படும்

    ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளில் இருந்து விரைவாக மீளவும் உதவி புரியும்.

    பூசணி

    இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடும் ஆற்றல் படைத்தவை.

    • குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும்.

    சென்னை:

    சென்னையில் தற்போது வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏற்படும் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய அளவிலான கிளீனிக்குகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருகிறது.

    வைரஸ் தொற்று காரணமாக சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த சுவாச பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மேலும் டெங்கு காய்ச்சல் காரணமாகவும் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிப்பட்டு வருகிறார்கள். டெங்கு காய்ச்சலுக்கும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் சிக்குன் குனியா காய்ச்சலும் பரவி வருகிறது. கடந்த 20 நாட்களாகவே சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனையில் டெங்கு இல்லை என்பது உறுதியானால் அது சிக்குன் குனியாவாகவும் இருக்கக்கூடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    சிக்குன் குனியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு 2 நாட்கள் காய்ச்சல் இருக்கும். ஆனால் கடந்த 2007-ம் ஆண்டு சிக்குன் குனியா பரவியபோது ஏற்பட்டது போன்ற கடுமையான மூட்டுவலி தற்போது ஏற்படவில்லை. ஆனாலும் மூட்டுவலி 10 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும்.

    இந்த பருவ காலத்தில் இதுபோன்று காய்ச்சல் பரவுவது வழக்கமானது தான். இந்த பருவத்தில் சுவாச பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஏராளமான குழந்தைகள் சிகிச்ச்சைக்கு வருகிறார்கள். இதில் பெரும்பாலான குழந்தைகள் ஒரு வயதுக்கு குறைவானவர்கள். அவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சியும் உள்ளது.

    செப்டம்பர் 2-வது வாரத்தில் இருந்து டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களில் சிலர் உள் நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களை கவனிப்பது தொடர்பாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

    மேலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளே அதிகமாக உள்ளன. குழந்தைகளுக்கு காய்ச்சலுடன், சுவாச பாதிப்பு, உணவு சாப்பிடுவதில் சிரமம் ஆகியவையும் உள்ளன. மேலும் சிலருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பும் உள்ளது. இது போன்ற பருவகால காய்ச்சல் பாதிப்புகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடைகின்றன.

    ஆனாலும் 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • டெங்கு பாதிப்பை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • மாநகராட்சி பகுதிக்குள் ஒரு மண்டலத்துக்கு 3 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    இதனையடுத்து டெங்கு பாதிப்பை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக தமிழ்நாட்டில் இன்று முதல் 1,000 இடங்களில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்திலும் இன்று சுமார் 45 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவாமல் இருக்க மாவட்ட சுகாதார மற்றும் மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை உடல் வெப்பநிலை உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்படுகிறது.

    கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகா தார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று நெல்லை மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 10 மொபைல் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மொபைல் வாகனத்திற்கு 3 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி 10 வாகனங்கள் மூலமாக 30 இடங்களில் முகாம் இன்று நடக்கிறது. இந்த வாகனங்கள் வட்டாரத்துக்கு 3 இடங்களில் முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மாநகராட்சி பகுதிக்குள் ஒரு மண்டலத்துக்கு 3 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக 4 மண்டலங்களும் சேர்த்து 12 முதல் 15 முகாம்கள் வரை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைகள் முடிவில் காய்ச்சல் அதிக அளவில் கண்டறியப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த முகாம் வடகிழக்கு பருவமழை முடியும் வரை நடத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இந்த காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும். மாவட்டம் முழுவதும் டெங்கு பாதிப்பு என்பது பெரிய அளவில் இல்லை. ஆனால் காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. அவர்களுக்கு டெங்கு அறிகுறிகள் உள்ளதா? என்பது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து பகுதிகளிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. போதுமான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ‘லார்வா’ புழுக்களை ஒழிக்க எண்ணை பந்துகளை வீச உத்தரவிடப்பட்டது.
    • தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி, துணை கமிஷனர் தானுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைபடி மாநகர பகுதிகளில் உள்ள காலி மனைகள், குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீரால் உற்பத்தியாகும் 'லார்வா' புழுக்களை ஒழிக்கும் வகையில், எண்ணை பந்துகளை வீச உத்தரவிடப்பட்டது.

    அதன் படி மேலப்பாளையம் உதவி கமிஷனர் (பொறுப்பு ) காளிமுத்து, சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாள நடராஜன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்க ஆயில் பந்துகளை வீசினர்.

    மேலும் வீடுகள், பள்ளிகள் அருகில் கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்களான பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதபோல் டெங்கு தடுப்பு பணியாளர் மூலமாக கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கொசு புழுக்களை அழிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

    • 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு 2,65,834 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது, அதில் 6,430 நபர்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டது. இந்தாண்டு இதுவரை 2,42,743 டெங்கு மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4,524 நபர்களுக்கு டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 363 நபர்கள் டெங்கு பாதிப்பிற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகள் சிறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்) போன்றவைகளை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அழித்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்பு பணிகளுக்காக 318 மருத்துவ அலுவலர்கள், 635 செவிலியர்கள், 954 கொசு ஒழிப்புக்கென நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்கள், 2,324 ஒப்பந்த பணியாளர்கள் என ஆக மொத்தம் 4,231 மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சென்னையில் இன்று மட்டும் 54 நபர்கள் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    பல்லடம்:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளிநகர் தொட்டி அப்புச்சி கோவில் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி அந்தப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் டாக்டர் காவியா, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டது.
    • 36 பேர் டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கென தனி வார்டு அமைக்காததால், அங்கிருந்த நோயாளிகள் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையி னர் மேற்கொண்டு வருகின்ற னர்.

    கடலூர் அரசு மருத்துவ மனையில் 23 நபர்களும், சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் 3 நபர்களும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 நபர்களும் ஆக மொத்தம் 36 பேர் டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. இது 5 மடங்கு உயர்ந்து தற்போது 36 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 260-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. பொது மக்கள் சுத்தமாகவும் சுகா தார மாகவும் இருந்து, டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமாக உயர்ந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    • டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
    • கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

    செங்கல்பட்டு:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சளி, சளி, இருமல், உடல்வலியுடன் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். 10 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக படையெடுத்து வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் பொதுமக்களை மிரட்டி வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்திலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. தற்போது தினந்தோறும் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வீடுகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுகாதாரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மேலும் கொசு உற்பத்தி ஆகும் வகையில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

    மறைமலை நகராட்சியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு பணியாளர்கள் 95 பேர் மற்றும் பொறியாளர் பிரிவு அலுவலர்கள் உட்பட அனைத்து துறை ஊழியர்கள் உள்ளடக்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்களை அழித்தல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரை கணக்கெடுத்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல், புகை மருந்து தெளிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் போது பொத்தேரி கக்கன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி இருந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மறை மலைநகர் நகராட்சி ஆணையர் சவுந்தர்ராஜன் கூறும்போது, பொதுமக்கள் மற்றும் தொழில் சாலை நிர்வாகத்தினர் தங்களது வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுங்கள் என்றார்.

    • மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
    • வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும், வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை, ஏடிஎஸ்., கொசுப்புழு உருவாகும் இடம், ஏடிஎஸ்., கொசு உற்பத்தி சுழற்சி முறை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது.

    கொசுப்புகை மருந்து அடிக்கும் பணி, கொசு உற்பத்தி தடுப்பு பணிக்கு அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

    • தார் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளால் புன்னம் சத்திரத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
    • பிளாஸ்டிக் கப்புகள் போன்ற ஏராளமான கழிவுகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் புன்னம் ஊராட்சி புன்னம்சத்திரம் பகுதிகளில் ஹோட்டல்கள் பலகார கடைகள், பேக்கரிகள், டீக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள், துணிக்கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற ஏராளமான கழிவுகள் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. இதே போல மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் மருத்துவ கழிவுகளும் மூட்டையாக கட்டப்பட்டு இங்கு வீசி செல்கின்றனர்.

    இதனால் சாலையின் ஓரத்தில் நெடுதூரம் கழிவுகளாக கிடைக்கிறது. தற்பொழுது வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதன் காரணமாக மழை பெய்து வருகிறது. மழைநீர் கழிவுகளில் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுகளில் கொசுக்கள் முட்டையிட்டு ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகிறது. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளும், ஊராட்சி நிர்வாகமும் கழிவுகளை கொட்டப்படுவதை தடுத்து நிறுத்திட வேண்டும். மேலும் இதனை கண்டு கொள்ளாத ஊராட்சி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×