search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child death"

    திருமங்கலம் அருகே தேள் கடித்து 2 வயது சிறுவன் இறந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள பெரிய மறவன்குளம் சோனைகோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி நாகஜோதி. இவர்களது 2 வயது குழந்தை ஜெய்ஹரீஷ்.

    இவனது பாட்டி பானுமதி, டி.புதுப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினரை பார்க்கச் சென்றார். அப்போது ஜெய்ஹரீசையும் அழைத்துச் சென்றார்.

    ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஜெய்ஹரீஷ் விளையாடியபோது, தேள் கொட்டியது. உடனடியாக அவனை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஜெய்ஹரீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு அருகே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கலவை:

    ஆற்காடு அடுத்த பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம், கூலி தொழிலாளி. அவரது மனைவி அமலா, தம்பதிக்கு லோகேஸ்வரன் (3), சுதர்சன் (2) என 2 மகன்கள் இருந்தனர். லோகேஸ்வரன் கலவை அருகேயுள்ள பெரும்பள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.

    தினமும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற லோகேஸ்வரன் மாலை பள்ளி பஸ்சில் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு அருகே பள்ளி பஸ் நின்றது.

    லோகேஸ்வரனை அழைத்து செல்ல அவரது தாய் அமலா குழந்தை சுதர்சனையும் அழைத்து வந்தார்.

    லோகேஸ்வரன் பஸ்சில் இருந்து இறங்கியவுடன் டிரைவர் பஸ்சை இயக்கியுள்ளார். அப்போது சுதர்சன் பஸ்சின் முன்னால் ஓடியதை கவனிக்காததால் பஸ் சுதர்சன் மீது ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானான். இதனை கண்ட தாய் அமலா கதறி துடித்தார். விபத்துக்கு காரணமான டிரைவரை பிடித்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கி வாழப்பந்தல் போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்துக்கு காரணமான மேச்சேரியை சேர்ந்த பஸ் டிரைவர் சந்திரனை போலீசார் கைது செய்தனர். தாய் கண் முன்னே பள்ளி பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    8 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுமி மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எம்.கைகாட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்களது மகள்கள் சுபாஷினி (14), ஸ்ரீஹர்ஷினி (4½). பிரபாகரன் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திடீரென இறந்து விட்டார்.

    எனவே சஜிதா பிரபாகரன் வேலை பார்த்த சென்னையை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு சொந்தமான பங்களாவில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை 7 மணி முதல் தனது இளைய மகள் ஸ்ரீஹர்ஷினியை காணவில்லை என சஜிதா கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் எம்.கைகாட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் வேலை பார்க்கும் பங்களா ஆகிய பகுதிகளில் சிறுமியை தேடினர். அப்போது சிறுமி பங்களா அருகில் உள்ள 8 அடி ஆழமுள்ள தொட்டியில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து குன்னூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தொட்டியில் இருந்து சிறுமியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டியின் மூடி இரும்பால் செய்யப்பட்டது. மூடியை சிறுமி திறக்க வாய்ப்பு இல்லை. எனவே அந்த சிறுமி தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து படுகொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த படுகொலை சம்பவத்தில் சிறுமியின் தாய் சஜிதா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் அவரிடம் குன்னூர் போலீசார் நேற்று இரவு முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இரண்டாவது பெண் குழந்தை பவித்தகுரு (1½ வயது).

    இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அம்மாபட்டியை சேர்ந்த பாபு மகன் ஆனந்த்பாபு (32) இந்தப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை செய்வதற்காக வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது வாகனம் ஏறியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. தண்ணீர் வண்டி ஏறி ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே குடிநீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஏ. மேட்டுப்பாளையம் அய்யப்ப ரெட்டி புதூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராதாமணி. இவர்களுக்கு பிரனேஷ் (4), விகாஷ் (1½) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.

    ரமேசும், அவரது மனைவி ராதாமணியும் கஞ்சப்பள்ளியில் உள்ள விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். அங்குள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர். நேற்று அவர்கள் வேலைக்கு சென்று விட்டனர். மாலை குழந்தைகள் இருவரும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது சிறுவன் விகாஷ் அப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் தவறி விழுந்தான்.

    இதில் மூச்சு திணறி இறந்தான். ரமேசும், அவரது மனைவியும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது மூத்த மகன் பிரனேஷ் மட்டும் தான் வீட்டில் இருந்தான். விகாசை தேடிய போது குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் கதறி அழுதனர்.இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மன்னார்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தை பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #swineflu

    மன்னார்குடி:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு- பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழப்பு எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்களது மகள் நித்தியஸ்ரீ (வயது 3).

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மயிலாடு துறையில் உள்ள சுகந்தி தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு நித்தியஸ்ரீக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

    உடனே அவர்கள் மயிலாடு துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று காட்டினர். அங்கு நித்தியஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மேல் சிகிச்சை தேவைப்படும் என்று தெரிவித்தனர்.

    அதன் பின்னர் ஜெகநாதன் , மகள் நித்திய ஸ்ரீயை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தனி சிறப்பு வார்டில் சிறுமிக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிறுமி நித்தியஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தை பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தற்போது ஜெகநாதனுக்கும், அவரது மனைவி சுகந்திக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலுக்கு மகளை பறிகொடுத்த பெற்றோர்களும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #swineflu

    தண்டராம்பட்டு அருகே பன்றி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். குடியாத்தத்தில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார். #swineflu

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் சவுமியா (வயது 4). அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

    சிறுமி சவுமியா கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருவண்ணா மலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிறுமிக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிறுமி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாணபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் முக்குன்றம் காலனியை சேர்ந்த ராஜாமணி மகன் தர்மராஜ் (வயது 25) கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

    தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தர்மராஜ் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது.

    இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் தர்மராஜ் இறந்து விட்டார்.

    மர்மகாய்ச்சலுக்கு தர்மராஜ் இறந்ததையடுத்து சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். #swineflu

    வத்தலக்குண்டு அருகே வெந்நீர் கொட்டியதில் கைக்குழந்தை பரிதாபமாக உயிரிந்தது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் முரளி (வயது30). கூலித்தொழிலாளி. இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், மோகனரூபன் என்ற 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    சம்பவத்தன்று மல்லிகா வீட்டில் சுடுதண்ணீர் காய்ச்சி அந்த பாத்திரத்தை வைத்திருந்தார். தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த மோகனரூபன் அந்த பாத்திரத்தை தட்டி விட்டதில் வெந்நீர் அவன் உடலில் கொட்டியது.

    படுகாயங்களுடன் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவன் மேல் சிகிச்சைக்கு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆனால் அங்கு சிகிசிசை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டிவனம் அருகே மர்ம காய்ச்சலால் 10 நாட்களாக அவதிப்பட்டு வந்த 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வடக்கொளப்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் எழிலரசன். கூலி தொழிலாளி.

    இவருக்கு 8 மாதத்தில் யுவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. அந்த குழந்தை கடந்த 10 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிபட்டது.

    இதைத்தொடர்ந்து குழந்தை யுவஸ்ரீயை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை யுவஸ்ரீ திடீரென்று பரிதாபமாக இறந்தாள்.

    இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Swineflu #Dengue

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு உரிய பலன் இல்லை.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 98 பேர் வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற மீனாட்சி கிருஷ்ணம்மாள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 1 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்திவேல் (வயது1). காய்ச்சலால் அவதிப்பட்ட சக்திவேலை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை சக்தி வேல் பரிதாபமாக இறந்தது.

    மதுரை அருகே உள்ள அழகர்கோவிலை சேர்ந்த ராமசாமி மனைவி விஜய லட்சுமி (52). கடந்த ஒரு வாரமாக வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். #Swineflu #Dengue

    தொட்டியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தொட்டியம்:

    தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந் நிலையில் தொட்டியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையராஜா. எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரோஷிகா (வயது 1) என்ற பெண் குழந்தை உள்ளது. 

    ரோஷிகாவிற்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மர்மகாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையளிப்பதற்காக சென்றனர். அங்கு குழந்தை ரோஷிகாவின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில் குழந்தை ரோஷிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    ‘டெங்கு’ காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.

    தற்போது திருவள்ளூரை அடுத்த திருவலங்காடு ராஜேஷ் (20), முக்கரம்பாக்கம் பாஸ்கர் (38), விநாயகபுரம் முனி கிருஷ்ணன் (22) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதவிர 11 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. இவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 78 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கான காரணம் குறித்து அறிய பரிசோதனை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    திருவள்ளூரை அடுத்த அதிகத்தூரை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் அஜிதா (3). மர்ம காய்ச்சலுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இந்த குழந்தை குணம் அடைந்துள்ளதாக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அஜிதா இன்று பரிதாபமாக உயிர் இழந்தாள்.

    திருவள்ளூரை அடுத்த சின்ன எடப்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மகன் நித்திஷ் வீரா (6). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டான். ஆனால் வழியிலேயே சிறுவன் நித்திஷ் வீரா பரிதாபமாக இறந்தான்.

    டெங்கு காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை சேர்ந்த இரட்டை குழந்தைகள் சமீபத்தில் உயிர் இழந்தனர். இப்போது மேலும் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இறந்திருக்கிறார்கள்.

    ×