search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child death"

    • தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
    • ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளின் சுவர்கள் ஈரப்பதமாக காணப்படுகிறது. ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகா காரடகி அருகே உள்ள மாதப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த சன்னம்மா தொட்டபசப்பா ஹரகுனி (35) என்பவர் தனது குழந்தைகள் அமுல்யா முத்தப்பா ஹரகுனி (2), அனுஸ்ரீ முத்தப்பா ஹரகுனி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக அவர்களது வீட்டின் சுவர் இடிந்து தூங்கி கொண்டு இருந்த அவர்கள் மீது விழுந்தது.

    இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தாய் மற்றும் 2 குழந்தைகளும் பரிதாமாக இறந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களின் உடல்களை மீட்டனர்.

    • சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
    • மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை அபித் காலனியில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ முகாம் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சைதாப்பேட்டை அபித் காலனியில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளி ராஜேஷ்குமார் என்பவரின் மகன் யுவராஜ் (வயது 11) என்பவர் நோய்த் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து,

    சைதாப்பேட்டை அபித்காலனியில் சிறப்பு மருத்துவ முகாமும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    இதனை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதி மக்களுக்கு பிளிச்சீங் பவுடர், ஓ.ஆர்.எஸ் கரைசல், ஆகியவற்றினையும் இப்பகுதி மக்களிடம் வழங்கி, வீட்டின் குடிநீர்த் தொட்டியினை சுத்தம் செய்திடவும், சுற்றுப்புறப் பகுதியினை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தி, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.

    இப்பகுதியில் 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டாக்சி சைக்ளின் (Doxycycline) மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதையும், லைசால், பிளீச்சிங் பவுடர் (Lysol, Bleaching powder) கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளதையும், மக்களிடம் மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.


    இப்பகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, இப்பகுதியில் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ளவும், இம்மருத்துவ முகாமினைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்படவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றினை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிகழ்வின் போது மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், கூடுதல் மாநகர நல அலுவலர் ஆஷாலதா, சென்னைக் குடிநீர் வாரியம், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    • கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை வலம்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

    மேங்கோ ரேஞ்ச் பகுதியில் குழந்தையை தாக்கி தேயிலை தோட்டத்திற்கு சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது.

    பிறகு, படுகாயங்களுடன் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    ஏற்கனவே, 5 பேரை சிறுத்தை தாக்கிய நிலையில், தற்போது வடமாநில தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளது. இதனால், அங்கு பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை வலம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

    • இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.
    • குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சடலம் மேலே வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ.

    கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா குழந்தைக்கு உணவு ஊட்டினார். கீதா ஸ்ரீ உணவு சாப்பிட மறுத்து அடம் பிடித்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சினேகா வீட்டிலிருந்த கரண்டியை எடுத்து வந்து குழந்தையின் தலையில் அடித்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த கீதா ஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்தது. ஆத்திரத்தில் அடித்ததில் மகள் இறந்ததை நினைத்து சினேகா கதறி துடித்தார்.

    மகளை கொலை செய்தது தெரிந்தால் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவார் என எண்ணிய சினேகா மகளை வீட்டின் முன்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டார்.

    இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பிணம் மேலே வந்தது.

    அங்கிருந்த நாய்கள் குழந்தை பிணத்தை இழுத்துச் சென்றன. இதனைக் கண்ட பொது மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிணமாக இருந்தது சினேகாவின் குழந்தை கீதா ஸ்ரீ என தெரியவந்தது.

    சந்தேகத்தின் பேரில் போலீசார் சினேகாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.

    போலீசாரின் விசாரணையில் கீதா ஸ்ரீ சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் கரண்டியில் அடித்ததாகவும் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
    • குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோவில் ஊராட்சி வேல கவுண்டனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய நாதன் (வயது 32). இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஹரிஷ் என்ற 3 வயது ஆண்குழந்தை, ரக் ஷிதா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.

    இவரது வீட்டிற்கு முன்பு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தண்ணீர் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் மின் மோட்டாரை பழுதுபார்க்க கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இவரது மனைவி திவ்யா வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக தண்ணீர் டேங்க் மூடியை அகற்றிவிட்டு தண்ணீரை எடுத்து துணி துவைத்து கொண்டு இருந்தார்.

    அப்போது குழந்தை ஹரிஷ் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். இதை கவனிக்காத திவ்யா துணி துவைத்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை.

    அக்கம் பக்கம் தேடி பார்த்து விட்டு பின்பு தொட்டியில் பார்த்த போது குழந்தை தொட்டியில் கிடப்பதை பார்த்து கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் பகுதியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர்.
    • குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்கள் உள்ளன.

    சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த மலை பகுதிகளுக்கு இதுநாள் வரை சாலை அமைக்கப்படவில்லை.

    மலை உச்சியில் வசிக்கும் இந்த மக்கள் தங்களது தேவைகளை சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒடுக்கத்தூர் மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைக்கட்டு பகுதிக்கு சென்று தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    அதேபோல் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு, தலை மீது சுமந்தபடியே மீண்டும் மலை கிராமத்துக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

    சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். யாருக்கேனும் திடீரென உடல்நிலை சரியில்லாதபோது மலைவாசிகள் டோலி கட்டி, அதில் நோயாளியை படுக்க வைத்து தோள் மீது சுமந்தபடியே ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    குறிப்பிட்ட நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நடந்த உயிரிழப்புகள் ஏராளம்.

    இந்த நிலையில் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது அல்லேரி அடுத்த அத்திமரத்து கொல்லை. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த விஜி-பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

    மலை அடிவாரம் வரை ஆம்புலன்சில் உடல் கொண்டுவரப்பட்டது அங்கிருந்து பெற்றோர்களை இறக்கி விட்டனர் குழந்தையின் தாய் கண்ணீர் மல்க தனது குழந்தையின் உடலை 10 கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்றார். இது பெரும் பரபரப்பை பரிதாபத்தையும் ஏற்படுத்தியது.

    அல்லேரி, அத்திமரத்து கொல்லை உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அதிகாரிகளுடன் அத்திமரத்து கொல்லை மலை கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அணைக்கட்டு அருகே உள்ள மலை கிராமங்களுக்கு விரைவில் சாலை வசதி மற்றும் ஆரம்ப துணை சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆய்வின்போது சப்-கலெக்டர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதாகரன், சாந்தி வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.
    • அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.

    பாம்பு கடித்து பலியான குழந்தை தனுஷ்காவின் தாய் கூறியதாவது:-

    என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

    அருகில் அணுகக்கூடிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால், என் மகள் உயிருடன் இருந்திருப்பாள்.

    அல்லேரி மலை பஞ்சாயத்து மக்கள் நீண்ட காலமாக அடிப்படை சாலை மற்றும் சுகாதார வசதிகளை கோரி வந்தனர். "சாலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் வசதிகளுக்காக நாங்கள் பலமுறை கெஞ்சினோம், ஆனால் எங்கள் பலன்கள் வீணாகிவிட்டன." என்றார்.

    இதுகுறித்து வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-

    2021-ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பழங்குடியின மக்களுக்காக சாலை அமைத்து வருகிறோம். அல்லேரி கிராமத்திற்கும் சாலைப் பணிகளைத் திட்டமிட்டுள்ளோம், ஆனால் பணிகளை தொடர வனத்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

    விரைவில் கிராம மக்களுக்கு அடிப்படை சுகாதார துணை மையத்தை ஏற்பாடு செய்வோம் என்றார்.

    • இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    • மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பிரியா. இவர்களது 1½ வயது மகள் தனுஷ்கா.

    இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்தது.

    இதனால் குழந்தை அலறி துடித்துள்ளது. சத்தம் கேட்டு பெற்றோர் எழுந்து பார்த்தனர். அப்போது குழந்தையை பாம்பு கடித்தது தெரிந்தது. உடனடியாக அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சாலை வசதி இல்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதமானது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    தகவல் அறிந்து வந்த அணைக்கட்டு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தை உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தை உடலை வீட்டிற்கு ஆம்புலன்சு மூலம் அத்தி மரத்து கொல்லை கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.

    கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்து இறக்கிவிட்டனர். பின்னர் இறந்த குழந்தை பிணத்தை 10 கிலோ மீட்டர் தூரம் கையில் சுமந்து சென்றனர்.

    அல்லேரி மலைப் பகுதியில் சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து சாலை வசதி கேட்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    பாம்பு கடித்த உடன் குழந்தையை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.

    ஆனால் சாலை வசதி இல்லலாததால் உடனடியாக குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

    மேலும் இறந்த குழந்தையை கையில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென மலை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, கூலித்தொழிலாளி.
    • வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் திடீரென இடிந்து குழந்தை ஆதிரா, மகேந்திரன் ஆகியோர் மீது விழுந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இந்த தம்பதிக்கு ஆதிரா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.

    நேற்று முன்தினம் இரவு குழந்தை ஆதிரா, தனது தாத்தா மகேந்திரனுடன் (வயது 50) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டின் முன்பக்க சுற்றுச்சுவர் திடீரென இடிந்து குழந்தை ஆதிரா, மகேந்திரன் ஆகியோர் மீது விழுந்தது. இதில் குழந்தை ஆதிரா பரிதாபமாக உயிரிழந்தது. மகேந்திரன் காயம் அடைந்தார்.

    • மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான்.
    • அப்போது பாம்பு கடித்தது.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த துணிசரமேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானம் (வயது 37) இவரது மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாம்பு கடித்தது. உடனடியாக சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அவரது வீட்டில் இருந்த குழந்தை அன்புஸ்ரீ (வயது4) வெந்நீரில் தவறி விழுந்தது,
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அன்பு ஸ்ரீ இறந்தான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். அவரது வீட்டில் இருந்த குழந்தை அன்புஸ்ரீ (வயது4) வெந்நீரில் தவறி விழுந்தது. அலறல் சத்தம் கேட்ட பெற்றோர்கள் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அன்பு ஸ்ரீ இறந்தான். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கிறார்கள். 

    • திருப்பரங்குன்றத்தில் குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
    • அதனை யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 40). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு 3-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு யாழ் இசைவேந்தன் என்று பெயர் சூட்டினர்.

    இந்த நிலையில் சித்ரா பள்ளிக்குச் சென்ற தனது மூத்த மகனை அழைத்து வர நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்டார். குழந்தை யாழ் இ்சைவேந்தன் தூங்கிக் கொண்டிருந்ததால் அவனை தொட்டிலில் படுக்க வைத்து வீட்டை பூட்டி விட்டுச் சென்றார்.

    பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த சித்ரா தொட்டிலில் படுக்க வைத்திருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினார். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.

    இரவு 7 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர் தனது மாடி தண்ணீர் தொட்டியில் நீர் நிறைந்து விட்டதா? என பார்க்க சென்றபோது தொட்டியில் குழந்தை பிணம் கிடப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் குழந்தை மர்மமாக இறந்துள்ளதால் அதனை யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×